இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

• எங்கும் உயர்ந்தே நில்! எதிலும் தமிழே சொல்!! வறுமை கண்டு நொருங்காதே! வாய்ப்பு இருக்கு மறக்காதே!! விதையென விழு! விருட்சமென எழு!! உறுதியான உள்ளம் ! உலகை வெல்லும் !! ;

விவசாயத்தை தொழிலாக்கு! இந்தியாவை வளமாக்கு!! உயர்ந்தவனாய் இரு! பிறரை உயர்த்துபவனாய் இரு!! சிந்தனையில் சீற்றம்! வாழ்க்கையில் ஏற்றம்!! மூச்சு உள்ளவரை முன்னேறு ! முடியும் என்பவர்க்கே வரலாறு !! ;

.

• முடியும் என்றே முன்னேறு! வெற்றி என்பதே உன்பேரு!! செயலில் மேதையாகு! பலருக்கு பாதையாகு!! வல்லமையை வெளிப்படுத்து! வாழும் உலகை வசப்படுத்து!! முடியும் என்பதுதான் முன்னேற்றத்தின் முதல்படி !!

.

• பண்பில் உயர்ந்து நில் ! பணியில் உயர்ந்து செல் !! அனுபவத்தைப் பாடமாக்கு ஆனந்தத்தைப் பதவியாக்கு தடைகளைத் தகர்த்திடு சாதிப்புகளை நிகழ்த்திடு !!

.

Wednesday, October 20, 2021

ரப்பர் தொழில்.

 ன்னியாகுமரி மாவட்டத்தில் பணப்பயிரான ரப்பர் மரச் சாகுபடி அதிக அளவு செய்யப்பட்டு வருகிறது. பெரும்பாலானோர் ரசாயன உரம் பயன்படுத்திதான் ரப்பர் விவசாயம் செய்கிறார்கள். அதிலும் மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதிகளில் உள்ள சில எஸ்டேட்டுகளில் ரப்பர் மரங்களின் இலை உதிராமல் இருக்க ‘சல்பர்’ அடிப்பதாகக் குற்றச்சாட்டு இருந்துவருகிறது.


‘சல்பர்’ என்ற ரசாயன மருந்து தண்ணீரில் கலப்பதால் நீர் நிலைகளில் நச்சுத்தன்மை ஏற்படுவதாகவும், அந்தத் தண்ணீரைக் குடிப்பவர்களுக்குப் புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் வருவதாகவும் சொல்லப் படுகிறது. இந்நிலையில் எந்தச் செயற்கை உரமும் பயன்படுத்தாமல் தனது 40 சென்ட் நிலத்தில் கடந்த 10 ஆண்டுகளாக இயற்கை முறையில் ரப்பர் விவசாயம் செய்து, நல்ல லாபம் ஈட்டி வருகிறார் மார்த்தாண்டம் அருகே காஞ்சிரகோடு பகுதியைச் சேர்ந்த கிரேஸ் ராணி.

தோட்டத்தில் உற்பத்தியான ரப்பர் பாலிலிருந்து தயாரித்த ரப்பர் ஷீட்டுகளை வீட்டில் உலர வைத்துக்கொண்டிருந்தவரைச் சந்தித்தோம். மகிழ்ச்சியோடு வரவேற்றவர், தனது ரப்பர் தோட்டத்துக்கு நம்மை அழைத்துச் சென்று ரப்பர் மரங்களைக் காட்டியவாறே பேசினார் கிரேஸ் ராணி.

ரப்பர் மரத் தோட்டத்தில் கிரேஸ் ராணி
ரப்பர் மரத் தோட்டத்தில் கிரேஸ் ராணி

40 சென்ட்... 120 மரங்கள்

“இது 40 சென்ட் நிலம். இதுல கொல்லாமாவு (முந்திரி மரம்) பனை மரம் எல்லாம் இருந்துச்சு. ஆனா, அதுல எந்த வருமானமும் கிடைக்கல. அந்த மரங்களை எல்லாம் அழிச்சுட்டு 10 வருஷத்துக்கு முன்ன ரப்பர் மரங்களை நட்டோம். இந்த 40 சென்ட்ல 120 மரங்கள நட்டிருக்கோம். அதுல இப்ப 100 மரங்க பால் வெட்டுது” என முன்னுரைக் கொடுத்தவர் ரப்பர் மரம் நடவு பற்றி விவரித்தார்.

“ரப்பர் மரம் நடணும்னு ரப்பர் போர்டுல சொன்னா போதும். அவங்க வந்து நிலத்தைப் பார்த்துட்டு என்ன ரகம் ரப்பர் வைக்கலாம், எத்தனை மரம் வைக்கலாம்னு சொல்வாங்க. அப்படிதான் இந்த நிலத்தில ரப்பர் நட்டோம். நிலத்தில குண்டு (குழி) எடுத்து, நல்ல ஒணந்த சாணம் (உலர்ந்த எரு) ஒரு குண்டுக்கு சுமார் 5 கிலோ போட்டோம். அதுக்கு மேல ஒணந்த சாணம் போட்டு மண்ணப் போட்டு மூடினோம். அதுல ரப்பர் தை (நாற்று) வாங்கி வெச்சோம்.

மரத்திலிருந்து வடியும் பால்
மரத்திலிருந்து வடியும் பால்

6-ம் ஆண்டில் அறுவடை

ரப்பர் மரத்த பொறுத்த அளவுல ஒரே ஒரு தடவைதான் குழிக்குள்ள அடி உரம் போட முடியும். அதுக்கு பெறவு மத்த மரங்கள போலக் குழி வெட்டி உரம் போட முடியாது. பொதுவா மழைக்காலமான ஜூன், ஜூலை-யிலதான் ரப்பர் மரம் நடவு செய்யணும். அப்ப தண்ணி ஊத்துற வேலை மிச்சமாவும். ரப்பர் செடி நட்ட பெறவு மண்புழு உரம், இலைதழையெல்லாம் போட்டுதான் வளத்தோம். 6-வது வருஷத்துல பால் வெட்டுறதுக்கு உள்ள தரம் ஆச்சுது. அதுல இருந்து பால் வெட்டத் தொடங்கினோம்.

ஊடுபயிர் வருமானம்

ரப்பர் பால் வெட்டத் தொடங்கின மொத வருஷத்துல நாம செலவு செய்த முதலீடு எல்லாம் கிடைச்சுரும். ஆனா, நாங்க ரப்பர் நட்ட மொத வருஷம் வெண்டை, வெள்ளரி, பயறு எல்லாம் நட்டதிலயே ரப்பர் நாற்று வாங்குன 3,500 ரூபாயும், உரம் வாங்கினதுக்கான பணமும் கிடைச்சுட்டுது” என்றவர், இயற்கை உரம் போட்டு ரப்பர் மரம் வளர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள் பற்றியும், லாபம் பற்றியும் சொன்னார்.

காயவைக்கப்பட்டிருக்கும் ரப்பர் ஷீட்
காயவைக்கப்பட்டிருக்கும் ரப்பர் ஷீட்

இயற்கையில் நோய்த் தாக்குதல் இல்லை

“இயற்கை முறையில ரப்பர் மரம் வளர்த்ததுனால ஓகி புயல் வந்த சமயத்தில எங்களுக்கு ஒரு மரம்கூட முறியல. எங்க தோட்டத்துக்குப் பக்கத்தில செயற்கை உரம் போடுற ரப்பர் தோட்டத்தில ஓகி புயல் சமயத்துல மரங்கள் முறிஞ்சது. அதுபோல ரப்பர் மரத்துக்கு இலைச்சுருட்டு, வேர் அழுகல், பட்டைச் சீவல் நோய்கள் வரும். பட்டைச் சீவல்னா மரத்தோட பட்டையில கறுப்பு கலர்ல ஒரு மாதிரி சீழ்போல வரும். இயற்கை முறையில ரப்பர் வளர்க்கிறதுனால இந்தமாதிரி நோய்கள் எல்லாம் வரல.

ரப்பருக்கு ஒரு வேர்தான் ஆழத்தில இருக்கும். மற்ற வேர்கள் எல்லாம் மேலதான் இருக்கும். ரசாயன உரம் போடும்போது அந்த வேர்கள் எல்லாம் செத்துப்போகும். மண் வளமும் இருக்காது. செயற்கை உரம் போட்டா தோட்டத்தில உள்ள மண்ணு பாறை மாதிரி ஆயிரும். அதனால வேர்களுக்குக் கெடுதல் வரும். இயற்கை உரத்தால எங்க தோட்டத்தில மண் எப்பவும் பஞ்சுமெத்த மாதிரி நல்லா இருக்கும். அதுபோக மழை நீரைச் சேமிக்கச் சாலுபோல (நீளவாக்கில் பள்ளம்) போட்டிருக்கோம். மழை இல்லாம பனிகாலத்தில இங்க வளர்ந்து நிக்கிற செடிகள்ல பனி படர்ந்து தரையை ஈரப்பதமா வெச்சுகிடும். மலைப்பாங்கான இடம்ங்கிறதால இதுக்கு அதிகமா உரமும் தேவையில்ல, தண்ணியும் தேவையில்ல. பிப்ரவரி மாசம் வெயில் காலத்தில இலை உதிர்ந்துபோவும். அந்தச் சமயத்தில பால் வெட்டாம அப்பிடியே விட்டிருவோம்” என்றவர், பால் உற்பத்தியில் வரும் வித்தியாசத்தை விவரித்தார்.

ரப்பர் மரத்தோட்டம
ரப்பர் மரத்தோட்டம

4 கிலோ ஷீட்

“ரசாயன உரம் போடுறவங்களுக்கு ஒரு நாள் வெட்டுக்கு 30 லிட்டர் பால் கிடைக்குதுன்னா, இயற்கை முறையில வளர்க்கிற ரப்பர் தோட்டத்துல 40 லிட்டருக்கு மேல பால் கிடைக்கும். 40 சென்ட்டுல உள்ள எங்க மரத்தில ஒருநாள் கிடைக்குற பால் உலத்தினா 4 கிலோ ரப்பர் ஷீட் கிடைக்குது.

இயற்கை முறையில வளர்க்கிற ரப்பர்ல கிடைக்கிற பால் நல்ல கட்டியா இருக்கும். அதனால எடை அதிகமாவும் இருக்கும். இந்தப் பால் எடுக்கிறதுக்கு ஒரு மரத்துக்கு ஒரு ரூபா, ஒன்னரை, ரெண்டு ரூபா வரைக்கும் கூலி இருக்கு’’ என்றவர் ரப்பர் ஷீட் தயாரிப்பு பற்றிப் பேசினார்.

‘‘அரை லிட்டர் பாலுக்கு ஒரு ஷீட் அடிப்போம். இயற்கை முறையில அடிக்கிற ஷீட்டுக்குத் தனி விலை கிடையாது. ஆனா, பால் கட்டியா இருக்கிறதுனால எடை கூடுதலா இருக்கும். . மாசம் சராசரியா 48 கிலோ ரப்பர் ஷீட் விற்பனை செய்வோம். நாலு மாசத்துக்கு சீஸன் இருக்கும்.

இயற்கை முறையில வளர்க்கிற ரப்பர்ல கிடைக்கிற பால் நல்ல கட்டியா இருக்கும். அதனால எடை அதிகமாவும் இருக்கும்.

பாலுக்கு மவுசு

முதல் தர ரப்பர் ஷீட் கிலோ 165 ரூபாய் விற்குது. தரம் குறைஞ்ச ரப்பர் ஷீட் கிலோ 145 ரூபாய்க்குப் போகுது. நாலு மாசத்துக்கு சுமார் 30,000 ரூபாய் வருமானம் கிடைக்கும். மூணுல ஒரு பங்கு செலவாகும். அந்த வகையில் 40 சென்ட்டுக்கு சுமார் 20,000 ரூபாய் லாபம் கிடைக்கும். ஆனா ஒணக்க (உலர்ந்த) ஷீட்டை விடப் பச்சப் பாலுக்குதான் விலை கூட. இப்ப பச்சப்பால் ஒரு கிலோ 175 ரூபாய்க்கு விக்குது. கொரோனா காலத்தில கை உறை தயாரிக்கிறதுக்காகப் பச்சப் பால் அதிகமா கேக்குறாங்க. நாங்க இனிமே பச்சப் பாலாத்தான் கொடுக்கப்போறோம். அதுக்கு ரப்பர் போர்டு வழியா ட்ரம் கொண்டுவந்து தருவாங்க. அதில நாம பாலை அரிச்சு விட்டா போதும். அவங்க எடைபோட்டு எடுத்துட்டு போவாங்க. ரப்பர் பாலை கட்டியாக்கி ஷீட் அடிக்க வேண்டிய தில்ல. ஒணத்த வேண்டிய வேலை இல்ல. அதுமட்டுமில்லாம ஒணந்த ரப்பர் ஷீட்டை விடப் பச்சப்பால் எடையும் கூடுதலா இருக்கும். அதனால பச்சபால் கொடுக்கிறதுதான் லாபமா இருக்கும்” என்றவர் நிறைவாக.

ரப்பர் மரத்தோட்டம
ரப்பர் மரத்தோட்டம

“ரப்பர் லாபகரமான விவசாயம்தான். ரப்பர் மரத்துக்குப் பால் வெட்டுறது, உரம் போடுறதுன்னு மூணுல ஒரு பங்குச் செலவு ஆவும். ரெண்டு பங்கு லாபமா கிடைக்கும். ரப்பர் பால் வெட்டுறதுக்குப் பயிற்சி எடுத்துக் கிட்டுப் பால் வெட்டுனா இன்னும் லாபமா கிடைக்கும். என் ரப்பர் தோட்டத்துல நான்தான் முன்னாடி பால் வெட்டிக்கிட்டு இருந்தேன். ஆனா, இப்ப கூலிக்கு ஆள் வெச்சுதான் வெட்டுறோம்” என்று விடைகொடுத்தார்.



தொடர்புக்கு, கிரேஸ் ராணி,

செல்போன்: 87785 00165

ரப்பர் சாகுபடியில் கிடைக்கும் வருமானம் குறித்து
கிரேஸ் ராணி சொன்ன தோராயக் கணக்கு


கன்னியாகுமரி மாவட்டத்தில் ஏக்கர் கணக்கில் ரப்பர் விவசாயம் செய்பவர்கள் உண்டு. ஆனால், பிற வேலை செய்துகொண்டே வீட்டின் அருகே சிறிய இடங்களில் ரப்பர் வளர்ப்பில் ஈடுபடுபவர்கள் அதிகம். ரப்பர் பாலை தொழிலாளர்கள் வெட்டி வைத்துவிட்டுப் போனால், அதை ஷீட்டாக மாற்றி உலர வைத்து விற்பனை செய்வதைத் தோட்டத்தின் உரிமையாளர் கவனித்துக்கொள்வார். இதனால் பிற வேலைகள் பாதிக்காது.

100 ரப்பர் மரங்களை இயற்கை முறையில் வளர்த்தால் மாதம் சராசரியாக 48 கிலோ ரப்பர் ஷீட் உற்பத்தி செய்யலாம். ஒரு கிலோ ரப்பர் ஷீட் 165 ரூபாய் எனக் கணக்கிட்டால் 7,920 ரூபாய் கிடைக்கும். இதில் உரம், ரப்பர் பால் வெட்டும் கூலி எனச் சுமார் 2,640 ரூபாய் செலவு ஆகும். மீதி 5,280 ரூபாய் லாபமாகக் கிடைக்கும். சொந்தமாக ரப்பர் பால் வெட்டினால் இன்னும் கூடுதலாக 2,000 ரூபாய் லாபம் கிடைக்கும்.

மீன் பண்ணை

 மீன் வளர்ப்பு... உத்தரவாதமான லாபம் தரக்கூடிய தொழிலாக இருக்கிறது. ஆனால், மீன் வளர்ப்பில் ஈடுபட்டுள்ள பெரும்பான்மையானோர் குறைந்த பரப்பில்தான் செய்து வருகிறார்கள். ஆனால், தஞ்சை மாவட்டம் சுவாமிமலையைச் சேர்ந்த விவசாயி சர்மஸ்த், 12 ஏக்கரில் மீன் பண்ணை அமைத்து, மீன் குஞ்சுகள் மற்றும் மீன்கள் உற்பத்தியில் ஈடுபட்டு வருகிறார்.


35 ஆண்டுகளுக்கும் மேலாக இதில் அனுபவம் பெற்ற சர்மஸ்த், இத்துறை சார்ந்த மாணவர்கள் மற்றும் விவசாயிகளுக்கு அவ்வப்போது பயிற்சியும் அளித்து வருகிறார்.

ஒரு பகல் பொழுதில் அவரது மீன் பண்ணைக்குச் சென்றோம். மீன்களுக்குத் தீவனம் போட்டுக்கொண்டிருந்தவர், நம்மை வரவேற்று, உற்சாகமாகப் பேசத் தொடங்கினார். ‘‘இந்தப் பண்ணையோட மொத்த பரப்பு 12 ஏக்கர். 20 அடி அகலத்துக்குக் கரைகள் அமைச்சிருக்குறதால, நீர்ப்பரப்பு 8 ஏக்கர்லதான் இருக்கும். மீன் பண்ணை தொழிலுக்கு முக்கியம் கரைகள்தான். அதை அகலமா அமைச்சாதான் பெருமழைக் காலங்கள்ல உடைப்பு ஏற்படாமல் இருக்கும். நான்கு சக்கர வாகனங்கள் வந்துட்டுப்போக வசதியா இருக்கும். நிறைய இடத்தைக் கரைகளுக்கு விட்டு வீணாக்கிட்டோம்னு கவலைப்படத் தேவையில்ல. கரையில தென்னை மூலம் வருமானம் எடுக்கலாம். நாங்க அதைத்தான் பண்ணிக்கிட்டு இருக்கோம். கரைகள்ல நிறைய களைகள் மண்டுது. ஆடுகளை மேயவிட்டுப் பசுந்தீவனமாகப் பயன்படுத்திக்குறோம்’’ என்றவர், தன்னைப் பற்றிய தகவல்களைப் பகிர்த்துகொள்ளத் தொடங்கினார்.

மீன்களுடன் சர்மஸ்த்
மீன்களுடன் சர்மஸ்த்

‘‘பட்டய படிப்பு முடிச்சதும், சவுதியில் சில வருஷம் வேலைபார்த்தேன். 1990-91-ம் வருஷங்கள்ல வளைகுடா நாடுகள்ல போர் நடந்தது. அந்தச் சமயத்துல, சொந்த ஊருக்குத் திரும்பி வந்துட்டேன். இங்கயே இருந்து விவசாயத்தைக் கவனிப்போம்னு முடிவெடுத் தேன். அப்பா, நெல், கரும்புச் சாகுபடி செஞ்சிக்கிட்டு இருந்தார். இது அதிக களித் தன்மை கொண்ட பள்ளக்கால் நிலம். எப்பவும் ஈரம் இருந்துகிட்டே இருக்கும். அதனால சரியான விளைச்சல் இல்ல. இந்த நிலத்துக்கு எது ஏற்றதோ, அதைச் செஞ்சா தான், சரியா இருக்கும்னு முடிவெடுத்து அதுக்கான தேடல்ல இறங்கினேன்.

எப்பவும் தண்ணீர் தேங்கி நிக்கக்கூடிய இந்த மண்ணுல, நிறைய புழுப் பூச்சிகள் உருவாகுது. இதைச் சாப்பிட்டு வளரக்கூடிய மீன்களை வளர்த்தா, வெற்றிகரமாக இருக்கும்னு தீர்மானிச்சேன். ஆனால், இதை எப்படி வளர்க்கணும்ங்கற முறையான தொழில்நுட்பம் எனக்குத் தெரியாது. எங்க ஊருக்குப் பக்கத்துல உள்ள பட்டீஸ்வரத்துல, பிச்சை அய்யர் மீன் வளர்த்துக்கிட்டு இருந்தார். அவரைச் சந்திச்சேன். நிறைய ஆலோசனை சொன்னார்.

மீன் குளம்
மீன் குளம்

1993-ம் வருஷம் 7 ஏக்கர்ல மீன் வளர்ப்பை ஆரம்பிச்சேன். எனக்கு வழிகாட்டிய, பிச்சை அய்யர் நினைவா, ஒரு குட்டைக்குப் பிச்சை அய்யர் குட்டைனு பேர் வெச்சேன். மீன் வளர்ப்புல இறங்கிய பிறகு, அனுபவ ரீதியாகவும் நிறைய விஷயங்கள் தெரிஞ்சு கிட்டேன். தஞ்சாவூர் மீன்வள பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிலைய பேராசிரியர்களும் ஆலோசனைகள் சொல்லி, என்னை ஊக்கப்படுத்திக்கிட்டே இருந்தாங்க. 8 ஏக்கர்ல தொடங்குன இந்த மீன் பண்ணை படிப்படியாக வளர்ச்சி அடைஞ்சு, இப்ப 12 ஏக்கர் பரப்புக்கு விரிவடைஞ்சிருக்கு. அகலமான கரைகள், ஆட்டுக்கொட்டகை, பண்ணைத் தொழிலாளர்கள் தங்குறதுக் கான வீடு, மீன் குஞ்சு உற்பத்திக்கான கட்டுமானங்கள் எல்லாம் போக, அஞ்சரை ஏக்கர்ல மீன் குஞ்சு உற்பத்தியும், இரண்டரை ஏக்கர்ல மீன் வளர்ப்பும் செஞ்சிக்கிட்டு இருக்கோம்’’ என்றவர் பணியாளர்களிடம் சில வேலைகளைச் சொல்லிவிட்டுத் தொடர்ந்தார்.

கரையில் தென்னை மரங்களுடன் மீன் குளம்
கரையில் தென்னை மரங்களுடன் மீன் குளம்
அகண்ட கரைகளுடன் மீன் குளங்கள்
அகண்ட கரைகளுடன் மீன் குளங்கள்

மீன் குஞ்சு உற்பத்தி

‘‘மீன் குஞ்சு உற்பத்திக்கு வெவ்வேறு அளவுகள்ல 24 குட்டை களை அமைச்சிருக்கேன். மீன் குஞ்சுகளோட வயசு, வளர்ச்சிக்கு ஏற்ப, பிரிச்சு வளர்க்குறதுக் காக இதுமாதிரி சின்னச் சின்ன குட்டைகளை உருவாக்கி இருக்கோம். அதுமட்டுமல்லாம ஒவ்வொரு குட்டையையும் வருஷத்துல 4 மாசம் வெயில்ல நல்லா காய வைக்கணும். சின்ன குட்டைகளா நிறைய இருந்தாதான், தட்டுப்பாடு ஏற்படாம, வருஷம் முழுக்க, மீன் குஞ்சுகள உற்பத்தி செய்ய முடியும்.

மீன் குஞ்சுகளைக் குட்டைகள்ல விடும்போது பறவைககிட்ட இருந்து காப்பாத்தணும். அதுக்காக எல்லாப் பக்கமும் வலை கட்டி விடுவோம். குட்டைகள்ல 10 சென்ட் பரப்புக்கு 3 கிலோ வீதம் கடலைப் பிண்ணாக்கை கரைச்சு விட்டு அடுத்த 5 நாள்கள் கழிச்சு, குஞ்சுகளை விடுவோம். 10 சென்ட் பரப்புக்கு 3 முதல் 5 லட்சம் குஞ்சுகள் வரை விடுவோம். ஒரு லட்சம் குஞ்சுகளுக்கு ஒரு கிலோ வீதம் தினமும் கடலைப் பிண்ணாக்கை ஊற வெச்சிப் போடுவோம். 6 முதல் 15 நாளைக்கு, கம்பு, கேழ்வரகு, சோளம், கோதுமை மாவு, கோதுமை தவிடு, ஒரு லட்சம் குஞ்சுகளுக்கு ஒண்ணேகால் கிலோ வீதம் தீவனம் போடுவோம். அடுத்த வாரங்கள்ல படிப் படியாக 250 கிராம் வீதம் தீவனத்தோடு அளவை அதிகப்படுத்திக்கிட்டே இருப்போம். 45 நாள்கள் வயசுல, விரலி குஞ்சுகளாக விற்பனை செய்வோம்’’ என்றவர், மீன் குஞ்சுகள் பராமரிப்பு மற்றும் விற்பனை குறித்துப் பேசினார்.

வலை
வலை
கரையில் தென்னை மரங்கள்
கரையில் தென்னை மரங்கள்

‘‘ரோகு 60 சதவிகிதம், மிர்கால் 75 சதவிகிதம், கட்லா 25 சதவிகிதப் பிழைப்புத்திறனோடு விற்பனைக்குத் தேறி வரும். தண்ணீரின் தன்மையில் ஏற்படும் மாற்றத்தைப் பொறுத்தும், குஞ்சுகளின் ஆரோக்கியம் மற்றும் வளர்ச்சியைப் பொறுத்தும், அப்பப்ப வேற குட்டைகளுக்குக் குஞ்சுகளை மாத்த வேண்டியதிருக்கும். எல்லாக் குஞ்சுகளையுமே 45 நாள் வயசு வரைக்கும் வெச்சிருந்து, ஒரே சமயத்துல விற்பனை செய்ய முடியாது. மத்த மீன் பண்ணையாளர்கள் வந்து கேட்கும் போதெல்லாம் விற்பனை செஞ்சிக்கிட்டே இருப்போம். 3 நாள் வயசுடைய நுண் குஞ்சுகளை, குட்டையில விட்டதிலிருந்தே விற்பனையை ஆரம்பிச்சிடுவோம். 10 நாள் வயதுடைய ஒரு குஞ்சு 25 பைசா, 20 நாள் குஞ்சு 50 பைசா, 45 நாள் குஞ்சு 1 ரூபாய், 60 நாள் குஞ்சு 1 ரூபாய் 25 பைசாங்கற விலையில விற்பனை செஞ்சுக்கிட்டு இருக்கோம். வருஷத்துக்குக் குறைஞ்சபட்சம் 10 லட்சம் நுண் மீன்குஞ்சுகளைக் குட்டையில் விட்டு வளர்த்தோம்னா, அதுல 5 லட்சம் குஞ்சுகள் விற்பனைக்குத் தேறும். ஒரு குஞ்சுக்குச் சராசரியா ஒரு ரூபாய் வீதம் 5 லட்சம் வருமானம். இதுல செலவு போக 2 லட்சம் ரூபாய் லாபமாக மிஞ்சும்’’ என்றவர், இருப்பு மீன் குஞ்சுகள் பற்றிய விவரங்களைப் பகிர்ந்துகொண்டார்.

மீன் குஞ்சுகள்
மீன் குஞ்சுகள்

வளர்ச்சி தேக்கப்பட்ட இருப்புக் குஞ்சுகள்

‘‘60 நாளைக்குப் பிறகு, தீவனம் போடாம, குட்டையில் இயல்பாகக் கிடைக்கக்கூடிய தாவர, விலங்கு நுண்ணுயிரிகளை மட்டும் மீன் குஞ்சுகள் சாப்பிட்டு, அதிக வளர்ச்சி அடையாத குஞ்சுகளாக 8 - 10 மாதங்கள்ல விற்பனை செய்றோம். இதை ‘வளர்ச்சி தேக்கப்பட்ட இருப்புக் குஞ்சுகள்’னு சொல்வோம். 20 சென்ட் பரப்புக்கு 6,000 குஞ்சுகள் வீதம் விட்டோம்னா, 4,000 குஞ்சுகள் விற்பனைக்குக் கிடைக்கும். ஒரு குஞ்சுக்கு 10 ரூபாய் வீதம் 40,000 ரூபாய் வருமானம் கிடைக்கும். இதுல தீவனச் செலவே கிடையாது. ஆனால் தாவர, விலங்கு நுண்ணுயிரிகளை உருவாக்க, 20 நாளைக்கு ஒருதடவை சாண நீரை ஊத்துவோம் (20 கிலோ சாணத்தை, 20 லிட்டர் தண்ணீரில் கலந்து, அதிலுள்ள வாயு முழுமையாக வெளியேறி, கசடுகள் அடியில் தங்கிய பிறகு மேலே உள்ள தெளிந்த கரைசலை மட்டும் எடுத்து, குட்டையில் பரவலாக ஊற்ற வேண்டும்). வருஷம் 4 லட்சம் ரூபாய்க்கு இருப்புக் குஞ்சுகளை விற்பனை செய்றோம். ஆள் செலவு போக, 2.5 லட்சம் ரூபாய் லாபமாக மிஞ்சும். பொதுக் குளங்கள்ல மிகவும் குறுகிய காலங்கள்ல மீன் வளர்க்கக் கூடியவங்க, இம்மாதிரியான குஞ்சுகளை விரும்புவாங்க. இதுமாதிரி பெரிய குஞ்சுகளாக வாங்கிக்கிட்டுப் போய், குளத்துல விட்டால், அடுத்த 3 - 4 நாள் மாதங்களிலே அது வேகமாக வளர்ந்து பெரிய மீன்களாக விற்பனைக்குத் தேறி வந்துடும்’’ என்றவர், என்றவர், இரண்டரை ஏக்கர் குளத்தில் மீன் மூலமாகக் கிடைக்கும் வருமானம் பற்றியும் பேசினார்.

பெரிய மீன்குளம்
பெரிய மீன்குளம்
மீன் பிடிக்கும் பணியில்
மீன் பிடிக்கும் பணியில்

‘‘ரெண்டரை ஏக்கர் குளத்துல வளர்க்கிற மீன்களை 8-12 மாதங்கள்ல விற்பனை செய்வோம், எனக்கு நூற்றுக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் இருக்காங்க. மீன் பிடிக்குறதுக்கு முதல்நாளே, அவங்களுக்குக் குறுஞ்செய்தி அனுப்பிடுவேன். பண்ணைக்கே வந்து வாங்கிக்கிட்டுப் போயிடுவாங்க. ஒரு ஏக்கர்ல 2,400 குஞ்சுகள் விட்டோம்னா, அதுல 2,000 குஞ்சுகள் விற்பனைக்குக் கிடைக்கும். சராசரியாக 1,600 கிலோ மகசூல் கிடைக்கும். ஒரு கிலோ உயிர் மீன் 200 ரூபாய்னு விற்பனை செய்றோம். அது மூலமா 3,20,000 ரூபாய் வருமானம் கிடைக்கும். ஒரு கிலோ மீன் உற்பத்தி செய்ய 2 கிலோ தீவனம் வீதம் 110 ரூபாய் செலவாகுது. 1,600 கிலோ மீன் உற்பத்திக்கு 1,76,000 செலவாகுது. இதைத் தவிர, மீன் குஞ்சுகள், தண்ணீர் இறைக்க, மீன் பிடிப்புச் செலவு எல்லாம் போக, ஒரு ஏக்கருக்கு 1 லட்சம் ரூபாய் லாபமாகக் கிடைக்கும். ரெண்டரை ஏக்கர் மீன் உற்பத்திமூலம் 2.5 லட்சம் ரூபாய் லாபம் கிடைக்கும்’’ என்றவர் நிறைவாக,

பெரிய மீன்குளம்
பெரிய மீன்குளம்


‘‘இந்த 12 ஏக்கர் நிலத்திலிருந்து வருஷத்துக்கு மொத்தம் 8,10,000 ரூபாய் லாபமாகக் கிடைக்குது’’ என்றார்.

தொடர்புக்கு, சர்மஸ்த்,

செல்போன்: 98940 54526.

மீன் வளர்ப்பு தொடர்பான தொழில்நுட்பங்கள் இங்கே பாடமாக...

மீன் வளர்ப்புக்கு, வடக்குத் தெற்கு திசையில் செவ்வக வடிவத்தில் குளம் அமைக்கப்பட்டால், இயல்பான காற்றின் போக்கில் அலைகள் உருவாகும். இதனால் மீன்களுக்குத் தேவையான ஆக்சிஜன் தாராளமாகக் கிடைக்கும். களிபாங்கான மண்ணும் இதற்கு முக்கியம். 5-6 அடி ஆழத்தில் குளம் அமைக்க வேண்டும். குளத்திற்குள் உழவு ஓட்டி, ஒரு வாரம் காய விட வேண்டும். பிறகு அரையடி உயரத்திற்குத் தண்ணீர் நிரப்பி, ஏக்கருக்கு 20 கிலோ வீதம் கிளிஞ்சல் சுண்ணாம்பு போட வேண்டும். 2 நாள்களுக்குப் பிறகு, 3 அடி உயரத்திற்குத் தண்ணீர் நிரப்பி, 100 லிட்டர் தெளிந்த சாண நீரை ஊற்ற வேண்டும். பிறகு 4 அடி உயரத்துக்குத் தண்ணீர் நிரப்பி ஒரு ஏக்கருக்கு, 45 நாள்கள் வயதுடைய 2,400 விரலி குஞ்சுகள் விட வேண்டும்.

வலைபோடும் பணி
வலைபோடும் பணி

ரோகு, கட்லா, மிர்கால் எல்லாம் கலந்து விட வேண்டும். தலா 10 சதவிகிதம் கடலைப் பிண்ணாக்கு, கோதுமை, சோளம், கம்பு, கேழ்வரகு, 48 சதவிகிதம் தவிடு, 2 சதவிகிதம் தாது உப்பு கலந்த தீவனம் கொடுக்க வேண்டும். 1-10 நாள்களுக்குத் தினமும் ஒரு கிலோ தீவனம் கொடுக்க வேண்டும். பிறகு 10 நாள்களுக்கு ஒரு முறை 10 சதவிகிதம் தீவன அளவை அதிகப்படுத்த வேண்டும். இரண்டரை மாதங்களுக்குப் பிறகு மீன்களின் மொத்த எடையில் 2 சதவிகிதம் தீவனம் கொடுக்க வேண்டும். ஒரு மீன் தலா 100 கிராம் வீதம் 2,400 மீன்கள் 240 கிலோ எடை இருக்கும். தினமும் 5 கிலோ தீவனம் கொடுக்க வேண்டும். பிறகு தீவன அளவை அதிகப்படுத்த தேவையில்லை.

சாதம், இட்லி, செங்காயாக உள்ள பப்பாளி, புல், பூசணிக்காய், தக்காளி, ஆமணக்கு இலை போடலாம். மீன்கள் விரும்பிச் சாப்பிடும். முட்டைகோஸ், முள்ளங்கி தழைகளைப் போட கூடாது. இவற்றை மீன்கள் விரும்பிச் சாப்பிடும். ஆனால் தண்ணீரின் கார, அமிலத்தன்மை மாறிவிடும். வாரத்தில் ஒரு நாள் தீவனம் கொடுக்காமல் பட்டினி போட வேண்டும். இதனால் மீன்கள் தனக்குத் தேவையான உணவைத் தேடி அலைந்து, தாவர, விலங்கு நுண்ணுயிரிகளைச் சாப்பிடும். இதனால் மீன்கள் சுறுசுறுப்பு அடையும்.

வலைபோடும் பணி
வலைபோடும் பணி
சிறிய மீன்குளம்
சிறிய மீன்குளம்

நிழல்

கோடைக்காலங்களில் மீன்களுக்கு ஓரளவுக்கு மிதமான நிழல் அவசியம். ஆனால், அதேசமயம் அதிகபட்சம் 20 சதவிகிதம் மட்டும் நிழல் இருக்க வேண்டும். சிலர் தங்களது மீன் பண்ணைகளில் அதிக அளவில் மரங்களை வளர்த்து, 40 - 50 சதவிகிதம் நிழலை உருவாக்கி விடுகிறார்கள். இது மீன்களின் வளர்ச்சியைப் பாதிக்கும். தென்னை, தேக்கு, நாவல், வாழை, கிளிரிசீடியா, சூபாபுல், அகத்தி, முருங்கை உள்ளிட்ட மரங்களை வளர்க்கலாம்.

எவை தரமான மீன் குஞ்சுகள்

மீன் வளர்ப்பில் ஈடுபடக்கூடியவர்கள், மீன் குஞ்சுகள் வாங்குவதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். தண்ணீரின் சுழற்சியில், எதிர் திசையில் மிகவும் சுறுசுறுப்பாக நீந்திச் செல்லக் கூடிய குஞ்சுகளாக இருக்க வேண்டும். வாலில் சிதைவு இல்லாமல் இருக்க வேண்டும். பேன்கள் இருக்கக் கூடாது. தலை பெருத்தும் உடல் சிறுத்தும் இருக்கக் கூடாது. அப்படி இருந்தால் உடல் இளைத்துப் பலவீனமாக உள்ளது என்று அர்த்தம். மீன்களுக்கான வழக்கமான தோற்றத்தில் குஞ்சுகள் இருக்க வேண்டும்.

குளத்தின் கரைகளில் தென்னை மரங்கள்
குளத்தின் கரைகளில் தென்னை மரங்கள்

தென்னை

“கரைகள்ல மொத்தம் 120 தென்னை மரங்கள் இருக்கு, ஒரு வருஷத்துக்கு, ஒரு மரத்துல இருந்து 100 காய்கள் வீதம், மொத்தம் 12,000 காய்கள் கிடைக்குது. ஒரு காய்க்கு 10 ரூபாய் வீதம் 1,20,000 ரூபாய் வருமானம் கிடைக்கும். காய் பறிப்புக்கூலி, இதரச் செலவுகள் போக, 70,000 ரூபாய் லாபமாகக் கிடைக்குது.

ஆடு வளர்ப்பு

30 ஆடுகள் வளர்க்குறோம். கரைகள்ல வளரக்கூடிய களைகள்தான் இவற்றுக்குத் தீவனம். இந்த ஆடுகள்மூலம் கிடைக்கக்கூடிய குட்டிகளை வளர்த்து விற்பனை செய்றோம். அது மூலமா 40,000 ரூபாய் வருமானம் கிடைக்குது. ஆக, தென்னை, ஆடு வளர்ப்புல கிடைக்கிறது மீன் வளர்ப்புக்கான கூடுதல் ஊக்கத்தொகைத்தான். இதையும் மீன் பண்ணையில கிடைக்கிற லாபமாகத்தான் பார்க்கிறேன்” என்கிறார் சர்மஸ்த்.

கொய்யா, அத்தி, மாதுளை

 ரே பயிரைச் சாகுபடி செய்து சரியான விலை கிடைக்கவில்லையே எனப் புலம்பும் விவசாயிகளுக்கு மத்தியில், சந்தையில் அதிக தேவையுள்ள பயிரைச் சாகுபடி செய்தால் விலை குறைவு, நஷ்டம் என்ற பேச்சுக்கே இடமில்லை. கொரோனா காலத்திலும் என்னை வாழவைத்தது வித்தியாசமான பயிர் தேடல்தான்” என்கிறார் தூத்துக்குடியைச் சேர்ந்த விவசாயி ரமேஷ்.


தூத்துக்குடி மாவட்டம், கழுகுமலையிலிருந்து 10 கி.மீ தொலைவில் உள்ளது செட்டிக்குறிச்சி கிராமம். இந்தக் கிராமத்தின் கடைக்கோடியில் உள்ளது ரமேஷின் இயற்கை விவசாயப் பண்ணை. மாதுளைத் தோட்டத்துக்குள் வேலையாள்களுடன் சேர்ந்து மாதுளைப் பழங்களைப் பறித்துக் கொண்டிருந்தவரைச் சந்தித்தோம்.

மாதுளையுடன் ரமேஷ்
மாதுளையுடன் ரமேஷ்


‘‘அடிப்படையிலேயே விவசாயக் குடும்பம். அப்பா துரைராஜ், போஸ்ட் மாஸ்டரா வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். அப்பா போஸ்ட் ஆபீஸ்ல வேலை பார்த்தாலும் விவசாயத்தைக் கைவிடல. அம்மா முழுநேரம் விவசாயத்தைப் பார்த்துக் கிட்டாங்க. இறவையில கத்திரி, தக்காளி, முருங்கை மாதிரியான காய்கறிகளும், மானாவாரியா உளுந்து, பாசிப் பயறும் சாகுபடி செஞ்சுட்டு வந்தாங்க.

நான் எம்.சி.ஏ முடிச்சுட்டு பெங்களூருல ஒரு கம்பெனியில 3 வருஷம் வேலை பார்த்தேன். பிறகு, அமெரிக்காவுல 7 வருஷம் வேலை பார்த்தேன். சின்ன வயசுல இருந்தே விவசாயத்து மேல எனக்கு ரொம்ப ஆர்வம். படிக்கும்போதே கிடைக்குற நேரத்துல தோட்டத்துக்கு வந்து விவசாய வேலைகளைச் செய்வேன். அப்ப மானாவாரி, இறவை ரெண்டுமே ரசாயன உரத்தைப் பயன்படுத்திதான் செஞ்சிட்டு வந்தாங்க. ஆனா, எனக்கு ரசாயன உரம் போடுறது, பூச்சிக்கொல்லி தெளிக்கிறதுலயெல்லாம் உடன்பாடு கிடையாது.

வாய்ப்புக் கொடுத்த கொரோனா

தோட்டத்துல உரம் தூவப் போறாங்க, பூச்சிக்கொல்லி அடிக்கப் போறாங்கன்னு தெரிஞ்சாலே மூணு நாளுக்குத் தோட்டத்துப் பக்கமே வர மாட்டேன். இதுக்கு மாற்று என்னங்கிற தேடல்ல இறங்குனேன். இயற்கை விவசாயத்தைப் பத்தி யூடியூப்ல சில வீடியோக்களைப் பார்த்தேன். இந்த நிலையில, கொரோனா முதல் அலைக்கு ரெண்டு மாசத்துக்கு முன்னால ஊருக்கு வந்தேன். தொற்று தீவிரத்துக்குப் பிறகு, ஊருலயே இருந்துட்டேன். அந்த நேரத்துலதான் நம்ம தோட்டத்துல இயற்கை முறையில வித்தியாசமா ஏதாவது சாகுபடி செய்யலாம்னு யோசனை வந்துச்சு. நான் இயற்கை விவசாயம் செய்யப்போறேன்னு வீட்ல சொன்னதும், யாருக்குமே நம்பிக்கை இல்ல. ஆனாலும், நான் வேலைகள்ல இறங்குனேன். என்ன பயிர் சாகுபடி செய்யலாம்னு இயற்கை விவசாயம் செய்ற நண்பர்கள்ட்ட கேட்டேன்.

கொய்யா தோட்டத்தில்
கொய்யா தோட்டத்தில்


லக்னோ-49 கொய்யா

‘நம்ம பகுதியில நாட்டுக்கொய்யா, லக்னோ-49 ரகக் கொய்யாதான் பரவலா சாகுபடி செய்றாங்க. மற்ற ரகக் கொய்யாவை விட ‘தைவான் பிங்க்’ ரகக் கொய்யா 7 நாள்கள் வரைக்கும் இருப்பு வெச்சு விற்பனை செய்யலாம். இதுக்கு நல்ல வரவேற்பும், சந்தையில அதிக தேவையும், கூடுதல் விலையும் கிடைக்குது’னு சொன்னாங்க. தைவான் ரகக் கொய்யாவைச் சாகுபடி செஞ்சுட்டு வர்ற சில விவசாயிகளோட தோட்டத்துக்கு நேர்ல போய்ப் பார்த்துட்டு வந்தேன்.

அத்தித் தோட்டம்
அத்தித் தோட்டம்


பூனா அத்தி

எங்களுக்கு 7 ஏக்கர் நிலமிருக்கு. அதுல 1.25 ஏக்கர்ல உழவடிச்சு, குழி எடுத்துச் சொட்டுநீர்ப் பாசனம் அமைச்சு கொய்யா கன்னுகளை நட்டேன். பஞ்சகவ்யா, ஜீவாமிர்தம், மீன் அமிலம், மூலிகைப் பூச்சுவிரட்டி நானே தயாரிச்சு பயன் படுத்துனேன். இதே மாதிரி பழமரச் சாகுபடியில வேற என்ன செய்யலாம்னு யோசிச்சப்போ எங்க ஊருக்குப் பக்கத்துல இருக்குற கோவில்பட்டியில ராஜ்மோகன்ங்கிற விவசாயி, இயற்கை முறையில அத்திச் சாகுபடி செய்யுறதா பசுமை விகடன்ல படிச்சேன். அவர்கிட்டயே 200 பூனா ரகக் கன்றுகளை வாங்கி அரை ஏக்கர்ல நட்டேன்.

பக்வா மாதுளை

மாதுளையும் இந்த மண்ணுக்கு நல்லா வரும்னு இன்னொரு நண்பர் சொல்ல, முக்கால் ஏக்கர்ல 400 பக்வா ரக மாதுளைக் கன்றுகளையும் நட்டேன். மீதியுள்ள நிலத்துல 2 ஏக்கர்ல ரெட்லேடி பப்பாளி, 2.5 ஏக்கர்ல கால்நடை தீவனம் நடவு பண்ணவும், கூடவே நாட்டுக்கோழி, மாட்டுப்பண்ணை அமைக்கவும் நிலத்தைத் தயார் செஞ்சுட்டு இருக்கேன்” என்றவர் வருமானம் குறித்துப் பேசினார்.

மாதுளைத் தோட்டம்
மாதுளைத் தோட்டம்


“1.25 ஏக்கர்ல 1,300 தைவான் பிங்க் ரகக் கொய்யா கன்றுகள நடவு செஞ்சேன். இதுல 400 கன்றுகள் சரியான வளர்ச்சி இல்லாமப் பட்டுப்போச்சு. 200 அத்திக் கன்றுகள்ல 40 கன்றுகள் பட்டுப்போச்சு. 400 மாதுளையும் நல்ல நிலையில இருக்கு. கொய்யா 8 மாசம், அத்தி 3 மாசம், மாதுளை 3 மாசம் காய்ப்புல இருக்கு. கொய்யா ஒரு கிலோ 25 ரூபாய், அத்தி ஒரு கிலோ 150 ரூபாய், மாதுளை ஒரு கிலோ 40 ரூபாய்க்கும் விற்பனையாகிட்டு இருக்கு. சேதாரமான காய்கள் போக விற்பனையான 8,500 கிலோ கொய்யா மூலமா 2,12,500 ரூபாய், 150 கிலோ அத்தி மூலமா 22,500 ரூபாய், 600 கிலோ மாதுளை மூலமா 24,000 ரூபாய்னு மொத்தம் 2,59,500 ரூபாய் வருமானமாக் கிடைச்சது.

தைவான் கொய்யா, ஒரு கிலோ 50 ரூபாய் வரைக்கும் விலை போகும். ஆனா, எங்க பகுதிகள்ல அதிகமான கொய்யா விளைச்சல் இருந்ததுனால பாதி விலைதான் கிடைச்சது. இதுல உழவு, கன்று, குழி, நடவு, மண்புழு உரம், வேப்பம் பிண்ணாக்கு, களை, இடுபொருள், அறுவடைனு மொத்தம் 1,61,000 ரூபாய் வரைக்கும் செலவாகிடுச்சு. அதுபோக மீதமுள்ள 98,500 ரூபாய் லாபமாக் கிடைச்சிருக்கு’’ என்றவர் நிறைவாக,

இடுபொருள்
இடுபொருள்


விற்பனையில் வில்லங்கமில்லை

‘‘இதுவரைக்கும் நான் செஞ்ச செலவுத்தொகையை எடுத்துட்டேன். மகசூல் இப்பதான் வர ஆரம்பிச்சிருக்கு. இன்னும் படிப்படியா அதிகரிக்கும். இனிமேல் பராமரிப்புச் செலவு மட்டும்தான். கொய்யாவை வியாபாரிகளே அறுவடை செஞ்சு எடுத்துட்டுப் போறதுனால அதுல அறுவடைச் செலவு எனக்கு மிச்சம். அத்திப்பழம் உள்ளூர்லயே விற்பனை யாயிடுது. மாதுளை கழுகுமலை, கோவில்பட்டியில உள்ள பழக்கடை களுக்கு அனுப்பிடுறேன்.

மத்த விவசாயிகளைப்போல ஒரே பயிரைச் சாகுபடி செய்யாம வித்தி யாசமா சாகுபடி செஞ்சா சந்தையில எப்பவுமே தேவை இருந்துகிட்டே இருக்கும்” எனச் சொல்லி மகிழ்ச்சி யுடன் விடைகொடுத்தார்.


தொடர்புக்கு,

ரமேஷ்,

செல்போன்: 98865 12358

அத்தி, மாதுளைச் சாகுபடி!

அத்தி, மாதுளை நடவு செய்ய வடிகால் வசதியுள்ள மண் ஏற்றது. மழைக்கு முன்பாக நடவு செய்வது சிறப்பு. அத்தி நடவு செய்ய, செடிக்குச் செடி 8 அடி, வரிசைக்கு வரிசை 10 அடி என்ற இடைவெளியில் ஓர் அடி சதுரம், ஒன்றரை அடி ஆழத்தில் குழி எடுக்க வேண்டும். மாதுளை நடவு செய்ய, செடிக்குச் செடி 8 அடி, வரிசைக்கு வரிசை 8 அடி இடைவெளியில் ஓர் அடி சதுரம், ஒன்றரை அடி ஆழத்தில் குழி எடுக்க வேண்டும். 2 அடி உயரத்தில் அத்தியை மேட்டுப்பாத்தி அமைத்து நடவு செய்தால் வளர்ச்சி, பறிப்புக்கு எளிதாக இருக்கும். அத்தி மற்றும் மாதுளை 5 மாதக் கன்றுகள் நடவுக்கு ஏற்றது.

அத்தியைப் பொறுத்தவரையில் இலைத்துரு நோய் தென்பட்டால் இலைகளை உதிர்த்து விட வேண்டும். இல்லாவிட்டால், கிளைகள் முழுவதும் பரவும். துரு நோய் மழைக்காலத்தில் காய்களிலும் பரவி புள்ளிகளை ஏற்படுத்தும். இதனால் பழங்கள் விலை போகாது. துரு நோயைக் கண்காணித்துக்கொண்டே இருக்க வேண்டும். தேவைப்படும் நேரத்தில் களை எடுக்கலாம். கன்று நட்டு, 3-ம் மாதத்தில் பிஞ்சு பிடிக்கத் தொடங்கும். அதன் பிறகு, 20 நாளுக்கு ஒருமுறை 25 கிராம் வேப்பம்பிண்ணாக்கு, 100 கிராம் மண்புழு உரம் ஆகியவற்றைக் கலந்து செடிகளின் தூரில் அடியுரமாக வைக்க வேண்டும்.

மாதுளைத் தோட்டம்
மாதுளைத் தோட்டம்


6 முதல் 15 மாதங்கள் வரை பூக்கும் பூக்களை உதிர்த்து விட வேண்டும். 15-வது மாதத்துக்குப் பிறகே காய்க்க விட வேண்டும். ஆண்டுக்கு ஒருமுறை மழைக்கு முன்பாகக் கவாத்துச் செய்ய வேண்டும். மரம் அதிக உயரம் வளராமல் இருப்பதற்கும், அதிக கிளைகள் மூலம் மகசூல் அதிகரிப்பதற்கும், அறுவடை எளிதாக இருப்பதற்கும் கவாத்து முக்கியம். முறையாகக் கவாத்துச் செய்து பராமரித்து வந்தால் 15 ஆண்டுகள் வரை தொடர்ந்து மகசூல் எடுக்கலாம்.

மாதுளையைப் பொறுத்தவரையில் அதிக தண்ணீர் கொடுக்கக் கூடாது. காய்ச்சலும் பாய்ச்சலுமாகத் தண்ணீர் விட வேண்டும். ஈரப்பதம் அதிகமானால் பூக்கள் உதிரும். மாதுளையில் பழ ஈ தாக்குதல் இருக்கும். இதற்கு மூலிகைப் பூச்சிவிரட்டிதான் தீர்வு. அதேபோல மாதுளையில் ஏற்படும் கறுப்புத் துளைகளைத் (ஃப்ரூட் போரல்) தவிர்க்க, 100 லிட்டர் தண்ணீரில் 200 கிராம் டிரைக்கோடெர்மா விரிடி, 200 கிராம் சூடோமோனஸைக் கலந்து தெளிக்கலாம். அத்தி, மாதுளைக்குத் தனிப் பராமரிப்பு ஏதுமில்லை. கொய்யாவுக்குத் தரும் அதே இடுபொருள்களை அதே நாளில் கொடுக்கலாம். அத்தி, மாதுளையைப் பொறுத்தவரையில் 3 மாதத்துக்கு ஒருமுறை 5 முதல் 10 கிலோ தொழுவுரத்தை அடியுரமாக வைக்க வேண்டும்.

கரைசலுக்காகத் தனித்தொட்டி

ஜீவாமிர்தம், அமுதக்கரைசல், பிண்ணாக்குக் கரைசல் ஆகியவற்றைத் தனித்தனி டிரம்களில் உற்பத்தி செய்வதற்குப் பதிலாக, சிமென்ட் தொட்டிகளில் தயார் செய்தால் அதை அப்படியே வடிகட்டி சொட்டுநீர் மூலம் பாய்ச்சிவிடலாம். இதற்காக, பம்ப்செட் அருகில் 10 அடி நீளம், 8 அடி அகலம், 3.5 அடி உயரத்தில் ஒரு தொட்டியும், 5 அடி நீளம், 8 அடி அகலம், 3.5 அடி உயரத்தில் ஒரு சிறிய தொட்டியையும் அமைத்திருக்கிறேன். முதல் தொட்டியில் கரைசல்களைத் தயார் செய்துவிட்டு, அதில் கிணற்றுத் தண்ணீரைத் திறந்து விடுவேன். இந்தக் கரைசல் கலந்த தண்ணீர் வடிகட்டப்பட்டு இரண்டாவது கீழ் தொட்டியில் விழும். இதன் பிறகே, கரைசல் கலந்த நீர் சொட்டுநீர் மூலம் செடிகளுக்குச் சென்றடையும். முதல் தொட்டியிலேயே கரைசல், தண்ணீருடன் வடிகட்டப்படுவதால் குழாயில் அடைப்பு ஏதும் ஏற்படாது.

கொய்யா
கொய்யா

இப்படித்தான் கொய்யா சாகுபடி செய்யணும்!

1.25 ஏக்கரில் ‘தைவான் பிங்க்’ ரகக் கொய்யா சாகுபடி செய்வது குறித்து ரமேஷ் கூறிய தகவல்கள் பாடமாக இங்கே:

பழப்பயிர் சாகுபடியைப் பொறுத்தவரை பட்டம் கிடையாது. ஆனால், மழைக்கு முன்பாக ஆவணி, புரட்டாசி போன்ற மாதங்களில் நடவு செய்வது சிறந்தது. நிலத்தை, ஒரு வாரம் இடைவெளியில் 3 முறை உழவு செய்ய வேண்டும். செடிக்குச்செடி 6 அடி, வரிசைக்கு வரிசை 6 அடி இடைவெளியில் ஒன்றரை அடி ஆழத்தில் குழிகள் எடுக்க வேண்டும். குழியை ஒரு வாரம் ஆறவிட்டு நடவு நாளன்று, ஒவ்வொரு குழிக்குள்ளும் தலா 250 கிராம் மண்புழு உரத்துடன் 50 கிராம் வேப்பம் பிண்ணாக்கு கலந்து அடியுரமாக வைக்க வேண்டும். பிறகு, கன்றை நடவு செய்து, மண் அணைத்துத் தண்ணீர் விட வேண்டும்.

3 முதல் 4 மாதக் கன்றுகள் நடவுக்கு ஏற்றது. முதல் ஒரு மாதம் ஈரப்பதத்தைப் பொறுத்துத் தண்ணீர் பாய்ச்சி வந்தால் போதும். 15 நாள்களுக்கு ஒருமுறை 200 லிட்டர் ஜீவாமிர்தத்துடன் 2 லிட்டர் இ.எம் கரைசல் மற்றும் 200 லிட்டர் ஜீவாமிர்தத்துடன் 2 லிட்டர் மீன் அமிலம் எனச் சுழற்சி முறையில் பாசன நீருடன் கலந்து விட வேண்டும். மாதம் ஒருமுறை 200 லிட்டர் ஜீவாமிர்தத் துடன் 10 கிலோ கடலைப் பிண்ணாக்கை 2 நாள்கள் ஊறவைத்து வடிகட்டி பாசன நீருடன் கலந்து விட வேண்டும்.

கொய்யா தோட்டம்
கொய்யா தோட்டம்

4-ம் மாதத்தில் பக்கக் கிளையின் நுனிகளைக் கிள்ளி விட (கவாத்து) வேண்டும். 7-ம் மாதம் வரை தொடர்ந்து இப்படிச் செய்ய வேண்டும். 8-ம் மாதத்தில் பூக்கும் பூக்களைக் காய்ப்புக்காக விடலாம். பூ பூத்ததிலிருந்து 10 நாள்களுக்கு ஒருமுறை 10 லிட்டர் தண்ணீரில் 300 மி.லி பஞ்சகவ்யா, 10 லிட்டர் தண்ணீரில் 150 மி.லி மீன் அமிலம், 10 லிட்டர் தண்ணீரில் 200 மி.லி இ.எம் கரைசல் கலந்து கைத்தெளிப்பானால் தெளித்து வர வேண்டும்.

கொய்யாவைப் பொறுத்தவரையில் கற்றாழைப்பூச்சியின் தாக்குதல் அடிக்கடி இருக்கும். இலைகள் சுருண்டு காணப்படுவதுடன் இலைக்காம்புகள், இலைகளின் பின்புறம் எனப் பப்பாளியில் மாவுப்பூச்சியைப் போலவே காணப்படுவது இதன் அறிகுறி. அந்த நேரத்தில், 200 லிட்டர் தண்ணீரில் வேப்ப எண்ணெய் 500 மி.லி, புங்கன் எண்ணெய் 500 மி.லி கலந்து இதனுடன் 200 கிராம் காதிசோப்பைக் கலந்து கரைத்து அப்படியே கைத்தெளிப்பானால் தெளித்தால் போதும்.

10-ம் மாதத்திலிருந்தது காய்களைப் பறிக்கலாம். செடியில் காய்ப்புத் தொடங்கியதும் பழ ஈக்களின் தாக்குதல் இருக்கும். இதைத் தவிர்க்க, பிஞ்சு பிடிக்கத் தொடங்கியதுமே ஒரு ஏக்கருக்கு 4 இடங்களில் விளக்குப்பொறி வைத்துக் கட்டுப்படுத்தலாம். அத்துடன் 10 நாள்கள் இடைவெளியில் 10 லிட்டர் தண்ணீரில் 300 மி.லி மூலிகைப்பூச்சிவிரட்டியைக் கலந்து தெளிக்கலாம். 13-ம் மாதத்திலிருந்தது மகசூல் படிப்படியாக அதிகரிக்கும்.

கொய்யா தோட்டத்தில்
கொய்யா தோட்டத்தில்

இரண்டாம் ஆண்டிலிருந்தது 3 மாதத்துக்கு ஒரு முறை செடிக்கு 2 கிலோ வீதம் செறிவூட்டப்பட்ட தொழுவுரம் அல்லது ஒரு கிலோ மண்புழு உரத்துடன் 200 கிராம் வேப்பம் பிண்ணாக்கு கலந்து அடியுரமாக வைக்க வேண்டும். அடுத்தடுத்த ஆண்டுகளில் அடியுரத்தின் அளவை அதிகரிக்க வேண்டும்.

மண்புழு உரத்தையும் அடியுரமாக வைக்கலாம். 4 மாதத்துக்கு ஒரு முறை களை எடுக்க வேண்டும். காய் பறிக்கும்போதே செடியின் நுனிக் கொழுந்துகளைக் கிள்ளி விட வேண்டும். காய்ப்பு குறைவதுபோலத் தெரியும்போது கவாத்துச் செய்து விடலாம். இயற்கை முறையில் முறையாகப் பராமரித்து வந்தால் 10 ஆண்டுகள் வரை தொடர்ச்சியாக மகசூல் எடுக்கலாம்


thanks you :VIKATAN .

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites