இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Sunday, December 6, 2015

வருமானம் தரும் மல்லி

குறைந்த இடத்திலும் குதூகல வருமானம் தரும் மல்லி!
15 சென்ட்... மாதம் ரூ15 ஆயிரம்!காசி.வேம்பையன், படங்கள்: கா.முரளி
‘மதுரைக்குள் நுழைந்தேன் உன் பெயரைச் சொல்லி
ரோஜாவுக்கு நீயே சரியான வில்லி...
கிள்ளினாலே உயிர்போகும் தேகம் உந்தன் தேகம்
உன்னைச் சூடிக்கொள்ள ஆசைபடுமே வான் பறக்கும் காகம்...’
-இது மல்லிகைப் பூவை பற்றிய கவிஞர் பாலாஜியின் கவிதை.
உண்மைதான், மல்லிகையை விரும்பாதவர்கள் இருக்கவே முடியாது. நுகர்வோருக்கு வாசனையை அள்ளிக் கொடுக்கும் மல்லிகை, தன்னை உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு வருமானத்தைக் கொடுப்பதிலும் தவறுவதில்லை. அதனால்தான் பெரும்பாலான மலர் விவசாயிகளின் தேர்வாக மல்லிகை இருக்கிறது. இந்த மல்லிகை சாகுபடியில் ஈடுபட்டு வரும் திருவண்ணாமலை மாவட்டம், சோழவரம் கிராமத்தைச் சேர்ந்த செந்தில்குமாரிடம் கேட்டால், இந்த உண்மையை உரக்கச் சொல்வார்!
செழிப்பான பச்சை நிறச் செடிகளில் வெள்ளை நிறத்தில் ‘குட்டிக்குட்டி முட்டைகள் போல காட்சியளித்த மல்லிகைப்பூக்கள் மணம் பரப்பிக்கொண்டிருந்த ஒரு சுகந்தமான சூழலில் செந்தில்குமாரைச் சந்தித்தோம். 
“எங்க அப்பாவுக்கு விவசாயம்தான் தொழில். எனக்கு அஞ்சு வயசு இருக்கும்போது அப்பா இறந்துட்டார். எங்களை பாட்டிதான் வளர்த்தாங்க. எனக்கு அடுத்து ரெண்டு தங்கச்சி, ஒரு தம்பி இருந்ததால குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டிய கட்டாயம். எட்டாவதுடன் படிப்பை நிறுத்திட்டு, சொந்தக்காரர்கிட்ட வேலை கத்துக்கிட்டு பட்டுத்தறி நெசவு செய்ய ஆரம்பிச்சேன். அதோட விவசாயத்தையும் பார்த்துக்கிட்டு இருந்தேன். ஆனாலும், போதுமான வருமானம் கிடைக்கலை.
அப்படியே ஓடிக்கிட்டிருந்தப்போ... ஒன்பது வருஷத்துக்கு முன்ன எங்க நிலத்துல கிணறு வெட்டி, சுத்தி செங்கல் வைச்சு கட்டினோம். அப்ப வேலைக்கு வந்த மேஸ்திரி (கொத்தனார்), அவர்கூடவே என்னை வேலைக்கு அழைச்சிட்டுப் போய், தொழில் கத்துக் கொடுத்தாரு. இப்போ எட்டு வருஷமா கொத்தனார் வேலை செய்துக்கிட்டே விவசாயத்தையும் பார்த்துக்கிட்டு இருக்கேன்” என்ற செந்தில்குமார், தீவனப்புல்லுக்கு தண்ணீர் பாய்ச்சி விட்டுத் தொடர்ந்தார்.
கைகொடுத்த கரும்பு சாகுபடி!
“எனக்கு பாகப்பிரிவினையில ஒரு ஏக்கர் நிலம் கிடைச்சது. அந்த நிலத்துக்குப் பக்கத்துல இருந்த மூணு ஏக்கர் நிலத்தை குத்தகைக்குப் பிடிச்சு கரும்பு சாகுபடி செய்தேன். ஏக்கருக்கு 75 டன் கரும்பு கிடைச்சிக்கிட்டிருச்சு. அந்த வருமானத்தை வைச்சு ஒரு தங்கச்சியை கல்யாணம் செய்து கொடுத்தேன். அதுக்கப்பறம் குத்தகை நிலத்தைத் திருப்பி வாங்கிக்கிட்டாங்க. இப்போ வேற ஒருத்தர்கிட்ட ஒரு ஏக்கர் நிலத்தைக் குத்தகைக்கு எடுத்திருக்கேன். இப்ப என்னோட ஒரு ஏக்கர் நிலத்தையும் சேர்த்து ரெண்டு ஏக்கர்ல விவசாயம் நடக்குது. 
இயற்கை விவசாயத்துக்கு வழிகாட்டிய நண்பர்!
கரும்பு, நெல்னு சாகுபடி பண்றப்போ பூச்சிக்கொல்லிகளைத் தெளிப்பேன். அப்போ அது எனக்கு ஒத்துக்காம அடிக்கடி தும்மல் வந்தது. ‘இதுக்கு மாற்றா என்ன செய்யலாம்?’னு நண்பர்கிட்ட யோசனை கேட்டேன். அவர், ‘இயற்கை விவசாயம் செய்தா இது மாதிரியான பிரச்னைகள் இருக்காது’னு சொல்லவும்... சோதனை முயற்சியா ஒரு ஏக்கர் நிலத்துல ஏ.டி.டி 43 நெல் ரகத்தை முழுக்க பஞ்சகவ்யா, மூலிகைப் பூச்சிவிரட்டி மட்டும் பயன்படுத்தி சாகுபடி செய்து பார்த்தேன். ஏக்கருக்கு 25 மூட்டை (75 கிலோ மூட்டை) மகசூல் கிடைச்சது. வழக்கமா 21 மரக்கால் நெல்லை சாக்கில் கொட்டினாத்தான் 75 கிலோ எடை வரும். இயற்கை முறையில விளைஞ்ச நெல்லை பதினெட்டுல இருந்து பத்தொன்பது மரக்கால் கொட்டினாலே 75 கிலோ எடை வந்தது. அதுக்கப்பறம்தான் முழுமையா இயற்கை விவசாயத்துல இறங்கினேன்” என்று சொல்லி பெருமைப் பார்வையை வீசிய செந்தில்குமார், தொடர்ந்தார்.
ஆறு மாதத்தில் முதல் வருமானம்!
“நெல், கரும்பு மாதிரியான பயிர்கள்ல சிலசமயம் நஷ்டம் வந்துடும். அதனால, நிரந்தர வருமானம் கிடைக்கணுங்கிறதுக்காக 15 சென்ட் இடத்துல மல்லிகை நடவு செய்யலாம்னு முடிவு பண்ணினேன். ராமேஸ்வரத்துல இருந்து நாற்று வாங்கிட்டு வந்து நடவு செய்தேன். முழுக்க இயற்கை முறையில சாகுபடி செய்றதால, செடியோட வளர்ச்சி சிறப்பா இருக்கு. ஆறாவது மாசத்துல இருந்து வருமானம் எடுத்துக்கிட்டிருக்கேன். நட்டு 14 மாசமாகுது.
ஆரம்பத்துல தினமும் 100 கிராம், 200 கிராம்னு கிடைச்சது. ஆறாவது மாசத்துக்குப் பிறகு ஒரு கிலோ அளவுல கிடைச்சது. ஒவ்வொரு மாசமும் மகசூல் கூடிக்கிட்டே இருக்கு. இப்போ, தினமும் ரெண்டு கிலோவுல இருந்து, பத்து கிலோ வரைக்கும் மகசூல் கிடைக்குது. அடுத்த வருஷத்துல தினமும் 25 கிலோ அளவுக்கு மகசூல் கிடைக்கும்னு எதிர்பார்க்கிறேன்.
இடையில ஊடுபயிரா மிளகாய், வெங்காயம் போட்டேன். மிளகாய் மூலம் 12 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைச்சது. வெங்காயத்தை வீட்டுத் தேவைக்கு வெச்சுக்கிட்டோம். ரசாயன உரம் போட்டு சாகுபடி செய்யுற விவசாயிகளுக்கு சிலசமயம் பூ இல்லாம போயிடுது. ஆனா, இயற்கை முறையில எப்பவுமே பூத்துக்கிட்டே இருக்கு. இப்ப, என்னோட ஒரு ஏக்கர்ல 50 சென்ட் கரும்பு, 15 சென்ட் தீவனப்புல், 15 சென்ட் மல்லிகைப்பூ இருக்கு. மீதி 20 சென்ட், நெல் நடவுக்குத் தயாரா இருக்கு. குத்தகை நிலம் ஒரு ஏக்கர்ல நெல் போட்டிருக்கேன்” என்ற செந்தில்குமார் மல்லிகை மூலம் கிடைக்கும் வருமானம் குறித்துச் சொன்னார்.
15 சென்ட்டில் மாதம் 150 கிலோ!
“ஒரு கிலோ மல்லிகைப்பூ 50 ரூபாய்ல இருந்து 1,000 ரூபாய் வரை விற்பனையாகும். தினம் சராசரியா எனக்கு 5 கிலோ பூ கிடைக்குது. அந்த வகையில மாசத்துக்கு 150 கிலோ. கிலோவுக்கு சராசரி விலையா 100 ரூபாய்னு வெச்சுக்கிட்டாலே மாசம் 15 ஆயிரம் ரூபாய் கிடைச்சுடும். செலவு 5 ஆயிரம் ரூபாய் போக, மீதம் 10 ஆயிரம் ரூபாய் லாபமாக கிடைக்கும்” என்ற செந்தில்குமார்,
“ரெண்டு வருஷத்துக்குப் பிறகு தினம் சராசரியா 10 கிலோ வீதம் பூ கிடைக்கும்னு எதிர்பார்க்கிறேன். அப்படி கிடைச்சா, மாசம் 20 ஆயிரம் ரூபாய் லாபம் கிடைக்கும். எப்படியும் வருஷத்துல எட்டு மாசத்துக்கு இந்த வருமானம் கிடைச்சுக்கிட்டே இருக்கும்” என்று நம்பிக்கையுடன் சொன்னார்.
தொடர்புக்கு,
செந்தில்குமார், 
செல்போன்: 96551-09010
குறிப்பு: மல்லிகை பல ஆண்டு காலப் பயிர் என்பதால், அடிப்படைச் செலவுகளை செலவுக் கணக்கில் சேர்க்கவில்லை. இரண்டாம் ஆண்டு தற்போதைய மகசூலை விட, இரண்டு மடங்கு மகசூல் கிடைக்கும். அப்போது செலவும் கூடும். அதற்குப் பிறகு, மாதம் 20 ஆயிரம் ரூபாய் லாபம் கிடைக்கும், என செந்தில்குமார் எதிர்பார்க்கிறார்

நடவுக்கு ஏற்ற ஆடிப்பட்டம்!
15 சென்ட் நிலத்தில் மல்லிகை சாகுபடி செய்வது குறித்து, செந்தில்குமார் சொன்ன விஷயங்கள் பாடமாக இங்கே...
களர், உவர் மண்ணைத் தவிர மற்ற எல்லா மண் வகைகளும் மல்லிகைக்கு ஏற்றவை. ஆடிப்பட்டம் சாகுபடிக்கு ஏற்றது. தேர்வு செய்த 15 சென்ட் நிலத்தில் ஒரு டிராக்டர் தொழுவுரம் அல்லது ஒரு டிராக்டர் கோழி எருவைக் கொட்டி இறைத்து... கொக்கிக் கலப்பையால் இரண்டு சால் உழவு செய்ய வேண்டும். அடுத்து ரோட்டோவேட்டரால் இரண்டு சால் உழவு செய்ய வேண்டும்.
4 அடி இடைவெளி!
பிறகு, 4 அடிக்கு 4 அடி இடைவெளியில் ஒரு கன அடி அளவுக்கு குழி எடுத்து, ஒரு வாரம் ஆறப்போட வேண்டும். சம அளவில் கலக்கப்பட்ட கோழி எரு+தொழுவுரக் கலவையில் ஒரு குழிக்கு இரண்டு கிலோ என்ற கணக்கில் இட்டு மேல் மண்ணைக் கொண்டு மூட வேண்டும். மூடும்போது தரைமட்டத்தில் இருந்து 4 விரல் அளவில் பள்ளம் இருப்பதுபோல மூட வேண்டும். அப்போதுதான் தண்ணீர் நிற்கும். ஒவ்வொரு குழியின் மையத்திலும் குழிக்கு இரண்டு நாற்றுகள் வீதம் நடவு செய்து உயிர் தண்ணீர் கொடுக்க வேண்டும். 15 சென்ட் நிலத்தில் நிலத்தின் அமைப்பைப் பொறுத்து 400 முதல் 425 குழிகள் வரை எடுக்கலாம். மொத்தம் 800 முதல் 850 செடிகள் வரை தேவைப்படும்.
வளமாக்கும் இயற்கை இடுபொருட்கள்!
நடவு செய்த 15 நாட்களில் வேர் பிடித்து செடிகள் வளர ஆரம்பிக்கும். பிறகு, தேவைப்பட்டால், செடிகளுக்கு இடையில் வரப்பு, வாய்க்கால் ஓரங்களில் மிளகாய், வெங்காயம் என ஊடுபயிர் சாகுபடி செய்யலாம். ஊடுபயிர் சாகுபடி செய்தால் களைகள் குறைவாக இருக்கும். நடவுசெய்த 30-ம் நாள் முதல் 15 நாட்களுக்கு ஒரு முறை களை எடுக்க வேண்டும். மாதம் ஒரு முறை 500 கிலோ தொழுவுரத்தை நிலம் முழுவதும் இறைத்துவிட வேண்டும். செடிகளில் பூ பூக்கும் வரை, 10 நாட்களுக்கு ஒரு முறை 10 லிட்டர் தண்ணீருக்கு 300 மில்லி பஞ்சகவ்யா எனக் கலந்து தெளிக்க வேண்டும். பூ எடுத்த பிறகு, வாரம் ஒரு முறை இந்தக்கரைசலைத் தெளிக்க வேண்டும்.
15 நாட்கள் இடைவெளியில் சுழற்சி முறையில்... 10 லிட்டர் தண்ணீருக்கு ஒரு லிட்டர் பழக்கரைசல்; 10 லிட்டர் தண்ணீருக்கு ஒரு லிட்டர் மூலிகைப் பூச்சிவிரட்டி என மாற்றி மாற்றித் தெளிக்க வேண்டும்.
கடலைப்பிண்ணாக்கு, எள்ளு பிண்ணாக்கு, வேப்பங்கொட்டைத்தூள் ஆகியவற்றில் தலா 15 கிலோ, சூடோமோனஸ் 250 கிராம், டிரைக்கோடெர்மா விரிடி 250 கிராம் ஆகியவற்றை 20 லிட்டர் தண்ணீர், 20 லிட்டர் மாட்டுச் சிறுநீரில் 3 நாட்கள் ஊற வைக்க வேண்டும். இக்கரைசலில் 50 லிட்டர் தண்ணீர் சேர்த்துக் கரைத்து... மூன்று மாதங்களுக்கு ஒரு முறை செடிக்கு 200 மில்லி என்ற அளவில் ஊற்றி விட வேண்டும்.
பூச்சித்தாக்குதலைக் குறைக்கும் இஞ்சி-பூண்டுக் கரைசல்!
15 நாட்களுக்கு ஒருமுறை மூலிகைப் பூச்சிவிரட்டி தெளிப்பதால், பூச்சித்தாக்குதல் இருக்காது. அப்படியும் பூச்சிகள் வந்தால்... 50 லிட்டர் தண்ணீரில் 50 மில்லி வேப்பெண்ணய், 50 மில்லி புங்கன் எண்ணெய், 25 கிராம் காதி சோப் ஆகியவற்றைக் கலந்து தெளிக்கலாம். அல்லது, இஞ்சி-250 கிராம், பூண்டு-500 கிராம், பச்சை மிளகாய்-500 கிராம் ஆகியவற்றை மிக்ஸியில் இட்டு அரைத்து, ஒரு லிட்டர் மாட்டு சிறுநீரில் ஓர் இரவு ஊற வைத்து, 10 லிட்டர் தண்ணீருக்கு 300 மில்லி வீதம் தெளிக்கலாம். மார்கழி மாதத்தில் பூக்கள் குறைவாக இருக்கும். அந்தச் சமயத்தில் செடிகளை தரையிலிருந்து ஓர் அடி உயரம் மட்டும் விட்டு கவாத்து செய்ய வேண்டும். அதனால், புதுத் தளிர்கள் முளைத்து ஒன்றரை மாதங்களில் மீண்டும் பூவெடுக்கும்.

0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites