இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Wednesday, April 3, 2013

மனம் கவரும் மாடிவீட்டு உழவர்


''விவசாயம் செய்ய நினைத்தால், ஏக்கர் கணக்கிலான நிலம் தேவையில்லை. ஆர்வமும், அர்ப்பணிப்பும் இருந்தால் மட்டும்போதும். வீட்டு காம்பவுண்ட் சுவற்றில்கூட விவசாயம் செய்யலாம்'' என்கிறார், கோயம்புத்தூர் பகுதியைச் சேர்ந்த வின்சென்ட் பால்ராஜ்.
சுற்றுச்சுவர் தோட்டம், உரித்தோட்டம் என விதவிதமான முறைகளில் காய்கறி சாகுபடி செய்திருக்கும் வின்சென்ட் பால்ராஜை, தேடிச் சென்றபோது... தன் வீட்டுச் செடிகளுக்கு பூவாளி மூலம் தண்ணீர் தெளித்துக் கொண்டிருந்தார். அறிமுகப்படுத்திக் கொண்டதும்... உற்சாகமாகப் பேசத் தொடங்கினார்.
''இந்தியன் பேங்க்ல 30 வருஷம் வேலை பாத்துட்டு, வி.ஆர்.எஸ் வாங்கிட்டேன். தினமும் மார்க்கெட்டுக்குப் போய் தேவையான காய்கறிகளை வாங்கிட்டு வருவேன். எங்க வீட்டுல கீரைகளை விரும்பிச் சாப்பிடுவோம். மார்க்கெட்ல வாங்கிட்டு வர்ற கீரைகளை தண்ணியில நல்லா கழுவின பிறகும், கெட்ட நாத்தம் வந்துகிட்டே இருந்துச்சு. விசாரிச்சப்போ, கீரை சாகுபடி செய்ற பகுதியில ஓடுற ஆத்துத் தண்ணியில சாக்கடையும் கலந்து போகுதுனு தெரிஞ்சுது. அப்போதான், 'நாமே கீரையை உற்பத்தி செய்யலாம்’னு தோணுச்சு. அப்ப ஆரம்பிச்சதுதான், இந்த காம்பவுண்ட் விவசாயம்'' என்று முன்னுரை கொடுத்த வின்சென்ட் பால்ராஜ், 
சுற்றுச்சுவரில் விளைந்து நின்ற கீரைகள், உரிகளைப் போல தொங்கவிட்ட பைகளில் காய்த்து தொங்கிய காய்கறிகள் போன்றவற்றைக் காட்டியபடி சாகுபடி முறையை விளக்கினார்.
''9 இஞ்ச் அகலத்துக்கு உள்ள சுற்றுச்சுவரில்தான் செடிகள் வளர்க்க முடியும். சுவற்றின் மேல்பகுதியில், பாலிதீன் ஷீட்டைக் கொண்டு, நீள்வடிவ உறையைத் தயாரிக்க வேண்டும். இந்த உறையின் மேல்பாகமானது, திறந்து மூடுவது போல இருக்க வேண்டும். பிறகு, பாலிதீன் உறைக்குள் அரை அடி உயரத்துக்கு தேங்காய் நார்க்கழிவுகளைக் கொட்டிப் பரப்பி, அதன் மீது... இலை, தழை, குப்பைகளை தூளாக்கித் தூவ வேண்டும். பிறகு, உறையை மூடித் தைத்துவிட வேண்டும். இந்த உறையானது, சுவற்றின் மீது இறுகப் பற்றி நிற்கும்வகையில், மரச்சட்டங்களைப் பயன்படுத்தி, கொட்டில் போல உருவாக்க வேண்டும்.
பின்னர், தேவைக்கு ஏற்ப உறையின் மேல்பாகத்தில் துளையிட்டு, அதன் வழியாக காய்கறி விதைகளை விதைத்து, தண்ணீர் அளித்து வந்தால் போதும், குறிப்பிட்ட நாட்களில் அவை வளர்ந்து மகசூல் தரும். இதேபாணியில் கீரையையும் விதைக்கலாம். கீரைக்காக தயாரிக்கும் உறையின் மேல்பாகத்தை மூடத் தேவையில்லை. தொட்டிபோலயே தயாரித்து, அதில் கீரை விதைகளைத் தூவவேண்டும். 20 நாட்களில் கீரை வளர்ந்து விடும். இது, தமிழ்நாட்டில் யாரும் செய்யாத யுக்தி. இந்த முறையில் பல வகை கீரைகளை உற்பத்தி செய்யலாம். நான், அரை கீரை, சிறு கீரை ஆகிய இரண்டையும் சாகுபடி செய்கிறேன். பள்ளி, கல்லூரி, அலுவலகம் என்று அனைத்து இடங்களிலும் சுற்றுசுவர்களில் இப்படி விவசாயம் செய்ய முடியும்.
கொய்மலர்கள் மீது எனக்கு ஆர்வம் உண்டு. அதற்காக நிழல்வலை அமைத்து வளர்த்து வருகிறேன். இந்த நிழல் வலைக்குள்ளேயேதான் உரித்தோட்டத்தை அமைத்துள்ளேன். இரண்டு அடி உயரம், ஒரு அடி அகலம் கொண்ட 15 பிளாஸ்டிக் பைகளில் தேங்காய் நார் கழிவுகளை ஒரு அடி உயரத்துக்கு நிரப்பிக் கொள்ள வேண்டும். மீதி உள்ள இடத்தில் மண்புழு உரம், வெட்டிவேர், மட்கிய இலைக்கழிவுகள் ஆகியவற்றைப் போட்டு நிரப்ப வேண்டும். பிறகு, அதனுள் லேசாக தண்ணீர் விட்டு, தேவையான கீரைகள் மற்றும் காய்கறி விதைகளை தகுந்த இடைவெளியில் ஊன்ற வேண்டும். பின்னர், பூவாளி மூலம் தண்ணீர் தெளிக்க வேண்டும். இதுதான் உரித்தோட்டம். செடிகள் வளரும் பருவத்தில், இலைகளே மூடாக்கு போட்டு விடுவதால், களைகள் அதிகமாக வர வாய்ப்பில்லை.
இந்த பிளாஸ்டிக் பை தொட்டிகளை, கொய்மலர்களுக்கான நிழல்வலை பந்தலில், கைக்கு எட்டும் உயரத்தில் தொங்கவிட வேண்டும். இப்படிச் செய்வதால் குறைந்த இடத்தில் நிறைய தொட்டிகளை வைக்க முடியும். கீழேயுள்ள இடத்தில் அலங்காரச் செடிகளையும் வளர்க்கலாம்'' என்று தொழில்நுட்பங்கள் தந்த வின்சென்ட் பால்ராஜ் நிறைவாக,
மாடி வீட்டு உழவர்!
''நான் உரித்தோட்டத்தில் அவரை, தக்காளி, கத்திரி, கீரை மாதிரியான வீட்டுக்குத் தேவையான காய்கறிகளை சாகுபடி செய்றேன். பூச்சித் தாக்குதல் இருந்தா... வேம்பு, புகையிலை கலந்த மூலிகைப் பூச்சிவிரட்டியைத் தயாரிச்சு, கையடக்க ஸ்பிரேயர் மூலமா 'ஸ்பிரே’ செஞ்சுடுவேன். 'ஹியூமிக் ஆசிட்’டை பயன்படுத்துறதால மண்ணோட கரிமச்சத்து அதிகமாகுது.
முழுக்க இயற்கை முறையில உற்பத்தியாகறதால தரமான, சுவையான காய்கறிகள் கிடைச்சுடுது. நான் இந்தத் தோட்டம் மூலமா வாரம் 2 கிலோ கத்திரி, 2 கிலோ தக்காளி, தினமும் ஒரு கிலோ கீரை உற்பத்தி செய்றேன். அதேமாதிரி, கழிவுத் தண்ணியைத்தான் செடிகளுக்குப் பயன்படுத்துறேன். வீட்டுத்தோட்டம் அமைக்க முடியலையேனு யாரும் கவலைப்பட வேண்டியதில்லை. இந்த முறையைக் கடைபிடிச்சு, மாடிவீட்டு உழவரா வாழமுடியும்'' என்று சொல்லி விடைகொடுத்தார்.





0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites