இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Thursday, May 17, 2012

‘மஸ்கோத் அல்வா’.

வாயில் போட்டதுமே கரைந்து, நம்மை மயக்குவது ‘திருநெல்வேலி அல்வா’. அதே நெல்லைச் சீமையில் கடந்த பத்தாண்டுகளில் வளர்ந்து விரிந்து பட்டையைக் கிளப்பி வருகிறது ‘மஸ்கோத் அல்வா’.


‘இது எங்க ஊரு அல்வா’ன்னு தூத்துக்குடிக்காரங்க பெருமை பேசும் அளவிற்கு பிரபலமாகி இருக்கிறது இந்த மஸ்கோத் அல்வா. நெல்லை மாவட்டம் திசையன்விளையிலும், தூத்துக்குடி மாவட்டம் முதலூரிலும் இந்த அல்வா தயாரிப்புதான் இன்று முக்கிய தொழில்.

மஸ்கோத் அல்வாவில் முதலூர் பெயர் தனியிடம் பெற்று விட, இன்று பல ஊர்க்காரர்களும் இதே பெயரில் இந்தத் தொழிலைச் செய்துகொண்டிருக்கிறார்கள்.

பெரிய அளவில் கமர்ஷியலாக பணம் போட்டு பல லட்சம் சம்பாதிக்கும் மஸ்கோத் அல்வா தயாரிப்புப் போட்டியில் இன்று இரு மகளிர் சுய உதவிக் குழுக்களும் வெற்றிகரமாக தரமான அல்வாவை உற்பத்தி செய்து சென்னை, மும்பை போன்ற நகரங்களுக்கு அனுப்பி வருகிறார்கள்.

நேற்று வரை அன்றைய பொழுதுக்குத் தேவையான முப்பது ரூபாய்க்குக் கூட வழியில்லாமல் வறுமையில் இருந்த முதலூரைச் சேர்ந்த 30 பெண்கள், ஒன்று சேர்ந்து இந்தத் தொழிலில் இறங்கி மாதம் ஒன்றுக்கு சராசரியாக 60 ஆயிரம் ரூபாய் வரை வருமானம் பார்க்கிறார்கள்.

இந்த சாதனை எப்படி சாத்தியமானது?

‘‘நாங்க இரண்டு குழுக்கள் இணைஞ்சு இந்த பிசினஸ் பண்றோம். ஒவ்வொரு குழுவிலும் 15 பேர் வீதம் 30 பேர் உறுப்பினர்களா இருக்கோம். முதல்ல 3 குழுக்களா இணைந்து இந்த தொழிலைத் தொடங்கினோம். அதுல ஒரு குழு பிரிந்து, இப்ப நாங்க இரண்டு குழுவுமா சேர்ந்து இயங்கி வர்றோம். முன்னாடி எல்லாருமே கூலி வேலைக்குத்தான் போயிட்டு இருந்தோம். மகளிர் சுய உதவிக் குழுவைத் தொடங்கினா லோன் கொடுப்பாங்க. ஏதாவது தொழில் செய்யலாம்னு சொன்னாங்க. அப்படித்தான் இதைத் தொடங்கினோம். குழு தொடங்கறதுக்கு ‘வீட்ஸ் தொண்டு நிறுவனம்’ பயிற்சி கொடுத்தாங்க. அரசு அதிகாரிங்க வந்து எப்படிக் குழுவை இயக்கணும்னு சொல்லிக் கொடுத்தாங்க.

அப்போ நாங்க மஸ்கோத் அல்வா தயார் பண்றவங்ககிட்ட தனியா வேலைக்குப் போயிக்கிட்டு இருந்தோம். வேற எதுனா தொழில செய்றத விட இந்த அல்வா பிசினஸையே எடுத்துப் பண்ணலாம்னு முடிவு பண்ணினோம்.. அது இப்போ எங்களுக்கு கைகொடுத்து உதவுது. எங்களோட செயல்பாட்டைப் பார்த்துட்டு பேங்க்ல 2 லட்சத்து 20 ஆயிரம் ரூபா லோன் கொடுத்தாங்க.’’ என்றார்கள் தென்றல், வசந்தம் மகளிர் சுய உதவிக் குழுக்களின் தலைவிகள் பால்கனியும், ஜெயராணியும்.

‘’ஒரு சட்டி அல்வா கிண்டினா 12 கிலோ வரைக்கும் கிடைக்கும். ஒரு சட்டிக்கு எல்லாம் போக கைக்கு 250 ரூபா நிக்கும். ஒரு நாளைக்கு சராசரியா 15 கிலோ வரைக்கும் பேக் பண்ணுவோம். நல்ல ஆர்டர் கிடைச்சா கொஞ்சம் கூடும். தூத்துக்குடி பனிமய மாதா கோயில்ல இருந்து அப்பப்ப எங்ககிட்ட ஆர்டர் கொடுத்து வாங்குவாங்க. குமரி மாவட்டத்தில இருந்து சிலர் விரும்பி வாங்குறாங்க. கோயம்புத்தூர், சென்னை, டில்லி மாதிரி ஊருக்கெல்லாம் எங்க அல்வா போகுது. சில பெரிய கம்பெனிங்க அவங்களுக்கு கூடுதலா ஆர்டர் வந்து குறிப்பிட்ட நேரத்திற்குப் பண்ண முடியாம எங்கிட்ட சப் - காண்ட்ராக்டா கொடுத்து செய்து தரச் சொல்வாங்க. அதையும் நாங்க செய்து கொடுக்கிறோம்’’ என்கிறார் ஜெயராணி.

‘அல்வா பிசினெஸ் தொடங்கிய போது ஏதேனும் சங்கடங்கள் இருந்ததா?’ இதை அவர்களிடமே கேட்டோம்.

‘’கஷ்டம் இல்லாம இருக்குமா...! நல்லா அல்வா செய்யத் தெரிஞ்ச நமக்கு விக்கத் தெரியாது. யாரும் பெருசா வாங்கல. இதனால முதல்ல நஷ்டப்பட்டோம். விட்டுறலாமான்னு கூட நினைச்சோம். சமயத்தில மனசே தளர்ந்து போயிரும். அரசு அதிகாரிகள் வந்து ‘கவலைப்படாதீங்கம்மா முதல்ல அப்படித்தான் இருக்கும்’னு சொல்வாங்க. அப்புறம்த்தான் கொஞ்சம் கொஞ்சமா விற்க ஆரம்பிச்சி இப்ப லாபத்தைப் பார்க்கிறோம். .

பொருட்காட்சியில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்காக ஸ்டால் போட வந்து நைட் தங்கக்கூட இடமில்லாம பஸ் ஸ்டாண்ட்ல படுத்துத் தூங்குன அனுபவமெல்லாம் எங்களுக்கு உண்டு.. ஆனா அதையெல்லாம் தாண்டி இப்போ குழு நல்லா இயங்குது. பேங்க்ல கொடுத்த லோன கட்டி முடிச்சிட்டோம்.’’என்று மனநிறைவோடு சொல்கிறார் பால்கனி.

‘‘சராசரியா ஒருத்தருக்கு ஒரு மாசத்துக்கு 1,500 ரூபா முதல் 2,000 ரூபா வரைக்கும் வருமானம் கிடைக்குது. ஒரு நாளைக்கு 30 ரூபாய்க்குக் கூட வழியில்லாம நின்னோம். இப்போ ஒண்ணா சேர்ந்து குழுவா செய்றதலா இந்தப் பணம் எங்களுக்குக் கிடைக்குது. இந்த 2 ஆயிரம் ரூபாயை 20 ஆயிரம் ரூபாயா மாத்தணும்..... இதுதான் எங்களோட ஆசை.....’’ என்கின்றனர் தென்றல் - வசந்தம் மகளிர் சுய உதவிக் குழுவினர்.

‘ஊர் கூடித் தேர் இழுத்தால் ஆதாயம்’ என்பதை முதலூரில் உள்ள இந்தப் பெண்கள் நன்றாகவே புரிந்து வைத்திருக்கிறார்கள்.

மஸ்கோத் ஆன மஸ்கட்
வளைகுடா நாடுகளில் ஒன்றான ஓமன் நாட்டின் தலைநகர் மஸ்கட். அங்கு தேங்காய்ப் பாலில் செய்யும் அல்வா ஃபேமஸ். மஸ்கட்டிலிருந்து இலங்கைக்குச் சென்றவர்கள் இந்த அல்வாவின் மணத்தை இலங்கைக்குப் பரப்ப, அங்கிருந்து புலம் பெயர்ந்த முதலூர்காரர்கள் நெல்லை & தூத்துக்குடி மண்ணில் இந்த அல்வாவை செய்து கொடுக்க, இன்று முதலூர் மண்ணின் முக்கியத் தொழிலாகி விட்டது மஸ்கட்... சாரி.... மஸ்கோத் அல்வா. பொதுவா அல்வான்னா எண்ணெய், வனஸ்பதி அல்லது நெய்யை பயன்படுத்தி செய்றதுதான் வழக்கம். ஆனா மஸ்கோத் அல்வாவோட ஸ்பெஷாலிட்டியே தரமான தேங்காய்ப் பாலில் செய்வதுதான். தேங்காய்ப் பால்தான் இந்த அல்வாவின் முக்கிய மூலப்பொருள்.

- பரணி ஷங்கர் படங்கள்: ம.பிரபு
thanks kumudam + hema LA
Thnxs:http://nermai-endrum.blogspot.com/2012/01/blog-post_8337.html

0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites