இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Thursday, November 29, 2012

எந்த ஊரில் என்ன வாங்கலாம்


பட்டுப் புடவைகளுக்கு பெயர் போனது தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகேயுள்ள திருபுவனம்

ம்மூர் பெண்களுக்கு மிகவும் பிடித்த விஷயங்கள் ரெண்டே ரெண்டுதான். ஒன்று தங்கம், மற்றொன்று பட்டுப் புடவை. இந்த பட்டுப் புடவைகளுக்கு பெயர் போனது தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகேயுள்ள திருபுவனம். முகூர்த்த நாட்கள் இருக்கும் எல்லா மாதங்களுமே இங்கு பட்டுப் புடவை வாங்கும் 'சீசன்’தான்.
'பட்டுநூல்காரர்கள்’ என பேச்சு வழக்கில் அழைக்கப்படும் சௌராஷ்டிர சமூகத்தைச் சேர்ந்தவர்களே திருபுவனத்தில் அதிகம்.
தஞ்சையை ஆண்ட சரபோஜி மன்னருக்கு பல விதமான பட்டுத் துணிகளை வடிவமைத்து தருவதற்காக இந்த ஊரில் குடியேறிய இவர்கள், இன்றைக்கும் பட்டுப் புடவை உற்பத்தியில் தமிழகத்திலேயே தலைசிறந்து விளங்குகிறார்கள்.
திருபுவனத்தில் இருக்கும் சன்னதி தெருதான் அங்கு உற்பத்தியாகும் அனைத்துப் பட்டுப் புடவைகளின் காட்சிக் கூடம். இங்கு நான்கு அரசாங்க சொஸைட்டிகளும் சிறியதும் பெரியதுமாக ஐம்பத்தைந்து தனியார் கடைகளும் இருக்கின்றன.
150 மீட்டர் மட்டுமே நீளமுள்ள இந்த சன்னதி தெருவில் வருடந்தோறும் ஐம்பது கோடி ரூபாய்க்கும் அதிகமாக 'டேர்னோவர்’ ஆகிவருகிறது.
இந்த ஊரில் உற்பத்தியாகும் பட்டுப் புடவைக்கு அப்படி என்ன விசேஷம் என திருபுவனம் சில்க் சிட்டி பட்டு ஜவுளிகள் வியாபாரிகள் சங்க செயலாளர் சங்கரிடம் கேட்டோம்.
'திருபுவனத்தில் உற்பத்தியாகும் பட்டுப் புடவைகளில் தஞ்சை மண்ணின் கலையம்சமும் பாரம்பரியமும் நிரம்பி இருக்கும். இங்கு உற்பத்தி செய்யப்படும் புடவைகளின் கலர், ஜரிகை போன்றவற்றில் எப்போதுமே ஒரு தனித்தன்மை இருக்கும். இங்கு தயாரிக்கப்படும் புடவைகளின் 'திக்னெஸ்’ அதிகமாக இருக்கும். 'ஒத்தைப்பாகு’, 'ரெட்டைப்பாகு’ என இங்கு தயாரிக்கப்படும் புடவைகளின் வகைகளும் வெவ்வேறுவிதமாக இருக்கும்'' என சிறப்புகளை அடுக்கினார்.திருபுவனத்தில் மொத்தம் ஐயாயிரம் குடும்பங்கள் இருக்கிறது. அதில் நான்காயிரம் குடும்பங்களுக்கு பட்டுப் புடவை உற்பத்திதான் குடும்பத் தொழில். இங்கு குறைந்தபட்சம் 2,500 ரூபாயிலிருந்து அதிகபட்சமாக ஒரு லட்சம் வரைக்கும் பட்டுப் புடவைகளை வாங்க முடியும். அதேபோல் கல் வேலைபாடு கொண்ட பட்டுப் புடவைகளை 5,000 ரூபாயிலிருந்து 30,000 ரூபாய் வரைக்கும் வாங்கலாம். சராசரி வேலைபாடுகள் கொண்ட ஒரு பட்டுப் புடவையை செய்து முடிக்க ஐந்து நாட்களும், அதிக வேலைபாடுகள் உள்ள புடவைகளை தயாரிக்க பதினைந்து நாட்கள் வரைக்கும் தேவைப்படுகிறது. பெரும்பாலும் ஒரு பட்டுப் புடவையின் விற்பனைத் தொகையில் 60 சதவிகிதம் வரை அதன் உற்பத்திச் செலவாக இருக்கிறது.
பட்டுப் புடவை உற்பத்தி தவிர, பழைய பட்டு புடவைகளுக்கு 'பேட்ச் வொர்க்’ செய்வது, சாயம் போன பட்டுப் புடவைகளுக்கு சாயமேற்றும் தொழிலும் பெருவாரியாக நடக்கிறது. இதற்கெல்லாம் குறைந்தபட்சம் 500 ரூபாய் முதல் வேலைக்கேற்ற மாதிரி கட்டணம் வாங்கப்படுகிறது. ''இன்றைக்கும் தமிழ்நாட்டுல இருக்குற எல்லா ஊர்களிலிருந்தும் திருபுவனத்துக்கு வந்து வியாபாரிகள் மொத்தமாக புடவைகளை வாங்கிட்டு போய் 20-25% லாபம் வைத்து விக்கிறாங்க'' என்கிறார்கள் பல்வேறு சொஸைட்டிகளை சேர்ந்த ஊழியர்கள்.
'முன்னாடி எல்லாம் திருபுவனத்தில் உற்பத்தியும் விற்பனையும் சீராக இருந்தது. ஆனால், இப்ப உற்பத்தி அதிகமாக இருக்கு; விற்பனையோ குறைஞ்சிருக்கு. டி.வி.யில் பெரிய பெரிய கடைகள் கொடுக்குற விளம்பரங்கள்ல வரும் மாடல்களையும் டிசைன்களையும் பார்த்துட்டு அந்த வாரத்துலயே நேரா இங்கே வந்து 'அந்த மாடல்களையெல்லாம் எடுத்துப்போடுங்க’னு கேட்குறாங்க. எங்களால அவ்வளவு வேகமா ஓட முடியுறதில்லை'' என்று வருத்தப்பட்டு பேசுகிறார்கள் பட்டு வியாபாரிகள்.
அடுத்த தடவை நீங்கள் கும்பகோணம் போனால், திருபுவனம் ஞாபகமிருக்கட்டும்.
- உ.அருண்குமார்,
படங்கள்: எஸ்.சிவபாலன்

0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites