இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Thursday, January 19, 2012

மீன் வளர்ப்பு

இணையற்ற லாபம் தரும் இயற்கை மீன் வளர்ப்பு !

ரசாயனத்தில் ரூ.47 ஆயிரம்...இயற்கையில் ரூ.75 ஆயிரம்
பளிச்... பளிச்...

அரசாங்கச் செலவில் பண்ணைக் குட்டை.
பசுந்தீவனங்களே போதும்.

ஆறு மாதத்தில் ஒன்றரை கிலோ எடை.
கூடுதல் சுவை.

33 சென்டில் 1,500 கிலோ மீன்.



செழிப்பான நீர்வளம் உள்ள தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் போன்ற பகுதிகளில் உள்ள விவசாயிகளுக்கான சிறந்த உபதொழிலாக இருப்பது மீன் வளர்ப்பு. வழக்கமாக பெரும்பாலான விவசாயிகள் ரசாயன உரங்களையும், அதிகளவிலான அடர்தீவனங்களையும் பயன்படுத்திதான் மீன்களை வளர்க்கிறார்கள். அவர்களுக்கிடையில் கொஞ்சம் வித்தியாசமாக அடர்தீவனத்தைக் குறைத்து, அதிகளவில் பசுந்தீவனங்களை மட்டுமே கொடுத்து சிறப்பான முறையில் மகசூல் எடுத்து வருகிறார், மயிலாடுதுறை அருகே இருக்கும் ஆனந்தக்குடியைச் சேர்ந்த பிச்சை பிள்ளை.



25.10.2010 தேதியிட்ட 'பசுமை விகடன்’ இதழின் பசுமை மேடை பகுதியில், 'கீரையை விரும்பும் மீன்கள்' என்ற தலைப்பில் ஒரு தகவலைத் தந்திருந்தவர்தான் இந்த பிச்சை பிள்ளை.

பண்ணைக்குட்டையில் மீன் வளர்ப்பு!

''விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த எனக்கு, சொந்தமா மூணு ஏக்கர் நெல் வயல் இருக்கு. படிப்பு முடிச்சதும் பாஸ்போர்ட் ஆபீஸுல வேலை கிடைச்சுது. அங்க வேலை பாத்துக்கிட்டே இடையில கொஞ்சம் விவசாயத்தையும் பாத்துக்கிட்டு இருந்தேன். பணி ஓய்வுக்கப்பறம் முழுநேர விவசாயியா மாறிட்டேன். மூணு ஏக்கர்ல, 100 குழி (33 சென்ட்) நிலத்தை மட்டும் ஒதுக்கி, அரசாங்க உதவியோட பண்ணைக்குட்டை வெட்டி மீன் வளக்க ஆரம்பிச்சேன். மீதி இடத்துல வழக்கம்போல நெல் சாகுபடி நடக்குது.

பசுந்தீவனத்தால் கூடுதல் சுவை!

நானும் ரசாயன விவசாயந்தான் செஞ்சுக்கிட்டிருந்தேன். ரசாயன உரத்தால வர்ற தீமைகளை அடிக்கடி கேள்விப்படுறப்போ எனக்குள்ள ஒரு உறுத்தல் வந்துச்சு. அதனால, இயற்கைக்கு மாறணும்னு பயிற்சிகள்ல கலந்துக்கிட்டேன். விவசாயம் சம்பந்தப்பட்ட புத்தகங்களையும் தொடர்ந்து படிக்க ஆரம்பிச்சேன். அதுல பசுமை விகடனும் அறிமுகமாகவே, முழுசா இயற்கை வழி விவசாயத்துக்கு மாறிட்டேன்.

மீன் வளர்ப்புத் துறையில இருக்கற பெரும்பாலான விஞ்ஞானிகள், உரம் போட்டுத்தான் மீன் வளர்க்கச் சொல்றாங்க. விவசாயத்துலயே ரசாயனப் பயன்பாட்டைக் குறைக்கணும்னு பேசிக்கிட்டிருக்கறப்போ, 'மீன் வளர்க்கறதுக்குப் போய் ரசாயனத்தைப் பயன்படுத்தணுமா?’னு ஒரு கேள்வி எனக்குள்ள உருவாச்சு. குளத்துக்கு அடியில இருக்குற மீனுக்கானத் தீவனத் தாவரங்கள் வேகமா வளர்றதுக்குத்தான் ரசாயன உரம் பயன்படுத்தறாங்க. ஆனா, அதோட தாக்கம்... தண்ணி மூலமா கட்டாயம் கொஞ்ச அளவுக்காவது மீன் உடம்புக்குள்ளயும் இருக்கத்தான் செய்யும். அதனால உற்பத்திச் செலவு அதிகரிக்கறதோட மீனோட சுவையும் குறைஞ்சுடும். எனக்கு இதுல ஒப்புதல் இல்லாததால... இலை, தழைகளைக் கொடுத்தே மீன் வளர்க்கலாம்னு முடிவு பண்ணினேன். இயற்கையாவே ஆறு, குளத்துலயெல்லாம் வளர்ற மீன்களுக்கு யாரும் உரம் போடுறதில்லையே..?!

வீட்டு ஓரங்கள்ல... தோட்டக்கால் வேலிகள்ல முருங்கை, அகத்தி, சூபாபுல், சிறியாநங்கை, துளசி மாதிரியான தாவரங்கள வளர்த்து, அதையே வளர்ப்பு மீன்களுக்கு உணவா கொடுக்கலாமேனு யோசிச்சி, அதையே நடைமுறைப் படுத்திக்கிட்டிருக்கேன். குளத்துக்குள்ள நுண்ணுயிர்கள், பாசி வளர்றதுக்கு சாணம் மாதிரியான இயற்கைக் கழிவுகளையும் கொடுக்குறேன். இப்படி வளர்த்தாலே... ஆறே மாசத்துல மீன் ஒவ்வொண்ணும் ஒரு கிலோ எடைக்கு வந்துடுது. சுவையாவும் இருக்கு. அப்பறம் எதுக்குத் தேவையில்லாம ரசாயனத்தைப் பயன்படுத்தணும்?'' என்று கேள்வி எழுப்பியவர், 33 சென்ட் பண்ணைக் குட்டையில் மீன் வளர்ப்பதற்கானத் தொழில்நுட்பத் தகவல்களை, அழகாக விளக்க ஆரம்பித்தார்.

நீரை நிறுத்தும் கரம்பை!

''35 மீட்டர் நீளம், 30 மீட்டர் அகலம், ஒன்றரை மீட்டர் ஆழம் இருக்குமாறு குளம் வெட்டிக் கொள்ள வேண்டும் (விவசாயத் தேவைக்கான நீராதாரத்தைப் பெருக்குவதற்காக, அரசு செலவில் பண்ணைக் குட்டை அமைத்துத் தரும் திட்டத்தை வேளாண்துறை நடைமுறைப்படுத்தி வருகிறது. அதைப் பயன்படுத்திக் கொண்டு, மீன் வளர்ப்பையும் மேற்கொள்ளலாம்). அதில் தண்ணீரை நிரப்பி, குறிப்பிட்ட அளவுக்கான நீர், தொடர்ந்து தேங்கி நிற்கிறதா என்பதை உறுதி செய்து உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். ஒருவேளை அதிகமாக தண்ணீர் உறிஞ்சக்கூடிய பகுதியாக இருந்தால், குளத்தின் அடியில் கரம்பை மண்ணைப் பரப்பி, தண்ணீரைத் தேக்கலாம். ஆறு, குளம் போன்ற நீர் நிலைகள் அருகில் இருக்கும் பகுதியாக இருந்தால், கவலையேபடத் தேவையில்லை. தண்ணீர் உறிஞ்சப்படாமல் தேங்கி நிற்கும்.



பண்ணைக் குட்டையில் மூன்றடி உயரத்துக்கு மட்டும் தண்ணீர் நிரப்பி, இரண்டு மாட்டு வண்டி அளவுக்கு கட்டி இல்லாத ஈர சாணத்தை தண்ணீரில் கரைத்துவிட வேண்டும். ஒரு வாரத்திலேயே சாணத்தில் இருந்து நுண்ணுயிர்கள் பெருகி விடும்.

2 மாத வயதில் மீன்குஞ்சுகள்!

பிறகு அருகில் உள்ள மீன் விதைப் பண்ணைகளில் இருந்து, இரண்டு மாத வயதுடைய மீன்குஞ்சுகளை வாங்கி வந்து குளத்தில் விடவேண்டும். மீன்கள், அவை வளர்க்கப்படும் பகுதியைப் பொறுத்து மூன்று வகைகளாக அழைக்கப்படுகின்றன. அடி மீன் (சி.சி- காமன் கார்ப், மிர்கால்); நடுத்தட்டு மீன் (ரோகு, கெண்டை), மேல் மீன் (கட்லா, சில்வர்) எனப்படும் இந்த மூன்று வகைகளையும் கலந்து வளர்க்கும்போது குளத்துக்குள் இட நெருக்கடி இல்லாமல் மீன்கள் வளரும்.

33 சென்ட் குட்டைக்கு 1,200 குஞ்சுகள்!

பொதுவாக அனைத்து வகை மீன் குஞ்சுகளும் ஒரே விலையில்தான் விற்கப்படுகின்றன. வளர்ந்த மீன்களை மொத்தமாக விற்கும்போதும் சராசரியாக விலை நிர்ணயித்துதான் வியாபாரிகள் வாங்குவார்கள். அதனால் பல ரகங்களைக் கலந்து வளர்க்கும்போது விற்பனையில் பிரச்னை இருக்காது. ஒருவேளை நேரடி விற்பனை செய்வதாக இருந்தால், நமது பகுதி சந்தை நிலவரத்துக்கேற்ற அளவுக்கு ஒவ்வொரு ரக மீன் குஞ்சுகளின் எண்ணிக்கையைக் கூட்டிக் குறைத்துக் கொள்ளலாம். ஆனால், 33 சென்ட் அளவு குளத்துக்கு 1,200 குஞ்சுகளுக்கு மிகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். குஞ்சுகளை விட்ட பிறகு நீர்மட்டத்தை நான்கடிக்கு உயர்த்தி, எப்போதும் அதே தண்ணீர் மட்டம் இருக்குமாறு பராமரிக்க வேண்டும்.

புரதத்துக்கு தேங்காய் பிண்ணாக்கு!

குஞ்சுகளை விட்டதில் இருந்து இரண்டு நாளைக்கு ஒருமுறை தொடர்ந்து 25 கிலோ அளவுக்கு பசுஞ்சாணத்தைக் குளத்தில் கலந்து விடவேண்டும். ஒரு மாத காலம் வரை தினமும் 5 கிலோ அரிசித் தவிடு, ஒரு கிலோ தேங்காய் பிண்ணாக்கு, ஒரு கிலோ அரிசியில் வடித்த சாதம் ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து, மூன்று பங்காகப் பிரித்து சிறிய ஓட்டைகள் உள்ள சாக்கில் இட்டு, மூன்று இடங்களில் தண்ணீரின் மேல்மட்டத்தில் மூழ்குமாறு வைக்க வேண்டும். வழக்கமாக கடலைப் பிண்ணாக்கைத்தான் அனைவரும் பயன்படுத்துவார்கள். அதைவிட குறைவான விலையில் கிடைக்கும் தேங்காய்ப் பிண்ணாக்கிலும் அதற்கு ஈடான புரதச்சத்து இருப்பதால், தீவனச்செலவு கணிசமாகக் குறையும். தவிர, தேங்காய் வாசனைக்கு மீன்கள் போட்டிப் போட்டு வந்து சாப்பிடும். இரண்டாவது மாதத்திலிருந்து அரிசித் தவிடை மட்டும் மூன்று கிலோ கூட்டிக் கொள்ள வேண்டும்.

கொஞ்சம் கொஞ்சமாகக் கூட்ட வேண்டும், தீவனத்தை...

இந்தத் தீவனங்கள் மட்டுமல்லாமல்... தினமும் 5 கிலோ அளவுக்கு முருங்கை, அகத்தி, சூபாபுல், புல் வகைகள் என பசுந்தீவனங்களையும் கலந்து குளத்தில் இடவேண்டும். துளசி, சிறியாநங்கை போன்ற மூலிகைகளையும் கலந்து இடலாம். நாம் இடும் பசுந்த்தீவனத்தில் எந்த வகையான இலைகளை மீன்கள் உண்ணாமல் கழிக்கிறதோ... அந்த வகைகளை இடுவதை உடனே நிறுத்திவிட வேண்டும். அதேபோல முதல் நாளே அதிகளவில் பசுந்தீவனத்தைக் கொட்டி விடாமல், கொஞ்சமாகக் கொட்டி மீன்கள் சாப்பிடும் அளவுக்கேற்ப அதிகரிக்க வேண்டும். அதிகமாகச் சாப்பிட்டால், அதிக எடை கூடுமே தவிர, வேறு தவறான விளைவுகள் எதுவும் வராது. தவிர, எந்த வகையான உயிரினமாக இருந்தாலும், தேவையான அளவுக்குத்தான் சாப்பிடும் என்பதால், தினமும் நாம் அளிக்கும் தீவனத்தில் மீன்கள் எவ்வளவு சாப்பிடுகின்றன, என்று தொடர்ந்து கவனித்து வந்தாலே எளிதாக மீன்களின் உணவுத் தேவையைக் கணித்து விடலாம்.

ஆறு மாதத்தில் ஒன்றரை கிலோ!

இதுபோல வளர்த்து வந்தால், மீன்களின் வளர்ச்சி வேகம் அதிகரிக்கும். ஆறு மாதத்திலேயே ஒரு மீன், ஒரு கிலோவில் இருந்து ஒன்றரை கிலோ வரை எடை வந்து விடும். மீன்கள் ஓரளவுக்கு எடை வந்த பிறகு அறுவடை செய்து விற்பனை செய்யலாம்.

1,500 கிலோ வரை அறுவடை!

வளர்ப்பு விதங்களைச் சொல்லி முடித்த பிச்சை பிள்ளை, ''போட்லா வகை மீன்கள் இயல்பாவே அதிக எடை வந்துடும். நாம இந்த மாதிரி வளக்குறப்போ ஆறு மாசத்துல ஒரு மீன் அதிகபட்சமா நாலு கிலோ வரைகூட எடை வருது. கட்லா ஆறு மாசத்துல இரண்டரை கிலோ வரை எடை வரும். புல்கெண்டை, மிர்கால் மாதிரியான மீன்கள் ரெண்டு கிலோ வரை எடை வரும். சி.சி, சாதாக் கெண்டை மீன்கள் ஒன்றரை கிலோ வரையும், ரோகு அரை கிலோ வரையும் எடை இருக்கும்.

ரெண்டு மாச வயசுள்ள குஞ்சுகளை வாங்கி வந்து வளர்க்கறப்போ... இறப்பு விகிதம் குறைஞ்சுடறதால எண்பது சதவிகித மீன்கள் வளர்ந்து வந்துடும். அதனால கூடுதல் லாபம் கிடைக்கும். எப்படிப் பாத்தாலும் இந்த எல்லா வகை மீன்களையும் கலந்து 1,200 குஞ்சுகள் விட்டோம்னா... சராசரியா 1,500 கிலோவுக்கு குறையாம அறுவடை பண்ண முடியும். சராசரியா கிலோ 70 ரூபாய்னு வியாபாரிங்க எடுத்துக்குறாங்க. ஆக, 1,05,000 ரூபாய்க்கு விற்பனை பண்ண முடியும். கரன்ட், தீவனம், பராமரிப்பெல்லாம் போக 75,000 ரூபாய் வரை லாபம் கிடைக்கும்'' என்றார் சந்தோஷமாக.

படங்கள்: கே. குணசீலன்
தொடர்புக்கு பிச்சை பிள்ளை,
அலைபேசி: 80985-54747

ரசாயன முறையில் லாபம் எப்படி?


தஞ்சாவூர் மாவட்டம், ஆழியவாய்க்கால் கிராமத்தைச் சேர்ந்த பழனிவேல், இதேபோல அரசு மானியத்தில் 33 சென்ட் அளவுக்கு பண்ணைக் குட்டை அமைத்து, மீன் வளர்க்கிறார். இவர் கையாளுவதோ... ரசாயன முறை! இவருடைய மகசூல் எப்படி என்று கேட்போமா?

''முதலில் அக்ரி சுண்ணாம்பு (சுடாதது) 50 கிலோ, சுட்ட சுண்ணாம்பு 40 கிலோ இதையெல்லாம் குளத்தில் போட்டு, தண்ணீர் கட்ட வேண்டும். பின்னர், 4 கிலோ யூரியா, 5 கிலோ பொட்டாஷ், 10 கிலோ சூப்பர் ஆகிவற்றை இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை கரைத்துவிட வேண்டும். முதல் தடவை உரம் கரைத்த 7-ம் நாளில் 'பிளாங்டன்' எனப்படும் நுண்ணுயிரிகளின் வளர்ச்சி நன்றாக இருக்கும்.



பிறகு, 15 நாள் வயதுள்ள சிறியக் குஞ்சுகளாக வாங்கிவிட வேண்டும். 250 கட்லா, 400 ரோகு, 50 சி.சி, 50 மிர்கால், 250 புல்கெண்டை என்று மொத்தம் 1,000 மீன்குஞ்சுகளை விடவேண்டும். மாதம் ஒரு முறை 50 கிலோ கட்டி இல்லாத ஈர சாணத்தைக் கரைத்துவிட வேண்டும். அடர்தீவனமாக கால் கிலோ கடலைப் பிண்ணாக்கு, கால் கிலோ சோள மாவு, 2 கிலோ தவிடு ஆகியவற்றை கலந்து முதலாவது மாதத்தில் கொடுக்க வேண்டும். இரண்டாவது மாதத்திலிருந்து அரை கிலோ சோளமாவு, அரை கிலோ கடலைப் பிண்ணாக்கு,

4 கிலோ தவிடு கலந்து வைத்தால் போதும்.

6 மாதத்தில் அரை கிலோவில் இருந்து முக்கால் கிலோ எடைக்கு வந்துவிடும். சராசரியாக 700 முதல் 800 கிலோ மீன் கிடைக்கும். மொத்த வியாபாரிகளிடம் கிலோ 85 ரூபாய் வீதமும்... உள்ளூரிலேயே என்றால், கிலோ 100 ரூபாய் வீதமும் விற்பனை செய்யலாம். சராசரியாக கிலோ 85 ரூபாய் வீதம் 700 கிலோ மீனுக்கு ரூ 59,500 கிடைக்கும். தீவனம், உரங்கள், மீன்குஞ்சு, பராமரிப்புச் செலவு எல்லாம்போக, 47 ஆயிரம் ரூபாய் கையில் நிற்கும்'' என்கிறார் பழனிவேல்.

தொடர்புக்கு, பழனிவேல், அலைபேசி: 99769-08642

ரசாயனம்... இயற்கை ஓர் ஒப்பீடு!





'மீன்குஞ்சுகளைக் குறைவான எண்ணிக்கையில் பராமரித்தால்தான் ஆறு மாதத்தில் சரியான எடைக்கு அவை வளர்ந்து வரும்' என்பது பழனிவேலின் நம்பிக்கை. இதன் மூலம் இவருக்குக் கிடைப்பதோ... முக்கால் கிலோ எடைதான்.

அதிக எண்ணிக்கையில் குஞ்சுகளை பராமரித்தாலும், இயற்கை வளர்ப்பு முறை மூலம் கூடுதல் எடை என்பது பிச்சை பிள்ளையின் கணக்கு. அதன்படியே ஒன்றரை கிலோ வரை எடையுள்ள மீன்களை அறுவடை செய்கிறார்.

குறைவான மீன்குஞ்சுகள், வாய்க்கால் நீரை மட்டுமே பயன்படுத்துவதால் மின்சாரச் செலவு என்பது சுத்தமாக இல்லை... இதுபோன்ற காரணங்களால், பழனிவேலுவுக்கு செலவுக் கணக்கு குறைகிறது... வரவும்தான்!

அதேசமயம், கூடுதலாக செலவழிக்கும் தொகையை, கூடுதலான மகசூல் மூலம் ஈடுகட்டி, கூடுதல் லாபத்துக்கு வழி வகுத்திருக்கிறார் பிச்சை பிள்ளை!

0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites