இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Wednesday, November 22, 2017

மாடித் தோட்டத் தாவரங்கள்: பாதுகாக்க சில குறிப்புகள்!

நல்ல நோக்குடன் மாடித் தோட்டம் போடத் தொடங்கிய பலர், எதிர்கொள்ளும் பிரச்சினைகளால் தோல்வியைச் சந்தித்துக் கைவிடுவதுண்டு. அவர்கள் மீண்டும் தோட்டத்தைத் தொடர்வதற்கான யோசனைகள்:
Courtesy: Hindu
Courtesy: Hindu
1. செடிகளுக்குச் சாணியைக் கரைத்து ஊற்ற வேண்டும் என்பதில் சந்தேகமில்லை. ஒரு கை சாணிக்கு 20 லிட்டர் தண்ணீர் சேர்த்து ஊற்ற வேண்டும். கெட்டியாக ஊற்றினால் எறும்புகள் வரும்.
2. அடுத்த பிரச்சினை வெள்ளை அசுவினிப் பூச்சி. இதற்கு அடிப்படையான காரணம் அதிக நீர் / அதிக வறட்சியுடன் சத்தற்ற மண். நோய் எதிர்க்கும் ஆற்றல் குறைவும் காரணமாக இருக்கலாம்.
இலைகளை நுனிக் கிளையுடன் கவாத்து செய்து, பின் வேருக்கு மண்புழு உரத்துடன் பஞ்சகவ்யம், குணபரசம், மோர் போன்றவற்றில் ஒன்றை வழங்கி, மேலே பூச்சிவிரட்டி தெளிக்கவும். புதுத் தளிர் வரும். ஒரு வாரத்தில் பூக்கும். முயற்சி பலிக்காவிட்டால் செடியைப் பிடுங்கிவிட்டு, நன்கு மண் காய்ந்த பின் வேறு விதை போடவும்.
சாதாரணமாக இந்தப் பிரச்சினை கத்திரி – வெண்டைக்கு ஏற்படும். கவாத்து செய்தால் புதுத் தளிர் வரும். முற்றிய பெரு இலைகளையும், பழுத்த இலைகளையும் தினம் நீக்கினால் நோய் வராது.
3. புதுப் பயிரிடுதலை ஜூலை – ஆகஸ்டில் தொடங்கவும். சித்திரை – வைகாசிப் பட்டத்தில் காராமணி, அகத்தி, முருங்கை தவிர, வேறு பயிர்கள் வராது. எனினும் மாடியில் பசுமை வலை அடித்தால் தாவரங்களை ஓரளவு காப்பாற்றலாம். முட்டைக்கோஸ், முள்ளங்கி, காரட், காலிஃபிளவர், லெட்யூஸ் போன்ற ஆங்கிலக் காய்கறிகள் பசுமை வலைக்குள் சிறப்பாக வளரும்; தக்காளியும் சிறப்பாக வளரும். நாட்டுக் காய்கறிகளான கத்திரி, வெண்டை, அவரை, புடல், கீரைகளுக்கு நேரடியான சூரிய ஒளி ஜூலை – மார்ச் வரை கிட்டும். ஏப்ரல் – ஜூனில் மரப் பயிர்களும் காராமணியும் கோவையும் வளரும்.
4. கொடிப் பயிர்களில் கோவை நீண்ட நாட்களுக்குப் பலன் தரும். புடலை, பீர்க்கை, அவரைப் போன்றவற்றுக்கு 3, 4 மாதங்களுக்குப் பின் புதிய விதை நட வேண்டும். கோவை 10 ஆண்டுகள் வரை பலன் தரும். இயற்கை வழியில் 15 ஆண்டுகள்கூடப் பலன் தரும். அவ்வப்போது காய்ந்த பாகங்களைக் கட்டாயம் கவாத்து செய்ய வேண்டும். இது களைபோல் மண்டும் கசப்புக் கோவை அல்ல; அதைச் சமைக்க முடியாது. கறிக்கோவை வெள்ளரிக்காய்போல் ருசிக்கும்; பச்சையாகவே உண்ணலாம்.
5. பயிர்களுக்கு நீர் ஊற்றும்போது மண் காய்ந்த பின் ஊற்ற வேண்டும். நீர் வடிகிறதா என்று கவனிக்கவும். ஈரம் காப்பது அவசியம். ரசப்பதத்தில் – பஞ்சகவ்யம், சாணிக் கரைசல் ஆகியவற்றைத் தினமும் வேரில் ஊற்றலாம். வசதிப்படி வாரம் மூன்று நாளைக்குக்கூட ஊற்றலாம். களை- பசுமைச் செடி- இலை ஊறலில் நீர் கலந்து, அவ்வப்போது ஊற்றலாம்.
6. செடிகள் வளர்க்க அரிசி / சிமெண்ட் பாலித்தீன் பைகள் ஆறு மாதங்கள் தாங்கும். பின்னர், பழைய சட்டை, புடவை, வேட்டி ஆகியவற்றால் சுற்றிக் கட்டிவிடலாம். பிளாஸ்டிக்கும் வெயிலில் பதமாகி உடைந்து நொறுங்கும். அதன் மீது துணியால் போர்த்தலாம். இரண்டு ஆண்டுவரை தாங்கும். பின்னர் பயிர் அழிந்தவுடன் புதிய பையில் மண்ணைப் போடலாம். இயற்கை உரம் இடுவதால் மண்ணில் சத்து இருக்கும். புல் வேர் மண்டினால் அப்படியே தொட்டியைக் கவிழ்த்து வேர்களை நீக்கிவிட்டு, அதே மண்ணுடன் மண்புழு உரத்தை இட்டுப் புதிய பயிர் எழுப்ப வேண்டும்.
7. கூடியவரை நாம் வளர்க்கும் பயிர்களுக்கு நோய்களைத் தாங்கி வாழக்கூடிய பண்பை ஊட்ட வேண்டும்.
நன்றி: மாடித் தோட்டம் 77 + வயதினிலே,ஆர்.எஸ். நாராயணன், யுனீக் மீடியா இன்டக்ரேட்டர்ஸ்,
தொடர்புக்கு: 04428250519

0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites