
அன்றாடம் சமையலில் பயன்படுத்தப்படும் பருப்பு வகைகளுக்கு எப்போதும் சந்தையில் தேவை இருந்து கொண்டே இருக்கும். குறிப்பாக, பாசிப்பருப்பு, துவரம்பருப்பு ஆகியவற்றுக்கு தேவை மிக அதிகம். இதை மனதில் வைத்து, மானாவாரி மற்றும் இறவையில் தொடர்ந்து மகசூல் கிடைக்கும் வகையில், நிலத்தை இரண்டாகப் பிரித்து பாசிப்பயறு சாகுபடியில் தொடர் வருமானம் பெற்று வருகிறார், விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை தாலூகா, கத்தாளம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பாக்கியராஜ்.
‘‘நாங்க பரம்பரையாவே விவசாயக் குடும்பம்தான். இந்தப்பகுதி முழுக்கவே வானம் பாத்த பூமிதான். பத்தாவது வரைக்கும்தான் படிச்சேன். அதுக்கு மேல படிக்க வைக்க வீட்டுல வசதியில்லை. அறிவொளி இயக்கத்துல மூணு வருஷம் வீதி நாடகக்குழுப்...