இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Monday, December 25, 2017

நல்ல லாபம் கொடுக்கும் நாட்டு மாட்டுல்ப்பா! தினமும் ₹ 1,700 /-

யற்கை விளைபொருள்கள் குறித்த விழிப்பு உணர்வு பெருகிவரும் சூழ்நிலையில் சுத்தமான பாலையும் நுகர்வோர் தேடி வாங்கத் துவங்கியுள்ளனர். இதனால், பெரும்பாலானோர் பாக்கெட் பாலைத் தவிர்த்து, கறந்த பாலை நேரடியாக வாங்குகிறார்கள். 

இதனால், விவசாயிகள் பலரும் நாட்டு மாடுகளை வளர்க்க ஆரம்பித்துள்ளனர். அந்த வகையில், நாட்டு மாடுகளை வளர்த்து நல்ல வருமானம் எடுத்து வருகிறார்கள் திருவள்ளூர் மாவட்டம், ஒதப்பை கிராமத்தைச் சேர்ந்த கதிரவன், சங்கர் ஆகியோர். 

திருவள்ளூர்- ஊத்துக்கோட்டைச் சாலையில் 12 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது ஒதப்பை கிராமம். இங்குதான் இவர்களின் மாட்டுப்பண்ணை இருக்கிறது. பண்ணையில் மும்முரமாக வேலை செய்துகொண்டிருந்த சங்கர் மற்றும் கதிரவன் ஆகியோரைச் சந்தித்தோம். நம்மை அறிமுகப்படுத்திக்கொண்டதும் மகிழ்ச்சியாகப் பேச ஆரம்பித்தார் சங்கர். “நாங்க ரெண்டு பேரும் கிட்டத்தட்ட இருபத்தஞ்சு வருஷமா நண்பர்கள். ஸ்கூல்ல படிக்கிறப்ப இருந்தே ஒண்ணாத்தான் இருப்போம். படிப்பு முடிச்சு நான் அம்பத்தூர்ல ஒரு கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்தேன். அது எனக்குச் சரிப்பட்டு வரல. வேலையை விட்டுட்டு ஊருக்கு வந்துட்டேன். வந்து நான், கதிரவன், இன்னொரு நண்பர் மூணு பேரும் சேர்ந்து மாட்டுப்பண்ணை ஆரம்பிச்சோம். அந்த நண்பர் இப்போ வெளிநாடு போய்ட்டதால, நானும் கதிரவனும்தான் மாடுகளைப் பார்த்துக்கிறோம். ஆரம்பத்துல பாலை எங்களால விற்பனை செய்ய முடியல.
அதில்லாம நிறைய பிரச்னைகளும் வந்துட்டே இருந்துச்சு. ஆனாலும், நாங்க இதுதான் நமக்கான வாழ்வாதாரம்னு முடிவு பண்ணி இறங்கினதால, இழுத்துப் பிடிச்சு சமாளிச்சுட்டிருந்தோம். நாங்க திருவள்ளூர்ல நேரடியா பாலை விற்பனை செய்யக் கொண்டு போனப்போ, ‘திருவள்ளூர் இந்த்செட்டி பயிற்சி நிலையம்’ பத்திக் கேள்விப்பட்டோம். அங்கே மாட்டுப்பண்ணை அமைக்கிறது பத்தி முறையாகப் பயிற்சி எடுத்துக்கிட்டோம். அந்தப்பயிற்சிதான், எங்களுக்குத் திருப்புமுனையை ஏற்படுத்திக் கொடுத்தது” என்ற சங்கரைத் தொடர்ந்து பேசினார் கதிரவன். 

“அந்தப் பயிற்சியிலதான் பாலை மதிப்புக்கூட்டி விற்பனை செய்றது பத்தியும் தெரிஞ்சுகிட்டோம். பயிற்சி மைய அதிகாரிகள், எங்களுக்குப் பேங்க் லோனுக்கும் ஏற்பாடு செஞ்சு கொடுத்தாங்க. இப்போ, பாலை மட்டும் விற்பனை செய்யாம வெண்ணெய், நெய், பால்கோவானு தயாரிச்சு விற்பனை செய்றோம். மாடு வளர்ப்பைத் தொடங்கி நாலு வருஷமாச்சு. இப்போ பண்ணையில கிடைக்குறது, மற்ற விவசாயிகள்கிட்ட வாங்குறதுன்னு தினமும் 150 லிட்டர் அளவுக்குப் பால் விற்பனை செய்றோம். பாலுக்கான ஆர்டர் அதிகமா இருக்குறதால, மத்த விவசாயிகள்கிட்ட இருந்தும் பால் வாங்குறோம். சென்னை வரைக்கும் இந்த பாலை அனுப்பிட்டிருக்கோம்.
அதிக பணவசதி இல்லாததால இப்போதைக்குச் சின்ன அளவுலதான் செஞ்சுட்டிருக்கோம். சங்கரோட அப்பாவுக்கு மாடு வளர்ப்புல நல்ல அனுபவம் இருக்குறதால, அவர்தான் பண்ணையைக் கவனிச்சிட்டிருக்கார். நாங்க வளர்க்குறது எல்லாமே இந்த மாவட்டத்துல வளர்ற நாட்டு மாடுகள்தான். நாட்டு மாடுகள் குறைவான பால் கொடுத்தாலும் அதுல சத்து அதிகம். 

அதனால, மக்கள் விரும்பி வாங்குறாங்க. சந்தையில் விற்பனையாகுற பால் விலையைவிட, அதிக விலை கொடுத்து வாங்கவும் தயாரா இருக்காங்க. அதேமாதிரி, நாட்டு மாட்டு நெய்க்கும், வெண்ணெய்க்கும் நல்ல வரவேற்பு இருக்கு. எருமை மாட்டுப்பாலுக்கும் நல்ல வரவேற்பு இருக்குது. மாடுகளை மேய்ச்சல் முறையிலதான் வளர்க்குறோம். இதனால், ஆரோக்கியமா வளருது. சத்தான பால் கிடைக்குது. மத்த விவசாயிகள்கிட்ட வாங்குற பாலையும் தரமா இருந்தாத்தான் வாங்குவோம். 

பால்ல இருக்குற கொழுப்போட அளவைப் பொறுத்து விலை கொடுப்போம். எங்ககிட்ட 10 பசுக்கள், 10 பசுக்கன்றுகள், 12 எருமைகள், 12 எருமைக் கன்றுகள்னு மொத்தம் 44 உருப்படிகள் இருக்கு. இதுபோக 15 வெள்ளாடுகளும் இருக்கு. இப்போதைக்குத் தினமும் 23 லிட்டர் பசும்பாலும் 26 லிட்டர் எருமைப்பாலும் கிடைச்சுட்டிருக்கு” என்றார்.
வருமானம் குறித்துச் சொல்ல ஆரம்பித்த சங்கர், “பசும்பாலை 42 ரூபாய்னும், எருமைப்பாலை 50 ரூபாய்னும் விற்பனை செய்றோம். இப்போதைக்குத் தினமும் 2,266 ரூபாய் வருமானமாகக் கிடைச்சுட்டிருக்கு. வெளியிலிருந்து வாங்குற பாலைத் தனியா விற்பனை செய்றோம். அது மூலமா ஒரு வருமானம் கிடைச்சிட்டிருக்கு. ஆர்டரைப் பொறுத்துத் தயிர், வெண்ணெய், நெய்னும் விற்பனை செய்றோம். தினமும் தீவனம், போக்குவரத்து, மருந்துனு 900 ரூபாய் செலவாகுது. எல்லாம் போகத் தினமும் சராசரியா 1,700 ரூபாய் வரை லாபமாக் கிடைக்குது” என்றார். 

நிறைவாகப் பேசிய நண்பர்கள், “கொஞ்சம் கொஞ்சமா எங்களுக்கு ஆர்டர் அதிகரிச்சுட்டே இருக்குறதால, பெரியளவுல பண்ணையை விரிவுபடுத்துற முயற்சிகளை எடுத்துட்டுருக்கோம். சீக்கிரத்துல ஒரு பெரிய இடத்தைப் பிடிச்சுடுவோம்னு நம்பிக்கை இருக்கு” என்று சொல்லி விடைகொடுத்தனர்.

தொடர்புக்கு:
சங்கர்,
செல்போன்: 97915 52601


மேய்ச்சல் முறை சிறந்தது! 

மாடுகளைப் பராமரிப்பது குறித்துச் சங்கர் சொன்ன தகவல்கள் இங்கே இடம் பிடிக்கின்றன.... 

ஒவ்வொரு பருவகாலம் தொடங்கும்போதும் மருத்துவர்கள்மூலம் உரிய தடுப்பூசியைப் போட வேண்டும். பண்ணையைத் தினமும் கழுவிச் சுத்தமாகப் பராமரிக்க வேண்டும். குறித்த காலத்தில் குடற்புழுநீக்கம் செய்ய வேண்டும். மேய்ச்சல் முறையில் வளர்ப்பது சிறந்தது. சினைப்பருவத்துக்கு வரும் மாடுகளைத் தனிமைப்படுத்தி இனச்சேர்க்கை செய்ய வேண்டும். 

மாடுகளுக்குக் கோமாரி நோய் வந்தால், தினம் ஒரு நாட்டுக்கோழி முட்டை என மூன்று நாள்களுக்குக் கொடுக்க வேண்டும். மேலும், எருக்கன் பாலை, விளக்கெண்ணெயில் கலந்து, மாட்டின் உடம்பில் புள்ளிகள் வைக்க வேண்டும். கோமாரி தாக்கிய மாட்டின் மூக்கணாங்கயிற்றை எடுத்துவிட வேண்டும். 50 மில்லி நல்லெண்ணெயில் நான்கு வாழைப்பழங்களை ஒரு மணிநேரம் ஊற வைத்து, நான்கு நாள்களுக்குக் கொடுத்து வந்தாலும் கோமாரி சரியாகிவிடும். கோமாரி தாக்கிய மாட்டிடம் கன்றைப் பால் குடிக்க விடக் கூடாது. 

மாடுகள் தீவனம் எடுக்காமல் இருந்தால், கல்யாண முருங்கை இலை, வெற்றிலை ஆகியவற்றோடு வெல்லம் கலந்து கொடுக்கலாம். மூங்கில் இலையை உண்ணக்கொடுத்தால் மாடுகளின் வயிறு சுத்தமாகும். 

மாடுகளுக்கு உப்புசம் ஏற்பட்டால் 100 கிராம் பழைய புளி, இரண்டு எள் செடி ஆகியவற்றைத் தண்ணீரில் ஊறவைத்துக்கொடுத்தால் சரியாகிவிடும். கழிச்சல் இருந்தால் 2 கிலோ கொய்யா இலை, மலராத தென்னம்பாளை இரண்டையும் நான்கு லிட்டர் தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைத்து, இரண்டு லிட்டராகச் சுண்ட வைத்துக் கஷாயமாகக் கொடுத்தால் சரியாகிவிடும். புண்களுக்கு வேப்பெண்ணெய் தடவினாலே சரியாகிவிடும்.

0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites