இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

• எங்கும் உயர்ந்தே நில்! எதிலும் தமிழே சொல்!! வறுமை கண்டு நொருங்காதே! வாய்ப்பு இருக்கு மறக்காதே!! விதையென விழு! விருட்சமென எழு!! உறுதியான உள்ளம் ! உலகை வெல்லும் !! ;

விவசாயத்தை தொழிலாக்கு! இந்தியாவை வளமாக்கு!! உயர்ந்தவனாய் இரு! பிறரை உயர்த்துபவனாய் இரு!! சிந்தனையில் சீற்றம்! வாழ்க்கையில் ஏற்றம்!! மூச்சு உள்ளவரை முன்னேறு ! முடியும் என்பவர்க்கே வரலாறு !! ;

.

• முடியும் என்றே முன்னேறு! வெற்றி என்பதே உன்பேரு!! செயலில் மேதையாகு! பலருக்கு பாதையாகு!! வல்லமையை வெளிப்படுத்து! வாழும் உலகை வசப்படுத்து!! முடியும் என்பதுதான் முன்னேற்றத்தின் முதல்படி !!

.

• பண்பில் உயர்ந்து நில் ! பணியில் உயர்ந்து செல் !! அனுபவத்தைப் பாடமாக்கு ஆனந்தத்தைப் பதவியாக்கு தடைகளைத் தகர்த்திடு சாதிப்புகளை நிகழ்த்திடு !!

.

Wednesday, November 22, 2017

பாசிப்பயறு

ன்றாடம் சமையலில் பயன்படுத்தப்படும் பருப்பு வகைகளுக்கு எப்போதும் சந்தையில் தேவை இருந்து கொண்டே இருக்கும். குறிப்பாக, பாசிப்பருப்பு, துவரம்பருப்பு ஆகியவற்றுக்கு தேவை மிக அதிகம். இதை மனதில் வைத்து, மானாவாரி மற்றும் இறவையில் தொடர்ந்து மகசூல் கிடைக்கும் வகையில், நிலத்தை இரண்டாகப் பிரித்து பாசிப்பயறு சாகுபடியில் தொடர் வருமானம் பெற்று வருகிறார், விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை தாலூகா, கத்தாளம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பாக்கியராஜ்.
‘‘நாங்க பரம்பரையாவே விவசாயக் குடும்பம்தான். இந்தப்பகுதி முழுக்கவே வானம் பாத்த பூமிதான். பத்தாவது வரைக்கும்தான் படிச்சேன். அதுக்கு மேல படிக்க வைக்க வீட்டுல வசதியில்லை. அறிவொளி இயக்கத்துல மூணு வருஷம் வீதி நாடகக்குழுப் பயிற்சியாளரா இருந்தேன். அடுத்து, மாநில வயது வந்தோர் கல்வித் திட்டத்துல ஊக்குநரா வேலை பார்த்தேன். 2001-ம் வருஷம் சமூகப்பணிகளையெல்லாம் விட்டுட்டு, முழுமையா விவசாயத்துல இறங்கினேன். அக்கம்பக்கத்து விவசாயிகளைப் பார்த்து நானும் ரசாயன விவசாயம்தான் பண்ணினேன். ஆனா, ஒண்ணும் விளைஞ்சபாடில்லை.
அப்போதான், ஒரு நண்பர், ‘நாடகத்துல ராகம் போட்டு பாட்டு பாடுற மாதிரி கிடையாது, விவசாயம். முதல்ல ரசாயன உரம் போடுறதை நிறுத்தி, இயற்கை முறையில விவசாயம் செய்’னு ஆலோசனை சொன்னார். அவரே, கோவிலான்குளம் வேளாண் ஆராய்ச்சி மையத்துல நடந்த பயிற்சிக்கும் அழைச்சிக்கிட்டுப் போனார். அங்க இயற்கை வேளாண்மை பத்தி விளக்கமா தெரிஞ்சுக்கிட்டு இயற்கை  விவசாயத்தை ஆரம்பிச்சேன். இப்போ, ஒன்பது வருஷமா முழுக்க இயற்கை முறையிலதான் விவசாயம் செய்றேன்” என்று முன்கதை சொன்ன பாக்கியராஜ் தொடர்ந்தார்.
பட்டத்துக்கேற்ற பயிர்!
“மழை கிடைக்கலைனு வருத்தப்பட்டுட்டு இருக்காம, மழை கிடைக்கிற சமயத்துல அந்தப் பட்டத்துக்குரிய பயிரை விதைச்சா நல்ல மகசூல் எடுத்திட முடியும். அதாவது ஆடி மாசம் மழை கிடைக்காம, புரட்டாசி மாசம் மழை கிடைச்சா... புரட்டாசிப் பட்டத்துக்கான பயிரைத்தான் விதைக்கணும். அந்த வகையில போன அஞ்சு வருஷமா பாசிப்பயறு எனக்கு நல்லா ஒத்தாசை செய்யுது. அதை, மானாவாரி, இறவைனு ரெண்டுலயும் சாகுபடி செய்யுறேன். இப்போ, இறவை சாகுபடியை முடிச்சுட்டு, புரட்டாசிப் பட்டத்துல மானாவாரியா பாசிப்பயறைப் போடுறதுக்கு நிலத்தைத் தயார் பண்ணிட்டு இருக்கேன்” என்ற பாக்கியராஜ் வருமானம் குறித்துச் சொன்னார்.
ஆண்டுக்கு ரூ. 2.5 லட்சம் லாபம்!
‘‘மானாவாரியா சாகுபடி செய்தா சராசரியா ஏக்கருக்கு 480 கிலோ அளவுக்கு மகசூல் கிடைக்கும். இறவையில ஏக்கருக்கு சராசரியா 600 கிலோ வரை மகசூல் கிடைக்கும். இந்தக் கணக்குல மூணு ஏக்கர்ல ஒரு முறை மானாவாரி விவசாயம், ஒரு முறை இறவை விவசாயம்னு வருஷத்துக்கு ரெண்டு போகம்னு வெச்சுக்கிட்டா... வருஷத்துக்கு சராசரியா 3 ஆயிரத்து 200 கிலோ (32 குவிண்டால்) அளவுக்கு மகசூல் கிடைக்குது. நான் விதையாத்தான் விற்பனை செய்றேன். வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்துல ஒரு கிலோ பாசிப்பயறு விதைக்கு 107 ரூபாய் கொடுக்கிறாங்க. அந்தக் கணக்குல பார்த்தா, 3 லட்சத்து 42 ஆயிரத்து 400 ரூபாய் கிடைக்கும். இதுல எல்லா செலவும் போக வருஷத்துக்கு ரெண்டே முக்கால் லட்ச ரூபாய்க்கு மேல லாபம் கிடைக்கும்.
விதைக்காக இல்லாம கடையில விற்பனை செய்தா, குவிண்டால் 7 ஆயிரம் ரூபாய்னு (கிலோ 70 ரூபாய்) எடுத்துக்குவாங்க. இதன் மூலமா 2 லட்சத்தி 24 ஆயிரம் ரூபாய்தான் கொடுப்பாங்க. ஆனா, விதைக்காக விற்பனை செய்யுறப்ப ஒரு லட்ச ரூபாய் கூடுதலாவே லாபம் கிடைக்கும்’’ என்று தெம்பாகச் சொன்னார் பாக்கியராஜ்!
தொடர்புக்கு,
பாக்கியராஜ்,
செல்போன்: 96269-74894
விளைச்சலுக்கு விதைநேர்த்தி!
சோறு வடித்த கஞ்சி ஒரு லிட்டரில் 20 கிராம் பாஸ்போ-பாக்டீரியா, 20 கிராம் ரைசோபியம் ஆகியவற்றைக் கலந்து அதில், 6 கிலோ பாசிப்பயறு விதைகளைப் போட்டு கிளறி, ஓலைப்பாய் அல்லது சணல் சாக்கில் (பிளாஸ்டிக் தாள் தவிர்க்கவும்) 2 மணி நேரம் உலர்த்தி விதைத்தால், வளர்ச்சி நன்றாக இருக்கும். பூச்சி, நோய் அதிகமாகத் தாக்காது.   
ஊடுபயிராக அவுரி !
பாசிப்பயறு விதைத்த 30-ம் நாள், இரண்டாவது முறை களை எடுப்பதற்கு முன்பாக... ஏக்கருக்கு 3 கிலோ அளவில் அவுரி விதையைத் தூவ வேண்டும். பிறகு, களை எடுத்தால் அவுரி விதைகள் நன்றாக மண்ணில் புதைந்து விடும். 82-ம் நாளில், பாசிப்பயறில் மூன்றாவது பறிப்பு முடிந்ததும் செடிகளை அறுக்காமல், அப்படியே காய விட்டுவிட வேண்டும். 10 நாட்களில் பாசிப்பயறுச் செடிகள் காய்ந்ததும், அவுரி வேகமாக வளர ஆரம்பிக்கும்.
தை-மாசி மாதத்தில் அவுரியை அறுவடை செய்யலாம். ஏக்கருக்கு 2 குவிண்டால் அவுரி நெத்து கிடைக்கும். ஒரு குவிண்டால் 4 ஆயிரம் ரூபாய் வரை விலை போகும். இந்த விஷயத்தை நம்மிடம் பகிர்ந்த பாக்கியராஜ், ‘‘இந்த வருமானம் சாகுபடிச் செலவுக்கு கைக்கொடுக்குது” என்றார், உற்சாகமாக.
புழுத்தாக்குதலைத் தடுக்க வரப்பு!
பாக்கியராஜ் சொல்லும் அனுபவ ஆலோசனைகள் பாசிப்பயறு விதைக்கும்போதே ஆமணக்கு, சூரியகாந்தி, தட்டைப்பயறு ஆகியவற்றில் ஏதாவது ஒன்றையோ அல்லது அனைத்தையும் கலந்தோ வரப்பைச் சுற்றிலும் விதைக்க வேண்டும். பயிரைத்தாக்கும் பூச்சிகள் இந்தப் பயிர்களிலேயே அமர்ந்துகொள்ளும். இதனால், பாசிப்பயறைப் பூச்சிகள் தாக்காது.
நம்மிடமே விதைவங்கி!
விதைகளைக் கடைகளில் வாங்குவதை விட நமது பயிரில் இருந்தே விதைகளை எடுத்து வைப்பது நல்லது. இரண்டாவது முறை பறிக்கும் காய்களிலிருந்து விதைகளைத் தனியாகப் பிரித்து வைத்துக் கொள்ளலாம்.

மூன்று முறை அறுவடை செய்தால், கூடுதல் மகசூல்!
பாக்கியராஜ் சொல்லிக் கொடுக்கும் பாசிப்பயறு சாகுபடிப் பாடம் இங்கே...   
மானாவாரிக்கு புரட்டாசிப் பட்டம்!
‘‘மானாவாரி சாகுபடிக்கு புரட்டாசிப் பட்டம் ஏற்றது. சித்திரை மாதம் சட்டிக் கலப்பையால் கோடை உழவு செய்து நிலத்தைக் காய விட வேண்டும். வைகாசி மாதம் செம்மறி ஆட்டுக்கிடை போடவேண்டும் (ஏக்கருக்கு 500 ஆடுகளைக் கொண்டு 3 நாட்கள் கிடை போடவேண்டும்). அடுத்த மூன்று நாட்களுக்குள் கொக்கிக் கலப்பை மூலம் ஓர் உழவு செய்து நிலத்தைக் காய விட வேண்டும். ஆனி மாதத்தில் 2 டிராக்டர் குப்பையை (தொழுவுரம்) நிலத்தில் பரப்பி, கொக்கிக் கலப்பை மூலம் உழவு செய்ய வேண்டும்.
எடுப்பு உழவு அவசியம்!
ஆடி மாதத்தில் ஒரு மழை கிடைத்ததும், கொக்கிக் கலப்பையால் ‘எடுப்பு உழவு’ செய்து நிலத்தைக் காயவிட வேண்டும். ஆடி மாத எடுப்பு உழவடிப்பது தடுப்பூசி போடுவது போன்றது. இதனால் மண்ணுக்குள் புதைந்துள்ள களை விதைகள் முளைக்கும். ஆவணி-புரட்டாசியில் மழை பெய்ததும் விதைப்பதற்கு முன் உழவடிக்கும்போது முளைத்துள்ள களைச்செடிகள் தூரோடு அகற்றப்பட்டு விடும். புரட்டாசியில் மழை பெய்ததும், அடுத்த 3 நாட்களுக்குள் மீண்டும் ஒரு முறை உழுது விட்டு, விதைநேர்த்தி செய்த விதைகளைத் தூவி, அவற்றை மண் மூடுமாறு கொக்கிக் கலப்பை மூலம் உழவு செய்ய வேண்டும். ஏக்கருக்கு 6 கிலோ விதைகள் தேவைப்படும். விதைத்த 3 முதல் 5 நாளுக்குள் முளைப்புத் தெரியும். 15 முதல் 20 நாட்களுக்குள் களை எடுக்க வேண்டும். 30 முதல் 33 நாட்களுக்குள் இரண்டாவது முறை களை எடுக்க வேண்டும். 35 மற்றும் 45-ம் நாளில் 120 லிட்டர் தண்ணீருக்கு 500 மில்லி பஞ்சகவ்யா எனக் கலந்து தெளிக்க வேண்டும். இப்படித் தெளிப்பதால் பூச்சி, நோய்கள் தாக்குவதில்லை.
50-ம் நாளில் பிஞ்சு தெரியும். 55 முதல் 60-ம்  நாட்களில் காய்கள் காய்த்து நிற்கும். 65-ம் நாளில் பறித்து விட வேண்டும். 70 நாளுக்கு மேல் போய்விடக் கூடாது. பொதுவாக, பல விவசாயிகள் 65-ம் நாளில் ஒரே அறுவடையாக, செடியைத் தூரோடு அறுத்து பிறகு நெத்தைப் பறித்து உடைத்து பயறைப் பிரித்தெடுப்பார்கள். ஆனால், செடியில் இருந்து நெத்தை மட்டும் பிடுங்கி எடுத்தால், மூன்று முறை அறுவடை செய்யலாம். 65, 72 மற்றும் 80 ஆகிய நாட்களில் அறுவடை செய்யலாம். இப்படி மூன்று முறை காய்களைப் பறிக்கும்போது கூடுதல் மகசூல் கிடைக்கும். மானாவாரியில் ஏக்கருக்கு சராசரியாக 480 கிலோ வரை மகசூல் கிடைக்கும்.
இறவையில் 600 கிலோ மகசூல்!
இறவையில் பாசிப்பயறை விதைக்க மாசிப் பட்டம் ஏற்றது. தேர்வு செய்த ஒரு ஏக்கர் நிலத்தில் தை மாதத்தில் சட்டிக்கலப்பை மூலம் ஓர் உழவு செய்து ஐந்து நாட்கள் ஆற விட்டு...  6-ம் நாள் செம்மறி ஆட்டுக்கிடை போட வேண்டும். பிறகு, 3 நாட்கள் கழித்து, ஓர் உழவு செய்ய வேண்டும். அதிலிருந்து 2 நாட்கள் கழித்து இரண்டு முறை உழவு செய்து நிலத்தைக் காய விட வேண்டும். மாசி மாதம் 8 அடி நீளம்,5 அடி அகலத்தில் பாத்திகள் அமைத்து, வாய்க்கால் எடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு, விதைநேர்த்தி செய்த விதைகளை... ஒரு பாத்திக்கு, குறைந்தது 40 முதல் 50 செடிகள் வருமாறு விதைக்க வேண்டும். ஏக்கருக்கு 4 கிலோ விதை போதுமானது.
விதைத்த 3 முதல் 5 நாட்களில் முளைப்புத் தெரியும். வாரம் ஒரு முறை தண்ணீர் பாய்ச்சினால் போதும். 20 மற்றும் 30-ம் நாட்களில் களை எடுக்க வேண்டும். 35 மற்றும் 45-ம் நாட்களில் 120 லிட்டர் தண்ணீருக்கு 500 மில்லி பஞ்சகவ்யா எனக் கலந்து தெளிக்க வேண்டும். குறுகிய கால பயிர் என்பதால், பஞ்சகவ்யாவைக் குறைந்த அளவுக்குக் கலந்து தெளித்தாலே போதுமானது. 60-ம் நாளுக்கு மேல் காய்கள் அறுவடைக்கு வரும். ஒரே பறிப்பாக பறிக்காமல் 65, 72, 80-ம் நாட்களில் பறித்தால் கூடுதல் மகசூல் கிடைக்கும். இறவையில், ஏக்கருக்கு சராசரியாக 600 கிலோ வரை மகசூல் கிடைக்கும்.

முலாம்பழம்

யற்கை விவசாயிகளாக இருந்தாலும் சரி… ரசாயன உரம் பயன்படுத்தும் விவசாயிகளாக இருந்தாலும் சரி… பெரும்பாலானவர்கள் தேடித்தேடி விதைப்பது, குறுகிய காலத்தில் வருமானம் கொடுக்கும் பயிர்களைத்தான். அந்த வகையில், முலாம்பழம் குறுகிய காலத்தில் நல்ல வருமானம் கொடுக்கும் பயிர்களில் ஒன்றாக இருக்கிறது. இதை அனுபவப்பூர்வமாக உணர்ந்து, தொடர்ந்து சாகுபடி செய்து வருகிறார்கள், திருவண்ணாமலை மாவட்டம், தானிப்பாடி சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள். இவர்களுடன் தாங்களும் தற்போது இணைந்துள்ளனர் தானிப்பாடியைச் சேர்ந்த சென்னன்-குமாரத்தி தம்பதி.
பச்சைப் போர்வையின் மேல் நெருப்புக்கோழி முட்டை இட்டதைப் போல தோற்றம் கொடுத்த முலாம் பழத்தோட்டத்தில் தம்பதியைச் சந்தித்தோம்.
“எங்க குடும்பத்துக்குச் சொந்தமா நாலரை ஏக்கர் நிலம் இருந்துச்சு. அதுல 10 வருஷம் விவசாயம் பார்த்தேன். ஆனா, போதுமான வருமானம் இல்ல. அதனால, 19 வருஷத்துக்கு முன்ன சவுதிக்கு வேலைக்குப் போனேன். அதுல கிடைச்ச வருமானத்துல இடம் வாங்கி வீடு கட்டினேன். பிள்ளைகளைப் படிக்க வைச்சேன். பாகப்பிரிவினை செய்த பிறகு, எனக்கு ரெண்டு ஏக்கர் நிலம் கிடைச்சுது. அதோட கூடுதலா ரெண்டரை ஏக்கர் நிலம் வாங்கினதுல இப்போ நாலரை ஏக்கர் நிலம் இருக்கு. முன்னாடி ரெண்டு வருஷத்துக்கு ஒரு முறை வந்திட்டுப் போவேன். இப்போ பத்து மாசமா இங்கேயே தங்கிட்டேன்” என்ற சென்னனைத் தொடர்ந்தார், குமாரத்தி.
“அவர் வெளிநாட்டுக்குப் போன பிறகு, நிலத்தை குத்தகைக்கு விட்டுட்டு, நான் களை வெட்டுற வேலைக்குப் போனேன். நாலு பிள்ளைங்களும் காலேஜ் போன பிறகு, நிலத்துல விவசாயம் பார்க்க வந்தேன். கிணத்துல இருக்குற தண்ணியைப் பொறுத்து, நெல், நிலக்கடலை, மரவள்ளினு விவசாயம் பார்த்தாலும், பெருசா சொல்லிக்கிடுற மாதிரி வருமானம் இல்லை. பொண்ணோட படிப்புக்காக வாங்கின கல்விக்கடனோட வட்டி அதிகமான சமயத்துல, அடைக்க வழி தேடிட்டு இருந்தப்போதான்… முலாம்பழத்தை சாகுபடி செய்யச் சொன்னார் எங்க சொந்தக்காரர். முதல் தடவைங்கிறதால, ஒரு ஏக்கர் 20 சென்ட் நிலத்துல சாகுபடி செய்திருக்கேன். மீதி நிலத்துல வழக்கமான நிலக்கடலை சாகுபடி செய்திருக்கேன். குறைவான தண்ணீர்ல நல்ல முறையில வெளைஞ்சு வந்திருக்கு. முதல் அறுவடை முடிச்சுட்டோம். எதிர்பார்த்ததைவிட நல்ல வருமானம் கிடைச்சிட்டிருக்கு” என்று குமாரத்தி நிறுத்த, மீண்டும் தொடர்ந்தார் சென்னன்.
“நாங்க ரசாயன உரங்களைப் பயன்படுத்தித்தான் விவசாயம் செய்றோம். சாறு உறிஞ்சும் பூச்சிகளை விரட்டறதுக்கு பூச்சிக்கொல்லிகளையும் பயன்படுத்துறோம். இன்னமும் இயற்கை விவசாயத்துக்கு மாற முயற்சி செய்யல. முலாம்பழத்துல 75 நாள்ல வருமானம் பாத்துட முடியும்.60 நாள்ல முதல் அறுவடை செய்யலாம். ஒரு ஏக்கர் 20 சென்ட் நிலத்துல இருந்து முதல் அறுவடையில 6 டன் பழங்கள் கிடைச்சது. இன்னும் ரெண்டு அறுவடை மூலமா 5 டன் அளவுக்கு பழங்கள் கிடைக்கும்னு எதிர்பார்க்கிறோம். ஒரு கிலோ பழம் 8 ரூபாயில இருந்து 12 ரூபாய் வரை விலை போகுது. ஆறு டன் பழங்களை விற்பனை செய்ததுல 55 ஆயிரத்து 800 ரூபாய் கிடைச்சிருக்கு. மீதி 5 டன் பழத்துக்கு சராசரியா 9 ரூபாய் வீதம் விலை கிடைச்சா 45 ஆயிரம் ரூபாய் கிடைக்கும். கிட்டத்தட்ட மொத்தம் ஒரு லட்ச ரூபாய் கிடைச்சுடும். மொத்த செலவு 30 ஆயிரம் ரூபாய் போக, கிட்டத்தட்ட 70 ஆயிரம் ரூபாய் வரை லாபம் கிடைக்கும். நானும் என் மனைவியும் மட்டும்தான் வேலை செஞ்சிருக்கோம். ரெண்டு மாசத்துல இது நல்ல லாபம்தான்” என்றார்.
இப்பகுதியில் பெரும்பாலானோர் ரசாயன முறையில்தான் முலாம்பழத்தை சாகுபடி செய்து வருகிறார்கள். இந்நிலையில் முலாம்பழத்தை இயற்கை முறையில் சாகுபடி செய்து வருகிறார், தானிப்பாடியில் இருந்து நான்கு கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் குறவன் ஓடை கிராமத்தைச் சேர்ந்த மணி.
இவர், 10.3.2013 தேதியிட்ட ‘பசுமை விகடன்’ இதழில் வெளியான, ‘அசத்துது அனந்தனூர் சன்னம் மிரட்டுது முத்தின சன்னம்..!’ என்ற செய்தியின் மூலம் ஏற்கெனவே நம் வாசகர்களுக்கு அறிமுகமானவர்தான்.
பாதை மாற்றிய பசுமை விகடன்!
“எனக்குச் சொந்தமா 6 ஏக்கர் நிலம் இருக்கு. அதுல சம்பா பட்டத்துல மட்டும் இயற்கை முறையில பாரம்பரிய நெல் ரகங்களை சாகுபடி செய்றேன். நெல் அறுவடைக்கு பிறகு 2 ஏக்கர்ல நிலக்கடலை, ஒரு ஏக்கர்ல கம்பு, 50 சென்ட் நிலத்துல மாட்டுத்தீவனம், 50 சென்ட் நிலத்துல கேழ்வரகு, 2 ஏக்கர்ல முலாம்பழம்னு இயற்கை விவசாய முறையில சாகுபடி செய்றேன். ஆரம்பத்துல ரசாயன உரங்களைப் பயன்படுத்தி விவசாயம் பார்த்த சமயத்துல வருமானத்துக்காக பல விவசாய முறைகளை மேற்கொண்டேன்.
நெல், கடலைல வருமானம் குறைவா இருந்ததால தர்பூசணி சாகுபடி செய்தேன். அதுல போதுமான அளவுக்கு வருமானம் கிடைச்சது. அது மூணு மாசப் பயிர். அதை அறுவடை செஞ்ச பிறகு என்ன செய்யலாம்னு யோசிச்சப்பதான்… விதை கம்பெனி சேல்ஸ் ஆபீஸர் ஒருத்தர், முலாம்பழ சாகுபடி பத்திச் சொன்னார். உடனே, ரெண்டு ஏக்கர்ல விதைச்சேன். அறுவடை செய்யுற பதம் தெரியாம போனதால நஷ்டம் ஆகிடுச்சு. வியாபாரிங்ககிட்ட கேட்டுத் தெரிஞ்சுக்கிட்டு சரியான முறையில சாகுபடி செய்ய ஆரம்பிச்ச பிறகு, நல்ல லாபம் கிடைக்க ஆரம்பித்தது.
அடுத்து மூடாக்குக்காக ‘மல்சிங் ஷீட்’ போட்டு தர்பூசணி, முலாம்பழம், சாம்பல் பூசணினு மூணையும் தொடர்ச்சியா சாகுபடி செய்தேன். அதுல வருமானத்துக்கு பஞ்சம் இல்லாம இருந்துச்சு. அந்த சமயத்துலதான் ‘பசுமை விகடன்’ நடத்தின ஜீரோ பட்ஜெட் பயிற்சில கலந்துக்கிட்டேன். அப்போ மல்சிங் ஷீட் போடக்கூடாதுங்கிறதை உணர்ந்து… அதை தவிர்த்து இயற்கை முறையில முலாம்பழத்தை சாகுபடி செய்தேன். ஆனா, சரியான விளைச்சல் இல்லை. அதனால, மூணு வருஷமா மூலாம்பழம் சாகுபடி செய்யல. போன வருஷத்துல இருந்து திரும்பவும் சாகுபடி செய்ய ஆரம்பிச்சிருக்கேன். இந்த வருஷம் அறுவடை முடிஞ்சுது.
இப்ப ரெண்டு ஏக்கர்ல சாகுபடி செய்யப் போறேன்” என்ற மணி, இயற்கை முறையில் முலாம்பழத்தை சாகுபடி செய்யும் விதத்தைச் சொல்ல ஆரம்பித்தார். அது பாடமாக இங்கே…
மாசிப்பட்டம் ஏற்றது!
‘முலாம்பழத்தின் வயது 65 முதல் 75 நாட்கள். முலாம்பழச் செடிக்கு, செடிப்பருவத்தில் பனி தேவை. விளையும்போது பனி இருக்கக்கூடாது. அதனால், இதற்கு மாசிப் பட்டம் ஏற்றது. பங்குனிப் பட்டத்திலும் சாகுபடி செய்யலாம். இப்பட்டத்தில், 55 நாட்களிலே மகசூல் கிடைத்தாலும் மகசூல் குறைவாகத்தான் இருக்கும்.
செம்மண், மணல் கலந்த செம்மண், மணல் சாரியான மண் வகைகள் ஏற்றவை. சாகுபடி நிலத்தை கொக்கிக்கலப்பை மூலம் 4 சால் உழவு செய்து மண்ணை மிருதுவாக்க வேண்டும். பிறகு, ஏக்கருக்கு 2 டிப்பர் ஆட்டு எரு அல்லது மாட்டு எருவைக் கொட்டி களைத்து விட வேண்டும். கடைசியாக, ரோட்டோவேட்டர் மூலம் உழுது சமப்படுத்திக் கொண்டு வசதிக்கேற்ப பாசன வசதிகளைச் செய்து கொள்ள வேண்டும் (இவர் சொட்டு நீர் அமைத்திருக்கிறார்).
வரிசைக்கு வரிசை இரண்டு அடி, செடிக்குச்செடி அரை அடி இடைவெளியில் கையால் பள்ளம் பறித்து விதையை நடவு செய்ய வேண்டும் (ஏக்கருக்கு 200 முதல் 250 கிராம் விதை தேவைப்படும்). தமிழகத்தில் ஆரஞ்சு நிற சதைப்பகுதி உள்ள பழங்களுக்குத்தான் நல்ல விலை கிடைக்கிறது. அதனால் தரமான விதை உற்பத்தியாளர்களிடம் இந்த ரக விதையை வாங்கி நடவு செய்தால் பங்கமில்லாமல் வருமானம் பார்க்கலாம். நடவு செய்த 6-ம் நாளில் விதைகள் முளைத்து, இரண்டு இலைகள் வெளியில் தெரிய ஆரம்பிக்கும்.
ஊட்டத்துக்கு ஜீவாமிர்தம்… பூச்சிகளுக்குப் பூச்சிவிரட்டி!
பூச்சித்தாக்குதல் 8-ம் நாளில் இருந்து தென்பட ஆரம்பிக்கும். இந்த சமயத்தில், ஒரு டேங்க் தண்ணீருக்கு (10 லிட்டர்) 100 மில்லி மீன் அமிலம், 100 மில்லி மூலிகைப் பூச்சிவிரட்டி ஆகியவற்றைக் கலந்து ஏக்கருக்கு 5 டேங்குகள் வீதம் தெளிக்க வேண்டும். 10-ம் நாள் முதல் வாரம் ஒரு முறை 200 லிட்டர் ஜீவாமிர்தக் கரைசலை பாசன நீரில் கலந்து விட வேண்டும். தலா 10 கிலோ வீதம் கடலைப் பிண்ணாக்கு, வேப்பம் பிண்ணாக்கு, பருத்திப் பிண்ணாக்கு, சூரியகாந்தி அல்லது தேங்காய்ப் பிண்ணாக்கு ஆகியவற்றை 200 லிட்டர் தண்ணீரில் நான்கு நாட்கள் ஊற வைத்துக்கொள்ள வேண்டும். 15-ம் நாளில் இந்தக் கரைசலை ஒவ்வொரு செடிக்கும் 100 மில்லி வீதம் ஊற்ற வேண்டும். 15 முதல் 20-ம் நாளுக்குள்… தலா ஒரு கிலோ இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் எடுத்து இடித்து, 10 லிட்டர் தண்ணீரில் 12 மணி நேரம் ஊற வைத்து, ஒரு டேங்க் தண்ணீருக்கு ஒரு லிட்டர் வீதம் கலந்து தெளிக்க வேண்டும். இது பூச்சித்தாக்குதலைக் கட்டுப்படுத்தும். 20-ம் நாளில்களை எடுக்க வேண்டும்.
25-ம் நாளில் கொடி படர ஆரம்பித்து, 30-ம் நாளில் பூவெடுக்க ஆரம்பிக்கும். அந்த சமயத்தில் ஒரு டேங்க் தண்ணீருக்கு ஒரு லிட்டர் வீதம் அரப்பு-மோர் கரைசல் கலந்து தெளிக்க வேண்டும். ஏக்கருக்கு ஏழு டேங்குகள் தேவைப்படும்.
தலா ஒரு கிலோ இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாயுடன், 100 கிராம் லவங்கம் பட்டையை அரைத்து கலந்து நான்கு லிட்டர் தண்ணீரில் ஊற  வைத்துக் கொள்ள வேண்டும். அரை கிலோ புகையிலையை 2 லிட்டர் தண்ணீரில் ஒருநாள் முழுவதும் ஊறவைத்துக் கொள்ள வேண்டும். இந்த இரண்டு கரைசல்களையும் ஒன்றாகக் கலந்து டேங்குக்கு ஒரு லிட்டர் வீதம் 40-ம் நாளில் தெளிக்க வேண்டும். 45 முதல் 55 நாட்களில் காய்கள் ஒரு கிலோ முதல் ரெண்டு கிலோ அளவுக்கு வந்துவிடும். 60-ம் நாளில் முதல் அறுவடை செய்யலாம். அடுத்து ஒரு வார இடைவெளியில் இரண்டு அறுவடைகள் செய்யலாம்.
ஏக்கருக்கு 9 டன்!
சாகுபடிப் பாடம் முடித்த மணி, “ஏக்கருக்கு சராசரியா 9 டன் அளவுக்கு மகசூல் கிடைக்கும். கிலோ சராசரியா 9 ரூபாய் வீதம் விற்பனை செய்தா… 81 ஆயிரம் ரூபாய் கிடைக்கும். இதில் செலவு 15 ஆயிரம் ரூபாய் போக, 66 ஆயிரம் ரூபாய் லாபம் கிடைக்கும்” என்று சந்தோஷம் பொங்கச் சொன்னார்.
தொடர்புக்கு,
சென்னன், செல்போன்: 09944773757 , மணி, செல்போன்: 09597577326
நன்றி: பசுமை விகடன்

ஒருங்கிணைந்த விவசாயம்… இரட்டிப்பு லாபம்!

உழவர்களின் லாபத்தை இரட்டிப்பாக்குவதுதான் இப்போதைய தேவை’ என்று பலரும் சொல்லி வருகிறார்கள். அதற்கு இயற்கை விவசாயம் முதற்கொண்டு பல வகை விவசாய முறைகளைப் பின்பற்றிவருகிறார்கள்.
அந்த வகையில், இப்போது பல இடங்களிலும் பரவலாகப் பின்பற்றப்பட்டுவருவது… ஒருங்கிணைந்த விவசாயம்!
உலகம் முழுக்க உள்ள பெரும்பாலான மக்களின் முக்கிய உணவு, அரிசி. ஆனால் ஆசியா, ஆப்பிரிக்கா, லத்தீன் அமெரிக்கா போன்ற சில பகுதிகளில் மட்டுமே அரிசி விளைவிக்கப்படுகிறது. அதிலும், ஆசியாவில் மட்டும் சுமார் 90 சதவீத அரிசி பயிரிடப்படுகிறது. எனினும், பல கோடிக்கணக்கான மக்கள் ஒவ்வொரு நாள் இரவும் பட்டினியுடன் படுக்கச் செல்கிறார்கள். அவர்களில் பலர் குழந்தைகள்.
இதற்கிடையில், ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண் அமைப்பும் உலக சுகாதார நிறுவனமும் தரும் தகவல்கள் மேலும் அதிர்ச்சியை அளிக்கின்றன. அதாவது, நமது மக்களுக்குத் தாவரங்களின் மூலம் கிடைக்க வேண்டிய புரதம் கிடைத்தாலும், அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய விலங்குப் புரதம் கிடைக்கவில்லை. அதனால், பலர் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் அவதிப்படுகின்றனர் என்கின்றன அந்த அமைப்புகள்!
இந்நிலையில் உழவர்களும், அவர்கள் மூலமாக இதர மக்களும் பயன்படும் வகையில், ‘நெல் – மீன் – கோழி’ எனும் ஒருங்கிணைந்த வேளாண் முறையை சிதம்பரத்தில் உள்ள அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் உழவியல் துறை, முதன்முறையாக அறிமுகப்படுத்தி இருக்கிறது. இந்த விவசாய முறையின் மூலம், இயற்கை முறையில் நெற்பயிர் விளைவிக்கப்படுவதுடன், பற்றாக்குறையாக உள்ள விலங்குப் புரதத்தை ஈடுசெய்ய மீன், கோழி வளர்ப்பும் கைகொடுக்கின்றன. மேலும், பொருளாதார ரீதியாகவும் இந்த ஒருங்கிணைந்த விவசாய முறை மிகவும் லாபகரமானது.
5 சென்ட் போதும்
இந்த விவசாய முறை குறித்து அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி, மேம்பாட்டுத் துறையின் இயக்குநர், ஆர்.எம்.கதிரேசன் பகிர்ந்துகொண்டார்:
“1994-95-ம் ஆண்டு காலகட்டத்தில், நான் உழவியல் துறையில் பேராசிரியராகப் பணியாற்றிக்கொண்டிருந்தேன். அப்போது முதுநிலை மாணவர்களுடன் இணைந்து நெல் வயல்களில் மீன்களைப் பயன்படுத்தி களைகளைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக ஓர் ஆய்வை மேற்கொண்டோம். அது வெற்றிகரமாக அமைந்தது.
பிறகு, 96-ம் ஆண்டிலிருந்து பல்கலைக்கழக நிலத்திலேயே ‘நெல் – மீன் – முயல்’, ‘நெல் – மீன் – அசோலா’, ‘நெல் – மீன் – கோழி’ எனப் பல வகை ஒருங்கிணைப்புகளின் மூலம் நெற் பயிரை விளைவிக்கும் ஆய்வுகளை மேற்கொண்டோம். அதில், ‘நெல் – மீன் – கோழி’ ஒருங்கிணைப்பு, நல்ல லாபத்தைத் தந்தது. இதர ஒருங்கிணைப்புகளில் சிற்சில குறைகள் இருந்தன.
இந்த ஒருங்கிணைந்த வேளாண்மையை மேற்கொள்ள, ஒரு ஏக்கர் நிலத்தில் 5 சென்ட் மட்டும் போதும். நிலத்தின் மொத்தப் பரப்பளவில் 10 சதவீதத்துக்கு மேல் போகாதபடி, வயல் ஓரத்தில் ஒரு மீட்டர் ஆழம், ஒரு மீட்டர் அகலத்தில் சிறிய பள்ளம் ஒன்றை ஏற்படுத்த வேண்டும்.
Courtesy: Hindu
வயல் முழுக்கத் தேங்கியிருக்கும் நீரின் வெப்பநிலையில் மாற்றம் இருந்துகொண்டே இருக்கும். ஆனால், வயலின் ஓரத்தில் உள்ள இந்தப் பள்ளத்தில் இருக்கும் நீரின் வெப்பநிலையில் எந்த மாற்றமும் இருக்காது. இந்தப் பள்ளத்தில் ரோகு, மிர்கால், கட்லா, கெண்டை, புல் கெண்டை ஆகிய மீன் இனங்களை விடவேண்டும். சுமார் 8 முதல் 10 செ.மீ. நீளமுள்ள மீன் குஞ்சுகளை விட வேண்டும். ஒவ்வொரு இனத்திலும் 20 குஞ்சுகள் வீதமாக 100 குஞ்சுகளை விடவேண்டும். இந்த மீன்கள் காலையும் மாலையும் வயலில் நீந்திக்கொண்டு, களைகளை உணவாக உட்கொள்ளும். மதிய நேரத்தில் வயலில் உள்ள நீரின் வெப்பம் அதிகரிக்கும். எனவே, அப்போது அவை வயலின் ஓரத்தில் உள்ள பள்ளத்துக்கு வந்துவிடும்.
மதிப்புக்கேற்ற விலை
கோழிகளுக்கு 20 முதல் 24 சதுர அடிக்கு ஒரு கூண்டு அமைக்க வேண்டும். 6×4 என்ற அளவில், அந்தக் கூண்டு இருக்க வேண்டும். நிலத்தில் 4 அடி ஆழத்துக்கு கான்கிரீட் தூண்களைப் புதைத்து, நிலத்திலிருந்து 4 அடி உயரத்துக்கு அந்தத் தூணை நட வேண்டும்.

இந்தக் கூண்டின் அடிப்பகுதி, கம்பி வலையால் செய்யப்பட்டிருக்க வேண்டும். பிறந்து ஒரு நாளேயான கோழிக் குஞ்சுகளை வாங்கி, அவற்றை ஒரு அறையில் வைத்து 12 நாட்களுக்கு வளர்க்க வேண்டும். பின்பு ஒரு கூண்டுக்கு 20 கோழிகள் வீதம் வளர்க்க வேண்டும். இந்தக் கோழிகளின் கழிவு, மீனுக்கு உணவாவதுடன் வயலுக்கும் நல்ல உரமாக அமைகிறது. பொதுவாக, கோழிகளின் கழிவில் அமிலத்தன்மை அதிகமாக இருப்பதால், ஒரு கூண்டுக்கு 20 கோழிகளுக்கு மேல் வளர்க்கக் கூடாது. ஒரு ஏக்கருக்கு 20 கூண்டுகள் வரை வைக்கலாம்.
Courtesy: Hindu
குறுவை சாகுபடியின்போது இரண்டு முறையும், சம்பா சாகுபடியின்போது மூன்று முறையும் என இந்த மீன்களையும் கோழிகளையும் வளர்க்க முடியும். மீன்கள் 15 முதல் 20 கிலோ வரையும், 45 நாட்களில் வளர்ந்துவிடும் கோழிகள் சுமார் 2 கிலோவரை இருக்கும். இவற்றைச் சந்தை மதிப்புக்கேற்ற விலையிலேயே விற்கலாம்” என்கிறார் கதிரேசன்.
சார்க் நாடுகளுக்கு வழிகாட்டி
அனைத்து வகையான நெல் ரகங்களுக்கும் இந்த வேளாண் முறை பொருந்தும். ஊட்டச்சத்து, பொருளாதார லாபம், வேலைவாய்ப்பின்மையைப் போக்கும் இந்த வேளாண் முறைக்கு தேசிய, சர்வதேச அளவில் விருதுகளும் அங்கீகாரங்களும் கிடைத்துள்ளன. இந்த விவசாய முறையை நேபாளம் உள்ளிட்ட சார்க் நாடுகள் பின்பற்றப்படவுள்ளன. அதன் தொடக்க விழா கடந்த 8-ம் தேதி அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. தற்போது, கடலூர் மாவட்டத்தின் ஐந்து கிராமங்களில் இந்த விவசாய முறை நடைமுறையில் உள்ளது.
நன்றி: ஹிந்து

மாடித்தோட்டம் ‘கிட்’

வீடுகள் தோறும் மாடித்தோட்டம் அமைக்க தோட்டக்கலைத்துறை 200 ரூபாய் மானியம் வழங்குகிறது. பயனாளிகள் 322 ரூபாய் மட்டும் செலுத்தி மாடித்தோட்டம் ‘கிட்’ பெறலாம்.
Courtesy: Dinamalar
மாடித்தோட்டம் அமைக்க விரும்புவோர் தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனரை அணுகி பெயர்களை முன்பதிவு செய்தல் அவசியம்.
இதற்காக ஆதார் கார்டு, ரேஷன் கார்டு நகல் கொடுக்க வேண்டும்.
மாடித்தோட்டம் ‘கிட்’ ஒன்றில் கத்தரி, வெண்டை, கீரை விதை பாக்கெட்டுகள், இயற்கை அடியுரமாக 200 கிராம் அசோஸ்பைரில்லம், 200 கிராம் பாஸ்போபாக்டீரியம், 100 கிராம் டிரிக்கோட்ரம்மா விரிடி, 100 கிராம் சூடோமோனாஸ், 100 மி.லி., அசார்டிராக்டின், ஆறு எண்ணிக்கையில் பாலிதீன் உறைகள், ஒரு கிலோ 18:18:18 யூரியா, சூப்பர்பாஸ்பேட், இரண்டு கிலோ தென்னை நார் கழிவு, தொழில்நுட்ப கையேடு உள்ளிட்டவை வழங்கப்படும். மாடித்தோட்டம் குறித்த செயல்விளக்கம், விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்படும்.
தோட்டக்கலைத்துறை வட்டார உதவி இயக்குனர் அலுவலகத்தில் முன்பதிவு செய்தல் அவசியம்.
தொடர்புக்கு: 09842007125 .

– முனைவர் பா.இளங்கோவன், உதவி இயக்குனர் தோட்டக்கலைத்துறை, உடுமலை.

மாடித் தோட்டத் தாவரங்கள்: பாதுகாக்க சில குறிப்புகள்!

நல்ல நோக்குடன் மாடித் தோட்டம் போடத் தொடங்கிய பலர், எதிர்கொள்ளும் பிரச்சினைகளால் தோல்வியைச் சந்தித்துக் கைவிடுவதுண்டு. அவர்கள் மீண்டும் தோட்டத்தைத் தொடர்வதற்கான யோசனைகள்:
Courtesy: Hindu
Courtesy: Hindu
1. செடிகளுக்குச் சாணியைக் கரைத்து ஊற்ற வேண்டும் என்பதில் சந்தேகமில்லை. ஒரு கை சாணிக்கு 20 லிட்டர் தண்ணீர் சேர்த்து ஊற்ற வேண்டும். கெட்டியாக ஊற்றினால் எறும்புகள் வரும்.
2. அடுத்த பிரச்சினை வெள்ளை அசுவினிப் பூச்சி. இதற்கு அடிப்படையான காரணம் அதிக நீர் / அதிக வறட்சியுடன் சத்தற்ற மண். நோய் எதிர்க்கும் ஆற்றல் குறைவும் காரணமாக இருக்கலாம்.
இலைகளை நுனிக் கிளையுடன் கவாத்து செய்து, பின் வேருக்கு மண்புழு உரத்துடன் பஞ்சகவ்யம், குணபரசம், மோர் போன்றவற்றில் ஒன்றை வழங்கி, மேலே பூச்சிவிரட்டி தெளிக்கவும். புதுத் தளிர் வரும். ஒரு வாரத்தில் பூக்கும். முயற்சி பலிக்காவிட்டால் செடியைப் பிடுங்கிவிட்டு, நன்கு மண் காய்ந்த பின் வேறு விதை போடவும்.
சாதாரணமாக இந்தப் பிரச்சினை கத்திரி – வெண்டைக்கு ஏற்படும். கவாத்து செய்தால் புதுத் தளிர் வரும். முற்றிய பெரு இலைகளையும், பழுத்த இலைகளையும் தினம் நீக்கினால் நோய் வராது.
3. புதுப் பயிரிடுதலை ஜூலை – ஆகஸ்டில் தொடங்கவும். சித்திரை – வைகாசிப் பட்டத்தில் காராமணி, அகத்தி, முருங்கை தவிர, வேறு பயிர்கள் வராது. எனினும் மாடியில் பசுமை வலை அடித்தால் தாவரங்களை ஓரளவு காப்பாற்றலாம். முட்டைக்கோஸ், முள்ளங்கி, காரட், காலிஃபிளவர், லெட்யூஸ் போன்ற ஆங்கிலக் காய்கறிகள் பசுமை வலைக்குள் சிறப்பாக வளரும்; தக்காளியும் சிறப்பாக வளரும். நாட்டுக் காய்கறிகளான கத்திரி, வெண்டை, அவரை, புடல், கீரைகளுக்கு நேரடியான சூரிய ஒளி ஜூலை – மார்ச் வரை கிட்டும். ஏப்ரல் – ஜூனில் மரப் பயிர்களும் காராமணியும் கோவையும் வளரும்.
4. கொடிப் பயிர்களில் கோவை நீண்ட நாட்களுக்குப் பலன் தரும். புடலை, பீர்க்கை, அவரைப் போன்றவற்றுக்கு 3, 4 மாதங்களுக்குப் பின் புதிய விதை நட வேண்டும். கோவை 10 ஆண்டுகள் வரை பலன் தரும். இயற்கை வழியில் 15 ஆண்டுகள்கூடப் பலன் தரும். அவ்வப்போது காய்ந்த பாகங்களைக் கட்டாயம் கவாத்து செய்ய வேண்டும். இது களைபோல் மண்டும் கசப்புக் கோவை அல்ல; அதைச் சமைக்க முடியாது. கறிக்கோவை வெள்ளரிக்காய்போல் ருசிக்கும்; பச்சையாகவே உண்ணலாம்.
5. பயிர்களுக்கு நீர் ஊற்றும்போது மண் காய்ந்த பின் ஊற்ற வேண்டும். நீர் வடிகிறதா என்று கவனிக்கவும். ஈரம் காப்பது அவசியம். ரசப்பதத்தில் – பஞ்சகவ்யம், சாணிக் கரைசல் ஆகியவற்றைத் தினமும் வேரில் ஊற்றலாம். வசதிப்படி வாரம் மூன்று நாளைக்குக்கூட ஊற்றலாம். களை- பசுமைச் செடி- இலை ஊறலில் நீர் கலந்து, அவ்வப்போது ஊற்றலாம்.
6. செடிகள் வளர்க்க அரிசி / சிமெண்ட் பாலித்தீன் பைகள் ஆறு மாதங்கள் தாங்கும். பின்னர், பழைய சட்டை, புடவை, வேட்டி ஆகியவற்றால் சுற்றிக் கட்டிவிடலாம். பிளாஸ்டிக்கும் வெயிலில் பதமாகி உடைந்து நொறுங்கும். அதன் மீது துணியால் போர்த்தலாம். இரண்டு ஆண்டுவரை தாங்கும். பின்னர் பயிர் அழிந்தவுடன் புதிய பையில் மண்ணைப் போடலாம். இயற்கை உரம் இடுவதால் மண்ணில் சத்து இருக்கும். புல் வேர் மண்டினால் அப்படியே தொட்டியைக் கவிழ்த்து வேர்களை நீக்கிவிட்டு, அதே மண்ணுடன் மண்புழு உரத்தை இட்டுப் புதிய பயிர் எழுப்ப வேண்டும்.
7. கூடியவரை நாம் வளர்க்கும் பயிர்களுக்கு நோய்களைத் தாங்கி வாழக்கூடிய பண்பை ஊட்ட வேண்டும்.
நன்றி: மாடித் தோட்டம் 77 + வயதினிலே,ஆர்.எஸ். நாராயணன், யுனீக் மீடியா இன்டக்ரேட்டர்ஸ்,
தொடர்புக்கு: 04428250519

சர்க்கரைக்கு கடைக்குப் போக வேண்டாம்… வீட்டிலே வளரும் சீனித்துளசி

மாடித்தோட்டத்தில் விதவிதமான பழங்களையும், காய்கறிகளையும் வளர்ப்பது வழக்கம்தான். கொஞ்சம் வித்தியாசமாக, தனது வீட்டில் 100 சீனித்துளசி செடிகளை வளர்த்து வருகிறார், சென்னை, முகப்பேரைச் சேர்ந்த ஜஸ்வந்த் சிங்.
இவர் முன்பிருந்தே சந்தன மரங்கள் வளர்ப்பது முதல் பயோகேஸ் தயாரிப்பது வரை வீட்டிலே செய்துவந்தவர். வீட்டில் செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்தவரை சந்தித்தோம். காத்திருக்கச் சொல்லிவிட்டு சிறிது நேரம் கழித்து தேநீருடன் வந்தவர், நம்மிடம் பருக கொடுத்தார். சுவை நாட்டுச் சர்க்கரையை ஒத்திருந்தது.
சீனித்துளசியுடன் ஜஸ்வந்த் சிங்
“ஸ்டிவியா (Stevia) என்று சொல்லப்படும் ‘இனிப்புத் துளசி அல்லது சீனித்துளசி’ மூலிகைப் பயிர் வகையைச் சேர்ந்தது. இத்துளசியின் தாயகம் பராகுவே நாடு.  ஜப்பான், கொரியா, சீனா மற்றும் கனடாவிலும் அதிகமாகப் பயிரிடப்படுகிறது. ஏற்றுமதி விஷயத்தின் சீனாதான் சீனித்துளசியின் கில்லி. இந்தியாவில், மகாராஷ்டிரா மாநிலத்தில் இப்பயிர் பரவலாக வளர்க்கப்பட்டு வருகிறது. மனிதன் எடுத்துக் கொள்ளும் உணவுகளில் முக்கியமானது இனிப்புதான். அதிகமாக வெள்ளைச் சர்க்கரை வாங்க ஆரம்பித்த பின்னர்தான் சர்க்கரை நோய் மனிதனுக்கு வர ஆரம்பித்தது. ஆனால், கரும்பிலிருந்து பிரித்தெடுக்கப்படும் நாட்டுச் சர்க்கரையை விட, வெள்ளைச் சர்க்கரை மனிதனை அதிக நோய்களுக்கு ஆளாக்குகிறது. நாட்டுச் சர்க்கரை வாங்க முடியாதவர்கள் சீனித்துளசி செடிகளை வளர்க்கலாம். நான்கு பேர் அருந்த நான்கு இலைகளை சர்க்கரைக்குப் பதிலாக பயன்படுத்தலாம்.
இதனால் வெள்ளைச் சர்க்கரை வாங்கவும் தேவையில்லை, நோய்வாய்ப்பு ஏற்படும் அபாயத்திலிருந்தும் தப்பித்துக் கொள்ளலாம். இந்தச் செடிகளை எளிதாக வீட்டில் வளர்க்கலாம். மற்ற செடிகளைப் போல இதற்கும் கவனிப்பு இருந்தாலே போதுமானது” என்றவர், சீனித்துளசி வளர்ப்பைப் பற்றி சொல்ல ஆரம்பித்தார்.
’’சீனித்துளசியை நாற்றுப் பண்ணைகளிலும், நர்சரிகளிலும் வாங்கி வளர்க்கலாம். மாடித்தோட்ட தொட்டியிலோ அல்லது வீட்டின் தரைதளத்தில் உள்ள இடங்களிலோ வளர்க்கலாம். காலை, மாலை என இருவேளைகளிலும் தண்ணீர் ஊற்றவேண்டும். மண் ஈரமாகும் அளவுக்கு மட்டும் தண்ணீர் ஊற்றலாம்.
அதிக தண்ணீர் தேவையில்லை. 40 டிகிரி வெப்பம் வரை உள்ள பகுதிகளிலும் சீனித்துளசி செடியை வளர்க்க முடியும். செடிகளில் இலைகள் சற்று திடமாக வளர ஆரம்பிக்கும். அப்போதிருந்தே பறித்துப் பயன்படுத்தலாம். தேநீர் தவிர, வீட்டில் தயாரிக்கும் தின்பண்டங்கள் வரை இச்செடியின் இலைகளைப் பயன்படுத்தலாம். செயற்கையாகச் சேர்க்கப்படும் ரசாயன இனிப்பு வகைகளுக்கும் இது மாற்றாக இருக்கும்.
இச்செடியின் இலைகளைப் பறித்து காயவைத்து பொடியாக்கி சேமித்தும் பயன்படுத்தலாம். இதற்கு மருத்துவர்களிடமும் நல்ல வரவேற்பு உண்டு. முதலில் இதுபற்றி மருத்துவர்களிடம் விசாரித்தப் பிறகுதான் சீனித்துளசி செடியை வளர்க்க ஆரம்பித்தேன்.
சீனித்துளசி
கரும்பின் சர்க்கரையை விட 20 சதவிகிதத்துக்கும் மேல், இனிப்புச் சுவை அதிகமாக உள்ளது. மேலும், இதில் வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஏ போன்ற சத்துக்களும் குறிப்பிட்ட அளவு உள்ளன. சீனித்துளசி ரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்கச் செய்வதில்லை. இதனால் சர்க்கரை நோயாளிகளும் இனிப்பு துளசியின் பொடியை தேநீர், குளிர்பானங்கள் ஆகியவற்றில் கலந்து பயன்படுத்தலாம். இதனால் பக்க விளைவுகள் ஏற்பட வாய்ப்பு இல்லை. துளசி என்றாலே மகத்துவம் வாய்ந்தது என்றுதான் பொருள். ஆனால், இந்தச் செடிகளை கவனமாகப் பராமரிக்க வேண்டும்.  2 அடி முதல் 3 அடி உயரம் வளரக்கூடிய இத்துளசி, இயற்கை உரம் மற்றும் மக்கிய தொழு உரத்தில் மட்டுமே வளரும். இது மிட்டாய் இலை, இனிப்பு இலை மற்றும் சர்க்கரை இலை எனப் பல பெயர்களால் அழைக்கப்பட்டு வருகிறது” என்றார்.
நன்றி: பசுமை விகடன்

கருவேப்பிலையில் சாதிக்கும் பெண்

நாம் கறிவேப்பிலையை என்ன செய்வோம்? சமையலில் சுவைக்காகவும் மணத்துக்காகவும் பயன்படுத்துவோம். ஆனால் அதையே தன் பொருளாதாரத்துக்கான ஆதாரமாக்கி ஜெயித்துக் காட்டியிருக்கிறார் ஜோதிபதி. கோயம்புத்தூரைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ராணுவ அலுவலக அதிகாரியான இவர், இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட கறிவேப்பிலையை மதிப்புக்கூட்டு பொருளாக்கி அமேஸான், எக்ஸ்போர்ட் இந்தியா, இந்தியா மார்ட் ஆகிய ஆன்லைன் நிறுவனங்கள் மூலம் விற்பனை செய்து வருகிறார் .
கோவை, மேட்டுப்பாளையம் அருகே உள்ள காரமடை ஆசிரியர் காலனியில் உள்ள தனது வீட்டில் அதிகாலை வேளையிலேயே கறிவேப்பிலைப் பொடியை கவர்களில் நிரப்பும் பணியில் ஈடுபட்டிருந்தார் ஜோதிபதி. உதகை வெல்லிங்டன் ராணுவ பயிற்சி மையத்தில் அதிகாரி நிலையில் பணியாற்றிய இவர், கடந்த 2011-ம் ஆண்டில் ஓய்வுபெற்றார். மூன்று பெண் குழந்தைகளும் திருமணமாகி செட்டில் ஆகி விட்டனர். கணவர் தேவராஜ்பதி, தேயிலை எஸ்டேட்டில் மேலாளராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர். தற்போது, முதியோர் பராமரிப்பு இல்லத்தில் மேலாளராகப் பணியாற்றிவருகிறார்.
Courtesy: Hindu
Courtesy: Hindu
ஆர்வத்துக்கு ஓய்வில்லை
“ஓய்வூதியமே போதும் என்றாலும் ஓய்வுக்குப் பிறகு என்னால் வீட்டில் சும்மா இருக்க முடியவில்லை. வீட்டில் இருந்தபடியே ஏதாவது தொழில் ஆரம்பிக்கலாம் என முடிவெடுத்தேன். எந்தத் தொழிலைத் தேர்வு செய்யலாம் என்ற என் குழப்பத்துக்கு, கோவை வேளாண் பல்கலைக்கழகம் நடத்திய பயிற்சி முகாம்கள் தெளிவு தந்தன” என்று சொல்லும் ஜோதிபதி, இயற்கை வேளாண் பொருட்கள் மூலமாக மதிப்புக்கூட்டு பொருள் தயாரித்து விற்கலாம் என முடிவு செய்தார். மதிப்புக்கூட்டுப் பொருட்களுக்குத் தேவையான மூலப் பொருட்கள் வீட்டுக்குப் பக்கத்திலேயே கிடைத்தால், தொழிலை நேர்த்தியாகக் கொண்டு செல்ல முடியும் என்பதும் அவருக்குப் புரிந்தது.
“எங்கள் ஊரில் கறிவேப்பிலை விளைகிறது. ஆனால், செயற்கை உர கலப்பினால் விளைவிக்கப்பட்ட கறிவேப்பிலைதான் அதிகமாகக் கிடைத்தது. இங்கிருந்து ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் இயற்கை வேளாண்மை மூலமாக ஒரு விவசாயி விளைவித்து வருவது தெரிய வந்தது. அவரைச் சந்தித்து ஒப்பந்தம் போட்டுக்கொண்டேன்” என்று தான் தொழில் தொடங்கிய கதையைச் சொன்னார் ஜோதிபதி.
இதற்காக இரண்டு பெண் ஊழியர்களைப் பணிக்கு அமர்த்தியிருக்கிறார். வீட்டிலேயே உலரவைக்கப்படும் கறிவேப்பிலையை அரைத்து தொக்கு, இட்லிப் பொடி ஆகியவற்றைச் செய்கிறார்கள். தவிர கறிவேப்பிலையை பாக்கெட்டுகளில் அடைத்து, கேட்கிறவர்களுக்கு பார்சல் மூலமாக அனுப்பிவைக்கிறார்கள்.
ஆன்லைன் வர்த்தகம்
“இயற்கை முறையில் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களின் அருமை குறித்து விற்பனையாளர்களுக்குத் தெரிவதில்லை. சந்தைப்படுத்துவதற்குப் பல கடைகளையும், வியாபாரிகளையும் அணுகியபோது மிக மோசமான அனுபவமே ஏற்பட்டது. சிலர் அடிமாட்டு விலைக்குக் கேட்டார்கள்” என்று சொல்லும் ஜோதிபதி அதற்குப் பிறகுதான் ஆன்லைனில் விற்பனை செய்வது என்ற முடிவுக்கு வந்தார்.
“ஆன்லைன் மூலமாகச் சந்தைப்படுத்தும் நிறுவனங்களுக்கு எனது தயாரிப்பு குறித்து விவரங்களை அனுப்பிவைத்து, கட்டணம் செலுத்திப் பதிவுதாரர் ஆனேன். தற்போது, அந்த நிறுவனங்கள் ஆன்லைன் மூலமாக ஆர்டர்களை எனக்குத் தருகிறார்கள். வெளிமாநிலங்களில் இருந்தும் ஆர்டர்கள் வருகின்றன. அவற்றுக்குப் பார்சல் மூலமாக அனுப்பி வைத்துவிடுவேன்” என்கிகிர் ஜோதிபதி.
லண்டனில் உள்ள தன் உறவினர் மூலமாக அங்கு சந்தைப்படுத்துவது தொடர்பான செயல்பாடுகளைத் தற்போது மேற்கொண்டு வருகிறார். கோவை வேளாண் பல்கலைக்கழக வேளாண் வணிக மேம்பாட்டு பிரிவும் சந்தைப்படுத்துதல் தொடர்பான வழிமுறைகளை அவருக்கு வழங்கி வருகிறது.
ஆன்லைனில் மட்டுமே சந்தைப்படுத்துவதால், உள்ளூர் மக்களிடம் தராமான பொருளை கொண்டு சேர்க்க முடியவில்லேயே என்ற வருத்தம் இவருக்கு உள்ளது.
“அதையும் ஒருநாள் சாதிப்பேன் என்ற நம்பிக்கை இருக்கிறது” என்கிறார் ஜோதிபதி. நம்பிக்கை நிச்சயம் மெய்ப்படும்.
நன்றி: ஹிந்து

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites