இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Thursday, December 31, 2015

காய்த்துக் குலுங்கும் நெல்லி... பூத்துக் குலுங்கும் சம்பங்கி...


அசர வைத்த அய்யாவின் ஆலோசனை!

ஜி.பழனிச்சாமி, படங்கள்: க.சத்தியமூர்த்தி
‘‘நம்மாழ்வார் என்கிற ஆலமரத்தில் இருந்து ஆயிரக்கணக்கான விழுதுகள் உருவாகி தனித்தனி மரங்களாகத் தழைத்து அவர் பெயரை உரக்கக் கூறிக் கொண்டிருக்கின்றன. அந்த அற்புத ஆலமரத்தில் நானும் ஒரு சிறு விழுது” என்கிறார், கரூர் மாவட்டம், பரமத்தி அடுத்துள்ள வேட்டையார்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த இயற்கை விவசாயி மனோகரன். நம்மாழ்வார் சொல்லிக்கொடுத்த பாடத்தை அச்சுப் பிசகாமல் தனது பண்ணையில் நடைமுறைப்படுத்தியும் வருகிறார், ஓய்வுபெற்ற காவல் ஆய்வாளரான மனோகரன்.
பண்ணையின் முகப்பில் வரிசைகட்டி நிற்கின்றன, நான்கு வேப்பமரங்கள். வேப்பிலைகள் தாலாட்டும் மரத்தில் மாட்டப்பட்டிருக்கிறது, நம்மாழ்வார் புகைப்படம். புகைப்படத்தில் சிரித்துக் கொண்டிருக்கும் நம்மாழ்வாருக்கு மலர் தூவி வணங்கி விட்டு நம்மிடம் பேச வந்தார், மனோகரன்.
காக்கிச்சட்டைக்குள் பசுமைத்தேடல்!
“நம்மாழ்வார் அய்யா, மறைவுக்குப் பிறகு அவரோட படத்தை அவர் மிகவும் நேசித்த வேப்பமரத்திலேயே மாட்டி வெச்சு மரியாதை செய்துக்கிட்டு இருக்கேன். தினமும் பண்ணைக்குள் நுழைந்ததும் படத்துக்கு மலர் தூவி வணங்கிட்டுத்தான் பண்ணை வேலைகளை ஆரம்பிப்பேன்.
கரூர்ல இருக்கிற என்னோட வீட்டு பூஜை அறையிலும் அய்யாவோட படம் இருக்கு. என்னோட விவசாய வாழ்க்கைக்கு வழிகாட்டிய அவர், என்னைப் பொறுத்தவரை கடவுளுக்குச் சமமானவர்.
நான் 35 வருஷம் காவல்துறையில வேலை பார்த்தேன். போலீஸ் வேலையில இருந்தாலும்... விவசாயத் தேடல் தீவிரமா இருந்துச்சு. நேரம் கிடைக்கும்போதெல்லாம் என்னோட பூர்விகத் தோட்டத்துக்குப் போயிடுவேன். அங்க, எனக்குத் தெரிஞ்ச அளவுல வெள்ளாமை செய்துக்கிட்டு இருந்தேன். அந்த சமயத்துலதான் ‘பசுமை விகடன்’ பரிச்சயமாச்சு. அதைத் தொடர்ந்து வாசிக்க ஆரம்பிச்சதுல இயற்கை விவசாயம் பத்தித் தெரிஞ்சிக்கிட்டேன். அப்பறம்தான் நம்மாழ்வார் அய்யாவோட பழகுற வாய்ப்பு கிடைச்சது.
வானகத்துல அவரை அடிக்கடி போய் பார்த்துட்டு வருவேன். என் முகத்தைப் பார்த்ததுமே, ‘வாங்க... இன்ஸ்பெக்டர்’னு வாய் நிறைய கூப்பிட்டுக் கட்டி அணைச்சு வரவேற்பார். அந்த அரவணைப்பு மனசுக்கு இதமா இருக்கும். ரிட்டையர்டு ஆனதுக்கப்பறம் அய்யா கொடுத்த பல பயிற்சிகள்ல கலந்துக்கிட்டேன். கரூர் குருதேவர் பள்ளியில் நடந்த நாலு மாத பயிற்சி ரொம்ப முக்கியமானது. அங்கு கத்துக்கிட்ட தொழில்நுட்பங்களை என்னோட பண்ணையில தீவிரமா நடைமுறைப்படுத்திக்கிட்டு இருக்கேன்.
வருஷம் ஆச்சு அஞ்சு... இப்போ இல்லை நஞ்சு!
நம்மாழ்வார் அய்யா, அறிமுகமாகி அஞ்சு வருஷம் ஆகுது. இந்த அஞ்சு வருஷத்துல என்னோட தோட்டம் முழு இயற்கை விவசாயப் பண்ணையா மாறிடுச்சு. தொழுவுரம், ஆட்டுக்கிடை, மூடாக்கு, மேட்டுப்பாத்தி, இருமடிப்பாத்தி, ஊடுபயிர்னு ஒண்ணு விடாமல் நடைமுறைப்படுத்தியிருக்கேன். நாட்டு மாடுகள், ஆடுகளையும் வெச்சிருக்கேன். பஞ்சகவ்யா, மீன் அமினோ அமிலம், பூச்சிவிரட்டி, அரப்புமோர்க்கரைசல்னு எல்லா இடுபொருட்களையும் இங்கேயே தயாரிச்சு தேவைப்படுற நேரத்துல பயிர்களுக்குக் கொடுக்கிறேன். அய்யா காட்டிய வழியால் என்னோட தோட்டம் இப்ப நஞ்சில்லா மண்ணா மாறி இருக்கு” என்ற மனோகரன், சற்று இடைவெளி விட்டுத் தொடர்ந்தார்.
விண்ணைப் பார்க்காத மண் !
“உயிர்ப்புடன் இருக்கிற மண்ணுலதான் அனைத்துச் சத்துக்களும் இருக்கும். ‘அடிமண்ணுல ஈரப்பதம் இருக்கணும். அப்படீனா... மண்ணு மேல சூரிய வெயில் படக்கூடாது. பயிர் மேலதான் படணும். அந்த மண்ணு உயிர்ப்புடன் இருக்க பசுமைப்போர்வை போத்தணும். அதாவது மண்ணு, கண்ணுக்குத் தெரியாதபடி, கொள்ளு, நரிப்பயறு, தட்டைனு ஊடுபயிரா விதைச்சு விடணும். அது வளர்ந்து மண்ணுக்குப் போர்வையா இருந்து அடி ஈரத்தைக் காப்பாத்தி பிரதானப் பயிர் வாடாமப் பாத்துக்கும். அதோட இந்த ஊடுபயிர்கள் பிரதானப் பயிருக்கான தழைச்சத்தையும் கொடுக்கும். ஊடுபயிரா ஒரு வருமானத்தையும் கொடுப்பதோடு இலைகள் மட்கி மண்ணுக்கும் உரமாகும். அந்த ஊடுபயிர்களின் கொடிகள் காய்ஞ்சு கால்நடைகளுக்கும் தீவனமாகும்’- இப்படிக் கதை போல எளிமையா சொல்லி குழந்தைக்குக் கூட விவசாயத்தைப் புரிய வெச்சிடுவார், அய்யா.
பண்ணைக்கு வந்தார்... பல நுணுக்கங்கள் தந்தார்!
2012-ம் வருஷம் ஜூன் மாசம் 3-ம் தேதி என்னோட வாழ்கையில மறக்கமுடியாத நாள். என்னுடைய நீண்ட நாள் வேண்டுகோளுக்கு இணங்க என்னோட பண்ணைக்கு வந்தார், நம்மாழ்வார் அய்யா. வந்தவர் என்னுடைய ஒன்பது ஏக்கர் நிலத்தையும் அங்குலம் அங்குலமாக நடந்து நின்று நிதானித்து சுற்றிப் பார்த்தார். எங்க பகுதியில் மேய்ச்சல் நிலங்களைச் சுற்றிலும் காட்டு முள் மரமான கிளுவையை வெச்சு வேலி அமைச்சிருப்பாங்க. இந்த மரத்தோட முள், நங்கூரக்கொக்கி மாதிரி இருக்கும். மனிதர்கள், விலங்குகள்னு எதுவும் உள்ள வர முடியாது. முள்ளு குத்துச்சுனா காயம் படாம உருவி எடுக்குறது ரொம்ப கஷ்டம். ஒணான் கூட நுழைய பயப்படும் கிளுவை வேலிகள்ல படர்ந்து கிடந்த கோவைக் கொடிகளையும் அதுல தொங்கின கோவைப் பழங்களையும் பார்த்து அய்யா ரொம்ப ஆச்சர்யப்பட்டார். உயிர்வேலியில் படர்ந்து கிடந்த பல்வேறு மூலிகைக் கொடிக ளையும் அடையாளம் கண்டு சொன்னார்.
அப்போ, ‘இன்னிக்கு பல நன்மைகளைக் கொடுக்கிற இது போன்ற உயிர்வேலிகளை அழிச்சிட்டு, பல ஆயிரம் ரூபாய் செலவு பண்ணி நிலத்தைச் சுற்றிலும் தூண்கள் நட்டு முள்கம்பி வேலிகளை அமைக்கிறாங்க. இதனால பயிருக்கும் சுற்றுச்சூழலுக்கும் எந்த நன்மையும் இல்லை. ஆனா, கரூர், தாராபுரம், காங்கேயம் பகுதிகள்ல இன்னும் இது போன்ற உயிர்வேலிகளைக் காப்பாத்திக்கிட்டிருக்காங்க. இந்த கிளுவை அரண் போல நிலத்தைச் சுத்தியும் இருக்கும். அதுல படர்கிற தழை, தாம்புகள் கால்நடைகளுக்குத் தீவனமாயிடும். செலவே இல்லாத இந்த உயிர்வேலிகளைக் கண்டிப்பாக காப்பாத்தணும்’னு அய்யா ஆதங்கத்தோட சொன்னார்.
மேட்டுப்பாத்தியில் நாட்டுக் காய்கறி!
‘ஒவ்வொரு பண்ணையிலும் கொஞ்சம் இடத்திலாவது காய்கறிச் செடிகள் கண்டிப்பா இருக்கணும்’னு நம்மாழ்வார் சொல்வார். ‘நிலத்துல வெயில் படுற இடத்துல மேட்டுப்பாத்திகள் அமைக்கணும். அதில் நம்ம வீட்டுக்குத் தேவையான நாட்டு ரக காய்கறிகளை உற்பத்தி செஞ்சு நஞ்சு இல்லா உணவை முதலில் நம்ம குடும்பத்துக்குக் கொடுக்கணும். ஆர்வம் உள்ளவங்க அதிக பரப்பளவுல நாட்டுக் காய்கறிகளை உற்பத்தி செஞ்சு... சந்தைகளில் விற்பனை செஞ்சு வருமானம் பார்க்கலாம்’னு சொல்வார். அதனால நானும் மேட்டுப்பாத்தியில நாட்டுக் காய்கறிகளை சாகுபடி செய்துக்கிட்டு இருக்கேன்” என்ற மனோகரன் சம்பங்கித் தோட்டத்துக்கு அழைத்துச் சென்றார்.
பூ உதிர்வதைத் தடுத்த அமுதக்கரைசல்!
“50 சென்ட்ல சம்பங்கி சாகுபடி செய்றேன். அந்த வயலைச் சுற்றிப் பார்த்த நம்மாழ்வாருக்கு என்னுடைய சாகுபடி முறையில் முழுதிருப்தி இல்லை. பூக்கள் சீராக இல்லாமலும், உதிர்ந்து கிடப்பதையும் பார்த்த அவர், அதைச் சீராக்கி அதிக மகசூல் எடுக்கிற வித்தையைச் சொல்லிக் கொடுத்தார். 15 நாட்களுக்கு ஒரு முறை பாசனத் தண்ணீர்ல அமுதக்கரைசலைக் கலந்து விடச் சொன்னார். அவர் சொன்னது போலவே செய்தேன். ஆறே மாதங்கள்ல நல்ல பலன் கிடைத்தது. பூக்கள் உதிராம மகசூல் கூடியது. இன்றைய தேதியில் நாள் ஒன்றுக்கு 20 கிலோ சம்பங்கி பறித்து விற்பனை செய்றேன்.
சரம் சரமாய் நெல்லி!
இங்க ஒன்பது மலைநெல்லி மரங்கள் இருக்கு. ஆனா, காய்ப்பு சிறப்பா இல்லை. அந்த மரங்கள் பக்கத்துல வந்து கொஞ்ச நேரம் நின்னு பார்த்த நம்மாழ்வார், ‘நெல்லிக்காய் ஆயுளைக் கூட்டும் அற்புதக்கனி. மலைப்பிரதேசத்தில் நன்றாக வளரக்கூடிய மரம். இங்கு அந்த அளவுக்கு சிறப்பாக வளராது. இருந்தாலும் நான் சொல்லுற விஷயத்தை நடைமுறைப்படுத்திப் பாருங்க...
மலைப்பயிர்கள் இயற்கையாக வளரக்கூடியவை. உரம், தண்ணீர் தேவையில்லை. காய்ச்சலும் பாய்ச்சலும்தான் அதற்கான தொழில்நுட்பம். அதோடு மழைக்காலத்துக்கு முன்பாக ஒவ்வொரு மரத்தைச் சுற்றிலும் 25 கிலோ ஆட்டு எருவைக் கொட்டி, அது மேல வளமான செம்மண்ணைக் கொட்டி மூடி விடணும்.
2 லிட்டர் பஞ்சகவ்யா கரைசலை 50 லிட்டர் தண்ணீரில் கலந்து மரத்தை சுற்றிலும் நேரடியாக ஊற்றணும். வருஷத்துக்கு இரண்டு முறை இதைச் செய்து பார்த்துட்டு என்கிட்ட சொல்லுங்க’னு சொன்னார்.
அதே போல செய்தப்போ நெல்லிக்காய் காய்ச்சு குவிஞ்சுது. போன வருஷம் ஒரு மரத்துக்கு 15 ஆயிரம் ரூபாய் அளவுக்கு வருமானம் கிடைச்சுது. மலைநெல்லியில ஊறுகாய் தயாரிச்சிருக்கேன். அது ரொம்ப சுவையா இருக்கும். நினைத்தாலே எச்சில் ஊறும். ஆனா, அதை சுவைக்கத்தான் இப்போ நம்மாழ்வார் இல்லை” என்று ஆதங்கப்பட்ட மனோகரன், தொடர்ந்தார்.
மரங்களின் அவசியம்!
“என்னுடைய பண்ணைக்கு நடுவில் ஒரு சின்ன மாந்தோப்பு இருக்கு. அங்க மர நிழல்ல கயிற்றுக்கட்டில் போட்டு ஓய்வெடுத்த நம்மாழ்வார் அய்யா, பண்ணையில் விளைந்த மாம்பழத்தை சுவைத்தார். அப்படியே மாமரங்கள்ல கவாத்து பண்றது பத்தியும் சொல்லிக் கொடுத்தார். ஒரு நாள் முழுக்க எனது பண்ணையில் இருந்து ஏகப்பட்ட ஆலோசனைகளைச் சொல்லிட்டு கிளம்பும்போது, ஒரு வேம்புக்கன்னையும், ஒரு புங்கங்கன்னையும் நட்டு வைத்தார். அதை நடவு செய்றப்போவும், ‘ஒவ்வொரு பண்ணையைச் சுற்றிலும் மரங்கள் அவசியம். அதுவும் வேம்பு, புங்கை, பூவரசு மரங்கள் ரொம்ப அவசியம். காற்றுச் சுத்தம், வெப்பத்தணிவு, பறவைகள் இருப்பு மூன்று இயற்கை நிகழ்வுகளும் நடைபெற இது முக்கியம்’னு சொன்னார்” என்ற மனோகரன், நிறைவாக,
வணக்கத்துக்குரியவர் ஆக்கிய அடக்க குணம்!
“அய்யாவுக்கு பிடிச்ச வேப்ப மரத்தில்தான் அவர் படத்தை மாட்டியிருக்கேன். அய்யாவை பொருத்தவரை, தான் சொல்லித்தரும் விஷயங்களை நியாயப்படுத்தி பேசமாட்டார். வலியுறுத்தவும் மாட்டார். ‘நான் சொல்ற தொழில்நுட்பங்களை உங்கள் வயல்ல நடைமுறைப்படுத்திப் பாருங்கள். திருப்தி இருந்தால் தொடருங்கள். நம்மாழ்வார் சொல்றார்ங்கிறதுக்காக எதையும் செய்யவேண்டாம்’னு ஒவ்வொரு கூட்டத்துலயும், பயிற்சியிலயும் சொல்வார். அந்த ‘அடக்க குணம்’தான் அவரை வணக்கத்துக்குரியவர் ஆக்கியிருக்கு. என்னைப் பொறுத்தவரை அவர் பசுமைத் தெய்வம்தான்” என்று சொல்லி  நம்மாழ்வாருக்கு வீர வணக்கம் வைத்து விடைகொடுத்தார். 
தொடர்புக்கு,
மனோகரன்,
செல்போன்: 94430-08689.

0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites