இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Sunday, October 16, 2011

கோழி பண்ணையில் கொழிக்குது பணம்

சத்துக்களை அள்ளித் தரும் ஆரோக்கியமான உணவு முட்டை.  மாணவர்கள் சத்துணவிலும் வழங்கப்படுகிறது. கொலஸ்ட்ரால் உள்ளவர்கள் கூட, மஞ்சள் கருவை தவிர்த்துவிட்டு வெள்ளைக் கருவை சாப்பிடலாம். தேவை அதிகம் இருப்பதால், கோழிப்பண்ணை அமைத்து முட்டை உற்பத்தி செய்தால் நல்ல லாபம் சம்பாதிக்கலாம் என்கிறார் திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த வேப்பங்கொட்டை பாளையத்தில் கிருத்திகா கோழி பண்ணை நடத்தி வரும் வெங்கடாசலம். அவர் கூறியதாவது:

நான் ஒரு விவசாயி. பாசன நீர் பற்றாக்குறை காரணமாக முட்டைக்கோழி வளர்ப்பை பிரதான தொழிலாக செய்து வருகிறேன். இதற்கு  வங்கிக் கடன் உதவி எளிதாக கிடைப்பதால், பண்ணை அமைத்து கூண்டு முறையில் 24 ஆயிரம் கோழிகளை வளர்க்கிறேன். கோழி வளர்ப்பில் முதல் வளர்பருவம் வரை உற்பத்தி செலவுக்கு முதலீடு இருந்தால் போதும். முட்டைப்பருவ காலத்தில்  கிடைக்கும் முட்டைகளை விற்று  அதன்மூலம், அடுத்தடுத்த உற்பத்தி செலவுகளை சமாளிக்கலாம். அரவை இயந்திரம் வாங்கி தீவனத்தை நாமே அரைத்து கொண்டால் செலவு மிச்சமாகும். தீவனத்துக்கு தேவையான தானியங்கள் விலை குறையும்போது வாங்கி இருப்பு வைத்துக் கொள்ளலாம்.

நாமக்கல், பல்லடம் ஆகிய இடங்களில் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு உள்ளது. இங்கு திங்கள், வியாழன், சனிக்கிழமைகளில் மொத்த முட்டை கொள்முதல் விலை நிர்ணயிக்கப்படுகிறது. வியாபாரிகள் நேரில் வாங்கி செல்கின்றனர். சில நேரங்களில் நல்ல லாபமும், சில நேரங்களில் குறைந்த லாபமும் கிடைக்கும். முறையாக வளர்த்தால், கோழி இறப்பு, முட்டை உற்பத்தி குறைவு ஆகியவற்றை தவிர்க்கலாம். ஒரு கோழி வாரத்தில் 6 நாள் முட்டை இடுவதால், தினசரி நல்ல வருவாய் பார்க்கலாம்.

வெளிநாடுகளுக்கு சிலர் மட்டுமே ஏற்றுமதி செய்கிறார்கள். முட்டைகளை தரப்பரிசோதனை செய்து தகுதியான முட்டைகளை அனுப்பினால் ஏற்றுமதியிலும் ஜொலிக்கலாம். கோழிப்பண்ணைகளுக்கு மின் கட்டணம் வணிக கட்டண பிரிவின் கீழ் விதிக்கப்படுகிறது. கோழி வளர்ப்பை மேம்படுத்த பண்ணைகளுக்கு இலவச மின்சாரம் வழங்க வேண்டும் என்று கோரி வருகிறோம்.

எப்படி வளர்ப்பது?

முட்டைக்கோழிகளை வளர்க்க ஆழ்கூளம், கூண்டு வளர்ப்பு என 2 முறைகள் உள்ளன. கூண்டுகளில் வளர்ப்பதே சிறந்தது. குஞ்சு பொரித்தது முதல் 8 வாரம் வரை குஞ்சு பருவம். அதற்கடுத்த 8 வாரங்கள் வளர் பருவம், பின்னர் 56 வாரங்கள் முட்டை உற்பத்தி பருவம். 3 பருவ கோழிகளையும் தனித்தனி கூண்டுகளில் வளர்க்க வேண்டும். கூண்டுகளில் கோழிகளின் பருவத்துக்கு ஏற்ப வெப்பம், காற்றோட்டம், ஈரப்பதம் இருக்குமாறு வசதி ஏற்படுத்த வேண்டும். குஞ்சு பருவத்தில் தீவனம் வீணாவதை தடுக்கவும், ஒன்றையொன்று கொத்திக் கொள்ளாமல் இருக்கவும் அதன் அலகுகளை 7 முதல் 10 நாட்களுக்குள் வெட்ட வேண்டும்.

குஞ்சு பருவத்தில் நோய் எதிர்ப்பு சக்திக்கு சுத்தமான தண்ணீரில் வைட்டமின் கே, சி மற்றும் சோடியம் சாலிசிலேட் கலந்து கொடுக்க வேண்டும். தடுப்பூசிகள் போட வேண்டும். சோயா, கம்பு, மக்காச்சோளம், கருவாடு, கிளிஞ்சல்கள் ஆகியவற்றுடன் நுண்ணூட்ட சத்துகள் நிறைந்த கலவை தீவனம் கொடுக்க வேண்டும். குஞ்சுப்பருவத்தில் குருணை தீவனம் கொடுப்பது எடையை அதிகரிக்கும்.

600 கிராம் எடையுடன் இருக்கும். குஞ்சு, வளர் பருவத்தில் 1100 கிராம் எடையை அடையும். முறையாக பராமரித்தால் 60 கிராம் எடையுள்ள முட்டைகளை கோழி இடும். ஒரு கோழி வாரத்துக்கு 6 முட்டை இடும். அதை விற்பனைக்கு அன்றன்றே அனுப்பிவிட வேண்டும்.

ஆலோசனை பெறலாம்!

கால்நடை பராமரிப்பு துறையின் மாவட்ட கால்நடை வளர்ப்பு மற்றும் ஆராய்ச்சி மையங்களில் முட்டைகோழி வளர்ப்பு தொடர்பான அறிவுரைகள், ஆலோசனைகள், வழிகாட்டுதல்கள் அளிக்கின்றனர். முட்டை கோழிக் குஞ்சுகள் உற்பத்தி செய்யும் தனியார் நிறுவனங்களின் தலைமை இடங்கள் நாமக்கல், பல்லடம், பொங்கலூர் ஆகிய இடங்களில் உள்ளது. இவற்றின் கிளைகள் முக்கிய நகரங்களில் உள்ளன. அங்கு கோழிக் குஞ்சுகளை வாங்கலாம். அங்கு கோழித் தீவன உற்பத்தியாளர்கள், கூண்டு தயாரிப்பவர்கள் மற்றும் கோழி வளர்ப்பு குறித்த விவரங்களை அளிக்கின்றனர்.

கட்டமைப்பு வசதிகள்

கூண்டு முறையில் முட்டைக் கோழி வளர்க்க 42க்கு 30 அடி நீள, அகலமுள்ள 3 கட்டிடங்கள் தேவை. இவற்றில் தலா 2 ஆயிரம் கோழி வீதம் 6 ஆயிரம் கோழி வளர்க்கலாம். கட்டிடத்துக்கு மொத்தம் ரூ.4.5 லட்சம் செலவாகும். 3 கட்டிடத்துக்கும் கூண்டு அமைக்க தலா ரூ.30 ஆயிரம் வீதம், ரூ.90 ஆயிரம் செலவாகும். கட்டிடத்தில் 3 அடுக்குகளை கொண்ட 6 இரும்பு கூண்டுகள் பொருத்த வேண்டும். மொத்தம் 18 அடுக்குகள் அமையும். 2 ஆயிரம் கோழிகள் இடம்பெறும். தீவனம் இருப்பு வைக்கவும், முட்டைகளை அடுக்கவும் தனித்தனி அறைகள் அமைக்க வேண்டும். கட்டமைப்புக்கு மொத்தம் ரூ.5.4 லட்சம்.

உற்பத்தி செலவு

குஞ்சு விலை சராசரி ரூ.21 வீதம் 2 ஆயிரம் குஞ்சுகள் ரூ.42 ஆயிரம். தீவனம் ஒரு கோழிக்கு 50 கிலோ தேவை. தீவனம் கிலோ விலை ரூ.15. 2 ஆயிரம் கோழிக்கு ரூ.15 லட்சம். தடுப்பு மருந்து உள்ளிட்ட பராமரிப்பு செலவுகள் ரூ.10 வீதம் ரூ.20 ஆயிரம். ஒரு வேலையாளுக்கு தினசரி ரூ.350 வீதம் ரூ.89 ஆயிரம் சம்பளம். மின் கட்டணம் ரூ.13 ஆயிரம் என உற்பத்தி செலவுக்கு மொத்தம் ரூ.16.64 லட்சம் தேவை.  

வருவாய் எவ்வளவு?

ஒவ்வொரு கோழியும் வளர்ந்த 17வது வாரத்தில் இருந்து 72வது வாரம் வரை முட்டை இடும். முட்டையிடும் பருவமான 55 வாரங்களில் (385 நாட்களில்) 320 முட்டைகள் இடும். முட்டை சராசரி விலை ரூ.2.50. 2 ஆயிரம் கோழிகள் மூலம் முட்டை விற்பனை வருவாய் ரூ.16 லட்சம். 72 வார முடிவில் வயதான முட்டை கோழிகள் விற்பனை 2 ஆயிரம் கோழிகள்(3500 கிலோ எடை) கிலோ ரூ.50 வீதம் வருவாய் ரூ.1.75 லட்சம். கோழி எரு தலா 15 கிலோ வீதம் 2 ஆயிரம் கோழிகள் மூலம் 30 டன் கிடைக்கும். இதன் மூலம் ரூ.24 ஆயிரம் வருவாய். மொத்த வருவாய் ரூ.17.99 லட்சம். லாபம் ரூ.1.35 லட்சம். முட்டை, எரு, கோழி விலை கூடினால் லாபமும் அதிகரிக்கும்.

சந்தை வாய்ப்பு!

தமிழகத்தில் முட்டை உற்பத்தி பெரும்பகுதி நாமக்கல்லிலும், ஓரளவு கோவை, திருப்பூர் மாவட்டத்திலும் உள்ளது. பரவலாக முட்டை உற்பத்தி மேற்கொண்டால் அந்தந்த பகுதிக்குரிய தேவையை பூர்த்தி செய்யலாம். வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யலாம். முட்டை கோழி எரு ரசாயன உரத்துக்கு மாற்றாக பயன்படுத்தப்படுகிறது. ரப்பர், தேயிலை தோட்டங்களில் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. கோழி எருவை வாங்க வியாபாரிகள் ஆர்வம் காட்டுகிறார்கள். முட்டை பருவம் முடிந்த கோழிகளை வியாபாரிகளிடம் விற்கலாம்.

0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites