இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

• எங்கும் உயர்ந்தே நில்! எதிலும் தமிழே சொல்!! வறுமை கண்டு நொருங்காதே! வாய்ப்பு இருக்கு மறக்காதே!! விதையென விழு! விருட்சமென எழு!! உறுதியான உள்ளம் ! உலகை வெல்லும் !! ;

விவசாயத்தை தொழிலாக்கு! இந்தியாவை வளமாக்கு!! உயர்ந்தவனாய் இரு! பிறரை உயர்த்துபவனாய் இரு!! சிந்தனையில் சீற்றம்! வாழ்க்கையில் ஏற்றம்!! மூச்சு உள்ளவரை முன்னேறு ! முடியும் என்பவர்க்கே வரலாறு !! ;

.

• முடியும் என்றே முன்னேறு! வெற்றி என்பதே உன்பேரு!! செயலில் மேதையாகு! பலருக்கு பாதையாகு!! வல்லமையை வெளிப்படுத்து! வாழும் உலகை வசப்படுத்து!! முடியும் என்பதுதான் முன்னேற்றத்தின் முதல்படி !!

.

• பண்பில் உயர்ந்து நில் ! பணியில் உயர்ந்து செல் !! அனுபவத்தைப் பாடமாக்கு ஆனந்தத்தைப் பதவியாக்கு தடைகளைத் தகர்த்திடு சாதிப்புகளை நிகழ்த்திடு !!

.

Wednesday, March 30, 2016

விற்பனைக்கு வில்லங்கமில்லா பேயன் வாழை...

*பழங்கள் ஐந்து நாட்கள் வரை கெடாது.

*பழங்கள் ஐந்து நாட்கள் வரை கெடாது.

*தரகர் இல்லாத விற்பனையில் அதிக லாபம்.

*ஒரு தாரில் 100 பழங்கள்.

*ஒரு கிலோவுக்கு 10 பழங்கள்.

*மாசிப்பட்டம் ஏற்றது.

*செம்மண்ணில் நன்றாக வளரும்.

ரசு கொள்முதல் செய்யாத அல்லது குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிக்காத எந்தவிளைபொருளுக்கும் விலை உத்தரவாதம் கிடையாது. அதற்கு வாழையும் விதிவிலக்கல்ல. மாதப் பயிர்களில் வெள்ளாமை செய்யும் பயிர்களுக்கு விலை கிடைக்காமல் போனாலே, விவசாயிகளுக்கு பெருத்த நஷ்டம் ஏற்படும். இந்த நிலையில் வாழை போன்ற ஆண்டுப் பயிர்களுக்கு விலை இல்லாமல் போனால், என்னவாகும் என்று சொல்ல வேண்டியதில்லை.
ஆனால், ‘வாழை சாகுபடியில் அப்படிப்பட்ட சூழ்நிலையையும் எளிதாக சமாளித்து நஷ்டமில்லாமல் சம்பாதிக்க முடியும்’ என்கிறார், திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த மணிவண்ணப் பெருமாள். தற்போது பரவலாக அனைத்து ரக வாழைகளுமே விலை வீழ்ச்சியடைந்துள்ள சூழ்நிலையிலும் கூட... விற்பனையில் சில விஷயங்களைக் கடைபிடிப்பதன் மூலம், நிலையான விலையில் விற்பனை செய்து லாபம் பார்த்து வருகிறார், மணிவண்ணப் பெருமாள்.

திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரத்தில் இருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் இளையநயினார்குளம் கிராமத்தில் உள்ளது, மணிவண்ணப் பெருமாளின் வாழைத்தோட்டம். பஞ்சகவ்யா தயாரிக்கும் பணியில் இருந்த மணிவண்ணப் பெருமாளிடம் நம்மை அறிமுகப்படுத்திக் கொண்டவுடன் உற்சாகமாகப் பேச ஆரம்பித்தார். 

‘பசுமை விகடன்’ தூண்டிய விவசாய ஆசை!

“நான் பிறந்தது, வளர்ந்தது எல்லாமே நாகர்கோவில்லதான். பூர்வீகமாவே நாங்க விவசாயக் குடும்பம். ஆனா, நான் சின்ன வயசுல விவசாயம் செஞ்சதில்ல. டிப்ளமோ இ.சி.இ படிச்சிட்டு கோயம்புத்தூர்ல நாலு வருஷம் வேலை பார்த்தேன். பிறகு, நாகர்கோவிலுக்கே திரும்பி வந்து மளிகைக் கடை வெச்சிருந்தேன். 1993-ம் வருஷத்துல நம்மாழ்வாரைப் பத்தித் தெரிஞ்சுக்கிட்டேன். அவர் எழுதின கட்டுரைகளையெல்லாம் படிக்க ஆரம்பிச்சதும் இயற்கை விவசாயத்து மேல ஆர்வம் வந்துடுச்சு. ஆனாலும் விவசாயத்தை ஆரம்பிக்கலை.  அப்பறம் ‘பசுமை விகடன்’ வெளி வர ஆரம்பிச்சது. அதை, முதல் இதழ்ல இருந்து படிச்சுக்கிட்டு இருக்கேன். இதுவரை வெளியான அத்தனைப் புத்தகங்களையும் பத்திரமா பொக்கிஷம் மாதிரி வெச்சிருக்கேன். அதைப் படிக்க படிக்கத்தான் விவசாயத்து மேல அதிக ஆர்வமும், இயற்கை விவசாயம் செய்யணும்கிற எண்ணமும் வந்துச்சு.

பாடம் சொல்லித்தந்த வாழை!

ஆறு வருஷத்துக்கு முன்னாடிதான் இந்த ஊருக்கு (இளையநயினார்குளம்) வந்து இந்த நிலத்தை வாங்கினோம். இது, என் மனைவி ஊர். இந்த நிலம் மொத்தம் ஒன்பதரை ஏக்கர். செவல் கலந்த மணல். 2012-ம் வருஷம்தான் முதல்முறையா அரை ஏக்கர் நிலத்துல கற்பூரவல்லி வாழை சாகுபடி செஞ்சேன். முழுக்க முழுக்க இயற்கை முறையில் சாகுபடி செய்ததால காய்கள் நல்லா திரட்சியாத்தான் இருந்துச்சு. ஆனா, விலை கிடைக்கலை. இனிமேல் வாழையே சாகுபடி செய்யக்கூடாதுனு முடிவெடுத்துட்டேன்.

அடுத்து அரை ஏக்கர் நிலத்துல கத்திரி, அரை ஏக்கர் நிலத்துல குட்டைப்புடலைனு சாகுபடி செஞ்சேன். ‘விவசாயியே வியாபாரியா மாறணும்’னு நம்மாழ்வார் ஐயா அடிக்கடி சொல்வார். அதை மனசுல வெச்சு காய்கறிகளை நாமளே விற்பனை செய்யலாம்னு முடிவு செய்து நாகர்கோவில்ல இருக்கிற கடைகளுக்கும் உள்ளூர் கடைகளுக்கும் நேரடியா விற்பனை செய்தேன். ஒருகட்டத்துல உள்ளூர்லயே நல்ல விற்பனை வாய்ப்பு கிடைச்சதால வெளியூர்களுக்குப் போறதை நிறுத்திட்டேன்” என்று சொல்லும்போது, மணிவண்ண பெருமாளுக்கு செல்போனில் ஓர் அழைப்பு வர அதற்கு பதிலளித்து விட்டு, நம்மிடம் தொடர்ந்து பேச ஆரம்பித்தார்.
விற்பனைக்கு வில்லங்கமில்லா பேயன்!

“நாகர்கோவில் சந்தைக்குப் போகும் போதுதான் நேந்திரன் ரக வாழையை எடை முறையில விற்பனை செய்றதைப் பாத்தேன். வாழை குறித்து விசாரிச்சப்போ, பேயன் ரக நாட்டு வாழைக்கு எப்பவும் தேவை இருக்கிறதைத் தெரிஞ்சுக்கிட்டேன். உடனே ஒரு ஏக்கர் 60 சென்ட் பரப்புல பேயன் ரக வாழையை நடவு செஞ்சுட்டேன். இப்போ, அறுவடை பண்ணிக்கிட்டு இருக்கேன். மத்த ரக வாழைகளுக்கு இப்போ விலை குறைவா இருக்கிற நேரத்துலயும் எனக்குக் கட்டுப்படியான விலை கிடைச்சுக்கிட்டிருக்கு. இப்போ, வாழை தவிர்த்து, 60 சென்ட் நிலத்துல சம்பங்கியும் இருக்கு. மீதி நிலத்தை  உழுது போட்டிருக்கேன். ரெண்டு ஏக்கர் நிலத்தில் தென்னையும், மீதமுள்ள இடத்தில் சுழற்சி முறையில் காய்கறிகளும், கீரைகளும் போடலாம்னு இருக்கேன்” என்ற மணிவண்ணப் பெருமாள், தனது விற்பனைச் சூத்திரத்தைச் சொல்ல ஆரம்பித்தார்.

பழமாகத்தான் விற்பனை!

“நான், இயற்கை விவசாயத்துல விளைவிக்கிறதால சென்னை, நாகர்கோவில், திருநெல்வேலினு மூணு ஊர்கள்ல உள்ள இயற்கை அங்காடிகள்லதான் வாழையை விற்பனை செய்றேன். அதனால, இருக்கிற ஆர்டரை பொறுத்துதான் குலையை வெட்டுவோம். மொத்தமா, அத்தனை வாழைக்குலைகளையும் (வாழைத்தாரைத் தான் இப்படிச் சொல்கிறார்கள்) வெட்டி விற்பனைக்கு அனுப்புறப்போதான் விலை கிடைக்காம கஷ்டம் வரும். மாசத்துக்கு 10 குலையில இருந்து 50 குலை வரைதான் வெட்டுவோம். குலை வெட்டுனதும் ஒரு ரூமுக்குள்ள அடுக்கி... மண்பானையில் வாழைச் சருகை வெச்சு ஒரு ராத்திரிக்கு புகைமூட்டம் போடுவோம். காலையில 6 மணிக்கு குலைகள்ல இருந்து சீப்பு சீப்பாக வெட்டி எடை போட்டு பேப்பர் சுற்றி விற்பனைக்கு அனுப்புவோம். இப்படி மூட்டம் போட்ட காய், அடுத்தநாள் சாயங்காலம்தான் மஞ்சள் நிறத்துக்கு வரும். இதை அஞ்சு  நாள் வரை கூட வெச்சு விற்பனை செய்ய முடியும். கடைகளுக்கு அனுப்புறது போக, உள்ளூர்க்காரங்க எங்க வீட்டுக்கே வந்தும் வாங்கிட்டுப் போறாங்க” என்றார்.
ஒரு கிலோவுக்கு 10 பழங்கள்!

நிறைவாக  மகசூல் மற்றும் வருமானம் குறித்துச் சொல்ல ஆரம்பித்த மணிவண்ணப் பெருமாள், “ஒரு குலையில் உள்ள பழங்கள், 6 கிலோ முதல் 10 கிலோ எடை வரை இருக்கும். ஒரு குலையில 10 சீப்புகள் வரை இருக்கும். ஒரு கிலோவுக்கு 10 பழங்கள் வரை இருக்கும். ஒரு குலையில இருந்து சராசரியா 7 கிலோ அளவுக்கு பழங்கள் கிடைக்கும். ஒரு கிலோ 35 ரூபாய்ல இருந்து 45 ரூபாய் வரை விலை போகும். இதுவரை (16.03.16) 820 கிலோ பழங்களை அறுவடை பண்ணி,  கிலோ 35 ரூபாய்னு விற்பனை செய்ததுல 28 ஆயிரத்து 700 ரூபாய் கிடைச்சிருக்கு. ஒரு ஏக்கர் 60 சென்ட் நிலத்துல 1,900 கன்னுகள் வரை நட்டாலும் 1,800 மரங்கள்தான் தேறும். இன்னும் கிட்டத்தட்ட 12 ஆயிரம் கிலோ வரை அறுவடை பண்ணலாம். அதுல சொத்தைக்காய்கள், வீணான காய்கள் எல்லாம் போக 9 ஆயிரம் கிலோ பழங்கள் கிடைக்கும்னு எதிர்பார்க்கிறேன். 9 ஆயிரம் கிலோ பழங்களுக்கும் குறைந்தபட்ச விலையா 35 ரூபாய் கிடைச்சாகூட 3 லட்சத்து 15 ஆயிரம் ரூபாய் கிடைக்கும். அந்தக் கணக்குல மொத்த வருமானம்னு பார்த்தா 3 லட்சத்து 43 ஆயிரம் ரூபாய் வரை வருமானம் கிடைக்கும். அதுல 69 ஆயிரம் ரூபாய் வரை செலவு போக, எப்படியும்  2,74,000 ரூபாய்  லாபம் கிடைக்கும்னு எதிர்பார்க்கிறேன்’ என்றவர்  அறுவடையில் மும்முரமானார். 
தொடர்புக்கு,
மணிவண்ணப் பெருமாள்,
செல்போன்: 98651-31290.

முக்கோண நடவில் செழிக்கும் வாழை!

ஒரு ஏக்கர் 60 சென்ட் நிலத்தில் பேயன் வாழை சாகுபடி செய்யும் விதம் குறித்து மணிவண்ணப் பெருமாள் சொன்ன விஷயங்கள் இங்கே...

6 அடி இடைவெளி!

வாழை சாகுபடிக்கு வடிகால் வசதியுள்ள அனைத்து மண் வகைகளும் ஏற்றவை என்றாலும், செம்மண் நிலம் மிகவும் ஏற்றது. மாசிப்பட்டம்தான் வாழைக்குச் சிறந்த பட்டம். தை மாதம் தொடக்கத்தில் உழுது 20 நாட்கள் இடைவெளி விட்டு 2 டிராக்டர் தொழுவுரத்தைக் கொட்டி அடுத்த உழவு செய்ய வேண்டும். அடுத்து 20 நாட்கள் இடைவெளியில் மீண்டும் ஓர் உழவு செய்து... வரிசைக்கு வரிசை 6 அடி, செடிக்குச் செடி 6 அடி என்ற இடைவெளியில்  முக்கோண நடவு முறையில் குழி எடுக்க வேண்டும். குழியின் அளவு அரை அடி சதுரம், ஓர் அடி ஆழம் இருக்க வேண்டும். இந்தக் கணக்கில் 1 ஏக்கர் 60 சென்ட் பரப்பில் 1,900 குழிகள் வரை எடுக்கலாம்.

பஞ்சகவ்யாவில் விதைநேர்த்தி!


ஒரு குழிக்கு ஒரு விதைக்கிழங்கு என்ற விகிதத்தில் நடவு செய்ய வேண்டும். நல்ல தரமான விதைக்கிழங்குகளைத் தேர்வு செய்து... அவற்றை 100 லிட்டர் தண்ணீரில் 3 லிட்டர் பஞ்சகவ்யா கலந்த கரைசலில் மூழ்க வைத்து எடுத்து நிழலில், 20 நிமிடங்கள் உலர்த்தி விதைநேர்த்தி செய்து நடவு செய்து தண்ணீர் பாய்ச்ச வேண்டும். ஒவ்வொரு விதைக்கிழங்கும் அரை கிலோ எடைக்கு அதிகமாக இருக்க வேண்டும். விதைத்த இருபது நாட்கள் வரை இரண்டு நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் கொடுக்க வேண்டும். தொடர்ந்து நிலத்தின் ஈரப்பதத்தைப் பொறுத்து தண்ணீர் பாய்ச்சலாம். சொட்டுநீர் அமைப்பது நல்லது. விதைத்த 15 முதல் 20 நாட்களுக்குள் இலைகள் தளிர்க்கும்.
சுழற்சி முறையில் ஊட்டக்கரைசல்கள்!

விதைத்த 20-ம் நாள் 10 லிட்டர் தண்ணீருக்கு ஒரு லிட்டர் அமுதக்கரைசல் என்ற விகிதத்தில் கலந்து தெளிக்க வேண்டும். 35-ம் நாள் 10 லிட்டர் தண்ணீருக்கு 300 மில்லி பஞ்சகவ்யா என்ற விகிதத்தில் தெளிக்க வேண்டும். 50-ம் நாள் 10 லிட்டர் தண்ணீரில் 150 மில்லி இ.எம் திறமி நுண்ணுயிரிக் கரைசல் கலந்து தெளிக்க வேண்டும். இப்படி 15 நாட்களுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் தெளித்து வர வேண்டும். மாதம் ஒரு முறை ஒவ்வொரு கன்றுக்கும் அரை லிட்டர் பிண்ணாக்குக் கரைசல் ஊற்ற வேண்டும் (செய்முறை தனியே கொடுக்கப்பட்டுள்ளது). பிண்ணாக்குக் கரைசல் மண்ணில் நுண்ணுயிர்களைப் பெருக்கும். இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை 10 லிட்டர் தண்ணீரில் 300 மில்லி மீன் அமிலக்கரைசல் 20 மில்லி புங்கன் எண்ணெய் என்ற விகிதத்தில் கலந்து தெளிக்க வேண்டும். புங்கன் எண்ணெய்க்குப் பதிலாக,  வேப்பெண்ணெய் அல்லது இலுப்பை எண்ணெய் ஆகியவற்றைக் கூட பயன்படுத்தலாம். இயற்கை முறையில் சாகுபடி செய்யும் போது பெரும்பாலும் பூச்சி மற்றும் நோய்த்தாக்குதல் இருக்காது என்றாலும், முன்னெச்சரிக்கையாக வருமுன் காப்பது போல இரண்டாவது மாதத்தில் இருந்தே இஞ்சி+பூண்டுக் கரைசல் தெளித்து வருவது நல்லது.

மூன்றாவது மாதத்தில் மூடாக்கு!

மூன்றாவது மாதத்தில் இருந்து பண்ணையில் கிடைக்கும் இலைதழைகளைக் கொண்டு வாழையின் தூரைச் சுற்றி மூடாக்கு இட வேண்டும். இதனால் நீர் தேவை குறையும். 3, 7 மற்றும் 12-ம் மாதங்களில் ஒவ்வொரு வாழைக்கும் கைப்பிடி அளவு வேப்பம் பிண்ணாக்கை தொழுவுரத்தில் கலந்து தூரில் இட்டு மண் அணைக்க வேண்டும். அவ்வப்போது பக்கக்கன்றுகளை வெட்டி மூடாக்காகப் போட வேண்டும். வாழை, குலை தள்ளிய பிறகு, குலைக்கு நேர் எதிர்திசையில் இருக்கும் பக்கக் கன்றை மட்டும் மறுதழைவுக்காக வளர விட வேண்டும். 8 மாதத்துக்கு மேல் பூக்கள் வர ஆரம்பிக்கும். 10-ம் மாதத்தில் குலையில் இருந்து பூவை ஒடித்து விட்டு குலையின் நுனித்தண்டில்... 

200 மில்லி பஞ்சகவ்யா நிரப்பிய பாலிதீன் பாக்கெட்டைக் கட்டி விட வேண்டும். அப்படிக் கட்டும் போது குலையின் நுனி, கரைசலுக்குள் மூழ்கியவாறு இருக்க வேண்டும். குலை நுனி மூலம் பஞ்சகவ்யா உறிஞ்சப்பட்டு காய்கள் நல்ல திடமாக வளரும். சுவையும் அதிகமாக இருக்கும். இப்படி 15 நாட்களுக்கு ஒரு முறை செய்ய வேண்டும். 13-ம்  மாதத்தில் இருந்து தேவையைப் பொறுத்து குலைகளை வெட்ட ஆரம்பிக்கலாம்.

பிண்ணாக்குக் கரைசல்!

10கிலோ கடலைப் பிண்ணாக்கை 200 லிட்டர் கொள்ளளவுள்ள டிரம்மில் போட்டு பிண்ணாக்கு மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்ற வேண்டும். அடுத்த நாள் பார்த்தால் முழு தண்ணீரையும் பிண்ணாக்கு உறிஞ்சியிருக்கும். அதில் பாதியளவு எடுத்து இன்னொரு டிரம்மில் போட்டு இரண்டு டிரம்களிலும் தண்ணீரை நிரப்பி... காலையும், மாலையும் கலக்கி விட வேண்டும். நான்காவது நாள், இக்கரைசலுடன் சமபங்கு தண்ணீர் சேர்த்துக் கரைத்தால் பிண்ணாக்குக் கரைசல் தயார்.

இஞ்சி+பூண்டுக் கரைசல்!

இஞ்சி 10 கிலோ, பூண்டு 10 கிலோ, பச்சைமிளகாய் 10 கிலோ ஆகியவற்றை உரலில் இடித்து 25 லிட்டர் பசுமாட்டுச் சிறுநீரில் இரண்டு நாட்கள் முழுவதும் ஊற வைத்து... மூன்றாவது நாள் வடிகட்டினால் இஞ்சி+பூண்டு கரைசல் தயார்.  10 லிட்டர் தண்ணீருக்கு 300 மில்லி கரைசல் என்ற விகிதத்தில் கலந்து பயன்படுத்த வேண்டும்.பழங்கள் ஐந்து நாட்கள் வரை கெடாது.
இ.கார்த்திகேயன், படங்கள்: எல்.ராஜேந்திரன்

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites