இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Thursday, December 15, 2011

செயற்கை ஸ்பெர்ம் உருவாக்குதல் சாத்தியம்

Sperm2
ஐயோ… என்னால் அப்பாவாக முடியாதே” என இனிமேல் ஆண்கள் யாருமே புலம்பத் தேவையில்லை என்கிறது பிரிட்டன் ஆராய்ச்சியாளர்களின் ஒரு சூப்பர் ஆராய்ச்சி முடிவு.
விந்தணுவும் முட்டையும் இணைந்து கரு உருவாவது தானே இயற்கையின் நியதி. ஒருவேளை நோயினாலோ, வேறு ஏதேனும் காரணத்தினாலோ சரியான விந்தணுக்கள் இல்லாத ஆண்கள் என்ன செய்வது ?
கவலையை விடுங்கள் உங்கள் உடலிலுள்ள ஒரு “ஸ்டெம் செல்” போதும் உங்களுக்குச் சொந்தமான ஒரு விந்தணுவை உருவாக்கி விடலாம் என்பது தான் அந்த ஆராய்ச்சி சொல்லும் ஆச்சரிய சங்கதி. பிரிட்டனின் நியூகாசில் பல்கலைக்கழகத்தில் நடந்த இந்த ஆராய்ச்சியை தலைமையேற்று நடத்தி உலகின் புருவத்தை உயர வைத்திருப்பவர் பேராசிரியர் கரிம் நயிர்னியா.
இன்றைய தேதியில் ஆறு தம்பதியரில் ஒருவருக்கு குழந்தை பிறப்பதில் சிக்கல் இருக்கிறது. பழைய காலத்தைப் போல குழந்தையில்லையேல் பழியை பெண்ணின் தலையில் போட்டு விட்டு தப்பிக்கவும் நவீன யுகம் வளர்ச்சி இடம் தருவதில்லை. ஒரு சோதனை போதும் யாருக்குப் பிரச்சினை, என்ன பிரச்சினை போன்ற சர்வ சமாச்சாரங்களையும் புட்டுப் புட்டு வைக்க.
குளோபல் வார்மிங், ஆபீஸ் டென்ஷன், பீட்சா, பர்கர், சீஸ் என கொழுப்பு உணவுகள், நோ எக்சர்சைஸ், மன அழுத்தம் இப்படி ஆயிரத்தெட்டு காரணங்கள் இதைச் சுற்றி. அதனால் இப்போதெல்லாம் ரேஷன் கடை வாசலில் நீளும் கூட்டத்தை விட அதிகமாய் கைனோகாலஜிஸ்ட் களின் வாசலில் கூட்டம் நீள்கிறது என்பது தான் நிஜம்.
உண்மையில், பிரச்சினை இப்போதெல்லாம் பெரும்பாலும் ஆண்களிடம் தான். ஜீவனில்லா விந்தணு, வீரியமில்லா விந்தணு, மூவ்மெண்ட் குறைவான விந்தணு, குறைவான எண்ணிக்கை இப்படி எக்கச்சக்கமான பிரச்சினைகள் இந்த உயிரணுவைச் sperm3சுற்றி. இந்தப் பிரச்சினைகளுக்கெல்லாம் தீர்வாகக் கூடும் இந்த ஆராய்ச்சி என்பதே இப்போதைக்கு மருத்துவ உலகின் நம்பிக்கை.
உலக மருத்துவ வரலாற்றிலேயே முதன் முறையாக எனும் அடைமொழியுடன், ஒரு ஆண் கருவிலிருந்து ஒரு செல்லைப் பிரித்தெடுத்து, , அதை சோதனைக்கூடத்தில் ஸ்பெர்ம் ஆக வளரச் செய்திருக்கிறார் அவர். கருவிலிருந்து தான் செல்லை எடுக்க வேண்டுமென்றில்லை, ஆண்களின் கைகளிலிருந்தே ஒரு ஸ்டெம் செல்லைப் பிரித்து எடுத்து ஒரு ஸ்பெர்ம் செல்லை உருவாக்க முடியும் என நம்புகிறார் பேராசிரியர் கரிம் நயிர்னியா.
எளிதாய் சொன்னாலும் இதன் பின்னணியில் உள்ள உழைப்பு அசாத்தியமானது. ஸ்டெம் செல் ஒன்றை திரவ நைட்ரஜனில் பதப்படுத்தி, அங்கிருந்து சாதாரண வெப்பநிலைக்குக் கொண்டு வந்து வைட்டமின்கள் உதவியுடன் ஸ்பெர்ம் ஆக வளர்த்தெடுக்க நான்கு முதல் ஆறு வாரங்கள் ஆகிறதாம். இந்த விந்தணுவை IVF முறைப்படி நேரடியாக முட்டையில் செலுத்தினால் கரு தயார். ஆண்மையில்லை, விந்தணு இல்லை எனும் ஆண்களின் குறைபாடுகளுக்கு குட்பை Spermசொல்லிவிடலாம்.
இவர் ஏற்கனவே இந்த ஆராய்ச்சியை எலிகளை வைத்து நடத்தி நிறைய எலிக்குட்டிகளை உருவாக்கினார் என்பது வியப்புச் செய்தி ! ஆனால் மனித விந்தணுவை வைத்து இன்னும் குழந்தையை உருவாக்கவில்லை, காரணம், பிரிட்டனில் அதற்கான அனுமதி இல்லை என்பது தான்.
ஏற்கனவே செயற்கை முறையில் கருத்தரிக்க வைக்கும் முறை இருக்கிறது. ஆனால் அதற்கு ஸ்பெர்ம் யாராவது தானமாய் தரவேண்டும், முட்டை யாராவது தானமாய் தரவேண்டும். இரண்டையும் சேர்த்து ஏதோ ஒரு தாயின் கருவறையில் கருவாய் வளர்க்க வேண்டும். எப்படிப் பார்த்தாலும் “ எனக்குள்ள ஓடற இரத்தம் தான் உனக்குள்ளயும் ஓடுது” என டயலாக் அடிக்க முடியாத உறுத்தல் பெற்றோருக்கு கொஞ்சம் இருக்கத்தான் செய்யும்.
ஆனால் இந்த புதிய ஆராய்ச்சி மட்டும் நடைமுறைக்கு வந்தால், அச்சு அசலாக பெற்றோரின் குணாதிசயங்களுடன் இயற்கையாய் பிறக்கும் குழந்தைக்குரிய அத்தனை இயல்புகளோடும் செயற்கையாய் ஒரு குழந்தையை உருவாக்க முடியும் என்கிறார் கரீம்.
இந்த ஆராய்ச்சி ஸ்பெர்ம் தொடர்பான பல ஆராய்ச்சிகளுக்கான கதவுகளை ஒரு சேரத் திறந்திருக்கிறது. உயிரணுக்கள் எப்படி உருவாகின்றன, வளர்கின்றன, என்னென்ன தன்மையில் வலுவடைகின்றன என அனைத்து நுண்ணிய விஷயங்களையும் இனிமேல் விரிவாக அறிய முடியும் என்பது மருத்துவ நம்பிக்கை. அப்படி நடந்தால் “வயாகரா” போல ஒரு மாத்திரை வந்து சர்வ உயிரணுப் பிரச்சினைகளையும் தீர்த்து வைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
இந்த அவசர உலகில் இனிமேல் “அந்த” விஷயங்களெல்லாம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் பெண்கள் தேவைப்படும் போது குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளலாம் போலிருக்கிறது. “ஏங்க, உங்க கையைக் கொஞ்சம் நீட்டுங்க. ஒரு செல் வேணும், குழந்தை பெற்றுக்கொள்ளப் போகிறேன்” என மனைவியர் சொல்லும் காலத்தை நினைத்தால் கொஞ்சம் படபடப்பாகத் தான் இருக்கிறது !
இப்படியெல்லாம் நடந்தால் ஆண்களுக்கு இங்கே என்ன வேலை என டென்ஷனாகாதீர்கள். இப்போதைக்கு ஒரு விந்தணுவை உருவாக்க ஒரு ஆணின் ஸ்டெம் செல் கட்டாயம் தேவை என்பதே நிலை. பெண்ணின் ஸ்டெம் செல்லைக் கொண்டு விந்தணு உருவாக்க முயன்ற முயற்சிகள் தோல்வியடைந்திருக்கின்றன. அப்படி பெண்ணின் செல்லில் இருந்தே ஒரு விந்தணுவும் உருவாக்க முடிகின்ற ஒரு காலம் உருவாகும் போது ஒரு குழந்தைக்கு பெண்ணே தாயுமானவளாகவும், தந்தையானவளாகவும் மாறும் வியப்பின் உச்சகட்டம் உருவாகும் !
இந்த ஆராய்ச்சியின் மிகவும் வியக்கத் தக்க விஷயமே இனிமேல் தான் இருக்கிறது. அதாவது இறந்து போன ஒருவருடைய உடலிலிருந்து கூட ஒரு செல்லை எடுத்து அதை வளரவைத்து ஸ்பெர்ம் ஆக மாற்றி அவருடைய சந்ததியை செயற்கையாகவே உருவாக்கிவிடலாம் என்பது தான் அது !
இறந்து பல வருடங்களானால் கூட இந்த செயற்கை ஸ்பெர்ம் உருவாக்குதல் சாத்தியம் எனும் தகவல் ஜுராசிக் பார்க் படம் போல திகிலூட்டுகிறது.

0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites