இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Thursday, December 13, 2012

வாழ்வு தந்த டீ !



ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னாலும் பெண் இருக்கிறாள் என்பார்கள். உண்மைதான்... நேருவின் வெற்றிக்குக் காரணமான ஆனந்தி நேருவின் வாகனத்தின் பில்லியனியேலே இருக்கிறார்... அவருடைய உழைப்பின் வடிவத்தில்! வேலை செய்யவேண்டுமென்றால் பெரிதாகப் படித்திருக்க வேண்டும் என்றெல்லாம் இல்லை... நமக்குத் தெரிந்த வேலையைச் செய்தே சம்பாதிக்க முடியும் என்பதற்கு ஆனந்தி ஓர் அடையாளம்! டீ வியாபாரம்தான் இவர்களுடைய தொழில்!

 
நாம் அவரைச் சந்திக்கச் சென்ற நேரத்தில் நேரு தன் பைக்கில் டீ பிளாஸ்க்குகளைக் கட்டிக் கொண்டிருந்தார். ஆனந்தி அவருக்கு உதவி செய்துகொண்டிருக்கிறார். `டீ` பிசினஸில் கணவரோடு கைக்கோர்த்து செய்யும் ஆனந்தி ஒரு கோப்பை தேனீரை நமக்கும் கொடுத்துவிட்டுப் பேச ஆரம்பித்தார்.

"எங்களுக்கு சொந்த ஊர் கிருஷ்ணகிரி மாவட்டத்தில இருக்கிற ஊத்தங்கரை கிராமம். நான் எட்டாவது வரைக்கும்தான் படிச்சிருக்கேன். அதுக்குமேல வீட்டுல படிக்க வைக்கலை. என் கணவர் நேரு... அவரும் பெரிய படிப்பெல்லாம் படிக்கலை. விவசாயம்தான் எங்களோட தொழில். கணவரும் நானும் பக்கத்து பக்கத்து ஊர்தான். பெத்தவங்க பார்த்து வைத்த திருமணம்தான் எங்களோடது. திருமணமாகி இரண்டு வருடங்கள் எங்க கிராமத்திலதான் இருந்தோம். சென்னை வருவோம்ன்னு நினைச்சுகூட பார்த்ததில்லை.

என்னோட தம்பி ஐ.டி.ஐ. படிச்சுட்டு சென்னையில் வேலை பார்த்துட்டு இருந்தாரு. திடீரென்னு அவருக்கு ஆக்சிடெண்ட் ஆகி கை அடிபட்டதால் அவருன்னால வேலைக்கு போகமுடியலை. அவரை பார்க்கிறதுக்கு நானும் என் கணவரும் சென்னை வந்தோம். அப்பதான் டீத்தூள், காபித்தூள் பாக்கெட் போட்டு வித்துகிட்டு இருந்தாரு. தொழில் எப்படி போகுதுனு கேட்டப்ப நஷ்டமா போறதா சொன்னாரு. அப்ப எங்களால் எதுவுமே செய்ய முடியலை. ஊ_ருக்குப் போயிட்டேன். என் கனவர் இங்கேயே இருந்து வேலை தேடினார். அப்போதான் நாமே ஏதாவது தொழில் செய்யலாமே தம்பிகூடச் சேர்ந்துனு சொன்னார். மறுபடியும் சென்னை வந்தேன். என்ன செய்யலாம்னு யோசிச்சோம்.

அப்போதான், தம்பி செய்யும் தொழிலான டீத்தூள், காபித்தூள் போடுறதுக்கு பதிலாக ஏன் டீ, காபியே போட்டு கொடுக்ககூடாதுன்னு தோணுச்சு. தம்பியும் அதையே பண்ணலாம் எனக்கு தெரிந்த நண்பர்கள் மூலம் ஆபீஸ்களுக்கு போய் கொடுக்கலாம் என்று சொன்னார். ஆரம்பித்தில் ஆபீஸ்களுக்கு போய் குடித்து பார்க்கச் சொல்லி டீ குடுத்தோம். அதன்பின் அவர்கள் கேட்டபிறகு ஆர்டர் எடுத்தோம். இப்படித்தான் இதை ஒரு தொழிலாக தேர்ந்தெடுத்தோம்..." என்றார் ஆனந்தி.

ஆனந்தியின் நாள் அதிகாலையிலேயே தொடங்கிவிடுகிறது.
"காலையில் ஐந்து மணிக்கெல்லாம் எழுந்து வேலை செய்ய ஆரம்பித்திடுவேன். நான் டீ போட்டு தந்துவிடுவேன். கணவரும் தம்பியும் போய் கொடுத்துவிட்டு வருவார்கள். இப்படிதான் படிப்படியாக ஒவ்வொரு ஆபீஸாக கொடுக்க ஆரம்பித்தோம்... இன்று ஒரு நாளைக்கு நான்கு ஷிப்டாக கிட்டத்தட்ட ஏழு அலுவலகங்களுக்கு டீ சப்ளை செய்றோம். இப்பொழுது கணவரும் தம்பியும் வேறுவேறு இடங்களில் ஆர்டர் எடுத்து டீ கொடுத்து கொண்டிருக்கிறார்கள். மற்றபடி எல்லாம் சேர்ந்துதான் செய்கிறோம். ஆரம்பத்தில் நான் ஒருத்தியாகத்தான் எல்லா வேலையும் செய்தேன். காலையில் ஐந்து மணிக்கு எழுந்தால் இரவு தூங்க செல்வதற்கு பனிரெண்டு மணியாகிவிடும். சில சமயங்களில் நைட் ஷிப்டில் இருக்கிறவர்கள் கேட்டால்கூட கொண்டுபோய் கொடுப்போம். ஓய்வில்லாத வேலை என்று மனது ஒரு ஓரமாக நினைத்தாலும். சொந்தத்தொழில் என்கிற சந்தோஷம் இருக்கு..." என்றார்.

ஆனந்தி மனதில் இந்த சந்தோஷம் இருந்தாலும் ஊர் அவர்களை வேறு மாதிரியாகத்தான் பார்த்திருக்கிறது.
"சென்னை வந்ததிலிருந்து இன்றுவரை இந்த தொழிலைத்தான் செய்கிறோம். ஆரம்பத்தில் எங்களைப் பார்த்து சிலர் ரொம்பக் கேவலமாப் பேசுனாங்க...`டீ கிளாஸ் கழுவுற வேலைதானன்னு` சில பேர் திட்டக்கூட செய்தாங்க. ரொம்ப வருத்தமா இருந்தது. ஆனால், நாங்க அப்படி நினைக்கலை. அதையெல்லாம் தாண்டி இன்னைக்கு நாங்க நல்லா வாழ்ந்துட்டு இருக்கோம். ஏன்னா நாங்க யாரையும் ஏமாத்தலை யாரோட உழைப்பிலும் வாழலை. எங்களுக்கு தெரிஞ்சதவைத்து சொந்தகாலில் நிக்கிறோம். அப்படி பேசினவங்க முன்னாடி கடவுள் எங்களை தன்னம்பிக்கையோடதான் வைத்திருக்கிறான். முன்னாடி வீட்டோட கிச்சனில்தான் டீ போடுவோம். இப்பொழுது டீ ரூம் தனியாவே வைச்சுருக்கிறோம். அதுமட்டுமில்லை, இதுநாள்வரை நான் ஒருத்தியாதான் டீ போட்டுகிட்டு இருந்தேன். இப்பொழுது டீ போடுவதற்குன்னு நாலு பேரை வேலைக்கு வைத்திருக்கோம். உழைப்புகேற்ற ஊதியத்தை எங்களுக்கு இறைவன் தந்துக் கொண்டிருக்கிறான். எங்க மேல நம்பிக்கையாலும் உழைப்பாலும் எங்க தொழிலில்ல எந்தக் குறையும் இல்லை" என்ற ஆனந்தியின் முகப் பொலிவில் கோடிகளை வென்ற குதூகலம் தெரிந்தது.

அது உழைப்பில் விளைந்தது... அழகாகவே இருந்தது!

2 comments:

உழைப்பின் வேர்கள் கசப்பானதாய் இருந்தாலும் அதன் கனிகள் அதிருசியுடன்!

தாங்கள் வருகைக்கு நன்றி

உண்மை

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites