இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Wednesday, December 3, 2014

தகதகக்கும் இயற்கைத் தக்காளி...


நேரடி விற்பனையில், ரூ.1 லட்சம் கூடுதல் லாபம்!
ஜி. பழனிச்சாமி படங்கள்: தி. விஜய்
கஷ்டப்பட்டு உழைத்து, என்னதான் தரமான மகசூலை எடுத்தாலும்... அதை சந்தைப்படுத்துதல் என்கிற விஷயத்தில், விவசாயிகளுக்குச் சறுக்கல்தான். கமிஷன் மண்டியில், என்ன விலைக்கு விற்றாலும், மொத்த விற்பனையில், 10 சதவிகிதம் தரகு அழுதாக வேண்டும். சிலசமயம் விற்ற பணம் கமிஷனுக்கே சரியாகிப்போய், வெறும் கோணிப்பையுடன் வீடு திரும்பும் நிலையும் விவசாயிகளுக்கு ஏற்படுவது உண்டு. ‘இதை மாற்ற வழியே இல்லையா?’ என்ற ஏங்கும் விவசாயிகள் ஒரு பக்கம் இருந்தாலும்... சில விவசாயிகளே வியாபாரிகளாக மாறி, தரகு இல்லாமல் லாபம் பார்த்து வருகின்றனர். இந்த வரிசையில், திருப்பூர் மாவட்டம், கொடுவாய் அடுத்துள்ள நிழலிக்கவுண்டன்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த சோமசுந்தரமும் ஒருவர்.
விளையும் தக்காளியை வியாபாரிகளுக்குக் கொடுக்காமல்... தன் மனைவி சுகந்தியுடன் சேர்ந்து, நடுத்தர ஊர்களில் நடக்கும் வாரச்சந்தைகளில் கொண்டு போய் சில்லரை விலைக்கு விற்பனை செய்து வருகிறார், சோமசுந்தரம். கொஞ்சம் மாற்றி யோசித்து, இவர்கள் நல்ல லாபம் ஈட்டி வரும் வித்தையை, நாமும் தெரிந்து கொள்வோமா!
ஊடுபயிராக தக்காளி!
பச்சை காட்டி விளைந்து நிற்கும் தக்காளிச் செடிகளில் செந்நிற சீரியல் பல்புகளாய் தொங்கும் பழங்களைப் பறித்துப் பறித்துப் பெட்டியில் அடுக்கும் பணியில் முனைப்பாக இருந்த தம்பதியைச் சந்தித்தோம்.
‘‘எனக்கு சொந்த ஊரே இதுதாங்க. ஏழு ஏக்கர் தோட்டம் இருக்கு. முழுக்க கிணத்துப்பாசனம்தான். எந்த வெள்ளாமை வெச்சாலும், பழுதில்லாம வெளையுற செம்மண் பூமி. வெங்காயம், கத்திரி, தக்காளினு நம்ம தோட்டத்துல ஏதாவது ஒரு பயிர் இருந்துட்டே இருக்கும். ரெண்டு வருஷத்துக்கு முன்ன, நாலு ஏக்கர்ல பொள்ளாச்சி நெட்டை+குட்டை ரக தென்னையை நட்டிருக்கேன். அதுல ஊடுபயிரா 3 ஏக்கர்ல தக்காளி நடவு போட்டிருக்கேன். 50 சென்ட்ல பீர்க்கன் இருக்கு. வருஷம் முழுசும் அறுவடை பண்ற மாதிரிதான் சுழற்சி முறையில தக்காளி போடுவோம். அதனால, எனக்கு தக்காளி மூலமா வருஷம் முழுசும் வருமானம் கிடைச்சுட்டே இருக்கும். நர்சரிகள்ல நாத்தாவே வாங்கி நடுறதால, பழுதில்லாம விளைஞ்சு வருது.
3 லட்சம் ரூபாய்!
தக்காளியை நடவு செஞ்ச 70-ம் நாள்ல இருந்து தொடர்ந்து 50 நாளைக்கு அறுவடை செய்யலாம். ஊடுபயிரா போட்டிருக்கறதால ஏக்கருக்கு 30 டன் அளவுக்குத்தான் மகசூல் கிடைக்கும். தனிப்பயிரா போட்டா, 40 டன்னுக்கு மேல கிடைக்கும். ஒரு வருஷத்துல கிட்டத்தட்ட ஒன்பது, பத்து மாசம் தினமும் காய் கிடைக்கிற மாதிரி நடவு செய்வோம். மொத்தம் மூணு ஏக்கர்லயும் சேர்த்து, சராசரியா வருஷத்துக்கு 90 டன் அளவுக்கு தக்காளி கிடைக்கும். சில சமயங்கள்ல கிலோ 2 ரூபாய் இருக்கும். சமயங்கள்ல 50 ரூபாய் இருக்கும். சராசரியா 10 ரூபாய் கிடைச்சுடும். ஒரு பெட்டிக்கு 15 கிலோ தக்காளின்ற கணக்குல 90 டன்னுக்கு 6 ஆயிரம் பெட்டி மகசூல் இருக்கும்.
எங்க ஊருல செவ்வாய்க்கிழமை உள்ளூர் விடுமுறை. அன்னிக்கு வேலையாட்களுக்கு சம்பள நாள். அதனால அன்னிக்கு பறிப்பு இருக்காது. மத்த ஆறு நாளும் பறிப்பு இருக்கும். அன்னன்னிக்கு பறிக்கிற தக்காளியை காங்கேயம், வெள்ளக்கோவில், முத்தூர்னு வாரச்சந்தைக்கு கொண்டு போய் வித்துட்டு வந்துடுவேன். வாரத்துல ஆறு நாள் சந்தைக்கு தக்காளி கொண்டு போயிடுவேன். வேன் வாடகை, ஏத்துக் கூலி, இறக்குக் கூலி, சுங்கம் எல்லாம் சேர்த்து, ஒரு பெட்டிக்கு 20 ரூபாய் செலவாகும்.
அந்த வகையில, விற்பனைக்காக 90 டன்னுக்கு 1 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் செலவு. தொழுவுரம், பாத்தி, களை, பறிப்புக்கூலி மாதிரியான விஷயங்களுக்கு மூணு ஏக்கருக்கு 1 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் செலவாகும். 90 டன் தக்காளியை விற்பனை செய்றப்போ... 9 லட்ச ரூபாய் கிடைக்கும். அதுல செலவு 3 லட்சம் போக, 3 ஏக்கர்ல இருந்து வருஷத்துக்கு 6 லட்ச ரூபாய் லாபமா கிடைக்குது. இதையே கமிஷன் மண்டிக்கு அனுப்பியிருந்தா கிட்டத்தட்ட ஒரு லட்ச ரூபாய் அளவுக்கு அவங்களுக்கு கமிஷன் கொடுக்க வேண்டி வந்திருக்கும். 5 லட்சம்தான் கைக்கு வரும், என்ற சோமசுந்தரத்தைத் தொடர்ந்து நிறைவாகப் பேசினார், சுகந்தி. 
“விவசாயிங்க விளைவிக்கிற பொருள்ல கொஞ்சத்தையாவது, நேரடியா விற்கணும். அப்பதான் இடைத்தரகு அழியும். கட்டுபடி யாகுற விலையும் கிடைக்கும். காய்கறிகளுக்கு எப்பவுமே நல்ல டிமாண்ட் இருக்கு. அதுவும் இயற்கை முறையில விளையுற காய்கறிகளுக்கு தனி வாடிக்கையாளருங்க இருக்காங்க. கிராமச் சந்தைகள்ல இயற்கை விவசாயம் பத்தின விழிப்பு உணர்வு ரொம்பக் குறைவாத்தான் இருக்கு. எங்க தோட்டத்துல விளையுற தக்காளி ‘சும்மா’ வெங்கைக் கல்லு மாதிரி கெட்டியா இருக்கு.
நீண்ட நாட்கள் நாட்கள் வரை அழுகிப்போறதில்ல. பழ வெடிப்பும் கிடையாது. அதுக்கு காரணம் முழுக்க முழுக்க இயற்கை இடுபொருட் களைப் பயன்படுத்துறதுதான். ஓவ்வொரு சந்தையிலும் இதை எடுத்துச் சொல்லிட்டு இருக்கோம். அதனால, இயற்கையில விளைவிச்சு, நேரடியா வித்தா எல்லா வியா பாரியும் லட்சாதிபதிதான்’’ என்று மனைவி சொன்னதை ஆமோதித்து, தலையாட்டினார் சோமசுந்தரம்.
தொடர்புக்கு,
எஸ். சோமசுந்தரம், செல்போன்: 94433-49150.

வேம்பு, புங்கன் கரைசல்!
வேப்பெண்ணெய் 4 லிட்டர், புங்கன் எண்ணெய் 1 லிட்டர் ஆகியவற்றுடன் 500 மில்லி காதி சோப்புக்கரைசலைச் சேர்த்து... நன்றாகக் கலக்கி, அக்கரைசலில் இருந்து, 100 மில்லியை எடுத்து, 10 லிட்டர் தண்ணீரில் கலந்து காலைவேளைகளில், கைத்தெளிப்பான் கொண்டு, புகைபோல் தெளிக்கவேண்டும். 20, 40 மற்றும் 60-ம் நாட்களில், தக்காளியில் பூச்சிகளை விரட்ட, இக்கரைசல் தெளிப்பு அவசியம்.
பூச்சிகளை விரட்ட வேம்புக் கரைசல்!
நடவு செய்த 50 முதல் 65-ம் நாளில், செடிகள் பூத்துக் குலுங்கும். இந்தவேளையில், சாறு உறிஞ்சும் பூச்சிகள், அஸ்வினி ஆகியவை தாக்குவதோடு, வாடல் நோயும் எட்டிப்பார்க்கும். இதை, விரட்ட வேம்பு, புங்கன் எண்ணெய் கரைசலைத் தெளிக்கலாம்.

நாற்றுகள் கவனம்!
ஊடுபயிராக சாகுபடி செய்யும்போது ஒரு ஏக்கருக்கு பத்தாயிரம் நாற்றுகள் தேவை.

ஒரு நாற்று 40 பைசா.
18 முதல் 20 நாள் வயதுடைய நாற்றுகளே சிறந்தவை.
தண்டு ஊக்கமாக 4 அங்குல உயரத்தில் இருக்க வேண்டும்.


இயற்கை முறையில் தக்காளி சாகுபடி!
தென்னைக்கு இடையில் ஊடுபயிராக தக்காளி சாகுபடி செய்யும் முறை பற்றி, சோமசுந்தரம் சொன்ன தகவல்கள் இங்கே...
ஒன்றரை அடி இடைவெளி!
நிலத்தை நன்கு உழுது, பாத்திக் கட்டி தயார் செய்த பிறகுதான் நாற்றுகளை வாங்க வேண்டும். பாத்திகளில் தண்ணீர்விட்டு வடிந்து சுண்டிய பிறகு, ஒன்றரை அடி இடைவெளியில் நாற்றுகளை ஈர நடவு செய்ய வேண்டும். 2-ம் நாளில் உயிர்த்தண்ணீர் கொடுக்க வேண்டும். நிலம் காயாத அளவுக்கு பாசனம் செய்ய வேண்டும். அடைமழைக் காலத்தில் செடிகள் அழுகி, காய்ப்பு குறையும். அதை மனதில், வைத்து பருவமழைக்கு முந்தைய நாட்களில், பறிப்பு வரும்படி நடவு செய்ய வேண்டும். நடவு செய்த 20 மற்றும் 40-ம் நாட்களில் களை எடுக்கவேண்டும். 50-ம் நாளுக்கு மேல் செடிகள் வளர்ந்து நிழல் படர்வதால், களைகள் முளைக்காது. 
பளபள வண்ணத்துக்கு அமுதக்கரைசல்!
ஒவ்வொரு முறை களை எடுக்கும்போதும் செடிக்கு 50 கிராம் வீதம் ஊட்டமேற்றிய மண்புழு உரத்தை வேர்பகுதியில் வைத்து பாசனம் செய்ய வேண்டும். தொடர்ந்து, 55 மற்றும் 70-ம் நாட்களில் ஒரு ஏக்கருக்கு 50 கிலோ மண்புழு உரம் என்ற கணக்கில், பாசன நீரில் கரைத்துவிட வேண்டும். செடிகளை வேர்அழுகல் நோயிலிருந்து காப்பாற்றவும், பறிப்பு முடியும் வரை, ஊக்கமுடன் வைத்திருக்கவும், காய்கள் ‘பளபள’வென நல்ல நிறத்துக்கு வருவதற்கும் அமுதக் கரைசல் உதவுகிறது. 20, 40 மற்றும் 60-ம் நாட்களில் ஏக்கருக்கு 200 லிட்டர்  அமுதக் கரைசலை பாசன நீரில் கலந்துவிட வேண்டும்.
நடவு செய்த 70-ம் நாள் தொடங்கி, 120 நாட்கள் வரை காய் பறிக்கலாம்.

அடியுரமாகும் அரசாணிக்கொடி!
“தக்காளி தளதளக்கிற இந்த மூணு ஏக்கர்ல இதுக்கு முந்தி அரசாணி சாகுபடி செஞ்சிருந்தோம். அதை, அறுவடை செஞ்ச பிற்பாடு காய்ஞ்சு கிடந்த கொடிகளையும் சேர்த்து அப்படியே உழவு ஓட்டிட்டோம். அந்தக்கொடிங்க மண்ணோடு மண்ணா மட்கி, அடுத்த போக வெள்ளாமைக்கு அடியுரமா மாறிடுச்சு. அதோட தொழுவுரமும் சேருறப்போ நல்ல பலன் கிடைக்குது” என்கிறார், சோமசுந்தரம்
ஊடுபயிரில், உபரி லாபம்!
தென்னையில் ஊடுபயிராக 50 சென்ட் நிலத்தில் பீர்க்கன் சாகுபடி செய்யும் சோமசுந்தரம், ‘‘வாரம் 200 கிலோனு 50 சென்ட்ல இருந்து மொத்தம் 3 டன் அளவுக்கு பீர்க்கன் கிடைக்கும். அதையும் நேரடியாத்தான் விற்பனை செய்றேன். சராசரியா கிலோவுக்கு 30 ரூபாய் கிடைக்கும். இது மூலமா 90 ஆயிரம் வருமானம். இதுக்கு தனியா எந்தப் பராமரிப்பும் செய்றதில்லை’’ என்கிறார்.

மழைக்கால கோழிப் பராமரிப்பு!
இது, வடகிழக்குப் பருவமழைக் காலம். இம்மழையின் மூலம் கோழிகளுக்கு நோய்கள் ஏற்படுவது வாடிக்கை. இதிலிருந்து கோழிகளைப் பாதுகாக்கவும், பராமரிக்கவும் தேவையான நுட்பங்கள் குறித்து, இங்கே முத்தான சில விஷயங்களைச் சொல்கிறார்... சுகுணா பவுல்ட்ரி இன்ஃபர்மேஷன் மேனஜ் மெண்ட் கல்லூரி முதல்வர் கே. கஜேந்திரன்.
‘‘கோழிப்பண்ணைகளைச் சுற்றி பள்ளங்கள் இருந்தால், அவற்றையெல்லாம் மூடவேண்டும். இல்லையெனில் மழை நீர் நிரம்பி, தொற்றுநோய்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. தீவன மூட்டைகளை, மழையில் பாதிக்காத இடத்தில் சேமிக்க வேண்டும். மழைத்துளியானது தீவனத்தில் கலந்தால் பூஞ்சை தொற்று ஏற்படக்கூடும்.  மழைச்சாரல் அடிக்காமல் இருக்க, சுற்றிலும் பாலித்தீன் கவர் கொண்டு கட்டவேண்டும். மழைக்கு முன் மற்றும் மழைக்குப் பிறகு போட வேண்டிய தடுப்பூசிகள், மருந்துகள் மற்றும் உணவு முறைகளை எல்லாம் சரிவரச் செய்ய வேண்டும்.
நனைந்த, ஈரமான தீவனம் காரணமாக பூஞ்சைக்காளான் நோய் வரக்கூடும். காற்று மற்றும் நீரினால் பரவக்கூடிய சுவாச பாதிப்பு, ஈகோலி, காலரா, வெள்ளைக் கழிச்சல் போன்ற நோய்களும் ஏற்படும். இந்நோய்கள் தாக்கிய கோழிகளை உடனே தனிமைப்படுத்த வேண்டும்’’ என்று சொன்னார்.
மு. ரமேஷ்

0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites