இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Sunday, September 15, 2013

போராடிப் பார்க்கத்தானே வாழ்க்கை

ஆட்டோ ராணி’ சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த ஷேர் ஆட்டோ ஓட்டுனர் முத்துலட்சுமியை அப்படிச் சொன்னால்தான் அடையாளம்  காட்டுகிறார்கள். அண்ணாநகர், கோயம்பேடு, போரூர், மீனம்பாக்கம், ரெட்டேரி, தி.நகர், கே.கே.நகர் என இவரது ஷேர் ஆட்டோவை சென்னையில்  பரவலாகப் பார்க்கலாம். ஒரு நாளைக்கு 14 மணி நேரம் உழைத்தாலும் எப்போதும் உற்சாகமாகவே இருக்கிறார் முத்துலட்சுமி!

‘‘அம்மா-அப்பா வச்ச பேரு முத்துலட்சுமி. வாடிக்கையாளர்கள் எனக்குக் கொடுத்த பட்டம் ‘ஆட்டோ ராணி’. எல்லாரும் அப்படியே கூப்பிட்டு, இப்ப  அதுவே எனக்கான அடையாளமாகிருச்சு... எட்டாவதுக்கு மேல படிக்க வீட்ல வசதியில்லை. வட மாநிலத்தைச் சேர்ந்த ஒருத்தங்க வீட்ல வீட்டு  வேலை பார்த்திட்டிருந்தேன். அப்ப அந்த வீட்டு டிரைவர்கிட்ட, எனக்கு கார் ஓட்டக் கத்துக் கொடுக்கச் சொல்லிக் கேட்டேன். அவரும் கத்துக்  கொடுத்தார். அந்த வீட்டு ஆளுங்களுக்கே கார் ஓட்டிக்கிட்டிருந்தேன். அவங்க திடீர்னு ஊரை விட்டு ராஜஸ்தான் போயிட்டாங்க. 

அத்தனை நாளா சோறு போட்டுக்கிட்டிருந்த வீட்டு வேலைக்கும் வழியில்லை. வேலை பார்த்திட்டிருந்தப்ப, அவங்களே திண்டிவனத்தைச் சேர்ந்த  ஒருத்தருக்கு என்னைக் கட்டிக் கொடுத்தாங்க. எங்க வீட்டுக்காரருக்கு கூலி வேலை. திடீர்னு அவருக்கு ஒரு ஆக்சிடென்ட். இடுப்பெலும்பும்  மூட்டெலும்பும் நழுவி, நடக்க முடியாமப் போச்சு. அவருக்கும் வேலையில்லை. 3 பொம்பிளைப் பிள்ளைங்க... எல்லாரும் சாப்பிட்டாகணுமே... என்ன  செய்றதுங்கிற குழப்பத்துல, ஆட்டோ ஓட்டக் கத்துக்கிட்டு, 98ல லைசென்ஸ் வாங்கினேன். 

ஆட்டோ ஓட்டி சம்பாதிச்ச காசுலதான், எங்க மொத்த குடும்பத்துக்கும் சாப்பாடு. இதுக்கிடையில, தரமணியில உள்ள சாலைப் போக்குவரத்து நிலையம்  சார்பா, சுமார் 40 பெண்களுக்கு ஆட்டோ ஓட்டக் கத்துக் கொடுத்தேன். ‘தாட்கோ’ மூலமா லோன் வாங்கி, சொந்தமா ஆட்டோ வாங்கி  ஓட்டிக்கிட்டிருந்தேன். மூத்த பொண்ணுக்குக் கல்யாணம் பண்றதுக்காக ஆட்டோவை வித்துட்டேன். அதுக்கப்புறம் ஷேர் ஆட்டோ ஓட்ட ஆரம்பிச்சேன்.  வாடகை வண்டிதான். ஆனா, என் சொந்த வண்டியை எப்படிப் பார்த்துப்பேனோ அப்படித்தான் வச்சிருக்கேன். 

20 வருஷமா ஆட்டோ ஓட்டறேன். இதுவரை ஒரு சின்ன விபத்துகூட நடந்ததில்லை. ஒருநாள் கூட போலீஸ்ல மாட்டினதில்லை. ஆர்.சி. புக்,  லைசென்ஸ்னு எல்லாம் பக்காவா வச்சிருப்பேன். சில நேரம் கல்யாணம், விசேஷம்னு ஊரு விட்டு ஊரு போக வேண்டியிருக்கும். என்  ஆட்டோவுலயே போயிடுவேன். அப்படிப் போறதுக்கு முன்னாடி, போலீஸ் ஸ்டேஷனுக்கு போய், ஆர்.சி புக், லைசென்ஸ் ஜெராக்ஸ் காப்பி கொடுத்து,  நான் இன்ன காரணத்துக்காக, இன்ன இடத்துக்குப் போறேன்னு தகவல் சொல்லி, போலீஸ்கிட்டருந்தே ஒரு லெட்டரும் வாங்கிக்குவேன். 

யாரும், எந்தக் கேள்வியும் கேட்றக்கூடாதுங்கிறதுல ரொம்ப கவனமா இருப்பேன்...’’ - ஆட்டோவை மிஞ்சும் வேகத்தில் பேசுகிற முத்துலட்சுமி, ஷேர்  ஆட்டோ ஓட்டுவதில் வித்தியாசமான கொள்கையை வைத்திருக்கிறார். ‘‘முதல் சவாரி ஆணா, பெண்ணான்னு பார்ப்பேன். ஆணா இருந்தா அடுத்தடுத்து  வண்டியில ஏறுகிறவங்களும் ஆண்களாவே இருக்கிற மாதிரிப் பார்த்துக்குவேன். பெண்ணா இருந்தா, மொத்தமும் பெண்களா இருப்பாங்க.  ஆம்பிளைங்களையும் பொம்பிளைங்களையும் சேர்த்து ஏத்தவே மாட்டேன். தேவையில்லாத பிரச்னை வரக்கூடாது பாருங்க...’’ என்கிறவர், ஆட்டோ  ஓட்ட வந்த புதிதில் நிறைய பிரச்னைகளை சந்தித்திருக்கிறாராம்.

‘‘குடிச்சிட்டு வண்டியில ஏற வர்றவங்கதான் பிரச்னை பண்ணுவாங்க. அவங்கக்கிட்ட சண்டை போட முடியாது. டீசல் தீர்ந்திடுச்சு, பெட்ரோல்  காலியாயிருச்சுன்னு எதையாவது சொல்லி, திருப்பி அனுப்பிடுவேன். அதையும் மீறி வண்டிக்குள்ள ஏறி உட்கார்ந்துக்கிட்டு அராஜகம் பண்றவங்களும்  இருக்காங்க. ‘எங்கே போகணுமோ சொல்லு... நான் ரெடி’ன்னு சொல்லிட்டு, நேரா வண்டியை பக்கத்துல உள்ள போலீஸ் ஸ்டேஷனுக்கு விட்ருவேன்.  பிரச்னை பண்ணினவங்களே, என்கிட்ட மன்னிப்பு கேட்டுட்டு ஓடிருவாங்க. இது எல்லாத்தையும் மீறி, நான் அழகா இல்லாததுதான் எனக்கு பெரிய  பிளஸ். 

ஒருவேளை பார்க்க சுமாரா இருந்திருந்தா, ஆட்டோ ஓட்ட வந்த அடுத்த நாளே என் வாழ்க்கை சீரழிஞ்சிருக்கும். அழகுக்குப் பதிலா எனக்கு அந்த  ஆண்டவன் அளவில்லாத தைரியத்தைக் கொடுத்திருக்காரு. அதுதான் என்னோட ஆயுதம். என் பொண்ணுங்களுக்கும் ஆட்டோ ஓட்டணும்னு ரொம்ப  ஆசை. ‘கொஞ்ச காலம் பொறுங்க. வாலிபம் போகட்டும். அப்புறம் வாங்க’ன்னு சொல்லி வச்சிருக்கேன்...’’ முத்துலட்சுமியின் வார்த்தைகளில்  வலிகளைக் கடந்த வேதனை தெரிகிறது.

See life struggling?
‘‘அடுத்த வேளை சாப்பாட்டுக்கு வழி தெரியாத எத்தனையோ பொம்பிளைங்க, தற்கொலைதான் தீர்வுன்னு அந்த முடிவுக்குப் போறாங்க. அப்படி  யோசிச்சிருந்தா, நான் என்னிக்கோ செத்திருக்கணும். போராடிப் பார்க்கத்தானே வாழ்க்கை? தைரியமும் தன்னம்பிக்கையும் இருந்தா, எவ்வளவு  கஷ்டத்துலேருந்தும் மீண்டு வந்துடலாம். கஷ்டம்னு என்கிட்ட வரும் எல்லாருக்கும் நான் அதைத்தான் சொல்லிட்டிருக்கேன். மறுபடி சொந்தமா ஒரு  ஆட்டோ வாங்கணும். இன்னும் ரெண்டு பொண்ணுங்களையும் நல்லபடியா கட்டிக் கொடுக்கணும். பெண்களுக்கு, பெண்கள் மட்டுமே சொல்லிக்  கொடுக்கிற மாதிரி ஒரு டிரைவிங் ஸ்கூல் ஆரம்பிக்கணும்... அது போதும் எனக்கு...’’ - நியாயமான ஆசைகளை நயமாகச் சொல்கிறார் ஆட்டோ ராணி.

படங்கள்: பால்துரை
நன்றி குங்குமம் தோழி

0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites