இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Sunday, February 24, 2019

சீமாறு | துடைப்பம் தயாரிப்பு

வருமானத்தைப் ‘பெருக்கலாம்’!
பா ர்த்தால் சின்ன துடைப்பம்தான்... ஆனால், அதற்குப் பின்னால் கொட்டிக்கிடக்கும் வருமானத்தைப் பார்க்கும்போது வியப்பாக இருக்கிறது.
‘‘நம் மாநிலத்தில் தென்னைமரம் இல்லாத ஊர் கிடையாது. அதனால், இந்த தென்னந்துடைப்பம் தொழிலுக்கு எந்தப் பிரச்னையும் இருக்கப் போவதில்லை. சிறிய அளவில் தொழில் தொடங்க நினைப்பவர்கள் தாராளமாக இந்தத் தொழிலில் இறங்கலாம்’’ என்று நம்பிக்கை கொடுக்கிறார் கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் பகுதியைச் சேர்ந்த பைசுல் ஹுசைன்.
இந்த சுற்றுவட்டாரத்தில் மட்டும் 10 துடைப்பம் மண்டிகள் இருக்கின்றன. இங்கு தயாராகும் தென்னந்துடைப் பங்கள் வட மாநிலங்களில் ஏக பிரசித்தம்.
40 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்தால் போதும், குறைந்தபட்சம் மாதம் 10 ஆயிரம் ரூபாய் வருமானம் பார்க்கலாம். மழைக் காலம் தொழில் நடத்த ஏதுவாக இருக்காது.
இந்தத் தொழிலின் தன்மை பற்றி விவரித்தார் பைசுல்ஹுசைன். ‘‘வீடு, தோப்புகளில் கிடைக்கும் தென்னங்கீற்றுகளில் இருந்து கிழித்து எடுக்கப்பட்ட குச்சிகளைச் சேர்த்துக்கட்டி, துடைப்பமாக்கி வைப்பார்கள். அதை இரண்டு அல்லது மூன்று ரூபாய் கொடுத்து வாங்கி மொத்த வியாபாரிகளுக்குக் கொடுத்து லாபம் பார்க்கும் சிறு தொழிலாளிகளும் இருக்கிறார்கள்.
சுமார் அரைக்கிலோ எடை நிற்கும் துடைப்பத்தை வாங்கி வந்து மொத்த வியாபாரியிடம் கொடுக்கும்போது அவர்கள் எடைபோட்டுத்தான் எடுக்கிறார்கள். ஒரு கிலோவுக்கு குறைந்தபட்சம் எட்டு ரூபாய் கிடைக்கிறது. ஆக, ஒரு துடைப்பத்துக்கு லாபமே இரண்டு ரூபாய்க்குக் குறையாமல் கிடைக்கும். ஒரு நாளில் 200 துடைப்பங்களைக்கூட சேகரிக்கிறார்கள். அவர்களுடைய தினசரி வருமானம் 300 முதல் 400 ரூபாயாக இருக்கிறது. செலவுகள் எல்லாம் போக லாபமாக குறைந்தபட்சம் 250 ரூபாய் சம்பாதிக்கிறார்கள்’’ என்றார்.
இந்தத் தொழிலில் இன்னொரு தரப்பு, மொத்த வியாபாரிகள்... இவர்கள் சேகரிக்கும் துடைப்பங்களைத் தரம் பிரித்து, ஐம்பது ஐம்பதாக பிளாஸ்டிக் பைகளில் பேக் செய்து ஃபார்வேர்டிங் ஏஜென்ட்கள் மூலமாக வெளிமாநிலங்களுக்கு அனுப்பி வைக்கிறார்கள்.
ஒரு பண்டலின் விலை 300 முதல் 800 ரூபாய் வரையில் தரத்துக்கு ஏற்ப அமைகிறது. ஃபார்வேர்டிங் ஏஜென்ட்களுக்கு 3% கமிஷன் கொடுத்தாலும் மொத்த வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கிறது.
இதில் துடைப்பங்களை அடுக்கி வைப்பதற்கு இடம், அதை தரம்வாரியாக பிரித்து சுத்தம் செய்வதற்கு வேலையாட்கள் என்கிற அளவில் சிறு முதலீடு செய்ய வேண்டியிருக்கும்’’ என்றார்.
மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் துடைப்பங்களுக்கான சீசன் உச்சத்தில் இருக்கும். மழைக்காலம் தவிர்த்த மற்ற மாதங்களிலும் நிரந்தர வருமானம் கிடைக்கக்கூடிய தொழில் இது.
அதோடு, சராசரியாக 100 பேருக்கு வேலை வாய்ப்பும் வழங்கக்கூடிய தொழிலாக இருக்கிறது.
சுத்தமாக இருக்கப் பயன்படுத்தும் துடைப்பங்கள் நமக்குச் சோறு போடும் என்பது இந்தத் தொழிலுக்கு நிச்சயம் பொருந்தும்!

0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites