இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Friday, June 1, 2012

இட்லி தொழில்

ஜெயந்தியை ஜெயிக்க வைத்த இட்லி ! "அரசாங்க வேலையை ராஜினாமா செஞ்சுட்டு, இட்லி சுட்டு வித்த என் மனைவிக்கு துணையா வந்து நின்னேன். மண் குடிசையா இருந்த எங்க வீடு இன்னிக்கு மாளிகை ஆகியிருக்கு!"

- முன்னுரையிலேயே எதிர்பார்ப்பைக் கூட்டினார் விஜயன், இந்தக் கட்டுரையின் கருவான ஜெயந்தியின் கணவர்.

ஜெயந்தி... ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தில் இட்லிக்கடை அல்ல... இட்லி சாம்ராஜ்யமே நடத்திக் கொண்டிருக்கும் பெண்மணி. ஆம்... தலைக்கு தொப்பி, ஒரே நிறத்தில் சேலை, அதற்கு மேல் ஓவர் கோட்டுடன் பதினைந்து பணிப்பெண்கள், வரிசையாக நிற்கும் சரக்கு வாகனங்கள், நான்கு ஓட்டுனர்கள் கம் சேல்ஸ் எக்ஸ்க்யூட்டிவ்கள்... இவற்றின் நிர்வாகம் ஜெயந்தி கையில் என்றால், அது இட்லி சாம்ராஜ்யம்தானே

மண்ணெண்ணய் அடுப்பில் இட்லி சுட்டு விற்றதில் ஆரம்பித்து இன்று கேட்டரிங் ஆர்டர்கள் பிடிப்பதுவரை வளர்ந்திருக்கும் ஜெயந்தியின் வாழ்க்கை நமக்குச் சொல்லும் பாடம், வேலை வாய்ப்பு என்பது அடுத்தவரின் கைகளில் இல்லை... நம் பத்து விரல்களுக்குள்ளேதான் புதைந்து கிடக்கிறது.

"காதலிச்சு இவரைக் கல்யாணம் பண்ணிக்கிட்ட கையோட என் வாழ்க்கையும், உழைப்பும் ஆரம்பிச்சுடுச்சு..." என்று நினைவுகளில் மலர்ந்தார் ஜெயந்தி! 
"அப்போ இவர் சொசைட்டியில வேல பார்த்துட்டு இருந்தாரு. என் மாமனாரோட அம்மா இட்லி சுட்டுத் தர, அதை வீதி வீதியா போய் வித்துட்டு, பிய்ஞ்சு போன, விக்காத இட்லிய வீட்டுல இருக்கறவங்க சாப்பிட்டுட்டு, அன்னிக்கு இட்லி வித்த காசை அடுத்த நாளு மாவுக்குப் போட்டுனுதான் வாழ்க்கை நகர்ந்துச்சு. 'என் புகுந்த வீட்டை எப்படியாச்சும் முன்னேத்தி ஆகணும்'னு என் மனசுகுள்ள ஒரு வெறி இருந்தாலும், அதுக்கு வழி தெரியல..." என்றவருக்கு அதற்குப் பின்தான் 'ஆவி பறக்கும்' அந்த ஐடியா உதித்திருக்கிறது!



" 'நமக்குத் தெரிஞ்ச இட்லி வியாபாரத்தையே இன்னும் கொஞ்சம் பெரிசா பண்ணினா என்ன?'னு எனக்குத் தோண, குடும்பத்துல அத்தனை பேர்கிட்டயும் ஆலோசனையும், ஆதரவும் கேட்டேன். ரெண்டுமே கிடைக்க, எல்லாரோட சேமிப்புப் பணத்தையும் போட்டு, அரிசியும் உளுந்தும் நிறைய வாங்கிப் போட்டேன். நாலு தெருவுக்குள்ள இட்லிய வித்தது போக, ஊருக்குள்ள இருக்கற அத்தனை தெருவுக்கும் போய் எங்க வீட்டு ஆளுங்க இட்லி வித்தாங்க.
உத்திரபிரதேசத்து அரிசி, உருட்டு உளுந்து, பவானி ஆத்து தண்ணி புண்ணியத்துல இட்லி மல்லிப்பூவா மலர, நாங்க தேடிப்போய் கொடுத்ததுபோக, எங்கள தேடி வந்து இட்லி வாங்க ஆரம்பிச்சாங்க. குழந்தையில இருந்து பெரியவங்க வரைக்கும் சாப்பிடற பொருள்ங்கறதால தரமான மூலப் பொருள், சுகாதாரமான தயாரிப்பு, நியாயமான விலை, சொன்ன நேரத்துல டெலிவரிங்கற இந்த நாலு விஷயத்துல மட்டும் எப்பவும் கவனமா இருந்தேன்..." எனும் ஜெயந்திக்கு, அதற்குப்பின் தன் தொழிலில் தொட்டதெல்லாம் பொன்னாகிவிடவில்லை. சில சோதனைகள் தாண்டித்தான் நிகழ்ந்திருக்கிறது இந்தச் சாதனை.

"அதுவரை ஆட்டுக்கல்லுலயே அவ்வளவு மாவையும் ஆட்டின நாங்க, கொஞ்சம் காசு சேர்ந்தவொடன கிரைண்டர் வாங்கிப்போட, முதல் நாளே கிரைண்டர் ஃபியூஸாகிப் போச்சு. பெரிய தண்ணி தொட்டி கட்டி மோட்டார் போட்டா, அது ஓடல. மாவு அரைக்க புது மெஷின் வாங்கி ஓட்டினப்போ, அதுலயும் பிரச்னை. 'கெட்ட சகுனம்...'னு ஆளாளுக்கு ஆலோசனை சொல்ல, நான் துளிகூட குழம்பாம அந்தந்த மெஷினுக்கு உண்டான வேலையைப் பார்த்துட்டு, இட்லியை அவிச்சுக் கொட்டினேன். கல்லாவுலயும் காசு கணிசமா கொட்ட ஆரம்பிச்சுச்சு. ஆனா, அந்த நேரத்துல என் வீட்டுக்காரர் ஒரு பிரச்னையோட வந்தப்போ..." என்று நிறுத்திய ஜெயந்தி, எதிர்பார்ப்பை தூண்டி விட்டுத் தொடர்ந்தார்...

" 'ஜெயந்தி... இப்போ சொசைட்டி வேலையில நல்ல வருமானம் வருது. ஆனா, ஆபீஸ் வேலை முடிஞ்சதும் இப்படி தூக்குபோசி மாட்டி இட்லி விக்க போறதை ஃப்ரெண்ட்ஸும் கூட வேலை பார்க்குறவங்களும் கிண்டல் பண்ணுறாங்க. என்ன செய்யலாம்..?'னு அவர் எங்கிட்ட சொன்னப்போ, 'சரி விட்டுடலாம்...'னு நாங்க முடிவெடுத்தது - அவரோட அரசாங்க வேலையை! 

'எதிர்காலத்துல இந்தத் தொழிலை நாம அடுத்தடுத்த கட்டத்துக்கு விஸ்தரிக்க, உனக்குத் துணையா நான் இருந்தா உன்னால இன்னும் சிறப்பா செய்ய முடியும்னு தோணுது'னு அவரு சொன்னப்போ, அந்த நம்பிக்கைக்காகவே நான் இன்னும் வெறியா உழைக்க, ஆர்டர்களும் கொஞ்சம் கொஞ்சமா கூட ஆரம்பிச்சுது. 365 நாளும் உழைச்சோம். தீபாவளி, பொங்கலுக்கு வேலை ஆட்கள் லீவுல போயிட்டாலும், வீட்டு ஆட்களே வேலை செஞ்சு, எப்பவுமே 'இல்லை'னு சொல்லாம இட்லி கொடுத்தோம். கல்யாண ஆர்டர், வீட்டு விசேஷம் போக, ஹோட்டல்காரங்களும் காலையிலும் சாயங்காலமும் எங்ககிட்ட இட்லி வாங்கிட்டு, அவங்க சட்னி, சாம்பாரோட விற்கத் துவங்கினாங்க. ஆக, எங்க இட்லிக்கு ஒரு நிலையான மார்கெட் கிடைக்க, அதே வேகத்தோட 'அடுத்து என்ன'னு யோசிக்க ஆரம்பிச்சேன்..." என்பவர், அடுத்து எடுத்தது புலிப் பாய்ச்சல்.

"இதையே இன்னும் நவீனப்படுத்தினா வேலையும் குறையும், வருமானமும் நிறையும்னு தோண, இட்லி டெலிவரிக்கு ஒரு வேன் வாங்கினேன். இட்லி அரிசி கழுவ சின்னதா ஒரு மெஷின் வாங்கினேன். நாம உடல் நோக ஒரு மணி நேரம் கழுவற அரிசியை, அது ரெண்டு நிமிஷத்தில் செஞ்சுடும். அப்புறம், பத்து கிலோ அரிசியை அஞ்சே நிமிஷத்துல அரைக்க ஒரு மெஷின், உளுந்து ஆட்ட வழக்கமான கிரைண்டர்னு செட் பண்ணினேன். பருவகாலத்துக்கு ஏத்த மாதிரி மாவு புளிக்கறது மாறும்கறதால, அதுக்கேத்த மாதிரி புளிப்பை நியூட்ரலைஸ் செய்யற டெக்னிக்கல் கேஸ் அடுப்பு, பொட்டு அடுப்புல சீக்கிரமா பேபி பாய்லர் போட்டு இட்லினு, இந்த இட்லி தொழிலுக்கே மாடர்ன் டச் கொடுத்தேன்!" எனும் ஜெயந்தி பள்ளிப் படிப்பைத் தாண்டாதவர்.


"என் உழைப்பும் என் குடும்பத்தோட ஆதரவும் படிப்படியா ஜெயிச்சுடுச்சு. இதோ இப்ப நடு ராத்திரியில் ஆயிரக்கணக்குல இட்லி ஊத்தி, அதிகாலையில நாலு வண்டிகள்ல டெலிவரி கொடுக்கற அளவுக்கு விஸ்தரிச்சிருக்கு இந்த தொழில். சில வாடிக்கையாளர்கள் கேட்டுக்கிட்டதால இப்போ சப்பாத்தி மெஷின் வாங்கி சப்பாத்தியும் செஞ்சு கொடுக்கறோம். அடுத்ததா பரோட்டா மெஷின், இடியாப்ப மெஷின் வாங்கற ஐடியாவும் இருக்கு. நான் நெனச்ச மாதிரியே நான் வாழ வந்த ஓலைக் குடிசைய, இன்னிக்கு மாடி வீடாக்கிட்டேன்" என்று சந்தோஷமாகச் சொன்ன ஜெயந்தியின் குரல் லேசாக கம்மியது...

"எனக்கு கைப்பக்குவம் சொல்லித் தந்தது எங்க வீட்டுப் பாட்டிதான். 'எல்லாரும் எளப்பமா பார்த்தா இந்த இட்லிக்கார ஆயா குடும்பம், இன்னிக்கு இட்லியாலயே நிமிர்ந்திருச்சு!'ங்கற சந்தோஷத்துல நூறு வயச தாண்டி வாழ்ந்தவங்க, பத்து நாளைக்கு முன்னதான் இறந்து போனாங்க..." என்று சொல்லி கண்ணீர் சிந்தியவர், "ஆனாலும் அவங்களோட ஆசீர்வாதம் என்னிக்குமே எங்களுக்கு கிடைச்சுக்கிட்டே இருக்கும். நாங்களும் நிறைவாவே இருப்போம்!" என்று புன்னகையுடன் முடித்தார்!

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites