இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

• எங்கும் உயர்ந்தே நில்! எதிலும் தமிழே சொல்!! வறுமை கண்டு நொருங்காதே! வாய்ப்பு இருக்கு மறக்காதே!! விதையென விழு! விருட்சமென எழு!! உறுதியான உள்ளம் ! உலகை வெல்லும் !! ;

விவசாயத்தை தொழிலாக்கு! இந்தியாவை வளமாக்கு!! உயர்ந்தவனாய் இரு! பிறரை உயர்த்துபவனாய் இரு!! சிந்தனையில் சீற்றம்! வாழ்க்கையில் ஏற்றம்!! மூச்சு உள்ளவரை முன்னேறு ! முடியும் என்பவர்க்கே வரலாறு !! ;

.

• முடியும் என்றே முன்னேறு! வெற்றி என்பதே உன்பேரு!! செயலில் மேதையாகு! பலருக்கு பாதையாகு!! வல்லமையை வெளிப்படுத்து! வாழும் உலகை வசப்படுத்து!! முடியும் என்பதுதான் முன்னேற்றத்தின் முதல்படி !!

.

• பண்பில் உயர்ந்து நில் ! பணியில் உயர்ந்து செல் !! அனுபவத்தைப் பாடமாக்கு ஆனந்தத்தைப் பதவியாக்கு தடைகளைத் தகர்த்திடு சாதிப்புகளை நிகழ்த்திடு !!

.

Saturday, October 22, 2016

வெந்தயக்கீரை

குறுகிய காலத்தில் அதிக லாபம் தரும் வெந்தயக்கீரை சாகுபடி குறித்து விளக்கும், புதுவையில் செயல்பட்டு வரும், சுற்றுச்சூழல் மற்றும் வேளாண் அபிவிருத்தி மையத்தின் இயக்குனர் கணேஷ் கூறுகிறார்:
நிலத்தை நன்றாக உழுது, தொழு உரமிட்டு, மீண்டும் ஒருமுறை உழுது கொள்ள வேண்டும்.பின், சீரான இடைவெளியில் மேட்டுப் பாத்தி அமைத்து, அதன்மீது விதைகளை விதைக்க வேண்டும்.
விதைப்பதற்கு முன் வெந்தய விதைகளை, அசொஸ்பைரில்லம் மற்றும் ட்ரைகோடர்மாவிரிடி கொண்டு விதை நேர்த்தி செய்ய வேண்டும்.
ஏக்கருக்கு, 4 முதல், 5 கிலோ வெந்தய விதைகள் தேவைப்படும். வடிகால் வசதியுடைய கரிசல் அல்லது அங்ககச்சத்து நிறைந்த, மணற்பாங்கான நிலத்தில் வெந்தயம் பயிரிடலாம்.
அக்., முதல், டிச., மாதங்களில் வெந்தய விதைகளை பயிரிடலாம். மானாவாரியாகவும், வெந்தயத்தை பயிரிடலாம்.25 முதல், 28 டிகிரி வெப்பத்தில், இவை வளரக் கூடியவை.
விதைத்த, 10 முதல், 15 நாட்களுக்குள் வெந்தயச் செடிகள் முளைத்து விடும். 25 நாட்களில் வெந்தயச் செடியின் தழைகளை, கீரைகளாக அறுவடை செய்யலாம்.
90 முதல் 100 நாட்களுக்குள் வெந்தய விதைகளை அறுவடை செய்யலாம்.
சாம்பல் நோய் தாக்குதல் தென்பட்டால், ஹெக்டருக்கு, 25 கிலோ சல்பர் மற்றும் கந்தகப் பொடியை பயன்படுத்தலாம்.
மூன்று நாட்களுக்கு ஒருமுறை, நீர் பாய்ச்ச வேண்டும். வெந்தயம் பயிரிடப்பட்டுள்ள நிலப்பகுதியை, ஈரப் பதத்துடன் இருக்கும்படி வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம். அதற்காக, தேங்காய் நாரை செடிகளின் இடையே இடலாம்.
வெந்தயச் செடிகளின் தழைகளை, கீரைகளாக விற்பனை செய்யலாம். ஏக்கருக்கு, 4 டன் கீரைகளை அறுவடை செய்யலாம்.
நம் பகுதிகளில் வெந்தய விதைகளை அறுவடை செய்ய வேண்டுமென்றால், நிழல் வலை அமைத்து பயிர் செய்ய வேண்டும். மருத்துவ குணம் கொண்ட வெந்தயத்தை உட்கொண்டால், வயிற்று உபாதைகள் நீங்கும் என்பதோடு, சந்தையில் வெந்தயக் கீரைக்கு எப்போதுமே, ‘டிமாண்ட்’ அதிகம் உள்ளது. ஒரு கட்டு வெந்தயக் கீரையை சராசரியாக, 30 ரூபாய் வரை விற்பனை செய்வதன் மூலம், குறுகிய காலத்தில், அதிக லாபம் ஈட்டலாம்.

பொன்னாங்கண்ணிக் கீரை வளர்ப்பது எப்படி?

பொன்னாங்கண்ணிக் கீரையில் “தங்கசத்து’ உண்டு என்றும் இதனை முறைப்படி உண்டு வருபவரது உடல் தங்கம் போன்று உறுதியடையும் உண்மை என்றும் கூறுவர்.

இதனை “பொன் ஆம் காண் நீ’ “இதனை உண்ண உன் உடல் பொன்னாக காண்பாய்’ என்ற வழக்கிற்கேற்ப இந்த மூலிகையின் பெயர் அமைந்துள்ளது எனக்கூறுவர். இதனாலேயே இது கற்பக மூலிகை வகையில் சேர்க்கப்பட்டுள்ளது.
செழிப்பாய் வளர்ந்த பொன்னாங்கண்ணிக் கீரையைச் செம்மையாய் நெய்யில் வதக்கி, மிளகு, உப்பு கூட்டி, புளியை நீக்கி கற்ப முறைப்படி ஒரு மண்டலம் உட்கொள்ள, உடல் அழகுபெறும். பொன்னிறமடையும், கண் குளிர்ச்சி உண்டாகும். மேலும் நோயற்ற நீண்ட ஆயுளும் பெறலாம்.
தொட்டிகளில் பராமரிப்பு:
பொன்னாங்கண்ணி மற்றும் கரிசலாங்கண்ணி கீரைகளை வேர்ச்செடி மற்றும் நுண்தண்டு மூலம் பயிர்பெருக்கம் செய்யலாம்.
வீடுகளில் எளிய முறையில் பராமரிக்கலாம். மண் தொட்டியில் மணல், மண்புழு உரம், வேப்பம் புண்ணாக்கு இவற்றை 3:1:1 விகிதத்தில் கலந்து தொட்டியில் நிரப்பி வேர்ச்செடிகள் அல்லது நுண்தண்டுகளை நடவேண்டும். பின்னர் பூவாளி வைத்து தண்ணீர் தெளிக்க வேண்டும். இதற்காக மண்புழு கம்போஸ்ட் ஆகியவற்றை பயன்படுத்தலாம்.
ஒவ்வொரு மண் தொட்டிக்கும் 500 கிராம் அளவு மண்புழு கம்போஸ்ட் உரத்துடன், நன்மை தரும் நுண்ணுயிர் உரங்களானஅசோஸ்பைரில்லம், பாஸ்போபாக்டீரியா, மைக்கோரைசா ஆகியவற்றை தொட்டிக்கு தலா 50 கிராம் வீதம் கலந்து ஆண்டுக்கு இரண்டு முறை (6 மாத இடைவெளியில் இடவேண்டும்).
பாத்தியில் வளர்த்தல்:
மண்ணை நன்றாக வெட்டி 1 சதுர மீட்டர் பாத்திக்கு 2 கிலோ மக்கிய தொழு உரம் அல்லது மண்புழு உரத்தை இட்டு மண்ணுடன் கலக்கி இட அளவுக்கேற்ப சிறிய பாத்திகளை அமைக்கலாம்.
வேர்களை உடைய பக்கச் செடிகளை நடவுக்கு பயன்படுத்தலாம்.
பாத்தியில் ஒரு அடி இடைவெளியில் செடிகளை நடவு செய்வது நல்லது.
தொட்டியில் பராமரிக்கும்போது மூன்று மாதங்களுக்கு ஒருமுறை இயற்கை உரங்களான மண்புழு உரம் மற்றும் கம்போஸ்ட் (1 கிலோ / தொட்டிக்கு) இடவேண்டும்.
தொட்டியிலும் பாத்தியிலும் செடிகளுக்கு தகுந்த ஈரப்பதம் இருக்கும் வகையில் நீர் தெளிக்க வேண்டும்.
இலைகள் அதிகம் தழைத்து வர இயற்கை உரங்களானபஞ்சகாவ்யா (லிட்டருக்கு 3 மிலி அளவு) தெளிப்பது நல்லது.
செடிகளை நட்ட 4வது மாதத்தில் இலைகளைத் தண்டுடன் கிள்ளி அறுவடை செய்யலாம்.
தரைமட்டத்திலிருந்து 5 செ.மீ. உயரத்தில் முழுச்செடியை வெட்டி எடுக்கலாம்.
தொடர்புக்கு: 61, ஆர்.கே.ஆர்.நகர், தாராபுரம்-638 656. திருப்பூர்.
எம்.அகமது கபீர், பி.எஸ்சி  (அக்ரி), எம்.பி.ஏ.,
வேளாண்மை ஆலோசகர்,  09360748542.

கீரை சாகுபடி

  • கீரை சாகுபடியில் நிலத்தை தயார் செய்வதற்கு நல்ல கவனம் தர வேண்டும்.
  • நிலத்தை நன்கு உழுது கட்டிகள் இல்லாமல் செய்து அவைகளில் பாத்திகளை தயார் செய்து கொள்ளலாம்.
  • பாத்திகளின் அளவு நமது நிர்வாகத் திறமைக்கு ஏற்றபடி 8 சென்ட் முதல் 10 சென்ட் உள்ளபடி செய்து கொள்ளலாம்.
  • கீரை சாகுபடிக்கு அதிகம் தேவைப்படுவது நன்கு மக்கிய தொழு உரமாகும்.
  • இந்த எருவினை நன்கு மக்க வைப்பது இரண்டு காரணங்களுக்காக அவசியம் ஆகிறது.
  • எரு நன்கு மக்காமல் இருந்தால் அதில் களைச்செடிகளின் விதைகள் மடியாமல் இருந்து இதனை பாத்தியில் போடும்போது அதிக அளவில் களைச்செடிகள் முளைத்து விடும்.
  • எரு நன்கு மக்காமல் இருப்பின் அதிலுள்ள ஊட்டச்சத்துக்கள் செடிகளுக்கு உடனே கிடைக்காது.
  • மேலும் எரு நன்கு மக்கியிருக்கும்போது இதை இடும் இடத்தில் மண் இளக்கமாக இருக்கும்.அதோடு எரு இட்ட இடத்தில் வடிகால் வசதி நன்றாக இருக்கும்.
  • இயற்கை எருவினை சாகுபடி காலத்திற்கு முன்பாகவே சேகரித்து வைத்துக் கொண்டு அதன் மேல் சூரியஒளி படாமல் பாதுகாக்க வேண்டும்.
  • எருவினை சமயம் கிடைக்கும்போது கட்டி இல்லாமல் பொடி செய்து குவித்து வைத்து ஓலைகளைக் கொண்டு மூடி வைத்துக் கொள்ள வேண்டும்.
  • இதோடு வளமான செம்மண் மற்றும் மணல் இவைகளையும் சேகரித்து வைத்துக் கொண்டு பாத்தியில் சாகுபடி செய்யும் சமயம் இவைகளை எருவுடன் கலந்து இடலாம்.
  • வசதி கிடைக்கும்போது குளத்து வண்டல் மண்ணினை சேகரித்து இதனுடன் எருவினை நன்கு கலந்து சாகுபடி செய்யும் பாத்திகளுக்கு இடலாம்.
  • எருவினை பாத்தியில் போட்டால் மட்டும் போதாது.
  • அவைகளை சாகுபடி செய்யும் நிலங்களுக்கு இட்ட உடனே பாத்தியை நன்கு கொத்தி விட வேண்டும்.
  • அப்போது தான் எரு நன்கு மண்ணோடு கலந்து கீரை செடிகளை தளதளவென்று வளர வைக்கும்.
  • கீரை சாகுபடியில் முடிந்தவரையில் இயற்கை உர உதவியுடன் செய்வது நல்லது.
  • இருப்பினும் தொடர்ந்து ஒரே இடத்தில் கீரை சாகுபடி செய்து வருவதால் இயற்கை உரங்களோடு தேவையான அளவு ரசாயன உரங்களை இடலாம்.
  • கீரை சாகுபடி செய்பவர்கள் நிலத்திற்கு தேவையான இயற்கை எருக்களை தாங்களே தயார் செய்கிறார்கள்.
  • குடும்ப நபர்களே தங்கள் நிலத்தில் வேலை செய்வதால் வேலைக்கு கூலி ஆட்களை வைத்துக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.
  • சாகுபடி செய்யும் கீரை முளைக்கீரையாக இருக்கலாம். சிறு கீரையாக இருக்கலாம். இவைகளின் வயது 24 நாட்களாக இருக்குமா என்பதை முதலில் நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.
  • விதை விதைத்த 21,22,23,24 நாட்களில் கீரைச்செடிகளை வேரோடு பிடுங்கலாம்.
  • ஒரு நாளைக்கு 300 கட்டுகள் கீரை கிடைக்கும். எட்டு சென்ட் நிலத்தில் ஒரு கிலோ விதையை விதைக்கலாம்.
  • ஒரு கிலோ விதையின் விலை ரூ.1,000.
  • எட்டு சென்ட் பரப்பில் நான்கு அறுவடைகளில் ஒரு நாளைக்கு 300 கட்டுகள் வீதம் 1,200 முளைக்கீரை, அரைக்கீரை கட்டுகள் கிடைக்கும். ஒரு கட்டின் விலை ரூ.10.
  • கீரை சாகுபடியில் செய்பவர்களின் குடும்பமே நிலத்தில் பணி செய்கின்றது.
  • கீரை சாகுபடி செய்பவர்கள் பாத்திகளை அழகாகப் போட்டு மண்ணை மேடு பள்ளம் இல்லாமல் சமமாக செய்கிறார்கள்.
  • குடும்பத்தில் உள்ளவர்கள் நிலத்தில் பாடுபட்டு உழைத்து கீரை சாகுபடி செய்கின்றனர். அவர்களே கீரைகளின் வேர்களில் மண் ஒட்டாமல் தண்ணீரில் அலசி சுத்தம் செய்து கட்டுகளை நேர்த்தி செய்கிறார்கள்.
  • குடும்ப நபர்களே ஈடுபடுவதால் சாகுபடி செலவு அதிகம் இல்லை.
  • அறுவடையான கீரையை மார்க்கெட்டிற்கு எடுத்து செல்ல வேண்டிய அவசியம் இல்லை. விற்பனை பிரச்னை எதுவும் இல்லை.
  • சாகுபடி நிலத்திலும், விவசாயி வீட்டிற்கும் நுகர்வோர்கள் வந்து கீரையை விலைக்கு வாங்கி செல்கிறார்கள்.
  • ஒரு விவசாயி மூன்று மாதங்கள் முளைக்கீரை, சிறு கீரை சாகுபடி செய்தால் கீரை விதை விலை ரூ.1,000 போக ரூ.20,000 நிச்சயமாக லாபம் எடுக்கலாம்.
  • கீரை சாகுபடி செய்பவர்கள் பாடுபட்டு உழைத்து ஊட்டச்சத்துக்கள் மிகுந்த கீரையை நமக்கு அளிக்கிறார்கள்.

எலுமிச்சை சாகுபடி

ஜூலை மாதத்துக்கு ஏற்ற தோட்டப் பயிராக எலுமிச்சையை பயிரிட்டு 3-ஆம் ஆண்டு முதல் நல்ல லாபத்துடன் கூடிய சாகுபடியை விவசாயிகள் பெறலாம்
எலுமிச்சை, மக்களின் அன்றாட உணவில் பயன்படுத்தக் கூடிய ஒன்றாகும். எலுமிச்சையில் 2 ரகங்கள் உள்ளன. ஒன்று சாதாரண எலுமிச்சை, மற்றொன்று கொடி எலுமிச்சை. கொடி எலுமிச்சை மலைப் பகுதிகளில் மட்டுமே பயிரிடப்படுகிறது.

மண், தட்பவெப்ப நிலை

சுமார் 2 மீட்டர் ஆழத்துக்கு மண் கண்டம் இருக்க வேண்டும். நல்ல வடிகால் வசதியுள்ள செம்மண் கலந்துள்ள தோட்டக்கால் நிலங்களிலும், களிமண் இல்லாத மணல் பாங்கான தோட்டக்கால் நிலங்களிலும் எலுமிச்சை செழிப்பாக வளரும்.
எலுமிச்சையை ஜூலை முதல் டிசம்பர் வரை நடவு செய்ய வேண்டும். ஒரு நாற்றுக்கு 5 மீட்டர் சுற்றளவில் இடைவெளியைவிட வேண்டும். அப்படி நடும்போது ஒரு ஏக்கருக்கு 160 செடிகள் நடவு செய்யலாம். நோய்த் தடுப்பு செய்யப்பட்ட எலுமிச்சை நாற்றுகளையே நடவு செய்ய வேண்டும்.

குழி தயாரிக்கும் முறை, நீர்ப்பாசனம்

இதற்கான குழியை 75 செ.மீ. சுற்றளவு உள்ளவாறு தோண்ட வேண்டும். நன்கு வளரும் வரை நீர் பாய்ச்சுவது அவசியம். சுமார் 7 முதல் 10 நாள்களில் நீர்ப் பாய்ச்சுவது போதுமானது. வேர் பாகத்தில் நீர் தேங்குவதைத் தவிர்க்க வேண்டும்.

உரமிடுதல்

  • தழைச்சத்து 2 பாகங்களாக மார்ச், அக்டோபர் மாதங்களில் இட வேண்டும். தொழுஉரத்தை முதல் வருடத்துக்கு 10 கிலோவும், ஆண்டுதோறும் 5 கிலோவும் அதிகரிக்க வேண்டும். தழைச்சத்து முதல் வருடம் 200 கிராமில் தொடங்கி ஆண்டுக்கு 100 கிராம் அளவில் சேர்த்து இட வேண்டும். மணிச்சத்து, சாம்பல் சத்தை ஆண்டுக்கு 100 கிராம் அளவில் போட்டு, ஆண்டுதோறும் 40 கிராம் வரை கூடுதலாகச் சேர்க்க வேண்டும்.
  • உரங்களை இடும்போது மரத்தில் இருந்து 70 செ.மீ. தள்ளி மண்ணில் போட்டு கொத்தி விட வேண்டும்.
  • புதிய துளிர் வரும்போது துத்தநாக சல்பேட் 100 லிட்டர் தண்ணீருக்கு 500 கிராம் கலந்து அந்தக் கரைசலை மார்ச், ஜூலை, அக்டோபர் மாதங்களில் தெளிக்க வேண்டும்.
  • செடியை 45 செ.மீ. உயரம் வரை கிளைகளின்றி நேராக வளர விட வேண்டும். செடிக்கு 30 கிலோ பச்சை இலைகளை 3 மாதத்துக்கு ஒரு முறை இட வேண்டும்.
  • எலுமிச்சை செடியின் ஊடுபயிராக அவரை குடும்பத்தைச் சேர்ந்த பயிர்கள், காய் வகைகளை மரங்கள் காய்ப்புக்கு வரும் காலம் வரை கூடுதலாகப் பயிரிட்டு பயன்பெறலாம்.

பயிர் வளர்ச்சி ஊக்கி தெளித்தல்

காய் பிடிப்பை அதிகப்படுத்த 2.4 டி மருந்தை பி.பி.எம். 20 மில்லி லிட்டர் அளவில் தெளிக்க வேண்டும். பிஞ்சு காய்கள் உதிர்வதைத் தடுக்க 20 பி.பி.எம். 2.4 டி அல்லது என்.ஏ.ஏ. 30 பி.பி.எம். என்ற மருந்தை 30 மில்லி கிராம் அளவில் தெளிக்க வேண்டும்.

பயிர்ப் பாதுகாப்பு

எலுமிச்சை மரத்தை இலைதுளைப்பான், சாறு உறிஞ்சும் பூச்சி, பழ அந்துப் பூச்சி, குருத்து துளைப்பான், தண்டு துளைப்பான், பழ ஈ, நூற்புழு ஆகிய பூச்சிக்கள் தாக்கும். இலை துளைப்பானைக் கட்டுப்படுத்த, மானோகுரோட்டோபாஸ் 1 லிட்டர் தண்ணீருக்கு 15 மில்லி அளவில் கலந்து தெளிக்க வேண்டும். இல்லையெனில், வேப்பங்கொட்டை, பிண்ணாக்கு திரவம் ஆகியவற்றையும் பயன்படுத்தலாம்.

சாறு உறிஞ்சும் பூச்சியைக் கட்டுப்படுத்துதல்

  • வெள்ளை ஈக்கு குயினைல்பாஸ் ஒரு லிட்டர் தண்ணீருக்கு 2 மில்லி அளவு கலந்து தெளிக்க வேண்டும். கறுப்பு ஈக்கு மானோகுரோட்டோபாஸ் ஒரு லிட்டர் தண்ணீருக்கு 2.5 மில்லி கிராம் கலக்க வேண்டும்.
  • அசுவினி பூச்சிக்கு மானோகுரோட்டோபாஸ் ஒரு லிட்டர் தண்ணீருக்கு 1 மில்லி கிராம் கலந்து தெளிக்க வேண்டும். சிகப்புச் சிலந்தி பூச்சிக்கு நனையும் கந்தகத் தூளை ஒரு லிட்டர் தண்ணீருக்கு 2 கிராம் அளவில் கலந்து தெளிக்க வேண்டும்.

குருத்துத் துளைப்பான்

இப்பூச்சியைக் கட்டுப்படுத்த மானோகுரோட்டோபாஸ் மருந்தை ஒரு லிட்டருக்கு ஒரு மில்லி லிட்டர் என்ற அளவில் கலந்து தெளிக்க வேண்டும்.

பழ அந்துப் பூச்சி

பாத்திகளில் உள்ள டினோஸ்போரா களைகளை அகற்றுதல் வேண்டும். பழங்களை பாலித்தீன் பைகள் கொண்டு மூட வேண்டும்.

தண்டு துளைப்பான்

புழு தாக்கப்பட்ட கிளைகளை கவாத்து செய்ய வேண்டும். மாதத்துக்கு ஒருமுறை ஊசி மூலம் மானோகுரோட்டோபாஸ் 10 மில்லி அளவில் பூச்சி துளைத்த இடத்தில் செலுத்தி களிமண் கொண்டு மூடவும்.

நூற்புழு

நூற்புழு பாதித்த ஒரு மரத்தை கார்போபியூரான் 3ஜி 750 கிராம் அளவுக்கு இட்டு இப்பூச்சிகளைக் கட்டுப்படுத்தலாம்.

அறுவடை

மேற்கண்ட முறைப்படி பயிரிட்டால் எலுமிச்சை நடப்பட்ட 3-ஆவது வருடம் முதல் டிசம்பர் - பிப்ரவரி, ஜூன்- செப்டம்பர் ஆகிய மாதங்களில் இருந்து அறுவடை செய்யலாம். இதன்மூலம் விவசாயிகள் அதிக லாபமடைய முடியும்

ஆதாரம் : தமிழ்நாடு தோட்டக் கலைத் துறை

ஒரு ஏக்கர்... மாதம் 50 ஆயிரம்...

ஒரு ஏக்கர்... மாதம் 50 ஆயிரம்...

கிறங்க வைக்கும் கீரை சாகுபடி... பட்டையைக் கிளப்பும் 'பட்டாம்பூச்சி' பாசனம்! 
தண்ணீர் தட்டுப்பாடு, மின்சாரத் தட்டுப்பாடு, கூலியாட்கள் தட்டுப்பாடு... என விவசாயத்தில் ஏகப்பட்ட பிரச்னைகள். இத்தனையையும் தாண்டி விவசாயம் செய்ய வேண்டுமென்றால், புதிய தொழில்நுட்பங்கள் கண்டிப்பாகத் தேவை. இதை சரியாகப் புரிந்து கொண்ட விவசாயிகள் பலரும் நவீன கருவிகளைப் பயன்படுத்த ஆரம்பித்திருக்கிறார்கள். அந்த வகையில், குறைந்த நேரமே கிடைக்கும் மின்சாரத்தையும், குறைந்தளவு தண்ணீரையும் வைத்து பாசனம் செய்யவும், பல நவீன கருவிகள் மற்றும் முறைகள் உள்ளன. அதில் ஒன்றுதான், தெளிப்பு நீர்ப் பாசனம். இந்த முறையில், பாசனம் செய்து கீரை சாகுபடி செய்து வருகிறார், ஈரோடு மாவட்டம், நம்பியூர் அருகேயுள்ள கரிச்சிப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த முன்னோடி விவசாயி பொன்னுசாமி.
மனைவி சிவகாமி மற்றும் மகன் சதீஷ்குமார் ஆகியோருடன் இணைந்து, கீரை வயலில் வேலையாக இருந்த பொன்னுசாமியை சந்தித்தோம்.
'சுளீர் சுளீர்’ என சுழன்று பூமியில் இருந்து புறப்பட்ட ஊற்றுகள் போல, தண்ணீரைத் தூவிக்கொண்டு இருந்தன ஆங்காங்கே பொருத்தப்பட்டிருந்த தெளிப்பு நீர்க் கருவிகள்.
குளிப்பாட்டி தலை துவட்டிய குழந்தையின் குதூகலம் போல பளிச்சென பசுமைக் கட்டி இருந்தன கீரைச் செடிகள். அதைப் பெருமிதமாகப் பார்த்தவாறே நம்மிடம் பேசத் தொடங்கினார், பொன்னுசாமி.
''கொங்கு நாட்டின் நெற்களஞ்சியம்னு கோபிச்செட்டிபாளையம் பகுதியை சொல்லுவாங்க. அந்தளவுக்கு வளமான பகுதி. ஆனா, அதே தாலூகாவோட தெக்கு பக்கம் இருக்கற எங்க பகுதி வானம் பாத்த பூமி. ஆறு, குளம், குட்டை, வாய்க்கால் எதுவும் இங்க இல்ல. முழுக்க முழுக்க கிணத்துப் பாசனத்தை மட்டுமே நம்பித்தான் வெள்ளாமை.
ஆயிரம் அடிக்கும் மேல, போர் போட்டு கிடைக்கிற கொஞ்ச தண்ணீரை வெச்சுதான் வெவசாயம் செய்றோம்.
போதுமான தண்ணி இல்லாததால, கிடைக்கற தண்ணியை வெச்சு பிஞ்சு வெள்ளாமையா கீரையை சாகுபடி செய்றேன். ஆரம்பத்துல வாய்க்கால் பாசனம்தான் செஞ்சேன். வாய்க்கால்ல ஓடி, வயலை அடையுறதுக்குள்ள போதும் போதும்னு ஆயிடும். அந்த மாதிரி சமயத்துலதான் ஒருநாள் உழவர் சந்தையில ஒரு விவசாயி, சொட்டுநீர்ப் பாசனத்தைப் பத்தி சொன்னாரு.
வாய்க்கால் பாசனத்துல ஒரு ஏக்கர் பயிருக்கு போற தண்ணியை... சொட்டுநீர்ப் பாசனம் மூலமா மூணு ஏக்கருக்குப் பாய்ச்சிடலாம்னு அவர் சொன்னது, எனக்கு ஆச்சரியமா இருந்துச்சு. அவர்கிட்ட சொட்டுநீர்ப் பாசனம் அமைக்கிற கம்பெனியோட அட்ரசை வாங்கிட்டு, அடுத்த நாளே, மகன் சதீஷ்குமாரோட அங்க போய் விவரம் கேட்டேன்.
என்னோட வயல், கிடைக்கிற தண்ணி, வெள்ளாமை எல்லாத்தையும் கேட்டுத் தெரிஞ்சுக்கிட்டு, 'உங்களுக்கு தெளிப்புநீர்ப் பாசனம்தான் தோதா இருக்கும்’னு சொன்னாங்க. அந்தக் கருவியை அமைச்சுருக்கற சில வயல்களையும் கூட்டிக்கொண்டு போய் காட்டுனாங்க.
எங்களுக்கும் அது திருப்தியா தெரியவும், ஒரு ஏக்கர் கீரை சாகுபடிக்கு ஏத்த அளவுக்குத் தேவையான கருவிகளை வாங்கிட்டு வந்து நாங்களே போட்டுக்கிட்டோம். 15 அடி இடைவெளியில 4 அடி உயரத்துக்கு மரக்குச்சிகளை நட்டு, அதுல ரெண்டரை அடி உயரமுள்ள குழாய்களை அசையாம இருக்கற மாதிரி கட்டி விட்டோம்.
குழாய் முனையில பட்டாம்பூச்சி நாசிலைப் பொருத்தினோம். தண்ணியைப் பீச்சி அடிக்கிற இந்த நாசில் பட்டாம்பூச்சியோட றெக்கை மாதிரியே இருக்கும். அதனால, 'பட்டாம்பூச்சிப் பாசனம்'னுதான் எங்க பக்கம் சொல்லுவாங்க. இதுக்கு அரசு மானியம் கிடையாது.
15 அடி இடைவெளியில ஒரு ஏக்கர் நிலத்துல பட்டாம்பூச்சிப் பாசனம் அமைக்கறதுக்கு 30 ஆயிரம் ரூபாய் செலவாகும்'' என்று விவரங்களைத் தெளிவாகத் தந்தார் பொன்னுசாமி!
பூச்சிகளை விரட்டும் தெளிப்புநீர் !
அப்பாவைத் தொடர்ந்த மகன் சதீஷ்குமார், ''5 ஹெச்.பி. போர்வெல் மோட்டார் மூலமாதான் பாசனம் செஞ்சுட்டிருந்தோம். அதுல ஒரு ஏக்கர் பாசனம் செய்ய குறைஞ்சபட்சம் 6 மணிநேரம் ஆகும். அந்தளவுக்கு பாசனம் செய்றதுக்கு எங்க கிணத்துல தண்ணியும் இல்லை.
கரன்ட்டும் அவ்வளவு நேரம் கிடைக்காது. ஆனா, பட்டாம்பூச்சிப் பாசனம் அமைச்ச பிறகு, அந்தக் கவலையே இல்லை. செங்கீரை, புதினா, அரைக்கீரை, மணத்தக்காளி, சிறுகீரைனு அஞ்சு வகையான கீரைகளைப் பயிர் பண்றோம்.
ஒரு ஏக்கர் நிலத்தை ரெண்டா பிரிச்சு, அதுல தனித்தனியா சாகுபடி பண்றதால சுழற்சி முறையில தினமும் கீரையை அறுவடை பண்றோம். இந்தக் கீரைகள்ல சிறு கீரையைத் தவிர மத்த நாலு கீரைகளும் மறுதழைவு ரக கீரைங்க. வெட்ட வெட்ட தழைஞ்சுட்டே இருக்கும்.
அடியுரமா கோழி எரு, தொழுவுரம் ரெண்டையும் போடுறோம். மேலுரமா யூரியா கொடுப்போம். ஆனா, பூச்சிக்கொல்லிகளைத் தெளிக்கறதே இல்லை. அதுக்கும் காரணம், பட்டாம்பூச்சிப் பாசனம்தான்.
தினமும் ஒரு மணி நேரம் பூவாளித்தூவல் போல பத்தடி சுத்தளவுக்கு தண்ணி பீச்சி அடிக்கிறதால, இலைகள் எல்லாம் கழுவிவிட்ட மாதிரியாகிடுது.
இலை வழியா செடியைத் தாக்குற பச்சைப்புழு, சாறு உறிஞ்சும் பூச்சி, இலைப்பேன், முட்டைகள்னு எல்லாத்தையும் பீச்சி அடிக்குற பாசன தண்ணி கழுவிடுறதால செடிகள்ல பூச்சிகளே இருக்குறதில்லை. அதனால பளபளனு தரமான கீரை கிடைக்குது'' என்று சிலாகித்துச் சொன்னார்.
கட்டு இரண்டு ரூபாய் !
தொடர்ந்து பேசிய சதீஷ்குமார், ''கீரையை திருப்பூர் வடக்கு உழவர் சந்தையில கொண்டு போய் அப்பா வித்துட்டு வந்துடுவார். ஆரம்பத்துல டவுன் பஸ்லதான் கீரைக்கட்டுகளைக் கொண்டு போனோம்.
பட்டாம்பூச்சிப் பாசனத்துக்கு மாறுன பிறகு, அதிக மகசூல் கிடைக்குது. சுழற்சி முறையில அறுவடை பண்றதால தினமும் ஆயிரத்து முன்னூறு கட்டு வரைக்கும் மகசூல் கிடைக்குது.
இப்ப சொந்தமா மூணு சக்கர டெம்போ வாங்கி, அதுலதான் கொண்டு போறார். ஒரு சின்னக்கட்டு ரெண்டு ரூபாய்னு விக்குறோம். நேரடியா விக்கிறதால கூடுதலா லாபம்'' என்றார் குஷியான குரலில்!
தினமும் 2,600 ரூபாய் !
நிறைவாகப் பேசிய பொன்னுசாமியின் மனைவி சிவகாமி, ''இந்த தெளிப்புநீர்ப் பாசனம் மட்டும் இல்லீனா, நாங்க இந்த மண்ணை விட்டே போயிருப்போம்.
எங்க நாலு ஏக்கர் நிலத்துல மட்டும் 11 போர்வெல் போட்டோம். எல்லாமே 900 அடி ஆழம். ஆனா, எதுலயுமே சரியான தண்ணி கிடைக்கல. பத்து லட்சம் ரூபாய் கடானாளியானதுதான் மிச்சம். இருந்தாலும் நம்பிக்கையை விடாம கடைசியா தோண்டுன கிணத்துல ஓரளவு தண்ணி வந்துச்சு. 'அதை வெச்சு பெரிசா வெள்ளாமை பண்ண முடியாது. கீரை போட்டா ஜெயிக்கலாம்’னு சொந்தக்காரர் ஒருத்தர் சொன்னாரு. அதும்படியே செஞ்சோம். ஓரளவு பொழப்பு ஓடுச்சு.
அப்புறமா தெளிப்புநீருக்கு மாறின பிறகுதான், மாசத்துக்கு 75 ஆயிரம் ரூபாய்க்குக் குறையாம வருமானம் கிடைக்குது. இதுல செலவெல்லாம் போக மாசத்துக்கு சராசரியா 50 ஆயிரம் ரூபாய்க்குக் குறையாம லாபம் கிடைச்சுடும். இதை வெச்சே பழையக் கடனையும் கட்டிட்டோம். நாங்க இந்த அளவுக்கு முன்னேற முக்கியக் காரணமே பட்டாம்பூச்சிப் பாசனம்தான்'' என்று நெகிழ, கீரைச்செடி போல நம் மனதும் நனைந்தது.
தொடர்புக்கு, சதீஷ்குமார், செல்போன்: 98658-37804 
thank to Vikatan

இயற்கைக் கீரை... ஒரு ஏக்கர்... மாதம் ரூ75,000

‘நீங்க கட்டாயம் கீரை சாப்பிடணும்...’’
“தினமும் உணவுல கீரையைச் சேர்த்துக்குங்க”
-இன்றைய மருத்துவர்களின் பொதுவான ஆலோசனை இதுவாகத்தான் இருக்கிறது. வந்த நோய்களைக் குணப்படுத்தவும், வரும்முன் காக்கவும், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அன்றாட உணவில் கீரை ஒரு அத்தியாவசியத் தேவையாகி நிற்கிறது. இதனால் சமீபகாலமாக கீரைக்கான சந்தை வாய்ப்பு அதிகரித்துக்கொண்டே வருகிறது. அதிலும் இயற்கை விவசாய முறையில் விளைவிக்கப்படும் கீரைக்கு அதிக கிராக்கி ஏற்பட்டுள்ளது. இதைச் சரியாகப் புரிந்துகொண்ட இயற்கை விவசாயிகள் பலரும் கீரை சாகுபடியில் பட்டையைக் கிளப்பி வருகிறார்கள்.
கோயம்புத்தூர் மாவட்டம், மேட்டுப்பாளையம்-அன்னூர் சாலையில் இருக்கும் தேவாங்கபுரம் பகுதியைச் சேர்ந்த சிவக்குமார் என்கிற குலசேகர ராமானுஜதாஸன், ஜெயந்தி என்கிற குமுதவல்லி ராமானுஜதாஸயை தம்பதி, இயற்கைக் கீரை சாகுபடியில் அசத்தி வருகிறார்கள். தன் தகப்பனார் வெங்கிடுசாமியுடன் கீரை அறுவடையில் இருந்த சிவக்குமார், கீரைகளை கட்டுக் கட்டியபடியே பேச ஆரம்பித்தார்.
பக்தியில் இருந்து பண்ணைக்கு!
“எங்களுக்கு மொத்தம் பதினோரு ஏக்கர் நிலம் இருக்கு. போர்வெல் மூலமாதான் பாசனம். நான் பி.இ. படிச்சிருக்கேன். கோயம்புத்தூர்ல இயந்திர உதிரிபாகங்கள் உற்பத்தி செய்யுற தொழிற்சாலையை நடத்திட்டிருக்கேன். மனைவி ஜெயந்தி எம்.பி.ஏ. படிச்சிருக்காங்க. அவங்கதான் தொழிற்சாலையை நிர்வாகம் பண்றாங்க. அப்பாவுக்கு விவசாயம்தான் தொழில். ஆனா, அவருக்கு இயற்கை விவசாயத்தைப் பத்திய விழிப்பு உணர்வு இல்லை. ரசாயன உரத்தைப் போட்டுத்தான் விவசாயம் பாத்துக்கிட்டிருந்தாரு.
ஒருகட்டத்துல, எங்களுக்கு ஆன்மிகத்துல நாட்டம் ஏற்பட்டுச்சு. தொழில், ஆன்மிகம்னு வாழ்க்கைனு போனதால விவசாயத்தைப் பத்திய நினைப்பே இல்லை.
கிராமத்துல போய் அடிக்கடி அப்பாவை பார்த்துட்டு திரும்புறதோடு சரி. விவசாயம் எல்லாம் அவரோடு போகட்டும் என்கிற நினைப்புத்தான் இருந்திச்சு. ஆனா, நாங்க கலந்துக்குற ஆன்மிகக் கூட்டங்கள்ல, சொற்பொழிவாளர்கள், ஆன்மிகத்தோடு பேச்சை முடிக்காம, இயற்கை வாழ்வியல் அதற்கான உணவு முறை, ஆன்மிகத்தில் பஞ்சகவ்யாவின் பங்களிப்பு பத்தியெல்லாம் பேசுவாங்க. அந்த மாதிரி விஷயங்களைக் கேக்க ஆரம்பிச்சப்பறம்தான் இயற்கை விவசாயம் மேல ஆர்வம் ஏற்பட்டுச்சு. சரியா அந்த நேரம் ‘பசுமை விகடன்’ கிடைக்க ஆரம்பிச்சதும், எங்கள முழுநேர  விவசாயியா, அதுவும் இயற்கை விவசாயியா மாத்திக்கிட்டோம்.
இதுக்கான பெருமை மொத்தமும் பசுமை விகடனுக்குத்தான். சும்மா வாய் வார்த்தைக்காக சொல்லலை... சத்தியமான உண்மை. அஞ்சு வருஷத்துக்கு முன்ன, கோயம்புத்தூர் கொடீசியா அரங்குல நடந்த விவசாயக் கண்காட்சிக்குப் போனோம்.
அங்க, விகடன் ஸ்டாலைப் பாத்துட்டு சக்தி விகடனுக்கு சந்தா கட்டலாம்னு போனோம். அங்கதான் பசுமை விகடனை முதன்முதலா பார்த்தோம். அப்படியே பசுமை விகடனுக்கும் சந்தா கட்டுனோம். தொடர்ந்து படிக்க படிக்க, இயற்கை விவசாயத்து மேல பெரிய மரியாதை வந்துடுச்சு. 11 ஏக்கர் நிலத்தை வெச்சிருக்கிற நாம ஏன் இயற்கை விவசாயம் பண்ணக்கூடாதுனு தோணுச்சு. கிராமத்துக்குப்போய் அப்பாகிட்ட விஷயத்தைச் சொன்னோம்.
மகன் விவசாயம் பார்க்க வந்ததுல ஒரு பக்கம் மகிழ்ச்சி. அதே நேரம் ரசாயன விவசாயத்தை விடுறதுக்கு அவருக்கு மனசில்ல. யூரியா, காம்ப்ளக்ஸ், பூச்சிக்கொல்லினு பயன்படுத்தினால்தான் விளைச்சல் நல்லா வரும்னு தீர்மானமா இருந்தார். ‘மூணு ஏக்கர் நிலத்தை எனக்குக் கொடுங்க, நான் இயற்கை முறையில விவசாயம் பண்ணிக்காட்டுறேன்’னு சொல்லி தரிசா கிடந்த நிலத்தை வாங்கி, இயற்கை விவசாயம் பண்ண ஆரம்பிச்சேன்” என்று முன்கதை சொன்ன சிவக்குமார் தொடர்ந்தார்.
மனமாற்றத்தை ஏற்படுத்திய இயற்கை!
“முதல்ல நான் செஞ்ச வேலை நாட்டு மாடு வாங்கினதுதான். அடுத்து தினம் வருமானம் கொடுக்குற பயிரா இருக்கணும்னு யோசிச்சு கீரை சாகுபடி பண்ணலாம்னு முடிவு செஞ்சோம். ஆரம்பத்துல கொஞ்சம் கஷ்டமாத்தான் இருந்துச்சு. பழகப்பழக எல்லாம் சரியாயிடுச்சு. ரசாயன விவசாயம்தான் ஏற்றதுனு சொல்லிட்டிருந்த அப்பாவும், இப்ப இயற்கைப் பக்கம் சாய்ஞ்சிட்டாரு. அவரும் இப்போ பசுமை விகடனுக்கு தீவிர வாசகர். அடுத்ததா, மரவள்ளி, வாழை, பப்பாளினு மீதமுள்ள நிலத்துலயும் இயற்கை விவசாயம் பண்ணலாம்னு முடிவெடுத்திருக்கோம்” என்று சொன்ன சிவக்குமாரைத் தொடர்ந்து பேசினார், அவர் மனைவி ஜெயந்தி.
ஒன்பது வகை கீரைகள்... 400 வாடிக்கையாளர்கள்!
“ஆரம்பத்துல கீரைக்கட்டுகளை கோயம்புத்தூர், மேட்டுப்பாளையம்னு தினசரி மார்கெட்டுகள்லதான் கொண்டு போய் விற்பனை செய்தோம். அதுல கிடைக்கிற வருமானத்துல, இடைத்தரகர் கமிஷன், வேன் வாடகை, ஆள்கூலினு பாதி பணம் போயிடும். அந்த வியாபாரிகள்கிட்ட இயற்கை கீரைக்கெல்லாம் தனிமரியாதை கிடைக்கலை. அதுக்கப்பறம்தான் நாங்களே நேரடி விற்பனையில இறங்குனோம். இப்ப நாலு வருஷம் முடியப்போகுது. நானூறுக்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் எங்களுக்கு இருக்காங்க.
வெந்தயக்கீரை, முளைக்கீரை, சிறுகீரை, தண்டுக்கீரை, பாலக்கீரை, மணத்தக்காளிக் கீரை (சுக்கட்டி), அரைக்கீரை, புளிச்சக்கீரை, அகத்திக்கீரைனு 9 வகை கீரைகளை சாகுபடி பண்றோம். மூணு ஏக்கர்ல சுழற்சி முறையில கீரை சாகுபடி பண்றோம். ஒரு நாளைக்கு 200 கீரைக்கட்டுக்களை நேரடியா விற்பனை செய்றோம். எல்லா ரக கீரைக்கும் ஒரே விலைதான். எதை எடுத்தாலும் கட்டு 15 ரூபாய்னு கொடுக்கிறோம். அந்த வகையில தினமும் 3 ஆயிரம் ரூபாய் வருமானமா கிடைக்குது. மாசத்துல 25 நாட்கள் மட்டும்தான் விற்பனை செய்றோம். ஆக, மாதம் 75 ஆயிரம் ரூபாய் வருமானம் பாக்குறோம். சுழற்சி முறையில ஒரு ஏக்கருக்கான வருமானம் இது. இதுல, செலவுக்காக 25 ஆயிரம் ரூபாய் போனாலும் மாசம் 50 ஆயிரம் ரூபாய் லாபமா நிக்குது. மார்க்கெட்டுல விற்பனை செய்றதை விட நேரடி விற்பனையில ரெண்டு மடங்கு லாபம் கிடைக்குது” என்றார்.
நிறைவாகப் பேசிய சிவக்குமார், “என்னதான் தொழில்ல வருமானம் கிடைச்சாலும், விவசாயம் மூலமா கிடைக்குற வருமானம்தான் மனசை நிறைவாக்குது. வாடிக்கையாளர்களுக்கு கீரையை மட்டும் கொடுக்காம, இயற்கை வேளாண்மை, விஷமில்லா உணவு குறித்த விழிப்பு உணர்வையும் ஏற்படுத்திக்கிட்டு வர்றோம். இயற்கைக் கீரை, 48 மணி நேரத்துக்கு வாடாம இருக்கு. அதனால, இதை ஏற்றுமதி செய்ற யோசனையும் இருக்கு. அதுக்கான வாய்ப்புகளும் கிடைச்சிருக்கு” என்றார், மகிழ்ச்சியுடன்.
தொடர்புக்கு,
சிவக்குமார், 
செல்போன்: 95971-68857
இப்படித்தான் சாகுபடி செய்யணும்!
கீரை சாகுபடி பற்றி சிவக்குமார் சொன்ன விஷயங்கள் பாடமாக....
“தேர்வு செய்த ஒரு ஏக்கர் நிலத்தை உழுது தக்கைப்பூண்டு விதைத்து, பூவெடுக்கும் நேரத்தில் ரோட்டோவேட்டர் மூலம் மடக்கி உழவு செய்ய வேண்டும். பிறகு, ஒரு ஏக்கருக்கு 5 டன் தொழுவுரத்துடன், 4 டன் ஆட்டுஎருவைக் கலந்து பரவலாகக் கொட்டி உழவு செய்து பாத்திகள் அமைக்க வேண்டும்.
ஒரே முறை அறுவடையாகும் கீரைகளின் வயது அதிகபட்சம் 25 நாட்கள். தொடர் அறுவடை வகை கீரைகளின் வயது ஆறு மாதங்கள். கீரை விதைகளோடு மணல் கலந்து, பாத்திகளில் தூவி, கையால் கிளறி விட்டு, பாசனம் செய்ய வேண்டும். 6-ம் நாளில் முளைவிடும். அந்த சமயத்தில் களை எடுக்க வேண்டும். தொடர்ந்து 7 நாட்கள் இடைவெளியில் இரண்டு முறை ஜீவாமிர்தக் கரைசலை பாசன நீரில் கலந்து விடவேண்டும்.  
கீரைகளில் பூச்சிகள் தாக்க வாய்ப்புண்டு. இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் மூன்றையும் சம அளவில் எடுத்து, இடித்து ஒரு லிட்டர் மாட்டுச் சிறுநீரில் கலந்து... 10 லிட்டர் தண்ணீருக்கு 300 மில்லி கரைசல் என்ற விகிதத்தில் கலந்து, 10 நாட்களுக்கு ஒரு முறை அதிகாலை வேளைகளில் தெளித்தால் பூச்சிகள் தாக்காது. இது ஒரே முறை அறுவடையாகும் கீரைகளான வெந்தயக்கீரை, முளைக்கீரை, சிறுகீரை, தண்டுக்கீரை ஆகியவற்றுக்கு பலனளிக்கும். இந்தக் கீரைகளை 25 நாட்களுக்கு மேல் பறித்து விற்பனை செய்யலாம்.
பாலக்கீரை, மணத்தக்காளி, அரைக்கீரை, புளிச்சக்கீரை போன்றவற்றை விதைத்த 30 முதல் 35 நாட்களில் அறுவடை செய்யலாம். இதே இடைவெளியில் தொடர்ந்து ஆறுமாதங்கள் வரை அறுவடை செய்யலாம். இந்த ரக கீரைகளில் பூச்சிகளைச் சமாளிக்க... நொச்சி, பிரண்டை, சோற்றுக்கற்றாழை ஆகிய மூன்றையும் சமமாக எடுத்து அரைத்து, ஒரு லிட்டர் மாட்டுச் சிறுநீரில் கலந்து ஒரு நாள் வைத்திருந்து, 10 லிட்டர் தண்ணீருக்கு 300 மில்லி கரைசல் என்ற அளவில் கலந்து தெளிக்கலாம்.

Sunday, October 2, 2016

கல்செக்கு எண்ணெய் உற்பத்தி.

பேட்டையில் கல்செக்கு எண்ணெய் உற்பத்தி - பாரம்பரிய தொழிலை பாதுகாக்கும் குடும்பம்.


------------------------------------------------------------------------------------------------------------------------------------------------ 

திருநெல்வேலி சுத்தமல்லி பகுதியில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்புவரை மாடுகளை பயன்படுத்தி கல்செக்குகளை இயக்கி எள்ளிலிருந்து எண்ணெய் எடுக்கும் தொழில் பிரதானமாக நடைபெற்று வந்தது. இப்போது மாடுகள் மூலம் செக்குகளை இயக்கி எண்ணெய் உற்பத்தி நடைபெறுகிறது. இத்தொழிலில் தற்போது மிகவும் குறைந்த எண்ணிக்கையிலானோரே ஈடுபட்டு வருகின்றனர்.  ஆனாலும் செக்கு எண்ணெய்க்கான மகிமை குறையவில்லை. அதற்கான தேவை இன்றும் உள்ளது.


தற்போது சுத்தமல்லி பகுதியில் ஓரிருவர் மட்டுமே செக்கு எண்ணெய் தயாரித்து விற்பனை செய்யும் தொழிலில் ஈடுபட்டிருக்கிறார்கள். அவர்களில் முக்கியமானவர் சீனிவாசன் ஏழாவது தலைமுறையாக இத்தொழிலில் இவர் ஈடுபட்டிருக்கிறார். தற்போது இவர் மாடுகள் மூலம் கல்செக்கை இயக்கி எண்ணெய் உற்பத்தி செய்கிறார்.



இது குறித்து சீனிவாசன் கூறுகையில்... கல்செக்கை மாடுகள் மூலம் சிறிது சிறிதாக இயக்குவதால் எள் சூடாவதில்லை. நல்ல பக்குவத்தில் அதில் உள்ள சத்துகள் சிதையாமல் பாதுகாக்கப்படுகிறது. கல் செக்கில் நல்லெண்ணெயை எடுப்பது லேசான காரியமில்லை. சித்த மருந்து தயாரிப்பதுபோல் சிரத்தையான வேலை. என்றும் தமிழக அரசு இத்தொழிலுக்கு மானிய விலையில் மூலப்பொருட்களை கொடுத்தும், இயற்கை முறையில் உற்பத்தி செய்யும் எண்ணைக்கு  சந்தையில்  வரி விலக்கு அளிக்கவும் வேண்டும் என கூறினார்.




திருநெல்வேலி பேட்டை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பல ஆண்டுகளாக பிரசித்தி பெற்றிருந்த கல்செக்கு எண்ணெய் உற்பத்தி தொழில் வழக்கொழிந்து வருவது குறித்து இத்தொழிலில் பல தலைமுறைகளாக ஈடுபட்டுள்ளவர்கள் கவலை தெரிவிக்கிறார்கள். இத்தொழிலில் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தவும், உரிய அங்கீகாரம் அளிக்கவும் அரசுத்துறைகள் முன்வர வேண்டும் என்பதே அவர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
திருநெல்வேலி பேட்டையில் செக்கடித்தெரு பகுதியில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்புவரை மாடுகளை பயன்படுத்தி கல்செக்குகளை இயக்கி எள்ளிலிருந்து எண்ணெய் எடுக்கும் தொழில் பிரதானமாக நடைபெற்று வந்தது. இப்போது இயந்திரங்கள் மூலம் செக்குகளை இயக்கி எண்ணெய் உற்பத்தி நடைபெறுகிறது. இத்தொழிலில் தற்போது மிகவும் குறைந்த எண்ணிக்கையிலானோரே ஈடுபட்டு வருகின்றனர். இயந்திரமயமான இக்காலத்தில் பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட பல வகை எண்ணெய்கள் சந்தையில் விற்பனைக்கு வந்துள்ளன. ஆனாலும் செக்கு எண்ணெய்க்கான மகிமை குறையவில்லை. அதற்கான தேவை இன்றும் உள்ளது. ஆனால், இயற்கை முறையில் எண்ணெயை உற்பத்தி செய்யும் ஆட்கள் குறைந்துவிட்டனர்.
செக்கடித் தெரு
தற்போது பேட்டையில் செக்கடி தெரு பகுதியில் ஓரிருவர் மட்டுமே செக்கு எண்ணெய் தயாரித்து விற்பனை செய்யும் தொழிலில் ஈடுபட்டிருக்கிறார்கள். அவர்களில் முக்கியமானவர் மாடசாமி என்ற அன்பழகன் (62). ஏழாவது தலைமுறையாக இத்தொழிலில் இவர் ஈடுபட்டிருக்கிறார். தற்போது இவர் மின்மோட்டார் மூலம் கல்செக்கை இயக்கி எண்ணெய் உற்பத்தி செய்கிறார்.
கல்செக்கு எண்ணெய் உற்பத்தி குறித்து மாடசாமி கூறியதாவது: கல்செக்கை மாடுகள் மூலம் சிறிது சிறிதாக இயக்குவதால் எள் சூடாவதில்லை. நல்ல பக்குவத்தில் அதில் உள்ள சத்துகள் சிதையாமல் பாதுகாக்கப்படுகிறது. கல் செக்கில் நல்லெண்ணெயை எடுப்பது லேசான காரியமில்லை. சித்த மருந்து தயாரிப்பதுபோல் சிரத்தையான வேலை.
நூதனமான படைப்பு
கல் செக்கு ஒரு நூதனமான படைப்பு. ஒரே கல்லில் குடைக்கா ளான் வடிவில் குடைந்து அடியில் வட்ட வடிவிலான ஆரக்கற்களை அமைத்திருப்பார்கள். அந்த செக்கின் நடுவில் சுற்றிச்சுழல வாகை மரத்தில் இருந்து செய்யப்பட்ட உலக்கை பொருத்தப்படும். கொக்கி எனப்படும் பெயரில் மரத்தாலான ஒரு ஸ்டே அதை தாங்கி நிற்கும். அதன் கீழ்பகுதி நீண்ட கம்பாலான பலகையால் செக்கின் அடிவாரத்தில் இணைக்கப் பட்டிருக்கும். இந்த பலகையில் அமர்ந்துதான் மாடுகளை பொருத்தி செக்கை ஓட்டுவர்.
எட்டு எள்ளுக்கு ஒரு சொட்டு என்பார்கள். இதை எள்ளிலிருந்து கிடைக்க வேண்டிய எண்ணெயின் அளவாக கொள்ளலாம். இப்போது கல்செக்குகளை இயந்திரங்கள் மூலம் இயக்கும் தொழில்நுட்பத்தை கையாண்டு இத்தொழிலை தொடர்ந்து வருகிறோம்.
கேரளாவில் வரவேற்பு
தற்போது கல்செக்கு மூலம் தயாரிக்கப்படும் நல்லெண்ணெயை ஆயுர்வேத மருத்துவத்துக்காக கேரளத்திலிருந்து வருபவர்கள் அதிக அளவில் வாங்கிச் செல்கின் றனர்.

கல்செக்குகளில் எண்ணெய் தயாரிக்க நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் யோசனையை காதி கிராம தொழில்கள் துறை அதிகாரிகளிடம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தெரிவித் தோம். அது நடைமுறைக்கு சாத்தியமில்லை என்று கூறி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நிராகரித்துவிட்டனர். ஆனால், கர்நாடகம் உள்ளிட்ட பிற மாநிலங்களில் இத்தகைய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இன்னமும் கல்செக்கு எண்ணெய் தயாரிக்கப்படுகிறது என்றார் அவர்.

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites