இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Sunday, October 6, 2013

தீக்குச்சி மரம் ஒரு அற்புத மாற பணபயிர்

தொழிற்சாலையை சார்ந்த மரம் சாகுபடி
முன்னுரைAilanthus excelsa
தமிழ் நாட்டில் மூன்றில் ஒரு பங்கு நிலப்பகுதி தரிசு நிலமாக உள்ளது. இந்த தரிசு நிலங்கள் வளமற்று இருப்பதால் வேளாண் பயிர் செய்ய ஏற்றதாக இல்லை.  இத்தகைய தரிசு நிலங்களில் நீர் மற்றும் மண் வளம் குறைவுற்று இருப்பதால் இங்கு சாகுபடி செய்யும் பயிர் இந்தச் சூழ்நிலைகளை தாங்கி வளரக் கூடியதாக இருக்க வேண்டும். ஆகையால் இந்த சூழ்நிலைக்கு எற்ப மரச்சாகுபடியைச் செய்யலாம்.  குறிப்பாக தீக்குச்சி மரங்களை வளர்ப்பது விவசாயிகளுக்குப் பயனுள்ளதாகவும் மற்றும் இந்நிலப்பகுதியை வளமுள்ளதாகவும் மாற்றிப் பயன் பெறலாம்.
தீக்குச்சி மரம் என்றாலே நமக்கு ஞாபகம் வருவது அய்லாந்தஸ் எக்செல்சா (Ailanthus excelsa)  அதாவது தமிழில் பெருமரம் அல்லது பீநாரி என்றழைப்பார்கள். இது சைமரூபியேஸி என்ற தாவர இனக் குடும்பத்தைச் சார்ந்தது. இந்த மரமானது அதிக வெப்ப நிலையிலும் வறட்சியையும் தாங்கி வளரக்கூடிய தன்மையைப் பெற்றுள்ளது. மேலும், இது வேகமாக வளரச்கூடிய இலையுதிர் மரமாகும்.
முக்கியமாக இந்த மரத்திலிருந்து தீக்குச்சி தயாரிப்பதற்குக் காரணம். இவற்றின் நிறம், மரத்தன்மை, வேகமாக வளரக்கூடிய தன்மை, இலைபோல் எளிதில் உரியும் (Peeling) தன்மையையும் பெற்றுள்ளதாகும். பெருமரத்தைத் தவிர மற்ற மரங்களான அல்ஸ்டோனியா ஸ்காலரிஸ். அந்தோசெப்பாலஸ் கடம்பா. கைரோகார்ப்பஸ் ஜேக்குனி, மீலியா கம்போசிடா, பாப்புலலர் மற்றும் போஸ்வெளியா செர்ரேட்டா போன்ற மரங்களும் தீக்குச்சிக்காக இந்தியாவில் பரவலாக வளர்க்கப்படுகின்றன.
தேவையும் பற்றாக்குறையும்
இந்தியாவில் தீக்குச்சி மர உற்பத்தியில் தமிழ்நாடு முதலிடமும் இரண்டாவதாகக் கேரளா மாநிலமும் பெற்றுள்ளன. ஆண்டுதோறும் இவற்றின் பற்றாக்குறை அதிகரித்த வண்ணம் உள்ளது.  ஏனென்றால் தீக்குச்சி மர உற்பத்தி குறைந்து கொண்டே உள்ளது. அதே சமயம் பிளைவுட் (Plywood)   மற்றும் பிற பயன்பாட்டிற்கும் தீக்குச்சி மரம் பயன்படுத்தப்படுகிறது.  மேலும் இவற்றிற்கேற்ற உற்பத்தி முறையைக் கையாளுவதில்லை.  ஒட்டுமொத்த இந்திய நாட்டின் தீக்குச்சி தேவையில் 95 விழுக்காடு மரத்தை மூலமாகக் கொண்டுள்ளது.  மீதமுள்ள 5 விழுக்காடு மெழுகை மூலமாகக் கொண்டுள்ளது.  இந்த 95 விழுக்காடு தீக்குச்சியை உற்பத்தி செய்ய நம் நாட்டில் ஒரு மாதத்திற்கு 2500 டன் தீக்குச்சி தேவைப்படுகிறது. இதற்குக் குறைந்தபட்சமாக 10,000 டன் மரம் (மூலப்பொருளாக)  தேவைப்படுகிறது.  இதற்கு 6000 ஹெக்டேர் பரப்பளவில் தீக்குச்சி மரத்தினைப் பயிரிட வேண்டும்.
தீக்குச்சி மரத்தின் சிறப்புகள்
¨    இலைபோல் எளிதில் உறியும் தன்மை (Peeling).
¨    வளர்க்கப்படும்போது அதிகமான பராமரிப்பு தேவையில்லை.
¨    இலைகள் கடும் வெப்பத்திலும் பசுமையாக இருக்கும்.
¨    பயிர்செய்வதற்கு இயலாத நிலங்களிலும் இவை செழித்து வளரும்.
¨    குறைந்த அளவு நீரே போதுமானது.
¨    இம்மரம் தூய்மையான வெள்ளை நிறத்தைக் கொண்டுள்ளது.  இதனால் இது ஏற்றுமதித் தரம் வாய்ந்தது.
மரச்சாகுபடி குறிப்புகள் மற்றும் தட்பவெப்பநிலை
இம்மரம் நம் நாட்டில் குஜராத். இராஜஸ்தான். பஞ்சாப். ஒரிசா மற்றும் உத்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும் வறண்ட பகுதிகளிலும் காணப்படுகின்றன.
தமிழகத்தில் பீதன மரத்தை மானாவரி விவசாய நிலங்களிலும், வரப்பு ஓரங்களிலும் தோட்டங்களின் வேலி ஓரங்களிலும் வளர்க்கிறார்கள். குறிப்பாக இம்மரம் வறண்ட பகுதிகளுக்கு ஒரு வரப்பிரசாதமாகும். மேலும் இந்த மரமானது பல வகை மண் வகைகளுக்கேற்ற முறையில் வளரும் தன்மையை பெற்றுள்ளது.  அதாவது மானாவாரிப் பகுதிகளில் செம்மண், சரளைப் பகுதிகள், சுண்ணாம்பு நிலங்களிலும் நன்றாக வளரக்கூடியது.  அதாவது போதுமான ஈரப்பதம் கொண்டிருந்தால் செழிப்பாக வளரக்கூடியது.  ஆனால் கடற்பாங்கான மண்ணிலும் அதிக அளவு களிமண் உள்ள இடத்திலும். அதிக அளவு நீர் தேங்கும் இடத்திலும் வளர இயலாது.Ailanthus seelings

நல்ல ஆழமான வடிகால் வசதியுடன் கூடிய மண்ணில் நன்றாக வளரக்கூடியது.  இத்துடன் மழையளவு குறைந்தபட்ச அளவு 500 / 1900 மி.மீ அதிகபட்சமாக 2500 மி,மீ தேவைப்படுகிறது.  அடுத்தபடியாக குறைந்தபட்ச வெப்பநிலையாக 56535லிருந்து 12.5 யும் அதிகபட்சமாக 45  லிருந்து 47.5 டிகிரி செல்சியசையும் தாங்கி வரளக்கூடியது.  சராசரி வெப்பநிலை 30 லிருந்து 42.5 வரை நன்றாக வளரக்கூடிய இயல்பைப் பெற்றுள்ளது. சராசரி காற்றின் ஈரப்பதம் 40-80 விழுக்காடு முதல் ஜனவரி மாத்திலிருந்து 60-90 விழுக்காடு வரை ஜுலை மாதம் வரை நல்ல வளர்ச்சிக்குத் தேவைப்படுகிறது.
தரமான நாற்றுக்களைத் தயாரித்தல்
இவற்றில் முக்கியமாக நாம் கவனிக்க வேண்டியவை விதை சேகரிக்கும் மாதம் மற்றும் சேகரிக்கும் முறை ஆகியவை இந்த வகை மரத்தின் விதையானது காற்றில் அடித்துச் செல்லக்கூடிய மிகவும் இலேசான விதையாகும்.  எனவே, முதிர்ந்த விதையை மரத்திலிருந்தே கொத்துக் கொத்தாகச் சேகரிக்கப்பட வேண்டும்.
தென்னிந்தியாவில் பிப்ரவரி மாதத்திலிருந்து மார்ச் மாதத்திற்குள் பூபூக்க ஆரம்பித்துவிடும்.  அதே நேரத்தில் வட இந்தியாவில் ஏப்ரல் மாத்தில் பூபூக்கும்.  முதிர்ந்த விதைகளை மே மாத்திலிருந்து ஜுன் மாதத்திற்குள் சேகரிக்க வேண்டும். ஒரு கிலோ எடையில் சுமார் 15000 விதைகள் கிடைக்கும் மேலும் விதையின் இறகுகளையும் மேல் தோலையும் நீக்கிய விதையை உடனே விதைக்கும் பொழுது முளைப்புத் திறன் அதிகமாக இருக்கும் சேகரித்த ஒரு மாதம் அல்லது இரண்டு மாதத்திற்குள் தாய்ப் பாத்தியில் விதைத்திட வேண்டும். தாய்ப் பாத்தியானது 10 மீ நீளமும் 1மீ அகலமும் இருக்குமாறு மேட்டுப்பாத்தியாக அமைத்தல் வேண்டும்.  மேலும் 15 செமீ ஆழத்திற்கு நன்கு கொத்திப் பண்படுத்த வேண்டும். இந்த முறையில் 1:1:1 என்ற வகிதத்தில் மண். மணல் மற்றும் மக்கிய தொழு உரம் ஆகியவற்றை உபயோகித்து 15 செ.மீ உயரத்திற்கு மேட்டுத் தாய் பாத்தி அமைத்தல் வேண்டும்.
இம்மரத்தின் விதையின் முளைப்புத் திறனை  அதிகரிப்பதற்காக விதைகளைக் குளிர்ந்த நீரில் ஊறவைத்து. பின்னர் உலர்ததும் முறையை மூன்று நாள் தொடர்ந்து செய்யும்பொழுது இவற்றில் உள்ள முளைப்புத் திறனைத் தடுக்கும் வேதிப்பொருட்களை நீக்குகிறது.  இதனால் விதையில் முளைப்புத் திறன் 51% அதிகரித்துள்ளது. மேலும் தண்டு மற்றும் வேரின் வளர்ச்சியும் அதிகரித்துள்ளது. 1 சதுர மீட்டா மேட்டுப் பாத்தி இடத்தில் 50கி விதையை விதைப்பதன் மூலம் அதிகமான மற்றும் செழிப்பான நாற்றுகளைப் பெற முடியும் (குமார், 2007).
அதாவது ஒரு மாதம் அல்லது இரண்டு மாதத்திற்குள் விதைக்கப்படா விட்டால் விதை மலட்டு விதையாக மாறிவிடும்  (Loss of Viability)   தாய்ப் பாத்தியில் 45 நாட்கள் கழித்து அவற்றைப் பாலிதீன் பைகளில் நட வேண்டும்.  பாலிதீன் பையானது  1 1 1  என்ற விகிதத்தில் மண், மணல் மற்றும் சாண எரு இவற்றுடன் தரமான நாற்றுக்கள் மற்றும் நாற்றுக்களின் வயதைக் குறைப்பதற்காக ஒருங்கிணைந்த நுண்ணூட்ட உர மேலாண்மையைக் கையாள வேண்டும்.  அதாவது 150 மி.கி நைட்ரஜன் 250 மிகி பாஸ்பரஸ் மற்றும் 100 மிகி பொட்டாஸ் உரத்துடன் 40 கிராம் மண்புழு உரத்தைப் பயன்படுத்துவதன் மூலம் செழிப்பான நாற்றுக்களையும். நாற்றுக்களின் வயதையும் கணிசமாகக் குறைக்கலாம் (குமார் 2007).
இவ்வாறு தயாரித்த பைகளில் நாற்றை நட வேண்டும். இத்துடன் ஒவ்வொரு நாளும் நீர தெளிக்க வேண்டும். அது மட்டுமல்லாமல்  களைகள் இல்லாமல் பாதுகாக்க வேண்டும். இந்த காலத்திற்குள் குறைந்தது இரண்டு முறை இட மாற்றுதல் செய்ய வேண்டும்.
அடுத்தபடியாக இந்த  நாற்றுக்களைத் தரம் பிரித்தல் வேண்டும்.  இந்தத் தரமானது தண்டின் தடிமனை பொருத்தது.  முதல் தர நாற்றுக்களை  நடவு செய்ய அறிவுறுத்தப்படுகிறது.  இந்த நாற்றுக்களைப் பயன்படுத்துவதன் மூலம் சீரான வளர்ச்சியைக் காண முடியும்.
நுண்ணூட்ட உர மேலாண்மையைக் கையாளுவதன் மூலம் 1000 பெருமர நாற்றுக்களை உற்பத்தி செய்ய ரூ, 1634 செலவாகிறதுஇந்த முறையின் மூலம் நாற்றுக்களின் வயதை 48 நாள் குறைக்க முடியும். இல்லையென்றால் நல்ல தரமான நாற்றுக்களை உற்பத்தி செய்யக் குறைந்தது மூன்று மாத காலம் தேவைப்படுகிறது, மேலும் இதர செலவான ரூ,304யும்  குறைக்கலாம் என்பது ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது (குமார், 2007).
நடவு முறை
சுமார் மூன்று மாதம் வளர்ந்த பெருமரக்கன்றுகளைப் பண்படுத்தப்பட்ட நிலங்களில் நடவு செய்யலாம்.  ஏற்கனவே குறிப்பிட்டது போல விவசாய நிலங்களிலும், வரப்பு ஓரங்களிலும், தேவைப்பட்டால் தனித் தோட்டமாகவும் சாகுபடி செய்யலாம். தண்ணீர் வசதியுள்ள பகுதிகளில் வருடத்தின் எம்மாதத்திலும் இம்மரக்கன்றுகளை நடவுசெய்யலாம்.  தரிசு மற்றும் மானாவாரி நிலங்களில் பருவ மழைக்காலங்களில் ஆரம்பத்தில் நடவு செய்வது நன்று. இந்த மரக்கன்றுகளைத் தோட்டங்களில் நடும்பொழுது 45 ஜ் 45 ஜ் 45 செ,மீ நீளம் அகலம் மற்றும் ஆழம் கொண்ட குழிகளில் மேல் மண்ணுடன் சுமார் 150 மி,கி நைட்ரஜன், 250 மி,கி பாஸ்பரஸ் மற்றும் 100 மிகி பொட்டாஸ் உரத்துடன், 40 கிராம் மண்புழு உரமும், 20 கிராம் அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியம் ஆகியவற்றைச் சரியான விகிதத்தில் நிறப்பப்பட்ட குழிகளில் பாலிதீன் பைகளை கிழித்து அப்புறப்படுத்தியபின், அதாவது வடகிழக்கு பருவமழையின் போது தண்ணீர் பாயும் நிலமாக இருந்தால் ஒவ்வொரு செடிக்கும் 3×3 மீ இடைவெளியும் மானாவாரிப்பகுதியில 4 x 4  மீட்டா இடைவெளியில் மரக்கன்றுகளை நடவு செய்யலாம்.  நடவு செய்யும் பொழுது மண் உதிராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். பின்பு செடியைச் சுற்றி நன்கு அழுத்திவிட வேண்டும்.  நடவு செய்த இரண்டு மாதத்திற்குள் காய்ந்து மடிந்த செடிகளை அகற்றிவிட்டு, புதிய நாற்றுக்களைக் கொண்டு நடவு செய்ய வேண்டும்.
பயிர்ப்பாதுகாப்பு முறைகள்
அவ்வப்போது களைகள் அதிகமாக இருக்கும்பொழுது நன்றாக உழுதுவிட வேண்டும். இவற்றைத் தவிர செடியைச் சுற்றி நன்றாகக் கொத்தி அதே மண்ணைக் கொண்டு செடிக்குச் செடி வட்டப்பாத்தி அமைத்தல் வேண்டும். இவை மழை நீரைச் சேமிக்க உதவுகிறது.  இந்த வட்டப்பாத்தி மேடு பள்ளத்திற்கு ஏற்றவாறு அமைக்க வேண்டும்.
மண்ணின் ஈரப்பதத்தை பாதுகாப்பதற்கும் மற்றும் களையின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்துவதற்கும் தோட்டத்தில் கிடைக்கும் தழை இலைகளைக் கொண்டு போர்வை இடுதல் (Mulching) வேண்டும், அத்துடன் இவை அதிக அளவில் மண்புழு வளர ஏதுவாக இருக்கும்.  மேலும் 3 அடி உயரம் வளர்ந்தவுடன் செடியைச் சுற்றி லேசாகக் கொத்தி மண் அணைக்க வேண்டும்.  மழை பெய்யும் காலத்திற்கு முன்னால் டிராக்டர் கொண்டு நன்கு உழுதுவிட்டால் மழை பெய்யும் போது கிடைக்கும் தண்ணீரானது செடி வளர்வதற்கு மிகவும் ஏதுவாக இருக்கும்.  செடியைச் சுற்றி வளர்ந்துள்ள களைகளை மாதத்திற்கு ஒரு முறை கொத்தி எடுத்தால் செடிக்கு ஈரப்பதம் நன்றாகக் கிடைக்கும்.
நீர்ப்பாசனம், நீர்ப்பாய்ச்சுதல்
தண்ணீர்ப் பாய்ச்சி பயிரிடும் வசதி உள்ளவர்கள் நாற்று நட்ட மூன்று ஆண்டிற்குக் கோடை காலங்களில் பத்து நாட்களுக்கு ஒரு முறையும், மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு 15 நாட்களுக்கு ஒரு முறையும் நீர் பாய்ச்சுதல் அவசியம்.  சொட்டு நீர்ப்பாசனமும் பயன்படுத்தலாம்.
உரமிடுதல்
நீர்ப்பாசன நிலங்களில் 100 கிராம் டி.ஏ.பி, 100 கிராம் வேப்பம் புண்ணாக்கு மற்றும் 5 கிலோ மக்கிய தொழு உரம் என்ற அளவு முறையில் இரண்டாவது  ஆண்டில் இருந்து ஒவ்வொரு செடிக்கும் பயன்படுத்த வேண்டும்.
பக்கக்கிளைகளை அகற்றுதல் (Pruning)
உலர்ந்த மற்றும் நோய் (அ) பூச்சி தாக்கிய கிளைகளை அவ்வப்போது அகற்றிவிட வேண்டும்.  இவ்வாறு செய்யும்பொழுது நமக்கு நேரான தடிமரத்தினைப் பெறமுடியும். அதாவது ஆங்கிலத்தில்   (Pruning) என்று சொல்வார்கள்.  குறைந்தது 10 அடி உயரமாவது தடி மரமாகக் கிடைக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
பூச்சி மற்றும் நோய்த் தடுப்பு முறைகள்
இவற்றில் பூச்சி தாக்குதல் அதிகமாகவே உள்ளது. அதாவது இலைகளைத் தாக்கக்கூடிய   (Atteva Fabricilla) மற்றும் என்ற Eligma Narcis பூச்சியும் அதிக அளவில் தாக்குகின்றது. இவற்றைக் கட்டுப்படுத்தாமல் விட்டுவிட்டால் வளர்ச்சி குன்றிவிடும். இவை மட்டுமல்லாமல் தடிமரத்தை வண்டுகள் தாக்கும் அபாயம் உள்ளது.  நாற்றங்காலில் நோய் தாக்குதலைக் கட்டுப்படுத்த பெவி1டினை 0,1 சதவீதம் என்ற முறையில் பயன்படுத்தல் வேண்டும்.  வளர்ந்த தோட்டத்தில் பூச்சி தாக்குதலைக் கட்டுப்படுத்த 2 மில்லி லிட்டர் மோனேகுரோட்டபாஸ் மருந்தை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து தெளித்தல் வேண்டும்.

மேற்கண்ட முறையைப் பின்பற்றி வளர்க்கும் மரமானது ஆண்டு ஒன்றுக்கு 2 மீட்டர் உயரம் வரை வளரும். இத்துடன் 8 முதல் 14 செ.மீ வரை சுற்றளவும் வளரக்கூடியது. மரத்தை வெட்டும்பொழுது பூமியிலிருந்து 15-20 செ.மீ உயரம் விட்டு வாள் கொண்டு நன்றாக அறுக்க வேண்டும்.  இப்படி அறுப்பதால் மீண்டும் அதிலிருந்து நன்றாகத் தளிர வாய்ப்புள்ளது. 2  (அ) 3 மாதம் கழித்து இவற்றில் 1  (அ) 2 தளிர்களை மட்டும் விட்டுவிட்டு மற்றவைகளைக் களைத்துவிட வேண்டும். இதன் மூலம் இரண்டிலிருந்து மூன்று முறை அறுவடை செய்யலாம்.  இதே போல் அத்தோட்டத்தை 24 வருடம் வரை பயன்படுத்தலாம்.  மீண்டும் அவற்றை அகற்றிவிட்டுப் புதியதாக நடவு செய்ய வேண்டும்.
பெருமரத்தை அறுவடை செய்யும் விவரம்
1.  வளாந்த மரத்தின் 15 செ.மீ சுற்றளவுக்கு மேலே உள்ள அனைத்துக் கிளைகளும் மரமும் தீக்குச்சி தயாரிக்க உதவும்.
2.   முதலில் 2 அடி விட்டு மரத்தை வாள் கொண்டு சாய்வாக அறுக்க வேண்டும்.
3.   அப்படி வாள் கொண்டு அறுக்கும் மரங்கள் மீண்டும் துளிர்விட்டு இரண்டாவது சாகுபடிக்குத் தயாராகும்.
4.   மரம் வெட்டிய 3 நாள்களுக்குள் உங்கள் நிலத்திற்கு அருகில் உள்ள தொழிற்சாலைக்கு எடுத்துச் சென்றால் எடைக்குறைவுநஷ்டம் ஏற்படாது.
5.   ஒரு வாரம் கழித்து எடுத்துச் சென்றால் எடை கணிசமாகக் குறையும்.
6.   மேலும் தாமதம் ஆனால் மரத்தின் நிறம் மாறிவிடும்பயனற்ற நிலைக்குத் தள்ளப்படும்.
7.   15 நாட்களுக்குள் வெட்டிய மரம் தொழிற்சாலையைச் சேராவிட்டால் தீக்குச்சி தயாரிப்பதற்குப் பயன்படாது. வேறு தொழிற்சாலை வேலைக்குத்தான் பயன்படும்.
பயன்பாடுகள்
இதிலிருந்து தரமான தீக்குச்சிகளைத் தயாரிப்பதுடன் இவற்றின் இலையிலிருந்து மண்புழு உரம் தயாரிப்பதற்கும், பென்சில், மீன்பிடிக்க உதவும் மிதவைகளாகவும் பயன்படுகிறது.  இவற்றின் இலை கால்நடைகளுக்கு ஏற்ற தீவனமாக உள்ளது.  எனவே நான்காவது வருடத்திலிருந்து இவற்றின் இலையை தீவனத்திற்காகப் பக்க கிளைகளை பயன்படுத்திக்கொள்ளலாம்.  மேலும் இம்மரமானது வறட்சியை நன்கு தாங்கி வளரக்கூடியது.  எனவே, அம்மரத்தை மண்ணரிப்பை தடுப்பதற்கும் சாலை ஓரங்களில் நிழலிற்காகவும் பயன்படுத்தலாம்.
பெருமரமும் ஊடுபயிரும்
இந்தத் தீக்குச்சி மரத்தைப் பயிரிட்டால் ஐந்து முதல் ஏழு வருடங்களுக்கு வருமானத்திற்காகக் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. சற்று கூடுதலாக இடைவெளிவிட்டு நடவு செய்தால் ஊடுபயிரும் செய்ய ஏதுவாக இருக்கும்.  மானவாரி இடங்களில் பச்சைப் பயிறு, சூரிய காந்தி, சோளம், துவரை, அவரை என முதல் ஒரு வருடத்திலும், பின் வரும் காலங்களில் பூசணி, தர்பூசணி மற்றும் மருத்துவச் செடிகளையும் பயிரிடலாம்.  தண்ணீர் வசதி உள்ள இடங்களில் கத்தரி, வெண்டை மற்றும் கீரை வகைகளையும் பயிரிட்டுக் கொள்ளலாம். மேலும் வாழை, சப்போட்டா என பழ வகைச் செடிகளையும் பயிரிட்டுக் கொள்ளலாம். இவ்வாறு ஊடுபயிர் செய்வதன் மூலமும் அதிக அளவு இலாபம் ஈட்ட முடியும்.
மகசூல் மற்றும் சந்தை நிலவரம்
பெருமரத்தை மானாவாரி நிலங்களில்  4 x 4 மீட்டா இடைவெளிவிட்டு நடவு செய்யும் பொழுது ஏக்கருக்கு 250 மரங்களும் இவையே நீர்பாங்கான இடங்களில் 3 x 3 மீட்டர் இடைவெளிவிட்டு நடவு செய்யும் பொழுது எக்கருக்கு 444 மரங்களும் கிடைக்கும்.
மகசூல் மற்றும் சந்தை நிலவரம்
பெருமரத்தை மானாவாரி நிலங்களில் 4 x 4  மீட்டா இடைவெளிவிட்டு நடவு செய்யும் பொழுது ஏக்கருக்கு 250 மரங்களும் இவையே நீர்ப்பாங்கான இடங்களில் 3 x 3 மீட்டர் இடைவெளிவிட்டு நடவு செய்யும் பொழுது எக்கருக்கு 444 மரங்களும் கிடைக்கும்.
இவற்றை ஐந்திலிருந்து ஏழு ஆண்டுகள் கழித்து வெட்டும் பொழுது ஒவ்வொரு மரமும் மானாவாரி நிலத்தில் 250 முதல் 300 கிலோவும்  நீர்பாங்கான நிலத்தில் 300 முதல் 350 கிலோவும் குறைந்தபட்ச மகசூலாகக் கிடைக்கும். மேலும் இப்பெருமரத்தைத் தோட்டத்தைச் சுற்றி வேலிப் பயிராகவும் வரப்பு ஓரங்களில் பயிரிடும் பொழுது சுமார் 90 மரம் அதாவது 10 அடி இடைவெளிவிட்டு நடவு செய்யலாம். இப்படிச் செய்யும் பொழுது நல்ல மகசூலையும் பெற முடியும். தோட்டமாக நடவு செய்வதைக் காட்டிலும் வேலிப் பயிராகவோ, வரப்பு ஓரங்களிலோ நடவு செய்து கணிசமான மகசூலையும் பெறலாம் என மர விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்படுகிறது.
தற்போது சந்தை நிலவரம் அம்மரத்திற்கு நல்ல வரவேற்பாகவே உள்ளது. தற்போது உள்ள சந்தை நிலவரப்படி தோராயமாக டன் ஒன்றிற்கு குறைந்த பட்சமாக 5500 லிருந்து ரூ.6000 வரை உள்ளது.  இவை மட்டுமல்லாமல் முதல் மூன்று வருடத்திற்கு ஊடுபயிராகப் பயிரிட்டும் நல்ல வருமானத்தைப் பெற முடியும்.
முகவரி
முதன்மையர்
வனக்கல்லூரி  மற்றும் ஆராய்ச்சி நிலையம் 
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்
மேட்டுப்பாளையம்  641 301
தொலைபேசி எண் : 04254-222010, 04254-222398, 04254-227418
தொலை நகலி : 04254-225064
மின்அஞ்சல் : deanformtp@tnau.ac.in
இணையதளம் : www.fcrinaip.org 

வெளியீடு 
வனக்கல்லூரி  மற்றும் ஆராய்ச்சி நிலையம் 
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்
மேட்டுப்பாளையம்  641 301, தமிழ்நாடு
திட்ட செயலாக்க குழு அறிவியலாளர்களின் தொடர்புக்கு அலைபேசி எண்கள் : 

  1. மேலாளர் (தோட்டங்கள்)
    தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனம்
    காகிதபுரம், கரூர்மாவட்டம் - 639 136
    அலைபேசி - 94425 - 91411
  1. தலைவர் (சுற்றுச்சூழல் பிரிவு)
    சேஷசாயி காகித ஆலை அட்டை நிறுவனம்
    ஈரோடு மாவட்டம் - 638 007
    அலைபேசி - 94433-40236
  1. இயக்குநர்,
    வாசன் தீக்குச்சி தொழிற்சாலை
    வாசன் தீக்குச்சி தொழிற்சாலை
    குடியாத்தம் மாவட்டம் - 632 602
    அலைபேசி - 9345520803


0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites