இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Saturday, October 22, 2016

ஒரு ஏக்கர்... மாதம் 50 ஆயிரம்...

ஒரு ஏக்கர்... மாதம் 50 ஆயிரம்...

கிறங்க வைக்கும் கீரை சாகுபடி... பட்டையைக் கிளப்பும் 'பட்டாம்பூச்சி' பாசனம்! 
தண்ணீர் தட்டுப்பாடு, மின்சாரத் தட்டுப்பாடு, கூலியாட்கள் தட்டுப்பாடு... என விவசாயத்தில் ஏகப்பட்ட பிரச்னைகள். இத்தனையையும் தாண்டி விவசாயம் செய்ய வேண்டுமென்றால், புதிய தொழில்நுட்பங்கள் கண்டிப்பாகத் தேவை. இதை சரியாகப் புரிந்து கொண்ட விவசாயிகள் பலரும் நவீன கருவிகளைப் பயன்படுத்த ஆரம்பித்திருக்கிறார்கள். அந்த வகையில், குறைந்த நேரமே கிடைக்கும் மின்சாரத்தையும், குறைந்தளவு தண்ணீரையும் வைத்து பாசனம் செய்யவும், பல நவீன கருவிகள் மற்றும் முறைகள் உள்ளன. அதில் ஒன்றுதான், தெளிப்பு நீர்ப் பாசனம். இந்த முறையில், பாசனம் செய்து கீரை சாகுபடி செய்து வருகிறார், ஈரோடு மாவட்டம், நம்பியூர் அருகேயுள்ள கரிச்சிப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த முன்னோடி விவசாயி பொன்னுசாமி.
மனைவி சிவகாமி மற்றும் மகன் சதீஷ்குமார் ஆகியோருடன் இணைந்து, கீரை வயலில் வேலையாக இருந்த பொன்னுசாமியை சந்தித்தோம்.
'சுளீர் சுளீர்’ என சுழன்று பூமியில் இருந்து புறப்பட்ட ஊற்றுகள் போல, தண்ணீரைத் தூவிக்கொண்டு இருந்தன ஆங்காங்கே பொருத்தப்பட்டிருந்த தெளிப்பு நீர்க் கருவிகள்.
குளிப்பாட்டி தலை துவட்டிய குழந்தையின் குதூகலம் போல பளிச்சென பசுமைக் கட்டி இருந்தன கீரைச் செடிகள். அதைப் பெருமிதமாகப் பார்த்தவாறே நம்மிடம் பேசத் தொடங்கினார், பொன்னுசாமி.
''கொங்கு நாட்டின் நெற்களஞ்சியம்னு கோபிச்செட்டிபாளையம் பகுதியை சொல்லுவாங்க. அந்தளவுக்கு வளமான பகுதி. ஆனா, அதே தாலூகாவோட தெக்கு பக்கம் இருக்கற எங்க பகுதி வானம் பாத்த பூமி. ஆறு, குளம், குட்டை, வாய்க்கால் எதுவும் இங்க இல்ல. முழுக்க முழுக்க கிணத்துப் பாசனத்தை மட்டுமே நம்பித்தான் வெள்ளாமை.
ஆயிரம் அடிக்கும் மேல, போர் போட்டு கிடைக்கிற கொஞ்ச தண்ணீரை வெச்சுதான் வெவசாயம் செய்றோம்.
போதுமான தண்ணி இல்லாததால, கிடைக்கற தண்ணியை வெச்சு பிஞ்சு வெள்ளாமையா கீரையை சாகுபடி செய்றேன். ஆரம்பத்துல வாய்க்கால் பாசனம்தான் செஞ்சேன். வாய்க்கால்ல ஓடி, வயலை அடையுறதுக்குள்ள போதும் போதும்னு ஆயிடும். அந்த மாதிரி சமயத்துலதான் ஒருநாள் உழவர் சந்தையில ஒரு விவசாயி, சொட்டுநீர்ப் பாசனத்தைப் பத்தி சொன்னாரு.
வாய்க்கால் பாசனத்துல ஒரு ஏக்கர் பயிருக்கு போற தண்ணியை... சொட்டுநீர்ப் பாசனம் மூலமா மூணு ஏக்கருக்குப் பாய்ச்சிடலாம்னு அவர் சொன்னது, எனக்கு ஆச்சரியமா இருந்துச்சு. அவர்கிட்ட சொட்டுநீர்ப் பாசனம் அமைக்கிற கம்பெனியோட அட்ரசை வாங்கிட்டு, அடுத்த நாளே, மகன் சதீஷ்குமாரோட அங்க போய் விவரம் கேட்டேன்.
என்னோட வயல், கிடைக்கிற தண்ணி, வெள்ளாமை எல்லாத்தையும் கேட்டுத் தெரிஞ்சுக்கிட்டு, 'உங்களுக்கு தெளிப்புநீர்ப் பாசனம்தான் தோதா இருக்கும்’னு சொன்னாங்க. அந்தக் கருவியை அமைச்சுருக்கற சில வயல்களையும் கூட்டிக்கொண்டு போய் காட்டுனாங்க.
எங்களுக்கும் அது திருப்தியா தெரியவும், ஒரு ஏக்கர் கீரை சாகுபடிக்கு ஏத்த அளவுக்குத் தேவையான கருவிகளை வாங்கிட்டு வந்து நாங்களே போட்டுக்கிட்டோம். 15 அடி இடைவெளியில 4 அடி உயரத்துக்கு மரக்குச்சிகளை நட்டு, அதுல ரெண்டரை அடி உயரமுள்ள குழாய்களை அசையாம இருக்கற மாதிரி கட்டி விட்டோம்.
குழாய் முனையில பட்டாம்பூச்சி நாசிலைப் பொருத்தினோம். தண்ணியைப் பீச்சி அடிக்கிற இந்த நாசில் பட்டாம்பூச்சியோட றெக்கை மாதிரியே இருக்கும். அதனால, 'பட்டாம்பூச்சிப் பாசனம்'னுதான் எங்க பக்கம் சொல்லுவாங்க. இதுக்கு அரசு மானியம் கிடையாது.
15 அடி இடைவெளியில ஒரு ஏக்கர் நிலத்துல பட்டாம்பூச்சிப் பாசனம் அமைக்கறதுக்கு 30 ஆயிரம் ரூபாய் செலவாகும்'' என்று விவரங்களைத் தெளிவாகத் தந்தார் பொன்னுசாமி!
பூச்சிகளை விரட்டும் தெளிப்புநீர் !
அப்பாவைத் தொடர்ந்த மகன் சதீஷ்குமார், ''5 ஹெச்.பி. போர்வெல் மோட்டார் மூலமாதான் பாசனம் செஞ்சுட்டிருந்தோம். அதுல ஒரு ஏக்கர் பாசனம் செய்ய குறைஞ்சபட்சம் 6 மணிநேரம் ஆகும். அந்தளவுக்கு பாசனம் செய்றதுக்கு எங்க கிணத்துல தண்ணியும் இல்லை.
கரன்ட்டும் அவ்வளவு நேரம் கிடைக்காது. ஆனா, பட்டாம்பூச்சிப் பாசனம் அமைச்ச பிறகு, அந்தக் கவலையே இல்லை. செங்கீரை, புதினா, அரைக்கீரை, மணத்தக்காளி, சிறுகீரைனு அஞ்சு வகையான கீரைகளைப் பயிர் பண்றோம்.
ஒரு ஏக்கர் நிலத்தை ரெண்டா பிரிச்சு, அதுல தனித்தனியா சாகுபடி பண்றதால சுழற்சி முறையில தினமும் கீரையை அறுவடை பண்றோம். இந்தக் கீரைகள்ல சிறு கீரையைத் தவிர மத்த நாலு கீரைகளும் மறுதழைவு ரக கீரைங்க. வெட்ட வெட்ட தழைஞ்சுட்டே இருக்கும்.
அடியுரமா கோழி எரு, தொழுவுரம் ரெண்டையும் போடுறோம். மேலுரமா யூரியா கொடுப்போம். ஆனா, பூச்சிக்கொல்லிகளைத் தெளிக்கறதே இல்லை. அதுக்கும் காரணம், பட்டாம்பூச்சிப் பாசனம்தான்.
தினமும் ஒரு மணி நேரம் பூவாளித்தூவல் போல பத்தடி சுத்தளவுக்கு தண்ணி பீச்சி அடிக்கிறதால, இலைகள் எல்லாம் கழுவிவிட்ட மாதிரியாகிடுது.
இலை வழியா செடியைத் தாக்குற பச்சைப்புழு, சாறு உறிஞ்சும் பூச்சி, இலைப்பேன், முட்டைகள்னு எல்லாத்தையும் பீச்சி அடிக்குற பாசன தண்ணி கழுவிடுறதால செடிகள்ல பூச்சிகளே இருக்குறதில்லை. அதனால பளபளனு தரமான கீரை கிடைக்குது'' என்று சிலாகித்துச் சொன்னார்.
கட்டு இரண்டு ரூபாய் !
தொடர்ந்து பேசிய சதீஷ்குமார், ''கீரையை திருப்பூர் வடக்கு உழவர் சந்தையில கொண்டு போய் அப்பா வித்துட்டு வந்துடுவார். ஆரம்பத்துல டவுன் பஸ்லதான் கீரைக்கட்டுகளைக் கொண்டு போனோம்.
பட்டாம்பூச்சிப் பாசனத்துக்கு மாறுன பிறகு, அதிக மகசூல் கிடைக்குது. சுழற்சி முறையில அறுவடை பண்றதால தினமும் ஆயிரத்து முன்னூறு கட்டு வரைக்கும் மகசூல் கிடைக்குது.
இப்ப சொந்தமா மூணு சக்கர டெம்போ வாங்கி, அதுலதான் கொண்டு போறார். ஒரு சின்னக்கட்டு ரெண்டு ரூபாய்னு விக்குறோம். நேரடியா விக்கிறதால கூடுதலா லாபம்'' என்றார் குஷியான குரலில்!
தினமும் 2,600 ரூபாய் !
நிறைவாகப் பேசிய பொன்னுசாமியின் மனைவி சிவகாமி, ''இந்த தெளிப்புநீர்ப் பாசனம் மட்டும் இல்லீனா, நாங்க இந்த மண்ணை விட்டே போயிருப்போம்.
எங்க நாலு ஏக்கர் நிலத்துல மட்டும் 11 போர்வெல் போட்டோம். எல்லாமே 900 அடி ஆழம். ஆனா, எதுலயுமே சரியான தண்ணி கிடைக்கல. பத்து லட்சம் ரூபாய் கடானாளியானதுதான் மிச்சம். இருந்தாலும் நம்பிக்கையை விடாம கடைசியா தோண்டுன கிணத்துல ஓரளவு தண்ணி வந்துச்சு. 'அதை வெச்சு பெரிசா வெள்ளாமை பண்ண முடியாது. கீரை போட்டா ஜெயிக்கலாம்’னு சொந்தக்காரர் ஒருத்தர் சொன்னாரு. அதும்படியே செஞ்சோம். ஓரளவு பொழப்பு ஓடுச்சு.
அப்புறமா தெளிப்புநீருக்கு மாறின பிறகுதான், மாசத்துக்கு 75 ஆயிரம் ரூபாய்க்குக் குறையாம வருமானம் கிடைக்குது. இதுல செலவெல்லாம் போக மாசத்துக்கு சராசரியா 50 ஆயிரம் ரூபாய்க்குக் குறையாம லாபம் கிடைச்சுடும். இதை வெச்சே பழையக் கடனையும் கட்டிட்டோம். நாங்க இந்த அளவுக்கு முன்னேற முக்கியக் காரணமே பட்டாம்பூச்சிப் பாசனம்தான்'' என்று நெகிழ, கீரைச்செடி போல நம் மனதும் நனைந்தது.
தொடர்புக்கு, சதீஷ்குமார், செல்போன்: 98658-37804 
thank to Vikatan

0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites