இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

• எங்கும் உயர்ந்தே நில்! எதிலும் தமிழே சொல்!! வறுமை கண்டு நொருங்காதே! வாய்ப்பு இருக்கு மறக்காதே!! விதையென விழு! விருட்சமென எழு!! உறுதியான உள்ளம் ! உலகை வெல்லும் !! ;

விவசாயத்தை தொழிலாக்கு! இந்தியாவை வளமாக்கு!! உயர்ந்தவனாய் இரு! பிறரை உயர்த்துபவனாய் இரு!! சிந்தனையில் சீற்றம்! வாழ்க்கையில் ஏற்றம்!! மூச்சு உள்ளவரை முன்னேறு ! முடியும் என்பவர்க்கே வரலாறு !! ;

.

• முடியும் என்றே முன்னேறு! வெற்றி என்பதே உன்பேரு!! செயலில் மேதையாகு! பலருக்கு பாதையாகு!! வல்லமையை வெளிப்படுத்து! வாழும் உலகை வசப்படுத்து!! முடியும் என்பதுதான் முன்னேற்றத்தின் முதல்படி !!

.

• பண்பில் உயர்ந்து நில் ! பணியில் உயர்ந்து செல் !! அனுபவத்தைப் பாடமாக்கு ஆனந்தத்தைப் பதவியாக்கு தடைகளைத் தகர்த்திடு சாதிப்புகளை நிகழ்த்திடு !!

.

Saturday, October 22, 2016

வெந்தயக்கீரை

குறுகிய காலத்தில் அதிக லாபம் தரும் வெந்தயக்கீரை சாகுபடி குறித்து விளக்கும், புதுவையில் செயல்பட்டு வரும், சுற்றுச்சூழல் மற்றும் வேளாண் அபிவிருத்தி மையத்தின் இயக்குனர் கணேஷ் கூறுகிறார்:
நிலத்தை நன்றாக உழுது, தொழு உரமிட்டு, மீண்டும் ஒருமுறை உழுது கொள்ள வேண்டும்.பின், சீரான இடைவெளியில் மேட்டுப் பாத்தி அமைத்து, அதன்மீது விதைகளை விதைக்க வேண்டும்.
விதைப்பதற்கு முன் வெந்தய விதைகளை, அசொஸ்பைரில்லம் மற்றும் ட்ரைகோடர்மாவிரிடி கொண்டு விதை நேர்த்தி செய்ய வேண்டும்.
ஏக்கருக்கு, 4 முதல், 5 கிலோ வெந்தய விதைகள் தேவைப்படும். வடிகால் வசதியுடைய கரிசல் அல்லது அங்ககச்சத்து நிறைந்த, மணற்பாங்கான நிலத்தில் வெந்தயம் பயிரிடலாம்.
அக்., முதல், டிச., மாதங்களில் வெந்தய விதைகளை பயிரிடலாம். மானாவாரியாகவும், வெந்தயத்தை பயிரிடலாம்.25 முதல், 28 டிகிரி வெப்பத்தில், இவை வளரக் கூடியவை.
விதைத்த, 10 முதல், 15 நாட்களுக்குள் வெந்தயச் செடிகள் முளைத்து விடும். 25 நாட்களில் வெந்தயச் செடியின் தழைகளை, கீரைகளாக அறுவடை செய்யலாம்.
90 முதல் 100 நாட்களுக்குள் வெந்தய விதைகளை அறுவடை செய்யலாம்.
சாம்பல் நோய் தாக்குதல் தென்பட்டால், ஹெக்டருக்கு, 25 கிலோ சல்பர் மற்றும் கந்தகப் பொடியை பயன்படுத்தலாம்.
மூன்று நாட்களுக்கு ஒருமுறை, நீர் பாய்ச்ச வேண்டும். வெந்தயம் பயிரிடப்பட்டுள்ள நிலப்பகுதியை, ஈரப் பதத்துடன் இருக்கும்படி வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம். அதற்காக, தேங்காய் நாரை செடிகளின் இடையே இடலாம்.
வெந்தயச் செடிகளின் தழைகளை, கீரைகளாக விற்பனை செய்யலாம். ஏக்கருக்கு, 4 டன் கீரைகளை அறுவடை செய்யலாம்.
நம் பகுதிகளில் வெந்தய விதைகளை அறுவடை செய்ய வேண்டுமென்றால், நிழல் வலை அமைத்து பயிர் செய்ய வேண்டும். மருத்துவ குணம் கொண்ட வெந்தயத்தை உட்கொண்டால், வயிற்று உபாதைகள் நீங்கும் என்பதோடு, சந்தையில் வெந்தயக் கீரைக்கு எப்போதுமே, ‘டிமாண்ட்’ அதிகம் உள்ளது. ஒரு கட்டு வெந்தயக் கீரையை சராசரியாக, 30 ரூபாய் வரை விற்பனை செய்வதன் மூலம், குறுகிய காலத்தில், அதிக லாபம் ஈட்டலாம்.

பொன்னாங்கண்ணிக் கீரை வளர்ப்பது எப்படி?

பொன்னாங்கண்ணிக் கீரையில் “தங்கசத்து’ உண்டு என்றும் இதனை முறைப்படி உண்டு வருபவரது உடல் தங்கம் போன்று உறுதியடையும் உண்மை என்றும் கூறுவர்.

இதனை “பொன் ஆம் காண் நீ’ “இதனை உண்ண உன் உடல் பொன்னாக காண்பாய்’ என்ற வழக்கிற்கேற்ப இந்த மூலிகையின் பெயர் அமைந்துள்ளது எனக்கூறுவர். இதனாலேயே இது கற்பக மூலிகை வகையில் சேர்க்கப்பட்டுள்ளது.
செழிப்பாய் வளர்ந்த பொன்னாங்கண்ணிக் கீரையைச் செம்மையாய் நெய்யில் வதக்கி, மிளகு, உப்பு கூட்டி, புளியை நீக்கி கற்ப முறைப்படி ஒரு மண்டலம் உட்கொள்ள, உடல் அழகுபெறும். பொன்னிறமடையும், கண் குளிர்ச்சி உண்டாகும். மேலும் நோயற்ற நீண்ட ஆயுளும் பெறலாம்.
தொட்டிகளில் பராமரிப்பு:
பொன்னாங்கண்ணி மற்றும் கரிசலாங்கண்ணி கீரைகளை வேர்ச்செடி மற்றும் நுண்தண்டு மூலம் பயிர்பெருக்கம் செய்யலாம்.
வீடுகளில் எளிய முறையில் பராமரிக்கலாம். மண் தொட்டியில் மணல், மண்புழு உரம், வேப்பம் புண்ணாக்கு இவற்றை 3:1:1 விகிதத்தில் கலந்து தொட்டியில் நிரப்பி வேர்ச்செடிகள் அல்லது நுண்தண்டுகளை நடவேண்டும். பின்னர் பூவாளி வைத்து தண்ணீர் தெளிக்க வேண்டும். இதற்காக மண்புழு கம்போஸ்ட் ஆகியவற்றை பயன்படுத்தலாம்.
ஒவ்வொரு மண் தொட்டிக்கும் 500 கிராம் அளவு மண்புழு கம்போஸ்ட் உரத்துடன், நன்மை தரும் நுண்ணுயிர் உரங்களானஅசோஸ்பைரில்லம், பாஸ்போபாக்டீரியா, மைக்கோரைசா ஆகியவற்றை தொட்டிக்கு தலா 50 கிராம் வீதம் கலந்து ஆண்டுக்கு இரண்டு முறை (6 மாத இடைவெளியில் இடவேண்டும்).
பாத்தியில் வளர்த்தல்:
மண்ணை நன்றாக வெட்டி 1 சதுர மீட்டர் பாத்திக்கு 2 கிலோ மக்கிய தொழு உரம் அல்லது மண்புழு உரத்தை இட்டு மண்ணுடன் கலக்கி இட அளவுக்கேற்ப சிறிய பாத்திகளை அமைக்கலாம்.
வேர்களை உடைய பக்கச் செடிகளை நடவுக்கு பயன்படுத்தலாம்.
பாத்தியில் ஒரு அடி இடைவெளியில் செடிகளை நடவு செய்வது நல்லது.
தொட்டியில் பராமரிக்கும்போது மூன்று மாதங்களுக்கு ஒருமுறை இயற்கை உரங்களான மண்புழு உரம் மற்றும் கம்போஸ்ட் (1 கிலோ / தொட்டிக்கு) இடவேண்டும்.
தொட்டியிலும் பாத்தியிலும் செடிகளுக்கு தகுந்த ஈரப்பதம் இருக்கும் வகையில் நீர் தெளிக்க வேண்டும்.
இலைகள் அதிகம் தழைத்து வர இயற்கை உரங்களானபஞ்சகாவ்யா (லிட்டருக்கு 3 மிலி அளவு) தெளிப்பது நல்லது.
செடிகளை நட்ட 4வது மாதத்தில் இலைகளைத் தண்டுடன் கிள்ளி அறுவடை செய்யலாம்.
தரைமட்டத்திலிருந்து 5 செ.மீ. உயரத்தில் முழுச்செடியை வெட்டி எடுக்கலாம்.
தொடர்புக்கு: 61, ஆர்.கே.ஆர்.நகர், தாராபுரம்-638 656. திருப்பூர்.
எம்.அகமது கபீர், பி.எஸ்சி  (அக்ரி), எம்.பி.ஏ.,
வேளாண்மை ஆலோசகர்,  09360748542.

கீரை சாகுபடி

  • கீரை சாகுபடியில் நிலத்தை தயார் செய்வதற்கு நல்ல கவனம் தர வேண்டும்.
  • நிலத்தை நன்கு உழுது கட்டிகள் இல்லாமல் செய்து அவைகளில் பாத்திகளை தயார் செய்து கொள்ளலாம்.
  • பாத்திகளின் அளவு நமது நிர்வாகத் திறமைக்கு ஏற்றபடி 8 சென்ட் முதல் 10 சென்ட் உள்ளபடி செய்து கொள்ளலாம்.
  • கீரை சாகுபடிக்கு அதிகம் தேவைப்படுவது நன்கு மக்கிய தொழு உரமாகும்.
  • இந்த எருவினை நன்கு மக்க வைப்பது இரண்டு காரணங்களுக்காக அவசியம் ஆகிறது.
  • எரு நன்கு மக்காமல் இருந்தால் அதில் களைச்செடிகளின் விதைகள் மடியாமல் இருந்து இதனை பாத்தியில் போடும்போது அதிக அளவில் களைச்செடிகள் முளைத்து விடும்.
  • எரு நன்கு மக்காமல் இருப்பின் அதிலுள்ள ஊட்டச்சத்துக்கள் செடிகளுக்கு உடனே கிடைக்காது.
  • மேலும் எரு நன்கு மக்கியிருக்கும்போது இதை இடும் இடத்தில் மண் இளக்கமாக இருக்கும்.அதோடு எரு இட்ட இடத்தில் வடிகால் வசதி நன்றாக இருக்கும்.
  • இயற்கை எருவினை சாகுபடி காலத்திற்கு முன்பாகவே சேகரித்து வைத்துக் கொண்டு அதன் மேல் சூரியஒளி படாமல் பாதுகாக்க வேண்டும்.
  • எருவினை சமயம் கிடைக்கும்போது கட்டி இல்லாமல் பொடி செய்து குவித்து வைத்து ஓலைகளைக் கொண்டு மூடி வைத்துக் கொள்ள வேண்டும்.
  • இதோடு வளமான செம்மண் மற்றும் மணல் இவைகளையும் சேகரித்து வைத்துக் கொண்டு பாத்தியில் சாகுபடி செய்யும் சமயம் இவைகளை எருவுடன் கலந்து இடலாம்.
  • வசதி கிடைக்கும்போது குளத்து வண்டல் மண்ணினை சேகரித்து இதனுடன் எருவினை நன்கு கலந்து சாகுபடி செய்யும் பாத்திகளுக்கு இடலாம்.
  • எருவினை பாத்தியில் போட்டால் மட்டும் போதாது.
  • அவைகளை சாகுபடி செய்யும் நிலங்களுக்கு இட்ட உடனே பாத்தியை நன்கு கொத்தி விட வேண்டும்.
  • அப்போது தான் எரு நன்கு மண்ணோடு கலந்து கீரை செடிகளை தளதளவென்று வளர வைக்கும்.
  • கீரை சாகுபடியில் முடிந்தவரையில் இயற்கை உர உதவியுடன் செய்வது நல்லது.
  • இருப்பினும் தொடர்ந்து ஒரே இடத்தில் கீரை சாகுபடி செய்து வருவதால் இயற்கை உரங்களோடு தேவையான அளவு ரசாயன உரங்களை இடலாம்.
  • கீரை சாகுபடி செய்பவர்கள் நிலத்திற்கு தேவையான இயற்கை எருக்களை தாங்களே தயார் செய்கிறார்கள்.
  • குடும்ப நபர்களே தங்கள் நிலத்தில் வேலை செய்வதால் வேலைக்கு கூலி ஆட்களை வைத்துக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.
  • சாகுபடி செய்யும் கீரை முளைக்கீரையாக இருக்கலாம். சிறு கீரையாக இருக்கலாம். இவைகளின் வயது 24 நாட்களாக இருக்குமா என்பதை முதலில் நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.
  • விதை விதைத்த 21,22,23,24 நாட்களில் கீரைச்செடிகளை வேரோடு பிடுங்கலாம்.
  • ஒரு நாளைக்கு 300 கட்டுகள் கீரை கிடைக்கும். எட்டு சென்ட் நிலத்தில் ஒரு கிலோ விதையை விதைக்கலாம்.
  • ஒரு கிலோ விதையின் விலை ரூ.1,000.
  • எட்டு சென்ட் பரப்பில் நான்கு அறுவடைகளில் ஒரு நாளைக்கு 300 கட்டுகள் வீதம் 1,200 முளைக்கீரை, அரைக்கீரை கட்டுகள் கிடைக்கும். ஒரு கட்டின் விலை ரூ.10.
  • கீரை சாகுபடியில் செய்பவர்களின் குடும்பமே நிலத்தில் பணி செய்கின்றது.
  • கீரை சாகுபடி செய்பவர்கள் பாத்திகளை அழகாகப் போட்டு மண்ணை மேடு பள்ளம் இல்லாமல் சமமாக செய்கிறார்கள்.
  • குடும்பத்தில் உள்ளவர்கள் நிலத்தில் பாடுபட்டு உழைத்து கீரை சாகுபடி செய்கின்றனர். அவர்களே கீரைகளின் வேர்களில் மண் ஒட்டாமல் தண்ணீரில் அலசி சுத்தம் செய்து கட்டுகளை நேர்த்தி செய்கிறார்கள்.
  • குடும்ப நபர்களே ஈடுபடுவதால் சாகுபடி செலவு அதிகம் இல்லை.
  • அறுவடையான கீரையை மார்க்கெட்டிற்கு எடுத்து செல்ல வேண்டிய அவசியம் இல்லை. விற்பனை பிரச்னை எதுவும் இல்லை.
  • சாகுபடி நிலத்திலும், விவசாயி வீட்டிற்கும் நுகர்வோர்கள் வந்து கீரையை விலைக்கு வாங்கி செல்கிறார்கள்.
  • ஒரு விவசாயி மூன்று மாதங்கள் முளைக்கீரை, சிறு கீரை சாகுபடி செய்தால் கீரை விதை விலை ரூ.1,000 போக ரூ.20,000 நிச்சயமாக லாபம் எடுக்கலாம்.
  • கீரை சாகுபடி செய்பவர்கள் பாடுபட்டு உழைத்து ஊட்டச்சத்துக்கள் மிகுந்த கீரையை நமக்கு அளிக்கிறார்கள்.

எலுமிச்சை சாகுபடி

ஜூலை மாதத்துக்கு ஏற்ற தோட்டப் பயிராக எலுமிச்சையை பயிரிட்டு 3-ஆம் ஆண்டு முதல் நல்ல லாபத்துடன் கூடிய சாகுபடியை விவசாயிகள் பெறலாம்
எலுமிச்சை, மக்களின் அன்றாட உணவில் பயன்படுத்தக் கூடிய ஒன்றாகும். எலுமிச்சையில் 2 ரகங்கள் உள்ளன. ஒன்று சாதாரண எலுமிச்சை, மற்றொன்று கொடி எலுமிச்சை. கொடி எலுமிச்சை மலைப் பகுதிகளில் மட்டுமே பயிரிடப்படுகிறது.

மண், தட்பவெப்ப நிலை

சுமார் 2 மீட்டர் ஆழத்துக்கு மண் கண்டம் இருக்க வேண்டும். நல்ல வடிகால் வசதியுள்ள செம்மண் கலந்துள்ள தோட்டக்கால் நிலங்களிலும், களிமண் இல்லாத மணல் பாங்கான தோட்டக்கால் நிலங்களிலும் எலுமிச்சை செழிப்பாக வளரும்.
எலுமிச்சையை ஜூலை முதல் டிசம்பர் வரை நடவு செய்ய வேண்டும். ஒரு நாற்றுக்கு 5 மீட்டர் சுற்றளவில் இடைவெளியைவிட வேண்டும். அப்படி நடும்போது ஒரு ஏக்கருக்கு 160 செடிகள் நடவு செய்யலாம். நோய்த் தடுப்பு செய்யப்பட்ட எலுமிச்சை நாற்றுகளையே நடவு செய்ய வேண்டும்.

குழி தயாரிக்கும் முறை, நீர்ப்பாசனம்

இதற்கான குழியை 75 செ.மீ. சுற்றளவு உள்ளவாறு தோண்ட வேண்டும். நன்கு வளரும் வரை நீர் பாய்ச்சுவது அவசியம். சுமார் 7 முதல் 10 நாள்களில் நீர்ப் பாய்ச்சுவது போதுமானது. வேர் பாகத்தில் நீர் தேங்குவதைத் தவிர்க்க வேண்டும்.

உரமிடுதல்

  • தழைச்சத்து 2 பாகங்களாக மார்ச், அக்டோபர் மாதங்களில் இட வேண்டும். தொழுஉரத்தை முதல் வருடத்துக்கு 10 கிலோவும், ஆண்டுதோறும் 5 கிலோவும் அதிகரிக்க வேண்டும். தழைச்சத்து முதல் வருடம் 200 கிராமில் தொடங்கி ஆண்டுக்கு 100 கிராம் அளவில் சேர்த்து இட வேண்டும். மணிச்சத்து, சாம்பல் சத்தை ஆண்டுக்கு 100 கிராம் அளவில் போட்டு, ஆண்டுதோறும் 40 கிராம் வரை கூடுதலாகச் சேர்க்க வேண்டும்.
  • உரங்களை இடும்போது மரத்தில் இருந்து 70 செ.மீ. தள்ளி மண்ணில் போட்டு கொத்தி விட வேண்டும்.
  • புதிய துளிர் வரும்போது துத்தநாக சல்பேட் 100 லிட்டர் தண்ணீருக்கு 500 கிராம் கலந்து அந்தக் கரைசலை மார்ச், ஜூலை, அக்டோபர் மாதங்களில் தெளிக்க வேண்டும்.
  • செடியை 45 செ.மீ. உயரம் வரை கிளைகளின்றி நேராக வளர விட வேண்டும். செடிக்கு 30 கிலோ பச்சை இலைகளை 3 மாதத்துக்கு ஒரு முறை இட வேண்டும்.
  • எலுமிச்சை செடியின் ஊடுபயிராக அவரை குடும்பத்தைச் சேர்ந்த பயிர்கள், காய் வகைகளை மரங்கள் காய்ப்புக்கு வரும் காலம் வரை கூடுதலாகப் பயிரிட்டு பயன்பெறலாம்.

பயிர் வளர்ச்சி ஊக்கி தெளித்தல்

காய் பிடிப்பை அதிகப்படுத்த 2.4 டி மருந்தை பி.பி.எம். 20 மில்லி லிட்டர் அளவில் தெளிக்க வேண்டும். பிஞ்சு காய்கள் உதிர்வதைத் தடுக்க 20 பி.பி.எம். 2.4 டி அல்லது என்.ஏ.ஏ. 30 பி.பி.எம். என்ற மருந்தை 30 மில்லி கிராம் அளவில் தெளிக்க வேண்டும்.

பயிர்ப் பாதுகாப்பு

எலுமிச்சை மரத்தை இலைதுளைப்பான், சாறு உறிஞ்சும் பூச்சி, பழ அந்துப் பூச்சி, குருத்து துளைப்பான், தண்டு துளைப்பான், பழ ஈ, நூற்புழு ஆகிய பூச்சிக்கள் தாக்கும். இலை துளைப்பானைக் கட்டுப்படுத்த, மானோகுரோட்டோபாஸ் 1 லிட்டர் தண்ணீருக்கு 15 மில்லி அளவில் கலந்து தெளிக்க வேண்டும். இல்லையெனில், வேப்பங்கொட்டை, பிண்ணாக்கு திரவம் ஆகியவற்றையும் பயன்படுத்தலாம்.

சாறு உறிஞ்சும் பூச்சியைக் கட்டுப்படுத்துதல்

  • வெள்ளை ஈக்கு குயினைல்பாஸ் ஒரு லிட்டர் தண்ணீருக்கு 2 மில்லி அளவு கலந்து தெளிக்க வேண்டும். கறுப்பு ஈக்கு மானோகுரோட்டோபாஸ் ஒரு லிட்டர் தண்ணீருக்கு 2.5 மில்லி கிராம் கலக்க வேண்டும்.
  • அசுவினி பூச்சிக்கு மானோகுரோட்டோபாஸ் ஒரு லிட்டர் தண்ணீருக்கு 1 மில்லி கிராம் கலந்து தெளிக்க வேண்டும். சிகப்புச் சிலந்தி பூச்சிக்கு நனையும் கந்தகத் தூளை ஒரு லிட்டர் தண்ணீருக்கு 2 கிராம் அளவில் கலந்து தெளிக்க வேண்டும்.

குருத்துத் துளைப்பான்

இப்பூச்சியைக் கட்டுப்படுத்த மானோகுரோட்டோபாஸ் மருந்தை ஒரு லிட்டருக்கு ஒரு மில்லி லிட்டர் என்ற அளவில் கலந்து தெளிக்க வேண்டும்.

பழ அந்துப் பூச்சி

பாத்திகளில் உள்ள டினோஸ்போரா களைகளை அகற்றுதல் வேண்டும். பழங்களை பாலித்தீன் பைகள் கொண்டு மூட வேண்டும்.

தண்டு துளைப்பான்

புழு தாக்கப்பட்ட கிளைகளை கவாத்து செய்ய வேண்டும். மாதத்துக்கு ஒருமுறை ஊசி மூலம் மானோகுரோட்டோபாஸ் 10 மில்லி அளவில் பூச்சி துளைத்த இடத்தில் செலுத்தி களிமண் கொண்டு மூடவும்.

நூற்புழு

நூற்புழு பாதித்த ஒரு மரத்தை கார்போபியூரான் 3ஜி 750 கிராம் அளவுக்கு இட்டு இப்பூச்சிகளைக் கட்டுப்படுத்தலாம்.

அறுவடை

மேற்கண்ட முறைப்படி பயிரிட்டால் எலுமிச்சை நடப்பட்ட 3-ஆவது வருடம் முதல் டிசம்பர் - பிப்ரவரி, ஜூன்- செப்டம்பர் ஆகிய மாதங்களில் இருந்து அறுவடை செய்யலாம். இதன்மூலம் விவசாயிகள் அதிக லாபமடைய முடியும்

ஆதாரம் : தமிழ்நாடு தோட்டக் கலைத் துறை

ஒரு ஏக்கர்... மாதம் 50 ஆயிரம்...

ஒரு ஏக்கர்... மாதம் 50 ஆயிரம்...

கிறங்க வைக்கும் கீரை சாகுபடி... பட்டையைக் கிளப்பும் 'பட்டாம்பூச்சி' பாசனம்! 
தண்ணீர் தட்டுப்பாடு, மின்சாரத் தட்டுப்பாடு, கூலியாட்கள் தட்டுப்பாடு... என விவசாயத்தில் ஏகப்பட்ட பிரச்னைகள். இத்தனையையும் தாண்டி விவசாயம் செய்ய வேண்டுமென்றால், புதிய தொழில்நுட்பங்கள் கண்டிப்பாகத் தேவை. இதை சரியாகப் புரிந்து கொண்ட விவசாயிகள் பலரும் நவீன கருவிகளைப் பயன்படுத்த ஆரம்பித்திருக்கிறார்கள். அந்த வகையில், குறைந்த நேரமே கிடைக்கும் மின்சாரத்தையும், குறைந்தளவு தண்ணீரையும் வைத்து பாசனம் செய்யவும், பல நவீன கருவிகள் மற்றும் முறைகள் உள்ளன. அதில் ஒன்றுதான், தெளிப்பு நீர்ப் பாசனம். இந்த முறையில், பாசனம் செய்து கீரை சாகுபடி செய்து வருகிறார், ஈரோடு மாவட்டம், நம்பியூர் அருகேயுள்ள கரிச்சிப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த முன்னோடி விவசாயி பொன்னுசாமி.
மனைவி சிவகாமி மற்றும் மகன் சதீஷ்குமார் ஆகியோருடன் இணைந்து, கீரை வயலில் வேலையாக இருந்த பொன்னுசாமியை சந்தித்தோம்.
'சுளீர் சுளீர்’ என சுழன்று பூமியில் இருந்து புறப்பட்ட ஊற்றுகள் போல, தண்ணீரைத் தூவிக்கொண்டு இருந்தன ஆங்காங்கே பொருத்தப்பட்டிருந்த தெளிப்பு நீர்க் கருவிகள்.
குளிப்பாட்டி தலை துவட்டிய குழந்தையின் குதூகலம் போல பளிச்சென பசுமைக் கட்டி இருந்தன கீரைச் செடிகள். அதைப் பெருமிதமாகப் பார்த்தவாறே நம்மிடம் பேசத் தொடங்கினார், பொன்னுசாமி.
''கொங்கு நாட்டின் நெற்களஞ்சியம்னு கோபிச்செட்டிபாளையம் பகுதியை சொல்லுவாங்க. அந்தளவுக்கு வளமான பகுதி. ஆனா, அதே தாலூகாவோட தெக்கு பக்கம் இருக்கற எங்க பகுதி வானம் பாத்த பூமி. ஆறு, குளம், குட்டை, வாய்க்கால் எதுவும் இங்க இல்ல. முழுக்க முழுக்க கிணத்துப் பாசனத்தை மட்டுமே நம்பித்தான் வெள்ளாமை.
ஆயிரம் அடிக்கும் மேல, போர் போட்டு கிடைக்கிற கொஞ்ச தண்ணீரை வெச்சுதான் வெவசாயம் செய்றோம்.
போதுமான தண்ணி இல்லாததால, கிடைக்கற தண்ணியை வெச்சு பிஞ்சு வெள்ளாமையா கீரையை சாகுபடி செய்றேன். ஆரம்பத்துல வாய்க்கால் பாசனம்தான் செஞ்சேன். வாய்க்கால்ல ஓடி, வயலை அடையுறதுக்குள்ள போதும் போதும்னு ஆயிடும். அந்த மாதிரி சமயத்துலதான் ஒருநாள் உழவர் சந்தையில ஒரு விவசாயி, சொட்டுநீர்ப் பாசனத்தைப் பத்தி சொன்னாரு.
வாய்க்கால் பாசனத்துல ஒரு ஏக்கர் பயிருக்கு போற தண்ணியை... சொட்டுநீர்ப் பாசனம் மூலமா மூணு ஏக்கருக்குப் பாய்ச்சிடலாம்னு அவர் சொன்னது, எனக்கு ஆச்சரியமா இருந்துச்சு. அவர்கிட்ட சொட்டுநீர்ப் பாசனம் அமைக்கிற கம்பெனியோட அட்ரசை வாங்கிட்டு, அடுத்த நாளே, மகன் சதீஷ்குமாரோட அங்க போய் விவரம் கேட்டேன்.
என்னோட வயல், கிடைக்கிற தண்ணி, வெள்ளாமை எல்லாத்தையும் கேட்டுத் தெரிஞ்சுக்கிட்டு, 'உங்களுக்கு தெளிப்புநீர்ப் பாசனம்தான் தோதா இருக்கும்’னு சொன்னாங்க. அந்தக் கருவியை அமைச்சுருக்கற சில வயல்களையும் கூட்டிக்கொண்டு போய் காட்டுனாங்க.
எங்களுக்கும் அது திருப்தியா தெரியவும், ஒரு ஏக்கர் கீரை சாகுபடிக்கு ஏத்த அளவுக்குத் தேவையான கருவிகளை வாங்கிட்டு வந்து நாங்களே போட்டுக்கிட்டோம். 15 அடி இடைவெளியில 4 அடி உயரத்துக்கு மரக்குச்சிகளை நட்டு, அதுல ரெண்டரை அடி உயரமுள்ள குழாய்களை அசையாம இருக்கற மாதிரி கட்டி விட்டோம்.
குழாய் முனையில பட்டாம்பூச்சி நாசிலைப் பொருத்தினோம். தண்ணியைப் பீச்சி அடிக்கிற இந்த நாசில் பட்டாம்பூச்சியோட றெக்கை மாதிரியே இருக்கும். அதனால, 'பட்டாம்பூச்சிப் பாசனம்'னுதான் எங்க பக்கம் சொல்லுவாங்க. இதுக்கு அரசு மானியம் கிடையாது.
15 அடி இடைவெளியில ஒரு ஏக்கர் நிலத்துல பட்டாம்பூச்சிப் பாசனம் அமைக்கறதுக்கு 30 ஆயிரம் ரூபாய் செலவாகும்'' என்று விவரங்களைத் தெளிவாகத் தந்தார் பொன்னுசாமி!
பூச்சிகளை விரட்டும் தெளிப்புநீர் !
அப்பாவைத் தொடர்ந்த மகன் சதீஷ்குமார், ''5 ஹெச்.பி. போர்வெல் மோட்டார் மூலமாதான் பாசனம் செஞ்சுட்டிருந்தோம். அதுல ஒரு ஏக்கர் பாசனம் செய்ய குறைஞ்சபட்சம் 6 மணிநேரம் ஆகும். அந்தளவுக்கு பாசனம் செய்றதுக்கு எங்க கிணத்துல தண்ணியும் இல்லை.
கரன்ட்டும் அவ்வளவு நேரம் கிடைக்காது. ஆனா, பட்டாம்பூச்சிப் பாசனம் அமைச்ச பிறகு, அந்தக் கவலையே இல்லை. செங்கீரை, புதினா, அரைக்கீரை, மணத்தக்காளி, சிறுகீரைனு அஞ்சு வகையான கீரைகளைப் பயிர் பண்றோம்.
ஒரு ஏக்கர் நிலத்தை ரெண்டா பிரிச்சு, அதுல தனித்தனியா சாகுபடி பண்றதால சுழற்சி முறையில தினமும் கீரையை அறுவடை பண்றோம். இந்தக் கீரைகள்ல சிறு கீரையைத் தவிர மத்த நாலு கீரைகளும் மறுதழைவு ரக கீரைங்க. வெட்ட வெட்ட தழைஞ்சுட்டே இருக்கும்.
அடியுரமா கோழி எரு, தொழுவுரம் ரெண்டையும் போடுறோம். மேலுரமா யூரியா கொடுப்போம். ஆனா, பூச்சிக்கொல்லிகளைத் தெளிக்கறதே இல்லை. அதுக்கும் காரணம், பட்டாம்பூச்சிப் பாசனம்தான்.
தினமும் ஒரு மணி நேரம் பூவாளித்தூவல் போல பத்தடி சுத்தளவுக்கு தண்ணி பீச்சி அடிக்கிறதால, இலைகள் எல்லாம் கழுவிவிட்ட மாதிரியாகிடுது.
இலை வழியா செடியைத் தாக்குற பச்சைப்புழு, சாறு உறிஞ்சும் பூச்சி, இலைப்பேன், முட்டைகள்னு எல்லாத்தையும் பீச்சி அடிக்குற பாசன தண்ணி கழுவிடுறதால செடிகள்ல பூச்சிகளே இருக்குறதில்லை. அதனால பளபளனு தரமான கீரை கிடைக்குது'' என்று சிலாகித்துச் சொன்னார்.
கட்டு இரண்டு ரூபாய் !
தொடர்ந்து பேசிய சதீஷ்குமார், ''கீரையை திருப்பூர் வடக்கு உழவர் சந்தையில கொண்டு போய் அப்பா வித்துட்டு வந்துடுவார். ஆரம்பத்துல டவுன் பஸ்லதான் கீரைக்கட்டுகளைக் கொண்டு போனோம்.
பட்டாம்பூச்சிப் பாசனத்துக்கு மாறுன பிறகு, அதிக மகசூல் கிடைக்குது. சுழற்சி முறையில அறுவடை பண்றதால தினமும் ஆயிரத்து முன்னூறு கட்டு வரைக்கும் மகசூல் கிடைக்குது.
இப்ப சொந்தமா மூணு சக்கர டெம்போ வாங்கி, அதுலதான் கொண்டு போறார். ஒரு சின்னக்கட்டு ரெண்டு ரூபாய்னு விக்குறோம். நேரடியா விக்கிறதால கூடுதலா லாபம்'' என்றார் குஷியான குரலில்!
தினமும் 2,600 ரூபாய் !
நிறைவாகப் பேசிய பொன்னுசாமியின் மனைவி சிவகாமி, ''இந்த தெளிப்புநீர்ப் பாசனம் மட்டும் இல்லீனா, நாங்க இந்த மண்ணை விட்டே போயிருப்போம்.
எங்க நாலு ஏக்கர் நிலத்துல மட்டும் 11 போர்வெல் போட்டோம். எல்லாமே 900 அடி ஆழம். ஆனா, எதுலயுமே சரியான தண்ணி கிடைக்கல. பத்து லட்சம் ரூபாய் கடானாளியானதுதான் மிச்சம். இருந்தாலும் நம்பிக்கையை விடாம கடைசியா தோண்டுன கிணத்துல ஓரளவு தண்ணி வந்துச்சு. 'அதை வெச்சு பெரிசா வெள்ளாமை பண்ண முடியாது. கீரை போட்டா ஜெயிக்கலாம்’னு சொந்தக்காரர் ஒருத்தர் சொன்னாரு. அதும்படியே செஞ்சோம். ஓரளவு பொழப்பு ஓடுச்சு.
அப்புறமா தெளிப்புநீருக்கு மாறின பிறகுதான், மாசத்துக்கு 75 ஆயிரம் ரூபாய்க்குக் குறையாம வருமானம் கிடைக்குது. இதுல செலவெல்லாம் போக மாசத்துக்கு சராசரியா 50 ஆயிரம் ரூபாய்க்குக் குறையாம லாபம் கிடைச்சுடும். இதை வெச்சே பழையக் கடனையும் கட்டிட்டோம். நாங்க இந்த அளவுக்கு முன்னேற முக்கியக் காரணமே பட்டாம்பூச்சிப் பாசனம்தான்'' என்று நெகிழ, கீரைச்செடி போல நம் மனதும் நனைந்தது.
தொடர்புக்கு, சதீஷ்குமார், செல்போன்: 98658-37804 
thank to Vikatan

இயற்கைக் கீரை... ஒரு ஏக்கர்... மாதம் ரூ75,000

‘நீங்க கட்டாயம் கீரை சாப்பிடணும்...’’
“தினமும் உணவுல கீரையைச் சேர்த்துக்குங்க”
-இன்றைய மருத்துவர்களின் பொதுவான ஆலோசனை இதுவாகத்தான் இருக்கிறது. வந்த நோய்களைக் குணப்படுத்தவும், வரும்முன் காக்கவும், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அன்றாட உணவில் கீரை ஒரு அத்தியாவசியத் தேவையாகி நிற்கிறது. இதனால் சமீபகாலமாக கீரைக்கான சந்தை வாய்ப்பு அதிகரித்துக்கொண்டே வருகிறது. அதிலும் இயற்கை விவசாய முறையில் விளைவிக்கப்படும் கீரைக்கு அதிக கிராக்கி ஏற்பட்டுள்ளது. இதைச் சரியாகப் புரிந்துகொண்ட இயற்கை விவசாயிகள் பலரும் கீரை சாகுபடியில் பட்டையைக் கிளப்பி வருகிறார்கள்.
கோயம்புத்தூர் மாவட்டம், மேட்டுப்பாளையம்-அன்னூர் சாலையில் இருக்கும் தேவாங்கபுரம் பகுதியைச் சேர்ந்த சிவக்குமார் என்கிற குலசேகர ராமானுஜதாஸன், ஜெயந்தி என்கிற குமுதவல்லி ராமானுஜதாஸயை தம்பதி, இயற்கைக் கீரை சாகுபடியில் அசத்தி வருகிறார்கள். தன் தகப்பனார் வெங்கிடுசாமியுடன் கீரை அறுவடையில் இருந்த சிவக்குமார், கீரைகளை கட்டுக் கட்டியபடியே பேச ஆரம்பித்தார்.
பக்தியில் இருந்து பண்ணைக்கு!
“எங்களுக்கு மொத்தம் பதினோரு ஏக்கர் நிலம் இருக்கு. போர்வெல் மூலமாதான் பாசனம். நான் பி.இ. படிச்சிருக்கேன். கோயம்புத்தூர்ல இயந்திர உதிரிபாகங்கள் உற்பத்தி செய்யுற தொழிற்சாலையை நடத்திட்டிருக்கேன். மனைவி ஜெயந்தி எம்.பி.ஏ. படிச்சிருக்காங்க. அவங்கதான் தொழிற்சாலையை நிர்வாகம் பண்றாங்க. அப்பாவுக்கு விவசாயம்தான் தொழில். ஆனா, அவருக்கு இயற்கை விவசாயத்தைப் பத்திய விழிப்பு உணர்வு இல்லை. ரசாயன உரத்தைப் போட்டுத்தான் விவசாயம் பாத்துக்கிட்டிருந்தாரு.
ஒருகட்டத்துல, எங்களுக்கு ஆன்மிகத்துல நாட்டம் ஏற்பட்டுச்சு. தொழில், ஆன்மிகம்னு வாழ்க்கைனு போனதால விவசாயத்தைப் பத்திய நினைப்பே இல்லை.
கிராமத்துல போய் அடிக்கடி அப்பாவை பார்த்துட்டு திரும்புறதோடு சரி. விவசாயம் எல்லாம் அவரோடு போகட்டும் என்கிற நினைப்புத்தான் இருந்திச்சு. ஆனா, நாங்க கலந்துக்குற ஆன்மிகக் கூட்டங்கள்ல, சொற்பொழிவாளர்கள், ஆன்மிகத்தோடு பேச்சை முடிக்காம, இயற்கை வாழ்வியல் அதற்கான உணவு முறை, ஆன்மிகத்தில் பஞ்சகவ்யாவின் பங்களிப்பு பத்தியெல்லாம் பேசுவாங்க. அந்த மாதிரி விஷயங்களைக் கேக்க ஆரம்பிச்சப்பறம்தான் இயற்கை விவசாயம் மேல ஆர்வம் ஏற்பட்டுச்சு. சரியா அந்த நேரம் ‘பசுமை விகடன்’ கிடைக்க ஆரம்பிச்சதும், எங்கள முழுநேர  விவசாயியா, அதுவும் இயற்கை விவசாயியா மாத்திக்கிட்டோம்.
இதுக்கான பெருமை மொத்தமும் பசுமை விகடனுக்குத்தான். சும்மா வாய் வார்த்தைக்காக சொல்லலை... சத்தியமான உண்மை. அஞ்சு வருஷத்துக்கு முன்ன, கோயம்புத்தூர் கொடீசியா அரங்குல நடந்த விவசாயக் கண்காட்சிக்குப் போனோம்.
அங்க, விகடன் ஸ்டாலைப் பாத்துட்டு சக்தி விகடனுக்கு சந்தா கட்டலாம்னு போனோம். அங்கதான் பசுமை விகடனை முதன்முதலா பார்த்தோம். அப்படியே பசுமை விகடனுக்கும் சந்தா கட்டுனோம். தொடர்ந்து படிக்க படிக்க, இயற்கை விவசாயத்து மேல பெரிய மரியாதை வந்துடுச்சு. 11 ஏக்கர் நிலத்தை வெச்சிருக்கிற நாம ஏன் இயற்கை விவசாயம் பண்ணக்கூடாதுனு தோணுச்சு. கிராமத்துக்குப்போய் அப்பாகிட்ட விஷயத்தைச் சொன்னோம்.
மகன் விவசாயம் பார்க்க வந்ததுல ஒரு பக்கம் மகிழ்ச்சி. அதே நேரம் ரசாயன விவசாயத்தை விடுறதுக்கு அவருக்கு மனசில்ல. யூரியா, காம்ப்ளக்ஸ், பூச்சிக்கொல்லினு பயன்படுத்தினால்தான் விளைச்சல் நல்லா வரும்னு தீர்மானமா இருந்தார். ‘மூணு ஏக்கர் நிலத்தை எனக்குக் கொடுங்க, நான் இயற்கை முறையில விவசாயம் பண்ணிக்காட்டுறேன்’னு சொல்லி தரிசா கிடந்த நிலத்தை வாங்கி, இயற்கை விவசாயம் பண்ண ஆரம்பிச்சேன்” என்று முன்கதை சொன்ன சிவக்குமார் தொடர்ந்தார்.
மனமாற்றத்தை ஏற்படுத்திய இயற்கை!
“முதல்ல நான் செஞ்ச வேலை நாட்டு மாடு வாங்கினதுதான். அடுத்து தினம் வருமானம் கொடுக்குற பயிரா இருக்கணும்னு யோசிச்சு கீரை சாகுபடி பண்ணலாம்னு முடிவு செஞ்சோம். ஆரம்பத்துல கொஞ்சம் கஷ்டமாத்தான் இருந்துச்சு. பழகப்பழக எல்லாம் சரியாயிடுச்சு. ரசாயன விவசாயம்தான் ஏற்றதுனு சொல்லிட்டிருந்த அப்பாவும், இப்ப இயற்கைப் பக்கம் சாய்ஞ்சிட்டாரு. அவரும் இப்போ பசுமை விகடனுக்கு தீவிர வாசகர். அடுத்ததா, மரவள்ளி, வாழை, பப்பாளினு மீதமுள்ள நிலத்துலயும் இயற்கை விவசாயம் பண்ணலாம்னு முடிவெடுத்திருக்கோம்” என்று சொன்ன சிவக்குமாரைத் தொடர்ந்து பேசினார், அவர் மனைவி ஜெயந்தி.
ஒன்பது வகை கீரைகள்... 400 வாடிக்கையாளர்கள்!
“ஆரம்பத்துல கீரைக்கட்டுகளை கோயம்புத்தூர், மேட்டுப்பாளையம்னு தினசரி மார்கெட்டுகள்லதான் கொண்டு போய் விற்பனை செய்தோம். அதுல கிடைக்கிற வருமானத்துல, இடைத்தரகர் கமிஷன், வேன் வாடகை, ஆள்கூலினு பாதி பணம் போயிடும். அந்த வியாபாரிகள்கிட்ட இயற்கை கீரைக்கெல்லாம் தனிமரியாதை கிடைக்கலை. அதுக்கப்பறம்தான் நாங்களே நேரடி விற்பனையில இறங்குனோம். இப்ப நாலு வருஷம் முடியப்போகுது. நானூறுக்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் எங்களுக்கு இருக்காங்க.
வெந்தயக்கீரை, முளைக்கீரை, சிறுகீரை, தண்டுக்கீரை, பாலக்கீரை, மணத்தக்காளிக் கீரை (சுக்கட்டி), அரைக்கீரை, புளிச்சக்கீரை, அகத்திக்கீரைனு 9 வகை கீரைகளை சாகுபடி பண்றோம். மூணு ஏக்கர்ல சுழற்சி முறையில கீரை சாகுபடி பண்றோம். ஒரு நாளைக்கு 200 கீரைக்கட்டுக்களை நேரடியா விற்பனை செய்றோம். எல்லா ரக கீரைக்கும் ஒரே விலைதான். எதை எடுத்தாலும் கட்டு 15 ரூபாய்னு கொடுக்கிறோம். அந்த வகையில தினமும் 3 ஆயிரம் ரூபாய் வருமானமா கிடைக்குது. மாசத்துல 25 நாட்கள் மட்டும்தான் விற்பனை செய்றோம். ஆக, மாதம் 75 ஆயிரம் ரூபாய் வருமானம் பாக்குறோம். சுழற்சி முறையில ஒரு ஏக்கருக்கான வருமானம் இது. இதுல, செலவுக்காக 25 ஆயிரம் ரூபாய் போனாலும் மாசம் 50 ஆயிரம் ரூபாய் லாபமா நிக்குது. மார்க்கெட்டுல விற்பனை செய்றதை விட நேரடி விற்பனையில ரெண்டு மடங்கு லாபம் கிடைக்குது” என்றார்.
நிறைவாகப் பேசிய சிவக்குமார், “என்னதான் தொழில்ல வருமானம் கிடைச்சாலும், விவசாயம் மூலமா கிடைக்குற வருமானம்தான் மனசை நிறைவாக்குது. வாடிக்கையாளர்களுக்கு கீரையை மட்டும் கொடுக்காம, இயற்கை வேளாண்மை, விஷமில்லா உணவு குறித்த விழிப்பு உணர்வையும் ஏற்படுத்திக்கிட்டு வர்றோம். இயற்கைக் கீரை, 48 மணி நேரத்துக்கு வாடாம இருக்கு. அதனால, இதை ஏற்றுமதி செய்ற யோசனையும் இருக்கு. அதுக்கான வாய்ப்புகளும் கிடைச்சிருக்கு” என்றார், மகிழ்ச்சியுடன்.
தொடர்புக்கு,
சிவக்குமார், 
செல்போன்: 95971-68857
இப்படித்தான் சாகுபடி செய்யணும்!
கீரை சாகுபடி பற்றி சிவக்குமார் சொன்ன விஷயங்கள் பாடமாக....
“தேர்வு செய்த ஒரு ஏக்கர் நிலத்தை உழுது தக்கைப்பூண்டு விதைத்து, பூவெடுக்கும் நேரத்தில் ரோட்டோவேட்டர் மூலம் மடக்கி உழவு செய்ய வேண்டும். பிறகு, ஒரு ஏக்கருக்கு 5 டன் தொழுவுரத்துடன், 4 டன் ஆட்டுஎருவைக் கலந்து பரவலாகக் கொட்டி உழவு செய்து பாத்திகள் அமைக்க வேண்டும்.
ஒரே முறை அறுவடையாகும் கீரைகளின் வயது அதிகபட்சம் 25 நாட்கள். தொடர் அறுவடை வகை கீரைகளின் வயது ஆறு மாதங்கள். கீரை விதைகளோடு மணல் கலந்து, பாத்திகளில் தூவி, கையால் கிளறி விட்டு, பாசனம் செய்ய வேண்டும். 6-ம் நாளில் முளைவிடும். அந்த சமயத்தில் களை எடுக்க வேண்டும். தொடர்ந்து 7 நாட்கள் இடைவெளியில் இரண்டு முறை ஜீவாமிர்தக் கரைசலை பாசன நீரில் கலந்து விடவேண்டும்.  
கீரைகளில் பூச்சிகள் தாக்க வாய்ப்புண்டு. இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் மூன்றையும் சம அளவில் எடுத்து, இடித்து ஒரு லிட்டர் மாட்டுச் சிறுநீரில் கலந்து... 10 லிட்டர் தண்ணீருக்கு 300 மில்லி கரைசல் என்ற விகிதத்தில் கலந்து, 10 நாட்களுக்கு ஒரு முறை அதிகாலை வேளைகளில் தெளித்தால் பூச்சிகள் தாக்காது. இது ஒரே முறை அறுவடையாகும் கீரைகளான வெந்தயக்கீரை, முளைக்கீரை, சிறுகீரை, தண்டுக்கீரை ஆகியவற்றுக்கு பலனளிக்கும். இந்தக் கீரைகளை 25 நாட்களுக்கு மேல் பறித்து விற்பனை செய்யலாம்.
பாலக்கீரை, மணத்தக்காளி, அரைக்கீரை, புளிச்சக்கீரை போன்றவற்றை விதைத்த 30 முதல் 35 நாட்களில் அறுவடை செய்யலாம். இதே இடைவெளியில் தொடர்ந்து ஆறுமாதங்கள் வரை அறுவடை செய்யலாம். இந்த ரக கீரைகளில் பூச்சிகளைச் சமாளிக்க... நொச்சி, பிரண்டை, சோற்றுக்கற்றாழை ஆகிய மூன்றையும் சமமாக எடுத்து அரைத்து, ஒரு லிட்டர் மாட்டுச் சிறுநீரில் கலந்து ஒரு நாள் வைத்திருந்து, 10 லிட்டர் தண்ணீருக்கு 300 மில்லி கரைசல் என்ற அளவில் கலந்து தெளிக்கலாம்.

Sunday, October 2, 2016

கல்செக்கு எண்ணெய் உற்பத்தி.

பேட்டையில் கல்செக்கு எண்ணெய் உற்பத்தி - பாரம்பரிய தொழிலை பாதுகாக்கும் குடும்பம்.


------------------------------------------------------------------------------------------------------------------------------------------------ 

திருநெல்வேலி சுத்தமல்லி பகுதியில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்புவரை மாடுகளை பயன்படுத்தி கல்செக்குகளை இயக்கி எள்ளிலிருந்து எண்ணெய் எடுக்கும் தொழில் பிரதானமாக நடைபெற்று வந்தது. இப்போது மாடுகள் மூலம் செக்குகளை இயக்கி எண்ணெய் உற்பத்தி நடைபெறுகிறது. இத்தொழிலில் தற்போது மிகவும் குறைந்த எண்ணிக்கையிலானோரே ஈடுபட்டு வருகின்றனர்.  ஆனாலும் செக்கு எண்ணெய்க்கான மகிமை குறையவில்லை. அதற்கான தேவை இன்றும் உள்ளது.


தற்போது சுத்தமல்லி பகுதியில் ஓரிருவர் மட்டுமே செக்கு எண்ணெய் தயாரித்து விற்பனை செய்யும் தொழிலில் ஈடுபட்டிருக்கிறார்கள். அவர்களில் முக்கியமானவர் சீனிவாசன் ஏழாவது தலைமுறையாக இத்தொழிலில் இவர் ஈடுபட்டிருக்கிறார். தற்போது இவர் மாடுகள் மூலம் கல்செக்கை இயக்கி எண்ணெய் உற்பத்தி செய்கிறார்.



இது குறித்து சீனிவாசன் கூறுகையில்... கல்செக்கை மாடுகள் மூலம் சிறிது சிறிதாக இயக்குவதால் எள் சூடாவதில்லை. நல்ல பக்குவத்தில் அதில் உள்ள சத்துகள் சிதையாமல் பாதுகாக்கப்படுகிறது. கல் செக்கில் நல்லெண்ணெயை எடுப்பது லேசான காரியமில்லை. சித்த மருந்து தயாரிப்பதுபோல் சிரத்தையான வேலை. என்றும் தமிழக அரசு இத்தொழிலுக்கு மானிய விலையில் மூலப்பொருட்களை கொடுத்தும், இயற்கை முறையில் உற்பத்தி செய்யும் எண்ணைக்கு  சந்தையில்  வரி விலக்கு அளிக்கவும் வேண்டும் என கூறினார்.




திருநெல்வேலி பேட்டை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பல ஆண்டுகளாக பிரசித்தி பெற்றிருந்த கல்செக்கு எண்ணெய் உற்பத்தி தொழில் வழக்கொழிந்து வருவது குறித்து இத்தொழிலில் பல தலைமுறைகளாக ஈடுபட்டுள்ளவர்கள் கவலை தெரிவிக்கிறார்கள். இத்தொழிலில் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தவும், உரிய அங்கீகாரம் அளிக்கவும் அரசுத்துறைகள் முன்வர வேண்டும் என்பதே அவர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
திருநெல்வேலி பேட்டையில் செக்கடித்தெரு பகுதியில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்புவரை மாடுகளை பயன்படுத்தி கல்செக்குகளை இயக்கி எள்ளிலிருந்து எண்ணெய் எடுக்கும் தொழில் பிரதானமாக நடைபெற்று வந்தது. இப்போது இயந்திரங்கள் மூலம் செக்குகளை இயக்கி எண்ணெய் உற்பத்தி நடைபெறுகிறது. இத்தொழிலில் தற்போது மிகவும் குறைந்த எண்ணிக்கையிலானோரே ஈடுபட்டு வருகின்றனர். இயந்திரமயமான இக்காலத்தில் பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட பல வகை எண்ணெய்கள் சந்தையில் விற்பனைக்கு வந்துள்ளன. ஆனாலும் செக்கு எண்ணெய்க்கான மகிமை குறையவில்லை. அதற்கான தேவை இன்றும் உள்ளது. ஆனால், இயற்கை முறையில் எண்ணெயை உற்பத்தி செய்யும் ஆட்கள் குறைந்துவிட்டனர்.
செக்கடித் தெரு
தற்போது பேட்டையில் செக்கடி தெரு பகுதியில் ஓரிருவர் மட்டுமே செக்கு எண்ணெய் தயாரித்து விற்பனை செய்யும் தொழிலில் ஈடுபட்டிருக்கிறார்கள். அவர்களில் முக்கியமானவர் மாடசாமி என்ற அன்பழகன் (62). ஏழாவது தலைமுறையாக இத்தொழிலில் இவர் ஈடுபட்டிருக்கிறார். தற்போது இவர் மின்மோட்டார் மூலம் கல்செக்கை இயக்கி எண்ணெய் உற்பத்தி செய்கிறார்.
கல்செக்கு எண்ணெய் உற்பத்தி குறித்து மாடசாமி கூறியதாவது: கல்செக்கை மாடுகள் மூலம் சிறிது சிறிதாக இயக்குவதால் எள் சூடாவதில்லை. நல்ல பக்குவத்தில் அதில் உள்ள சத்துகள் சிதையாமல் பாதுகாக்கப்படுகிறது. கல் செக்கில் நல்லெண்ணெயை எடுப்பது லேசான காரியமில்லை. சித்த மருந்து தயாரிப்பதுபோல் சிரத்தையான வேலை.
நூதனமான படைப்பு
கல் செக்கு ஒரு நூதனமான படைப்பு. ஒரே கல்லில் குடைக்கா ளான் வடிவில் குடைந்து அடியில் வட்ட வடிவிலான ஆரக்கற்களை அமைத்திருப்பார்கள். அந்த செக்கின் நடுவில் சுற்றிச்சுழல வாகை மரத்தில் இருந்து செய்யப்பட்ட உலக்கை பொருத்தப்படும். கொக்கி எனப்படும் பெயரில் மரத்தாலான ஒரு ஸ்டே அதை தாங்கி நிற்கும். அதன் கீழ்பகுதி நீண்ட கம்பாலான பலகையால் செக்கின் அடிவாரத்தில் இணைக்கப் பட்டிருக்கும். இந்த பலகையில் அமர்ந்துதான் மாடுகளை பொருத்தி செக்கை ஓட்டுவர்.
எட்டு எள்ளுக்கு ஒரு சொட்டு என்பார்கள். இதை எள்ளிலிருந்து கிடைக்க வேண்டிய எண்ணெயின் அளவாக கொள்ளலாம். இப்போது கல்செக்குகளை இயந்திரங்கள் மூலம் இயக்கும் தொழில்நுட்பத்தை கையாண்டு இத்தொழிலை தொடர்ந்து வருகிறோம்.
கேரளாவில் வரவேற்பு
தற்போது கல்செக்கு மூலம் தயாரிக்கப்படும் நல்லெண்ணெயை ஆயுர்வேத மருத்துவத்துக்காக கேரளத்திலிருந்து வருபவர்கள் அதிக அளவில் வாங்கிச் செல்கின் றனர்.

கல்செக்குகளில் எண்ணெய் தயாரிக்க நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் யோசனையை காதி கிராம தொழில்கள் துறை அதிகாரிகளிடம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தெரிவித் தோம். அது நடைமுறைக்கு சாத்தியமில்லை என்று கூறி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நிராகரித்துவிட்டனர். ஆனால், கர்நாடகம் உள்ளிட்ட பிற மாநிலங்களில் இத்தகைய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இன்னமும் கல்செக்கு எண்ணெய் தயாரிக்கப்படுகிறது என்றார் அவர்.

Thursday, August 11, 2016

இளம் தொழிலதிபர்

கனவுகள் சுமக்கும் கண்களும் லட்சியங்கள் சுமக்கும் மனதுமாக துடிப்புடன் இருக்கிறார் கிருத்திகா. இளம் தொழிலதிபர் என்கிற அடையாளத்துடன் வலம் வருகிற இன்ஜினியர். ப்ரின்ட் லே’ என்கிற பெயரில் இவர் நடத்துகிற நிறுவனம் நம்மூருக்குப் புதிதான 3டி பிரின்ட்டிங் சம்பந்தப்பட்டது. பெண்களுக்குப் பொருந்தா துறையாகப் பார்க்கப்படுகிற டெக்னாலஜியில் அசத்திக் கொண்டிருக்கிறார் கிருத்திகா!

2015லதான் கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியரிங் முடிச்சிட்டு வெளியில வந்தேன். படிப்பை முடிக்கிறதுக்கு முன்னாடியே கேம்பஸ் இன்டர்வியூவுல செலக்ட் ஆகி, ஒரு பெரிய கம்பெனியில நல்ல வேலை கிடைச்சது. ஆனாலும், ‘வேணாம்’னு சொல்லிட்டேன். காரணம் என் கனவு... யெஸ்... எனக்கு ரொம்ப சின்ன வயசுலேருந்தே தொழிலதிபராகணும்கிறது ஆசை. வேலை கிடைச்சப்ப, `இது மாதிரி யாராவது பைத்தியக்காரத்தனம் பண்ணுவாங்களா? கிடைச்ச வேலையை விட்டுடாதே... 

இந்த வயசுல பிசினஸ் எல்லாம் சரியா வராது’னு நிறைய பேர் நிறைய அட்வைஸ் பண்ணினாங்க. ஆனா, என் கனவு அதுக்கெல்லாம் இடம் கொடுக்கலை. ரெண்டாவது வருஷம் இன்ஜினியரிங் படிக்கிறபோது நானும் என் ஃப்ரெண்ட்ஸும் சேர்ந்து இன்டர்நேஷனல் ரோபோடிக்ஸ் போட்டியில கலந்துக்கிட்டோம். அதுல மனுஷனை மாதிரியே இயங்கக்கூடிய ஒரு ரோபோவை டிசைன் பண்ண யோசிச்சோம். அப்பதான் முதன் முதலா 3டி பிரின்ட்டிங் பத்திக் கேள்விப்பட்டோம். அதுலேருந்து அதைப் பத்தித் தேடித் தேடி நிறைய விஷயங்களைக் கத்துக்கிட்டேன். 

படிப்பை முடிச்சிட்டு வௌியில வந்ததும் நான் பண்ணப் போற பிசினஸ் 3டி பிரின்ட்டிங் சம்பந்தப்பட்டதா இருக்கணும்னு அப்பவே தீர்மானம் பண்ணிட்டேன்...’’ என்கிறவர், தன்னுடன் இன்ஜினியரிங் முடித்த சக மாணவர் வைத்யநாதனின்  துணையுடன் பிசினஸை ஆரம்பித்து நடத்துகிறார்.

நம்ம நாட்டுக்கு 3டி பிரின்ட்டிங் புதுசு. வெளிநாடுகள்ல 3டி பிரின்ட்டிங் இல்லாத துறையே இல்லை. மண்டையோட்டை ரீப்ளேஸ் பண்ற அறுவை சிகிச்சைக்கும், எலிக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கும் மருத்துவத் துறையில 3டி பிரின்ட்டிங் டெக்னாலஜியை யூஸ் பண்ணி இருக்காங்க. இன்னும் டிரெஸ் டிசைனிங், ஷூ டிசைனிங், பைக், கார் டிசைனிங்னு தினசரி நாம பயன்படுத்தற எல்லா தயாரிப்புகள்லயும் 3டி பிரின்ட்டிங் வந்தாச்சு.

இந்த முறையில பிளாஸ்டிக், மெட்டல், மரம்னு எதுல வேணாலும் ரொம்பவும் நுணுக்கமான, சிக்கலான முப்பரிமாணப் பொருட்களை அடுக்கு, அடுக்கா பிரின்ட் பண்ணி உருவாக்கலாம். கொஞ்சம் எளிமையா சொன்னா எல்லாருக்கும் புரியும். ஒருத்தங்க தன் வீட்டு அலமாரியில அழகான ரோஜா பொம்மையை வச்சிருந்ததாகவும் திடீர்னு அது உடைஞ்சு போனதாகவும் கற்பனை பண்ணிக்கோங்க. அதே மாதிரி ரோஜா பொம்மையைத் தேடிப் பிடிச்சு வாங்கறது கஷ்டம்னு வச்சுப்போம். 3டி பிரின்ட்டிங் முறையில அதே கலர்ல, அதே டிசைன்ல ரோஜா பொம்மையை உருவாக்க முடியும். 

இந்த மாதிரி எதை வேணாலும் டிசைன் பண்ணிக்கலாம். ஃபிலமென்ட் ரோல்னு ஒயர் மாதிரியான ஒரு மெட்டீரியல் இருக்கும். அதை 3டி பிரின்ட்டிங் மெஷினுக்குள்ள வச்சா, உருகி, திரவ நிலைக்கு மாறும். அது லேயர் லேயரா நமக்குத் தேவையான பொருளோட டிசைனை இழைச்சு, இறுதி வடிவத்துக்குக் கொண்டு வரும்...’’ - விஞ்ஞான ரீதியாக 3டி பிரின்ட்டிங் தொழில்நுட்பத்தை விளக்குகிறார் கிருத்திகா. 

3டி பிரின்ட்டிங் முறையில மொபைல் கேஸ், லேப்டாப் கவர், கீ செயின், காபி மக், சாப்பிடற தட்டு, டைல்ஸ்... இப்படி எதுல வேணாலும் நமக்கு விருப்பமான உருவங்களை பதிச்சுக்கலாம். ஃபேவரைட் சினிமா நட்சத்திரங்கள், ஸ்போர்ட்ஸ் ஆட்கள், குடும்ப உறுப்பினர்கள்னு மனசுக்குப் பிடிச்சவங்க போட்டோவை பிரின்ட் பண்ணிக்கிறதுக்கும் இளைஞர்கள் மத்தியில பயங்கர வரவேற்பு இருக்கு...’’ என்கிற  கிருத்திகா, அடுத்தகட்டமாக தொழில் நிறுவனங்களுக்கான பொருட்களை ஆர்டர் எடுத்து 3டி முறையில் பிரின்ட் செய்து கொடுக்கும் பெரிய பொறுப்பையும் கைப்பற்றியிருக்கிறார்!

டிசைனிங் ஸ்டேஜ்லயே தவறு களை சரி செய்யவும், டிசைனை இம்ப்ரூவ் பண்ணவும் 3டி பிரின்ட்டிங் முறையில வாய்ப்புகள் அதிகம். செலவும் கம்மி...’’ என்கிறவர், இன்னொரு பக்கம் ரோபோடிக்ஸ் பயிற்சி  வகுப்புகள் எடுப்பதில் பயங்கர பிசி! வயசு வாரியா இந்தப் பயிற்சி வகுப்புகளை சொல்லித் தரேன். 5 வயசுக் குழந்தைக்கு பேட்டரியால ஒரு காரை ஓட்ட வைக்கக் கத்துக் கொடுக்கிறது மூலமா, அது எப்படி இயங்குதுனு யோசிக்க வைக்க முடியும். வரையற ரோபோ, பூச்சி ரோபோ, டூத் பிரஷ் ரோபோ எல்லாம் குழந்தைகளுக்கானது. 

அடுத்த லெவல்ல ஸ்கூல் படிக்கிற பிள்ளைங்களுக்கு விஞ்ஞானப்பூர்வமான ரோபோடிக்ஸ் வகுப்புகள் மூலமா, படிக்கிற பாடங்களை இன்னும் சுலபமா புரிஞ்சுக்கற மாதிரியான பயிற்சிகள் கொடுக்கறேன். மூணாவது காலேஜ் ஸ்டூடன்ட்ஸுக்கானது. இனிமே வரப் போற காலத்துல ரோபோக்களோட பயன்பாடு அதிகமா இருக்கப் போகுது. ரோபோ டிசைன் பண்ண லட்சக்கணக்குல செலவாகும்னு பலரும் நினைச்சிட்டிருக்காங்க. 

அப்படியெல்லாம் இல்லை. சரியான பயிற்சியும் பிளானிங்கும் இருந்தா அதிக செலவில்லாம ரோபோவை டிசைன் பண்ணிடலாம். வெளிநாடுகள்ல வீட்டு வேலைகளுக்கான ரோபோக்கள் வந்தாச்சு. சமைக்கிறது, வீட்டை சுத்தப்படுத்தறதுக்கெல்லாம் அங்கே ரோபோ இருக்கு. நம்மூர்லயும் அது மாதிரி நிறைய ரோபோக்கள் வரணும். நானும் என் பிசினஸ் பார்ட்னர் வைத்யநாதனும் ரெண்டு ரோபோக்களுக்கான ஐடியாக்களை பிளான் பண்ணிட்டிருக்கோம். ஒண்ணு... ஹோட்டல்கள்ல சாப்பாடு பரிமாறும் ரோபோ. ரெண்டு கை, ரெண்டு கால்கள் இருந்தாதான் ரோபோனு நினைக்காதீங்க. ஒரு டிராலி மாதிரி இருந்தாலே போதும். ஒவ்வொரு டேபிளுக்கும் அதுவா போய் ஆர்டர் எடுத்து சாப்பாடு கொண்டு போய் கொடுக்கும். 

ஆட்கள் இல்லாத டேபிள்ல லைட், ஃபேன் ஓடிக்கிட்டிருந்தா தானா ஆஃப் பண்ணி, மின்சாரத்தை மிச்சப்படுத்தும். இன்னொண்ணு மனித வடிவ ரோபோ. நாம பேசறதைப் புரிஞ்சுக்கிட்டு சொல்ற வேலையைச் செய்யும். இந்த ரெண்டு கனவு புராஜெக்ட்டுகளையும் சீக்கிரமே முடிச்சிட்டு, அந்த சாதனை சந்தோஷத்தோட சீக்கிரமே மறுபடி சந்திப்போம்...’’  3டி புன்னகையுடன் வழியனுப்புகிறார் கிருத்திகா.
நன்றி குங்குமம் தோழி


படங்கள்: ஆர்.கோபால்

பூந்தொட்டிகள் மற்றும் தொங்கும் பூந்தொட்டிகள்

பூக்கள் மலரும் இடங்களில் நம்பிக்கையும் மலரும்...’ என்கிறதொரு பொன்மொழி. பூக்கள் சூழ்ந்த வாழ்க்கை ரசனையானது. அழகானது. ஆரோக்கியமானது. பூக்கள் பிடிக்காதவர்கள் யாரேனும் இருப்பார்களா? அதேபோலத்தான் பூந்தோட்டம் பிடிக்காதவர்களையும் பார்க்க முடியாது. மனிதர்கள் வாழும் இடங்களே சுருங்கிக் கொண்டிருக்கிற வேளையில், பூக்கள் வளர்ப்பதும், பூந்தோட்டம் அமைப்பதும் எப்படி சாத்தியம் என்கிறீர்களா? மனம் இருந்தால் மார்க்கம் உண்டு!

இருக்கும் இடத்துக்குள் பூக்கள் வளர்க்கும் தொழில்நுட்பங்களைப் பார்ப்பதற்கு முன், பூந்தொட்டிகள் அமைக்கிற கலாசாரம் எப்படி ஏற்பட்டிருக்கும் என்று தெரிந்து கொள்வோமா? வாடகை வீட்டில் வசிக்கிறோம்... அங்கேயே நிரந்தரமாகத் தங்கும் பகுதி என்பது சாத்தியமில்லை. வேறு வீடுக்கு மாற வேண்டியிருக்கும். வாடகை வீட்டில் இருப்பவர்கள் செடிகளே வளர்க்க ஆசைப்படக்கூடாதா என்ன? நம்முடைய குழந்தைகளை வளர்க்கிறோம். 

எப்போதும் நம்முடனேயே வைத்துக் கொள்கிறோம். போகிற இடங்களுக்கெல்லாம் அழைத்துச் செல்கிறோம்... அதுபோலத்தான் நாம் வளர்க்கும் செடிகளையும் எங்கே போனாலும் நம்முடனேயே எடுத்துச் செல்லலாம் என்கிற எண்ணத்தில் உருவானவைதான் இந்த பூந்தொட்டிகள். இன்னொரு காரணம் இடப்பற்றாக்குறை. இன்று மண் என்பதையே பார்க்க முடியாத அளவுக்கு எங்கெங்கு பார்த்தாலும் சிமென்ட் போடப்பட்ட பகுதிகள்தான். 

அந்தப் பகுதிகளை அழகுப்படுத்தவும் பூந்தொட்டிகளை வைக்கிறோம். பூந்தொட்டிகளில் மண் நிரப்புவதைப் பற்றியெல்லாம் ஏற்கனவே பார்த்துவிட்டோம். பூந்தொட்டிகளை எங்கெல்லாம் வைக்கலாம் என்று பார்ப்போம். வீட்டின் வராண்டா பகுதியில் அதாவது, வீட்டையும் தோட்டத்தையும் இணைக்கிற பகுதிகளில் பூந்தொட்டிகளை வைக்கலாம். வீட்டினுள்ளும் வைக்கலாம். இரண்டு அறைகளைப் பிரிப்பதற்கும் பூந்தொட்டிகளைப் பயன்படுத்தலாம். 

உதாரணத்துக்கு மணிபிளான்ட் செடியை ட்ரெல்லி அல்லது lattice என்கிற வேலி போன்ற அமைப்புடன் வைக்கலாம். அல்லது சின்ன செங்கல்கட்டு போல அமைத்து அதில் மண்ணை நிரப்பி அதற்கு மேல் செடிகளை வைக்கலாம். இரண்டு அறைகளைப் பிரிக்க room divider ஆகவும் இவற்றைப் பயன்படுத்தலாம். வீட்டுக்குள் ஆங்காங்கே செடிகளை வைக்கும்போது வீட்டுக்கும் உயிரோட்டம் வரும். வீட்டினுள் டேபிளின் மேல் செடிகளை வைக்கலாம். வீட்டின் முன் வைக்கலாம். மொட்டை மாடியில் வைக்கலாம். 

வீட்டிலேயே ஏதோ ஒரு பார்ட்டி நடத்துகிறீர்கள் என்றாலும், இந்தத் தொட்டிகளை அழகாக அடுக்கி வைத்துவிட்டு, நிகழ்ச்சி முடிந்ததும் திரும்பவும் அவற்றை அவற்றின் இடங்களுக்கே எடுத்துச் சென்று விடலாம். பூந்தொட்டிகளிலேயே இன்னொரு வகை தொங்கும் தொட்டிகள். தொட்டிகளை ஏன் தொங்க விட வேண்டும்? 2 மாடிக் கட்டிட வீடு என வைத்துக் கொள்வோம். ஒவ்வொரு மாடியிலும் தொங்கும் தொட்டிகளை அமைத்தால் அந்த உயரத்தை இணைக்கும்படியான ஒரு தோற்றத்தைக் கொடுக்கும். 

ஆகாயத்திலிருந்து தொங்குகிற மாதிரியும், செடிகள் தழைத்துக் கீழே தொங்குவதும் ரம்மியமான காட்சியாக இருக்கும். மண் தொட்டியா, சிமென்ட் தொட்டியா என்பது அடுத்த கேள்வியாக இருக்கும். மண் தொட்டியே சிறந்தது. அதில் பல வடிவங்களை வாங்கிக் கொள்ளுங்கள். சிமென்ட் தொட்டிகள் நீண்ட காலம் உழைப்பவை. ஆனால், அவற்றில் சூடு அதிகமிருக்கும். எடை அதிகமானவையாக இருக்கும். இன்னொரு முக்கியமான விஷயம், சிமென்ட் தொட்டிகளுக்கு நீங்கள் என்னதான் டெரகோட்டா பெயின்ட் அடித்தாலும் மண் தொட்டிகளுக்கே உரித்தான அந்தப் பாரம்பரியம் வராது. 

செடிகள் வளர்ப்பது என்பதே நல்ல விஷயம். அப்படி இருக்கும்போது, மண் தொட்டிகளை வாங்கி வைப்பதன் மூலம் நமது பாரம்பரிய தொழில் அழியாமல் பாதுகாக்கவும் மறைமுகமாக உதவுகிறோம். மண் தொட்டிகளில் சின்னது முதல் பிரமாண்டமானது வரை பல அளவுகள் உள்ளன. மண் தொட்டிகளுக்கும் சிமென்ட் தொட்டிகளுக்கும் இடையில் டெரகோட்டாவில் பிளாஸ்டிக் தொட்டிகளும் கிடைக்கின்றன. சிலர் அவற்றையும் உபயோகிப்பதுண்டு. இவை தவிர water saving pots என்றும் கிடைக்கின்றன. இது இரண்டு வகைகளில் பயன்
படும். வெளியூருக்குச் செல்லும்போது தண்ணீர் ஊற்றி வைத்தால் மண்ணே தண்ணீரை உறிஞ்சி வைத்துக் கொண்டு பயன்படுத்திக் கொள்ளும். 

இன்னொன்று இந்தத் தொட்டிகளை டேபிள் போன்ற இடங்களில் வைத்தாலும் தண்ணீர் வெளியே கசியாது. மேல் பகுதிக்கு ஈரப்பதம் வராது. கொசு வருமோ என்கிற பயமும் இருக்காது. இந்தத் தொட்டிகளில் ஓவல், சதுரம், வட்டம் எனப் பல வடிவங்கள் கிடைக்கின்றன. இவற்றை போன்சாய்க்கும் நாம் பயன்படுத்தலாம். இவற்றில் அடுத்த தரம் எனப் பார்த்தால் செராமிக் தொட்டிகள். அவற்றுக்கும் தனி அழகு உண்டு. இப்படி அவரவர் விருப்பம் மற்றும் வசதிக்கேற்ப தொட்டிகளைத் தேர்ந்தெடுக்கலாம். எந்தத் தொட்டியானாலும் தண்ணீர் தேங்கி நிற்காமல் சீராக கீழே இறங்கி வருகிறதா என்று மட்டும் பார்க்க வேண்டும்.

சரி... இவற்றில் என்ன மாதிரியான செடிகளை வைக்கலாம்?
பூச்செடிகள் வைக்கலாம்... மூலிகைச் செடிகள் வைக்கலாம். அழகுக்கான ஃபோலியேஜ் செடிகள் வைக்கலாம். பழ மரங்களைக்கூட தொட்டிகளில் வைக்க முடியும். தொட்டிகளில் செடிகளை வளர்ப்பது என்பதே ஒரு கலை. ஒரு தொட்டியில் ஃ வடிவத்தில் 3 செடிகளை வைத்து பிறகு அவற்றை ஷேப் செய்து அழகுப்படுத்தலாம். தொட்டிகளில் செடிகளை வளர்ப்பது என்பது பராமரிப்புக்கும் எளிதானது. ஒரு பெரிய தோட்டத்தைப் பராமரிப்பதற்கும் சில தொட்டிகளை வைத்துப் பராமரிப்பதற்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு. அந்தந்த செடிகளுக்குத் தேவையான விஷயங்களை மட்டும் பார்த்துக் கொள்ளலாம்.

இதையே வணிக ரீதியாக எப்படிச் செய்யலாம்?
50 தொட்டிகள் வைப்பது வரை அதைப் பொழுதுபோக்காகப் பார்க்கலாம். அதைத் தாண்டும் போது சமாளிப்பதும் பராமரிப்பதும் சற்றே சிரமமாகும். அந்த மாதிரி நேரத்தில் அழகான செடிகளை தொட்டிகளில் வளர்த்து வாடகைக்கு விடலாம். பெரிய பெரிய விழாக்கள் நடைபெறும் இடங்களில் பூக்கள் வைப்பது போல தொட்டிகளில் செடிகளும் வைப்பார்கள். அந்த நேரத்துக்கு அந்தச் சூழலை பசுமையாக்கித் தருவதே இவற்றின் வேலை.

தொங்கும் தொட்டிகளில் கீழே தழைத்து வருகிற மாதிரியான சின்ன கொடிகள், ஆஸ்பராகஸ், பைலியா போன்ற வகைகளை வைக்கலாம். பார்க்க அழகாக இருக்கும். பூந்தொட்டிகளை வைப்பதற்கென்றே இப்போது ஸ்டாண்டுகள் வந்திருக்கின்றன. இரும்பில் இருக்கும். வட்டவடிவத்தில் வைக்கலாம். செங்குத்தாக வைக்கலாம். ஒரே ஸ்டாண்டில் நான்கைந்து தொட்டிகளைக்கூட வைக்கலாம். இவற்றை நமது கற்பனைத் திறனுக்கேற்ப வடிவமைத்துக் கொள்ளலாம். ஒரு பார்ட்டி நடக்கிறது... தொட்டிகளை நடுவில் வைக்கலாமா? சுற்றி வைக்கலாமா? டேபிள் மீது வைக்கலாமா? இதையெல்லாம் அவரவர் கற்பனைத் திறனைப் பொருத்தது.

தொட்டிகளின் தரம் இன்னும் சில நாட்கள் நீடிக்க வேண்டும் என நினைத்தால் நாம் வாங்கி வரும் மண் தொட்டிகளில் ரெட் ஆக்சைடு அடித்து வைக்கலாம். தொட்டிகளைக் கீழே வைக்கும் போது தண்ணீர் தேங்காமலிருக்க Drain cells என்பவை கிடைக்கின்றன. அவற்றின் மேல் தொட்டிகளை வைத்தால் தண்ணீர் தேங்காது. தரை கெடாது. அல்லது அடியில் ஒரு தட்டு வைத்து அதன் மேல் தொட்டிகளை வைக்கலாம். ஆனால், அப்படி வைக்கிற போது அதில் தேங்குகிற தண்ணீரை முறையாக சுத்தம் செய்தே ஆக வேண்டும். இல்லாவிட்டால் அதுவே கொசுக்கள் விருத்தியாகக் காரணமாகி விடும்.

பூந்தொட்டிகளுக்கு தண்ணீர் ஊற்றவும் சில முறைகள் உள்ளன. 12 இன்ச் தொட்டி என்றால் 250 மி.லி. தண்ணீர் அல்லது ஜூஸ் பாட்டில் எடுத்துக் கொள்ளுங்கள். அந்த பாட்டிலில் பின் வைத்து மெல்லிய துளைகள் போட்டு, தண்ணீரை நிரப்பி வையுங்கள். அதன் வழியே தண்ணீர் கசிந்து கொண்டே இருக்கும். இதன் மூலம் 2-3 நாட்களுக்குக்கூட தண்ணீர் விடாமல் செடிகளைப் பராமரிக்க முடியும். மாடியில் வைப்பதற்கேற்ப எடை குறைவான மண் நிரப்புவது எப்படி என்றும் முந்தைய அத்தியாயங்களில் பார்த்திருக்கிறோம். அவற்றையும் இந்த விஷயத்தில் பின்பற்றலாம். 

பூந்தொட்டிகளை வளர்ப்பது என்பது மிக முக்கியமான ஒரு பொழுதுபோக்கு. குறிப்பாக பெண்களுக்கு இது மிகவும் அருமையான பொழுதுபோக்கு. கனத்த விவசாய வேலைகள் இதில் கிடையாது. ஆனாலும், விவசாயத்தில் உள்ள பல நுட்பங்களும் இதில் இருக்கும். தினம் அரை மணி நேரம் இவற்றுக்காக செலவிட்டால் மனம் அமைதியாகும். உடற்பயிற்சியாகவும் அமையும்!

பூச்செடிகள் வைக்கலாம்... மூலிகைச் செடிகள் வைக்கலாம். அழகுக்கான ஃபோலியேஜ் செடிகள் வைக்கலாம். பழ மரங்களைக்கூட தொட்டிகளில் வைக்க முடியும். தொட்டிகளில் செடிகளை வளர்ப்பது என்பதே ஒரு கலை!

பெண்களுக்கு இது மிகவும் அருமையான  பொழுதுபோக்கு. கனத்த விவசாய வேலைகள் இதில் கிடையாது. ஆனாலும், விவசாயத்தில்  உள்ள பல நுட்பங்களும் இதில் இருக்கும். தினம் அரைமணி நேரம் இவற்றுக்காக  செலவிட்டால் மனம் அமைதியாகும். உடற்பயிற்சியாகவும் அமையும்!

பூ தலையணை

நீங்கதான் முதலாளியம்மா! 

வீ ட்டு அலங்காரப் பொருட்களிலும் அவ்வப்போது சீசன் மாறும். அந்த வகையில் வட்டமாக, சதுரமாக, நீள் வட்டமாக வீட்டின் மூலைகளை அலங்கரித்த குஷன் தலையணைகளுக்கான மவுசு சற்றே மாறி, இப்போது பூ டிசைன்களில் வருகிற தலையணைகள்தான் ஃபேஷன். சூரியகாந்தி டிசைனில், ரோஜா டிசைனில்... இன்னும் விரும்பிய டிசைன்களில் எல்லாம் இதை உருவாக்கலாம் என்கிறார் சென்னை, கோயம்பேட்டைச் சேர்ந்த கைவினைக் கலைஞர் ராணி.    
``கொஞ்ச நாளைக்கு முன்னாடி வரை குஷன் தலையணைகள் ரொம்பப் பிரபலமா இருந்தது. சாட்டின் துணிகள்ல கலர் கலரா, எல்லா வடிவங்கள்லயும் பண்ற அந்தத் தலையணைகளை வீட்ல சோஃபா மேல, காருக்குள்ள, தரையில உட்காரும்போது திண்டு மாதிரியெல்லாம் உபயோகிக்கலாம். இப்ப அதுக்குப் பதிலா பூ தலையணை ஃபேஷனாக ஆரம்பிச்சிருக்கு. இதையும் வீட்டுக்குள்ள அழகுக்காக எங்கே வேணா வைக்கலாம். குழந்தைகளை தூங்க வைக்கிறப்ப ரெண்டு பக்கங்கள்லயும் பாதுகாப்புக்காக வைக்கலாம். காருக்குள்ளே வைக்கலாம்...’’ என்கிறார் ராணி.
பாலியஸ்டர், காட்டன், டர்கிஷ் துணி, வெல்வெட், ஃபெல்ட் என எந்தத் துணியிலும் இந்தத் தலையணைகளை தைக்கலாம். ஒரு தலையணைக்கு 2 மீட்டர் துணி வேண்டும். துணிக்கு 200 ரூபாயும், உள்ளே ஸ்டஃபிங் செய்கிற ைநலான் பஞ்சு மற்றும் இதரப் பொருட்களுக்கு 200 ரூபாயும் செலவாகும். கையிலும் மெஷினிலும் தைக்கலாம்.
``அடிப்படையான கட்டிங் முறையும் தையலும் பிடிபட்டுட்டாலே, ஒரே நாள்ல 4 தலையணைகள் வரைகூட தச்சிடலாம். ஒரு தலையணையை 700 ரூபாய் வரை விற்கலாம். உள்ளே நைலான் பஞ்சு வைக்கிறதால, அழுக்கானாலும் துவைச்சு பயன்படுத்த முடியும். எல்லா கலர் காம்பினேஷன்லயும் பண்ண முடியும்கிறது இன்னொரு சிறப்பு...’’ என்கிற ராணியிடம் 2 நாள் பயிற்சியில் இந்தப் பூ தலையணைகளை டிசைன் செய்யக் கற்றுக் கொள்ளலாம். 3 டிசைன்கள் கற்றுக் கொள்ள தேவையான மெட்டீரியல்களுடன் சேர்த்துக் கட்டணம் 1000 ரூபாய். ஒரு டிசைனுக்கு 600 ரூபாய்.
பூ தலையணையை குழந்தைகளை தூங்க வைக்கிறப்ப ரெண்டு பக்கங்கள்லயும் பாதுகாப்புக்காக வைக்கலாம். காருக்குள்ளே வைக்கலாம். சோஃபா மேல, காருக்குள்ள, தரையில உட்காரும்போது திண்டு மாதிரியும் உபயோகிக்கலாம்...

Wednesday, March 30, 2016

விற்பனைக்கு வில்லங்கமில்லா பேயன் வாழை...

*பழங்கள் ஐந்து நாட்கள் வரை கெடாது.

*பழங்கள் ஐந்து நாட்கள் வரை கெடாது.

*தரகர் இல்லாத விற்பனையில் அதிக லாபம்.

*ஒரு தாரில் 100 பழங்கள்.

*ஒரு கிலோவுக்கு 10 பழங்கள்.

*மாசிப்பட்டம் ஏற்றது.

*செம்மண்ணில் நன்றாக வளரும்.

ரசு கொள்முதல் செய்யாத அல்லது குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிக்காத எந்தவிளைபொருளுக்கும் விலை உத்தரவாதம் கிடையாது. அதற்கு வாழையும் விதிவிலக்கல்ல. மாதப் பயிர்களில் வெள்ளாமை செய்யும் பயிர்களுக்கு விலை கிடைக்காமல் போனாலே, விவசாயிகளுக்கு பெருத்த நஷ்டம் ஏற்படும். இந்த நிலையில் வாழை போன்ற ஆண்டுப் பயிர்களுக்கு விலை இல்லாமல் போனால், என்னவாகும் என்று சொல்ல வேண்டியதில்லை.
ஆனால், ‘வாழை சாகுபடியில் அப்படிப்பட்ட சூழ்நிலையையும் எளிதாக சமாளித்து நஷ்டமில்லாமல் சம்பாதிக்க முடியும்’ என்கிறார், திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த மணிவண்ணப் பெருமாள். தற்போது பரவலாக அனைத்து ரக வாழைகளுமே விலை வீழ்ச்சியடைந்துள்ள சூழ்நிலையிலும் கூட... விற்பனையில் சில விஷயங்களைக் கடைபிடிப்பதன் மூலம், நிலையான விலையில் விற்பனை செய்து லாபம் பார்த்து வருகிறார், மணிவண்ணப் பெருமாள்.

திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரத்தில் இருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் இளையநயினார்குளம் கிராமத்தில் உள்ளது, மணிவண்ணப் பெருமாளின் வாழைத்தோட்டம். பஞ்சகவ்யா தயாரிக்கும் பணியில் இருந்த மணிவண்ணப் பெருமாளிடம் நம்மை அறிமுகப்படுத்திக் கொண்டவுடன் உற்சாகமாகப் பேச ஆரம்பித்தார். 

‘பசுமை விகடன்’ தூண்டிய விவசாய ஆசை!

“நான் பிறந்தது, வளர்ந்தது எல்லாமே நாகர்கோவில்லதான். பூர்வீகமாவே நாங்க விவசாயக் குடும்பம். ஆனா, நான் சின்ன வயசுல விவசாயம் செஞ்சதில்ல. டிப்ளமோ இ.சி.இ படிச்சிட்டு கோயம்புத்தூர்ல நாலு வருஷம் வேலை பார்த்தேன். பிறகு, நாகர்கோவிலுக்கே திரும்பி வந்து மளிகைக் கடை வெச்சிருந்தேன். 1993-ம் வருஷத்துல நம்மாழ்வாரைப் பத்தித் தெரிஞ்சுக்கிட்டேன். அவர் எழுதின கட்டுரைகளையெல்லாம் படிக்க ஆரம்பிச்சதும் இயற்கை விவசாயத்து மேல ஆர்வம் வந்துடுச்சு. ஆனாலும் விவசாயத்தை ஆரம்பிக்கலை.  அப்பறம் ‘பசுமை விகடன்’ வெளி வர ஆரம்பிச்சது. அதை, முதல் இதழ்ல இருந்து படிச்சுக்கிட்டு இருக்கேன். இதுவரை வெளியான அத்தனைப் புத்தகங்களையும் பத்திரமா பொக்கிஷம் மாதிரி வெச்சிருக்கேன். அதைப் படிக்க படிக்கத்தான் விவசாயத்து மேல அதிக ஆர்வமும், இயற்கை விவசாயம் செய்யணும்கிற எண்ணமும் வந்துச்சு.

பாடம் சொல்லித்தந்த வாழை!

ஆறு வருஷத்துக்கு முன்னாடிதான் இந்த ஊருக்கு (இளையநயினார்குளம்) வந்து இந்த நிலத்தை வாங்கினோம். இது, என் மனைவி ஊர். இந்த நிலம் மொத்தம் ஒன்பதரை ஏக்கர். செவல் கலந்த மணல். 2012-ம் வருஷம்தான் முதல்முறையா அரை ஏக்கர் நிலத்துல கற்பூரவல்லி வாழை சாகுபடி செஞ்சேன். முழுக்க முழுக்க இயற்கை முறையில் சாகுபடி செய்ததால காய்கள் நல்லா திரட்சியாத்தான் இருந்துச்சு. ஆனா, விலை கிடைக்கலை. இனிமேல் வாழையே சாகுபடி செய்யக்கூடாதுனு முடிவெடுத்துட்டேன்.

அடுத்து அரை ஏக்கர் நிலத்துல கத்திரி, அரை ஏக்கர் நிலத்துல குட்டைப்புடலைனு சாகுபடி செஞ்சேன். ‘விவசாயியே வியாபாரியா மாறணும்’னு நம்மாழ்வார் ஐயா அடிக்கடி சொல்வார். அதை மனசுல வெச்சு காய்கறிகளை நாமளே விற்பனை செய்யலாம்னு முடிவு செய்து நாகர்கோவில்ல இருக்கிற கடைகளுக்கும் உள்ளூர் கடைகளுக்கும் நேரடியா விற்பனை செய்தேன். ஒருகட்டத்துல உள்ளூர்லயே நல்ல விற்பனை வாய்ப்பு கிடைச்சதால வெளியூர்களுக்குப் போறதை நிறுத்திட்டேன்” என்று சொல்லும்போது, மணிவண்ண பெருமாளுக்கு செல்போனில் ஓர் அழைப்பு வர அதற்கு பதிலளித்து விட்டு, நம்மிடம் தொடர்ந்து பேச ஆரம்பித்தார்.
விற்பனைக்கு வில்லங்கமில்லா பேயன்!

“நாகர்கோவில் சந்தைக்குப் போகும் போதுதான் நேந்திரன் ரக வாழையை எடை முறையில விற்பனை செய்றதைப் பாத்தேன். வாழை குறித்து விசாரிச்சப்போ, பேயன் ரக நாட்டு வாழைக்கு எப்பவும் தேவை இருக்கிறதைத் தெரிஞ்சுக்கிட்டேன். உடனே ஒரு ஏக்கர் 60 சென்ட் பரப்புல பேயன் ரக வாழையை நடவு செஞ்சுட்டேன். இப்போ, அறுவடை பண்ணிக்கிட்டு இருக்கேன். மத்த ரக வாழைகளுக்கு இப்போ விலை குறைவா இருக்கிற நேரத்துலயும் எனக்குக் கட்டுப்படியான விலை கிடைச்சுக்கிட்டிருக்கு. இப்போ, வாழை தவிர்த்து, 60 சென்ட் நிலத்துல சம்பங்கியும் இருக்கு. மீதி நிலத்தை  உழுது போட்டிருக்கேன். ரெண்டு ஏக்கர் நிலத்தில் தென்னையும், மீதமுள்ள இடத்தில் சுழற்சி முறையில் காய்கறிகளும், கீரைகளும் போடலாம்னு இருக்கேன்” என்ற மணிவண்ணப் பெருமாள், தனது விற்பனைச் சூத்திரத்தைச் சொல்ல ஆரம்பித்தார்.

பழமாகத்தான் விற்பனை!

“நான், இயற்கை விவசாயத்துல விளைவிக்கிறதால சென்னை, நாகர்கோவில், திருநெல்வேலினு மூணு ஊர்கள்ல உள்ள இயற்கை அங்காடிகள்லதான் வாழையை விற்பனை செய்றேன். அதனால, இருக்கிற ஆர்டரை பொறுத்துதான் குலையை வெட்டுவோம். மொத்தமா, அத்தனை வாழைக்குலைகளையும் (வாழைத்தாரைத் தான் இப்படிச் சொல்கிறார்கள்) வெட்டி விற்பனைக்கு அனுப்புறப்போதான் விலை கிடைக்காம கஷ்டம் வரும். மாசத்துக்கு 10 குலையில இருந்து 50 குலை வரைதான் வெட்டுவோம். குலை வெட்டுனதும் ஒரு ரூமுக்குள்ள அடுக்கி... மண்பானையில் வாழைச் சருகை வெச்சு ஒரு ராத்திரிக்கு புகைமூட்டம் போடுவோம். காலையில 6 மணிக்கு குலைகள்ல இருந்து சீப்பு சீப்பாக வெட்டி எடை போட்டு பேப்பர் சுற்றி விற்பனைக்கு அனுப்புவோம். இப்படி மூட்டம் போட்ட காய், அடுத்தநாள் சாயங்காலம்தான் மஞ்சள் நிறத்துக்கு வரும். இதை அஞ்சு  நாள் வரை கூட வெச்சு விற்பனை செய்ய முடியும். கடைகளுக்கு அனுப்புறது போக, உள்ளூர்க்காரங்க எங்க வீட்டுக்கே வந்தும் வாங்கிட்டுப் போறாங்க” என்றார்.
ஒரு கிலோவுக்கு 10 பழங்கள்!

நிறைவாக  மகசூல் மற்றும் வருமானம் குறித்துச் சொல்ல ஆரம்பித்த மணிவண்ணப் பெருமாள், “ஒரு குலையில் உள்ள பழங்கள், 6 கிலோ முதல் 10 கிலோ எடை வரை இருக்கும். ஒரு குலையில 10 சீப்புகள் வரை இருக்கும். ஒரு கிலோவுக்கு 10 பழங்கள் வரை இருக்கும். ஒரு குலையில இருந்து சராசரியா 7 கிலோ அளவுக்கு பழங்கள் கிடைக்கும். ஒரு கிலோ 35 ரூபாய்ல இருந்து 45 ரூபாய் வரை விலை போகும். இதுவரை (16.03.16) 820 கிலோ பழங்களை அறுவடை பண்ணி,  கிலோ 35 ரூபாய்னு விற்பனை செய்ததுல 28 ஆயிரத்து 700 ரூபாய் கிடைச்சிருக்கு. ஒரு ஏக்கர் 60 சென்ட் நிலத்துல 1,900 கன்னுகள் வரை நட்டாலும் 1,800 மரங்கள்தான் தேறும். இன்னும் கிட்டத்தட்ட 12 ஆயிரம் கிலோ வரை அறுவடை பண்ணலாம். அதுல சொத்தைக்காய்கள், வீணான காய்கள் எல்லாம் போக 9 ஆயிரம் கிலோ பழங்கள் கிடைக்கும்னு எதிர்பார்க்கிறேன். 9 ஆயிரம் கிலோ பழங்களுக்கும் குறைந்தபட்ச விலையா 35 ரூபாய் கிடைச்சாகூட 3 லட்சத்து 15 ஆயிரம் ரூபாய் கிடைக்கும். அந்தக் கணக்குல மொத்த வருமானம்னு பார்த்தா 3 லட்சத்து 43 ஆயிரம் ரூபாய் வரை வருமானம் கிடைக்கும். அதுல 69 ஆயிரம் ரூபாய் வரை செலவு போக, எப்படியும்  2,74,000 ரூபாய்  லாபம் கிடைக்கும்னு எதிர்பார்க்கிறேன்’ என்றவர்  அறுவடையில் மும்முரமானார். 
தொடர்புக்கு,
மணிவண்ணப் பெருமாள்,
செல்போன்: 98651-31290.

முக்கோண நடவில் செழிக்கும் வாழை!

ஒரு ஏக்கர் 60 சென்ட் நிலத்தில் பேயன் வாழை சாகுபடி செய்யும் விதம் குறித்து மணிவண்ணப் பெருமாள் சொன்ன விஷயங்கள் இங்கே...

6 அடி இடைவெளி!

வாழை சாகுபடிக்கு வடிகால் வசதியுள்ள அனைத்து மண் வகைகளும் ஏற்றவை என்றாலும், செம்மண் நிலம் மிகவும் ஏற்றது. மாசிப்பட்டம்தான் வாழைக்குச் சிறந்த பட்டம். தை மாதம் தொடக்கத்தில் உழுது 20 நாட்கள் இடைவெளி விட்டு 2 டிராக்டர் தொழுவுரத்தைக் கொட்டி அடுத்த உழவு செய்ய வேண்டும். அடுத்து 20 நாட்கள் இடைவெளியில் மீண்டும் ஓர் உழவு செய்து... வரிசைக்கு வரிசை 6 அடி, செடிக்குச் செடி 6 அடி என்ற இடைவெளியில்  முக்கோண நடவு முறையில் குழி எடுக்க வேண்டும். குழியின் அளவு அரை அடி சதுரம், ஓர் அடி ஆழம் இருக்க வேண்டும். இந்தக் கணக்கில் 1 ஏக்கர் 60 சென்ட் பரப்பில் 1,900 குழிகள் வரை எடுக்கலாம்.

பஞ்சகவ்யாவில் விதைநேர்த்தி!


ஒரு குழிக்கு ஒரு விதைக்கிழங்கு என்ற விகிதத்தில் நடவு செய்ய வேண்டும். நல்ல தரமான விதைக்கிழங்குகளைத் தேர்வு செய்து... அவற்றை 100 லிட்டர் தண்ணீரில் 3 லிட்டர் பஞ்சகவ்யா கலந்த கரைசலில் மூழ்க வைத்து எடுத்து நிழலில், 20 நிமிடங்கள் உலர்த்தி விதைநேர்த்தி செய்து நடவு செய்து தண்ணீர் பாய்ச்ச வேண்டும். ஒவ்வொரு விதைக்கிழங்கும் அரை கிலோ எடைக்கு அதிகமாக இருக்க வேண்டும். விதைத்த இருபது நாட்கள் வரை இரண்டு நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் கொடுக்க வேண்டும். தொடர்ந்து நிலத்தின் ஈரப்பதத்தைப் பொறுத்து தண்ணீர் பாய்ச்சலாம். சொட்டுநீர் அமைப்பது நல்லது. விதைத்த 15 முதல் 20 நாட்களுக்குள் இலைகள் தளிர்க்கும்.
சுழற்சி முறையில் ஊட்டக்கரைசல்கள்!

விதைத்த 20-ம் நாள் 10 லிட்டர் தண்ணீருக்கு ஒரு லிட்டர் அமுதக்கரைசல் என்ற விகிதத்தில் கலந்து தெளிக்க வேண்டும். 35-ம் நாள் 10 லிட்டர் தண்ணீருக்கு 300 மில்லி பஞ்சகவ்யா என்ற விகிதத்தில் தெளிக்க வேண்டும். 50-ம் நாள் 10 லிட்டர் தண்ணீரில் 150 மில்லி இ.எம் திறமி நுண்ணுயிரிக் கரைசல் கலந்து தெளிக்க வேண்டும். இப்படி 15 நாட்களுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் தெளித்து வர வேண்டும். மாதம் ஒரு முறை ஒவ்வொரு கன்றுக்கும் அரை லிட்டர் பிண்ணாக்குக் கரைசல் ஊற்ற வேண்டும் (செய்முறை தனியே கொடுக்கப்பட்டுள்ளது). பிண்ணாக்குக் கரைசல் மண்ணில் நுண்ணுயிர்களைப் பெருக்கும். இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை 10 லிட்டர் தண்ணீரில் 300 மில்லி மீன் அமிலக்கரைசல் 20 மில்லி புங்கன் எண்ணெய் என்ற விகிதத்தில் கலந்து தெளிக்க வேண்டும். புங்கன் எண்ணெய்க்குப் பதிலாக,  வேப்பெண்ணெய் அல்லது இலுப்பை எண்ணெய் ஆகியவற்றைக் கூட பயன்படுத்தலாம். இயற்கை முறையில் சாகுபடி செய்யும் போது பெரும்பாலும் பூச்சி மற்றும் நோய்த்தாக்குதல் இருக்காது என்றாலும், முன்னெச்சரிக்கையாக வருமுன் காப்பது போல இரண்டாவது மாதத்தில் இருந்தே இஞ்சி+பூண்டுக் கரைசல் தெளித்து வருவது நல்லது.

மூன்றாவது மாதத்தில் மூடாக்கு!

மூன்றாவது மாதத்தில் இருந்து பண்ணையில் கிடைக்கும் இலைதழைகளைக் கொண்டு வாழையின் தூரைச் சுற்றி மூடாக்கு இட வேண்டும். இதனால் நீர் தேவை குறையும். 3, 7 மற்றும் 12-ம் மாதங்களில் ஒவ்வொரு வாழைக்கும் கைப்பிடி அளவு வேப்பம் பிண்ணாக்கை தொழுவுரத்தில் கலந்து தூரில் இட்டு மண் அணைக்க வேண்டும். அவ்வப்போது பக்கக்கன்றுகளை வெட்டி மூடாக்காகப் போட வேண்டும். வாழை, குலை தள்ளிய பிறகு, குலைக்கு நேர் எதிர்திசையில் இருக்கும் பக்கக் கன்றை மட்டும் மறுதழைவுக்காக வளர விட வேண்டும். 8 மாதத்துக்கு மேல் பூக்கள் வர ஆரம்பிக்கும். 10-ம் மாதத்தில் குலையில் இருந்து பூவை ஒடித்து விட்டு குலையின் நுனித்தண்டில்... 

200 மில்லி பஞ்சகவ்யா நிரப்பிய பாலிதீன் பாக்கெட்டைக் கட்டி விட வேண்டும். அப்படிக் கட்டும் போது குலையின் நுனி, கரைசலுக்குள் மூழ்கியவாறு இருக்க வேண்டும். குலை நுனி மூலம் பஞ்சகவ்யா உறிஞ்சப்பட்டு காய்கள் நல்ல திடமாக வளரும். சுவையும் அதிகமாக இருக்கும். இப்படி 15 நாட்களுக்கு ஒரு முறை செய்ய வேண்டும். 13-ம்  மாதத்தில் இருந்து தேவையைப் பொறுத்து குலைகளை வெட்ட ஆரம்பிக்கலாம்.

பிண்ணாக்குக் கரைசல்!

10கிலோ கடலைப் பிண்ணாக்கை 200 லிட்டர் கொள்ளளவுள்ள டிரம்மில் போட்டு பிண்ணாக்கு மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்ற வேண்டும். அடுத்த நாள் பார்த்தால் முழு தண்ணீரையும் பிண்ணாக்கு உறிஞ்சியிருக்கும். அதில் பாதியளவு எடுத்து இன்னொரு டிரம்மில் போட்டு இரண்டு டிரம்களிலும் தண்ணீரை நிரப்பி... காலையும், மாலையும் கலக்கி விட வேண்டும். நான்காவது நாள், இக்கரைசலுடன் சமபங்கு தண்ணீர் சேர்த்துக் கரைத்தால் பிண்ணாக்குக் கரைசல் தயார்.

இஞ்சி+பூண்டுக் கரைசல்!

இஞ்சி 10 கிலோ, பூண்டு 10 கிலோ, பச்சைமிளகாய் 10 கிலோ ஆகியவற்றை உரலில் இடித்து 25 லிட்டர் பசுமாட்டுச் சிறுநீரில் இரண்டு நாட்கள் முழுவதும் ஊற வைத்து... மூன்றாவது நாள் வடிகட்டினால் இஞ்சி+பூண்டு கரைசல் தயார்.  10 லிட்டர் தண்ணீருக்கு 300 மில்லி கரைசல் என்ற விகிதத்தில் கலந்து பயன்படுத்த வேண்டும்.பழங்கள் ஐந்து நாட்கள் வரை கெடாது.
இ.கார்த்திகேயன், படங்கள்: எல்.ராஜேந்திரன்

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites