இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Sunday, December 6, 2015

சிக்கனமாக வளர்க்கலாம், சிப்பிக்காளான்..!


சென்ற தலைமுறையில் விவசாயம் பார்த்து வந்தவர்கள் தங்கள் பிள்ளைகள் விவசாயத்துக்கு வரக்கூடாது என்ற மனநிலையில் இருந்தார்கள். ஆனால், இன்று விவசாயத்துக்கே சம்பந்தமில்லாத பல இளைஞர்கள் கூட விவசாயத்தில் கலக்க ஆரம்பித்து இருக்கிறார்கள். இது ஓர் ஆரோக்யமான மாற்றம். அந்த வகையில், காளான் வளர்ப்பு மூலம் கணிசமான வருமானம் பார்த்து வருகிறார், பொறியாளர் ராஜ்குமார். சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் இருக்கிறது, இவரது காளான் பண்ணை.
“பொறியியல் பட்டம் படிச்சுட்டு சென்னையில் தனியார் நிறுவன வேலையில இருந்தேன். சம்பளம் செலவுக்குத்தான் சரியா இருந்தது. வேற வேலை பார்க்கலாம்னு நினைச்சப்ப இனி சம்பளத்துக்கு வேலை பார்ப்பதை விட நாமே சுயதொழில் பண்ணனும்னு முடிவு பண்ணிணேன். அப்ப என் நண்பர்கள் காளான் வளர்ப்பு பற்றி சொன்னாங்க. அவங்களோடு சேர்ந்து பயிற்சி எடுத்துக்கிட்டு, இந்த இடத்தை வாடகைக்குப் பிடிச்சு, பண்ணை அமைச்சேன்.
இது பதினைந்து சென்ட் இடம். 600 சதுரடியில் கீற்றுக் கொட்டகை அமைச்சு, சிப்பிக்காளான் உற்பத்தி செய்றேன். கீற்றுக் கொட்டகை அமைச்சு, கீழே மணலைக் கொட்டிட்டா காளான் வளரத் தேவையான குளிர்ச்சியான சூழல் கிடைச்சிடும். காளான் வளர்க்கத் தேவையான விதையை ஒரு பாக்கெட் (350 கிராம்) நாற்பது ரூபாய்க்கு வாங்குறேன். அதை வெச்சு ரெண்டு படுக்கைகள் தயாரிக்கலாம். வைக்கோலையும், விதையையும் கொண்டு தயாரிக்கிற படுக்கைகளை உரியில் தொங்கவிட்டு, நீர் தெளிச்சுக்கிட்டு வந்தா, 25 நாளில் இருந்து 45 நாட்கள் வரை காளான் அறுவடை செய்யலாம்.
100 படுக்கைங்க இருந்தா தினம், மகசூலா 10 கிலோ முதல், 20 கிலோ வரை அறுவடை செய்யலாம்.
கிலோ 150 ரூபாய்க்கு விற்பனை செய்றேன். செலவு போக, தினமும் ஆயிரம் ரூபாய் லாபமா கிடைக்குது. விற்பனைக்குப் பிரச்னையே இல்லை. தினமும் பதினைந்து கிலோ காளானை, திருச்சி, மதுரைனு அனுப்புறேன். காளானை மதிப்புக்கூட்டியும் விற்பனை செய்றேன். பொறியியல் படிப்பு மூலம் கிடைக்காத நம்பிக்கை இந்த விவசாயம் மூலமா கிடைச்சிருக்கு” என்றார் சிலாகித்து.
திரு.ராஜ்குமார் தொடர்பு எண்- 98408-02213

காளான் வளர்ப்பு அறைகள்!
காளான் வளர்ப்புக்கு படுக்கைகள் தொங்க விட ஓர் அறை (ரன்னிங் ஷெட்); காளான் வளர ஓர் அறை; மற்ற வேலைகள் செய்வதற்கு ஓர் அறை என மூன்று அறைகள் தேவை. படுக்கைகளைத் தொங்க விடுவதற்கான அறை, 10 அடி அகலம், 30 அடி நீளம் இருக்க வேண்டும். கூரை 15 அடி உயரத்தில் இருக்க வேண்டும். கூரைக்குக் கீழே காளான் படுக்கைகளை உரி போல தொங்க விடுவதற்கான அமைப்புகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
300 சதுரடி அளவு அறையில் ஒர் உரியில் நான்கு படுக்கைகள் என்ற விகிதத்தில், 900 படுக்கைகளைத் தொங்க விட முடியும்.
காளான் வளர்ப்பு அறை அமைக்க 11 அடி அகலம், 60 அடி நீளம், மூன்றரை அடி ஆழத்தில் இரண்டு குழிகள் எடுத்துக்கொள்ளவேண்டும் (தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் 3 அடி ஆழம் என பரிந்துரை செய்கிறது). குழியின் மேற்புறத்தில் ஆறடி உயரத்துக்கு ஆர்ச் அமைத்து, ஊதா நிற ‘சில்பாலீன் ஷீட்’ கொண்டு ‘பசுமைக்குடில்’ போல அமைக்க வேண்டும். வெயில் அதிகமான பகுதியாக இருந்தால், பசுமைக்குடிலுக்கு மேல் தென்னகீற்றுகளைப் போட்டு வைக்கலாம். குழியின் தரைப்பகுதியில் அரை அடி உயரத்துக்கு மணலைக் கொட்டி வைக்க வேண்டும். குடிலின் ஒரு பக்கத்தில் காற்றை வெளியேற்றும் ‘எக்ஸாஸ்ட் ஃபேன்’ அமைக்க வேண்டும்.

70 நாட்களில்...
தரமான புது வைக்கோலை 2 முதல் 3 அங்குல நீளத்துக்கு வெட்டி, சுத்தமான தண்ணீரில் 5 மணி நேரம் ஊற வைத்து, நெல் அவிக்கும் டிரம்மில் 45 நிமிடங்கள் அவிக்க வேண்டும். பிறகு, நிழலான இடத்தில் கொட்டி கையில் பிடித்தால், ஈரம் ஒட்டாத அளவுக்கு உலர்த்த வேண்டும்.
14 X 26 என்ற அளவில், உள்ள பாலித்தீன் பையில் கொஞ்சம் வைக்கோல் கொஞ்சம் காளான் விதைகள்...  என அடுக்கடுக்காக நிரப்பி பையைச் சுற்றிலும் தொற்று நீக்கம் செய்யப்பட்ட சாக்குத் தைக்கும் ஊசியால் 9 துளைகள் இட வேண்டும். தயாரிப்புக்குப் பயன்படுத்தும் விதைகள், வெண்மை நிறத்தில் இருக்க வேண்டும். மஞ்சள், கறுப்பு நிறங்களில் இருந்தால், அந்த விதைகளைப் பயன்படுத்தக்கூடாது.
இப்படித் தயாரிக்கப்பட்ட படுக்கைகளைப் படுக்கைத் தயாரிப்பு அறையில் தொங்க விட வேண்டும். இந்த அறையின் வெப்பநிலை 24 முதல் 28 டிகிரி செல்சியஸ் இருக்க வேண்டும். தினமும் அறையின் வெப்பநிலை மற்றும் ஈரப்பதம் ஆகியவற்றைப் பராமரிக்க தரையில் மணல் பரப்பி, அதன் மீது தண்ணீர் தெளிக்க வேண்டும். தொங்கவிடப்பட்ட படுக்கைகளில் 18 முதல் 24 நாட்களில் மைசீலியம் பூஞ்சணம் பரவிவிடும்.  
 
நன்கு பூஞ்சணம் பரவிய படுக்கைகளை கத்தி மூலம் குறுக்காக வெட்டி இரண்டு பைகளாக்க வேண்டும். வெட்டப்பட்ட பகுதியில்... அவித்து ஆறவைக்கப்பட்ட கரம்பை மண்ணைத் தூவி, காளான் வளர்ப்பு அறையில் (பசுமைக் குடில் போன்ற அறை) வைக்க வேண்டும். படுக்கைகளை வைப்பதற்கு முன்பாக அறையைத் தொற்றுநீக்கம் செய்ய வேண்டும். படுக்கைகளை அடுக்கிய பிறகு, தினமும் கைத்தெளிப்பான் மூலம் தண்ணீர் தெளிக்க வேண்டும். இந்த அறையில் 30 முதல் 32 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் 85 சதவிகித ஈரப்பதமும் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். பராமரிப்பில் ஈடுபடும் நபர்கள் கால்களை சுத்தமாகக் கழுவிய பிறகே அறைக்குள் நுழைய வேண்டும்.
வளர்ப்பு அறையில் வைத்த படுக்கைகளில் 7 முதல் 12 நாட்களில் மொட்டு வைக்க ஆரம்பிக்கும். 12 முதல் 18 நாட்கள் வரை தொடர்ந்து 6 நாட்கள் வரை அறுவடை செய்யலாம். இது முதல் அறுவடை. அடுத்து 7 நாட்கள் கழித்து, ஆறு நாட்கள் வரை இரண்டாவது அறுவடை செய்யலாம். அடுத்து 10 நாட்கள் கழித்து, ஆறு நாட்கள் வரை மூன்றாவது அறுவடை செய்யலாம். படுக்கை தயாரித்தது முதல், கடைசி அறுவடை வரை ஏறக்குறைய 70 நாட்கள் ஆகின்றன. இடைப்பட்ட நாட்களில் களைக் காளான்கள் முளைத்து வரும். அவற்றை அப்புறப்படுத்த வேண்டும்.
காசி.வேம்பையன், அ.சையது அபுதாஹிர்
படங்கள்: எஸ்.சாய்தர்மராஜ், தே.சிலம்பரசன்
வணக்கம், காஞ்சிபுரம் மாவட்டம், காட்டுப்பாக்கம் வேளாண் அறிவியல் மையத்தில், காளான் வளர்ப்பு குறித்த பயிற்சிகள் நடைபெற்று வருகின்றன. அங்கு தொடர்பு கொண்டு பயன் பெறவும். தொடர்புக்கு, பேராசிரியர் மற்றும் தலைவர், வேளாண் அறிவியல் மையம், ( எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம் எதிரில்) காட்டுப்பாக்கம், காஞ்சிபுரம்603203.தொலைபேசி: 04427452371


அன்புடையீர் வணக்கம், ‘பலே’ வருமானம் கொடுக்கும் பால்காளான் கட்டுரையில் இடம்பெற்ற திரு.ராஜ்குமார் தொடர்பு எண்- 98408-02213, செயல்பாட்டில் உள்ளது. தொடர்பு கொண்டு பயன்பெறவும். ( ராஜ்குமார் அண்மையில் மலைப் பகுதிகளுக்கு சென்றிருந்தேன். இதனால், தொலைபேசி இணைப்பு கிடைத்திருக்காது என்று சொல்கிறார்)

0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites