இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

• எங்கும் உயர்ந்தே நில்! எதிலும் தமிழே சொல்!! வறுமை கண்டு நொருங்காதே! வாய்ப்பு இருக்கு மறக்காதே!! விதையென விழு! விருட்சமென எழு!! உறுதியான உள்ளம் ! உலகை வெல்லும் !! ;

விவசாயத்தை தொழிலாக்கு! இந்தியாவை வளமாக்கு!! உயர்ந்தவனாய் இரு! பிறரை உயர்த்துபவனாய் இரு!! சிந்தனையில் சீற்றம்! வாழ்க்கையில் ஏற்றம்!! மூச்சு உள்ளவரை முன்னேறு ! முடியும் என்பவர்க்கே வரலாறு !! ;

.

• முடியும் என்றே முன்னேறு! வெற்றி என்பதே உன்பேரு!! செயலில் மேதையாகு! பலருக்கு பாதையாகு!! வல்லமையை வெளிப்படுத்து! வாழும் உலகை வசப்படுத்து!! முடியும் என்பதுதான் முன்னேற்றத்தின் முதல்படி !!

.

• பண்பில் உயர்ந்து நில் ! பணியில் உயர்ந்து செல் !! அனுபவத்தைப் பாடமாக்கு ஆனந்தத்தைப் பதவியாக்கு தடைகளைத் தகர்த்திடு சாதிப்புகளை நிகழ்த்திடு !!

.

Tuesday, December 26, 2017

காய்கறி சாகுபடியில் விவசாயி அனுபவம்

நான் தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் தாலுகா, பெருமாள் கவுண்டன்பட்டி என்னும் ஒரு சிறு கிராமத்தைச் சேர்ந்த ஒரு விவசாயி. நான் என்னுடைய மாட்டுக் கொட்டகையில் பந்தல் அமைத்து ஆடிப் பெருக்கு அன்று இரண்டு நாட்டுச்சுரை விதைகளை ஒரு சிமென்ட் தொட்டியில் நடவு செய்து கவனமாக வளர்த்து வந்தேன். அந்த இரண்டு செடிகளுக்கும் மண்ணை மலடாக்கும் ரசாயன உரங்களை கொடுக்காமல் மண்ணை வளமாக்கும் ஜீவாமிர்தத்தையே உரமாகக் கொடுத்து வந்தேன். நான் கொடுத்த அந்த உரத்திற்கு பரிசாக அந்த இரண்டு சுரைச்செடிகளும் இரண்டரை அடி நீளத்தில் 19 காய்கள் காய்த்தன. அந்த சமயத்தில் என்னுடைய இரண்டு கோழிகள் குஞ்சு பொரித்ததில் எட்டு முட்டைகள் குழு முட்டை (கெட்டுப்போனது) ஆகிவிட்டன.
அதில் இரண்டு முட்டை களை செடிக்கு ஒன்று வீதம் வேரின் பக்கவாட்டில் சிறு குழி எடுத்து குழியில் முட்டைகளைப் போட்டு உடைத்து விட்டு மண்ணால் மூடி நீர் ஊற்றி பராமரித்து வந்தேன். இப்பொழுதான் ஒரு ஆச்சரியம் காத்திருந்தது. ஐந்து நாள் கழித்து மாடியில் ஏறிநின்று கொடிகளை கவனித்தேன். வயதான அந்த கொடிகளில் சுமார் 50 பூக்களுக்கு மேல் பூத்திருந்தன. அந்த 50 பூக்களில் 18 பூக்கள் காயாக மாறி ஒரு வாரத்திற்குள் அசுர வேகத்தில் பெரிதாகி பறிப்புக்கு வந்தன. மீண்டும் ஆறுநாள் கழித்து முன்னைப் போலவே செடிக்கு ஒரு முட்டை வீதம் உரமாகக் கொடுத்தேன். மீண்டும் கொடிகளில் 55 பூக்கள் பூத்தன. அதில் 20 பூக்கள் காயாக மாறி 9 நாட்களில் பறிப்புக்கு வந்தன. மீண்டும் ஒரு வாரம் கழித்து செடிக்கு இரண்டு முட்டைகள் வீதம் உரமாகக் கொடுத்தேன்.
இப்பொழுது 70 பூக்களுக்கு மேல் பூத்தன. அதில் 24 பூக்கள் காயாக மாறி என்னை வியப்பில் ஆழ்த்தியது. மீண்டும் அதே முயற்சி, ஆனால் அந்த செடிகளுக்கு நித்திரை வந்து விட்டுது போலும், சித்திரை முடிய செடிகளும் நித்திரையில் ஆழ்ந்து விட்டன. அந்த இரண்டு சுரைச்செடிகளின் வாரிசுகளும் இந்த வருட ஆடியில் முளைத்து வளமாக வளர்ந்து வருகின்றன. அந்த இரண்டு சுரைச்செடிகளுக்கும் நான் கொடுத்த உரமோ 8 கெட்டுப்போன முட்டைகள். ஆனால் அந்த இரண்டு சுரைச்செடிகளும் எனக்குக் கொடுத்த வரவோ 81 சுரைக்காய்கள்.
இந்த சிறு முயற்சியின் மூலம் நாம் உணர்வது என்னவென்றால் காய்கறி மற்றும் எல்லாப் பயிர்களுக்கும் கெட்டுப்போன முட்டைகள், ஒரு சிறந்த உரம் என்பதை உணர்கிறோம். எனவே கோழி வளர்க்கும் விவசாயிகள் கெட்டுப்போன முட்டைகளை வீசி எறிந்து விடாமல் நம்முடைய பயிர்களுக்கே உரமாகக் கொடுக்க வேண்டும்.

சம்பங்கி பூ'

Image result for சிவகங்கையில் மணக்கும் "சம்பங்கி பூ'

வானம் பார்த்த பூமி சிவகங்கை. இம் மாவட்ட நிலத்தில் பூக்கள் விளைவது விவசாயிகளுக்கு அரிய விஷயம். ஆனாலும் சிவகங்கை கவுரிபட்டி விவசாயி எஸ்.மோகன், தனது நிலத்தை பண்படுத்தி நவீன சொட்டுநீர் பாசன கருவி மூலம் நீர் பாய்ச்சி, "சம்பங்கி பூ' சாகுபடி செய்து சாதித்து வருகிறார். விவசாயி மோகன் கூறியதாவது: சேலத்தை சேர்ந்த நாங்கள் குடும்பத்துடன் விவசாயம் செய்ய 23 ஆண்டுகளுக்கு முன் இங்கு வந்தோம். கவுரிபட்டியில் வாங்கிய நிலத்தை பண்படுத்தி, 3 ஏக்கரில் சம்பங்கி பூச்செடி நடவு செய்தோம். சேலம், ஜெயங்கொண்டானில் நாட்டு, ஒட்டு ரக(பிரிஜ்வார்)சம்பங்கி விதைகளை (கிழங்கு வகை) வாங்கி நடவு செய்தேன். 6 மாதங்கள் பராமரித்த பின் பூக்கள் பூக்க துவங்கும்.

பூச்செடிகளுக்கு தண்ணீர் சிக்கனத்திற்காக "பட்டர்பிளை' சொட்டு நீர் பாசன கருவி பொருத்தியுள்ளேன். பூச்செடி நடவிற்கு உரம், இயற்கை உரம், சொட்டு நீர் கருவி பொருத்துதல் போன்றவற்றிற்கு ஏக்கருக்கு ரூ.70 ஆயிரம் வரை செலவாகிறது. நாள் ஒன்றுக்கு 30 முதல் 40 கிலோ வரை சம்பங்கி பூக்கள் விளையும். இவற்றை மதுரை மார்க்கெட்டில் விற்று வருகிறோம். பூக்களை மொட்டுகளாக மட்டுமே பறிக்க வேண்டும். மதுரை மார்க்கெட்டில் தற்போது சம்பங்கி பூ கிலோவிற்கு ரூ.40 மட்டுமே கிடைக்கிறது. முகூர்த்த காலங்களில் கிலோ ரூ.150 முதல் 200 வரை விற்றால் தான், விவசாயிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.சம்பங்கி பூக்கள் குறைந்த விலைக்கு விற்பதால் ஆண்டுக்கு ரூ.1.08 லட்சம் வரை வருவாய் கிடைக்கும். செடிகள், ஆட்கள் கூலி, பராமரிப்பு செலவு போக குறைந்த வருவாயே கிடைக்கும். முகூர்த்த காலங்களில் நல்ல விலை போனால் லாபம் கிடைக்கும், என்றார்.
எஸ்.மோகன்
சிவகங்கை மாவட்டம்.
Mobile No:99766 50101.

வழிகாட்டும் முன்னோடி விவசாயி ராஜா

பாழடைந்த கிணறுகளை மண் கொட்டி மூடிவிடாமல், பாதுகாத்து அதில் முறையாக மழை நீரைச் சேகரித்து வறட்சியிலும் வற்றாத வெள்ளாமைக்கு வழிகாட்ட முடியும் என்பதை நிரூபித்துக் காட்டி வருகிறார் வேலூர் மாவட்டம், ராணிப்பேட்டையை அடுத்த கீழ்பள்ளேரி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ராஜா. 44 வயதான அவர், தனது முப்பாட்டனார் விட்டுச் சென்ற 5 ஏக்கர் நிலத்தில் பல்வேறு பயிர்களை சாகுபடி செய்து, எளிய தொழில்நுட்பத்தைக் கையாண்டு முன்னோடி விவசாயி யாகத் திகழ்கிறார். பருவமழை பொய்த்த நிலையில், விவசாயம் செய்யப் போதிய தண்ணீர் இல்லை, வேளாண் பணிக்கு ஆள்கள் கிடைப்பதில்லை, இடுபொருள்களின் விலையேற்றம், விளை பொருள்களுக்கு கட்டுபடியான விலை கிடைப்பதில்லை போன்ற காரணங்களால் சாகுபடித் தொழிலைக் கைவிட்டு வேறு தொழிலுக்கு மாறி வருகின்றனர் விவசாயிகள். இந்த இக்கட்டான சூழ்நிலையில் ராஜாவை போன்ற விவசாயிகள் சிலர் விவசாயத் தொழிலைக் கைவிடாமல் எளிய தொழில் நுட்பத்தை பயன்படுத்தி வேளாண் உற்பத்தியில் சாதனை படைத்து வருகின்றனர். இதுகுறித்த தனது அனுபவங்களை விவசாயி ராஜா, எமது செய்தியாளரிடம் கூறியது: மாநில அளவில் வெயிலுக்கு பேர் போன வேலூருக்கு அருகில் ஆந்திர மாநில எல்லையில், பொன்னை ஆற்றுப் பாசனத்தின் கீழ் உள்ள பள்ளேரி எனது சொந்தக் கிராமம். இங்கு எனது மூதாதையர் விட்டுச் சென்ற சுமார் 5 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தைச் சுற்றி கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பொட்டல் காடுதான். விவசாய நிலங்களில் நிலத்தடி நீர் மட்டம் சுமார் 300 அடி ஆழம் வரை சென்று விட்டது. நீராதாரம் இன்றி வானம் பார்த்த பூமியாக உள்ள விளை நிலங்களை ஏராளம்.
ஆனால் எங்களுக்கு சொந்தமான 5 ஏக்கர் நிலத்தின் மத்தியில் எங்கள் முப்பாட்டனார் காலத்தில் வெட்டிய 60 அடி ஆழ வட்டக் கிணற்றில் இந்த கோடை வறட்சியிலும் சுமார் 18 அடி ஆழத்திலேயே தண்ணீர் உள்ளது. இங்குள்ள எனது 5 ஏக்கர் நிலத்தையும், ஒரு சென்ட் கூட தரிசாக வைக்காமல் ஆண்டு முழுவதும் பலவகை பயிர்களுடன் ஊடுபயிர்களை யும் சேர்த்து, சாகுபடி செய்து நிறைவான வருவாய் ஈட்டி வருகிறோம். 5 ஏக்கர் நிலத்தில் ஒரு ஏக்கர் பந்தல் பாகல், ஒரு ஏக்கர் செடி முருங்கை அதில் ஊடு பயிராக பப்பாளி, மல்லி, 1.40 ஏக்கரில் மா, அதில் ஊடு பயிராக பச்சை மிளகாய், அகத்தி, 60 சென்ட் ராகி, ஒரு ஏக்கர் நெல் எனவும், வரப்பு ஓரங்களில் தென்னை, கிணற்றைச் சுற்றி மூலிகைகள், மாடுகளுக்கு தீவனம் என இயற்கை வழியில் விவசாயம் செய்து வருகிறேன். இங்கு விளையும் அனைத்துக் காய்கறிகளும் காட்பாடி உழவர் சந்தை, ராணிப்பேட்டை வாரச் சந்தைக்கு அனுப்பி வைக்கிறோம். மேலும் நிலத்திற்கே நேரடியாக வந்தும் வாங்கிச் செல்கின்றனர். எந்தக் காரணத்தைக் கொண்டும் கோயம்பேடு மொத்த காய்கறிச் சந்தைக்கு அனுப்புவது இல்லை, ஏனென்றால் விவசாயிகளின் விளைபொருள்கள் கிலோ ரூ.10-க்கு விலை விற்றாலும் ரூ.10 தரகுத் தொகை தர வேண்டும், அதே விளைபொருள் ரூ.100-க்கு விற்றாலும் ரூ.10 தரகுத் தொகைத் தர வேண்டும்.
இது போன்ற பகல் கொள்ளை உழவர் சந்தையிலும், வாரச் சந்தையிலும் இல்லை. இங்கு தரத்திற்கேற்ற விலை, எடைக்கு ஏற்ற பணம், நிம்மதியான வியாபாரம். விவசாயம் செய்ய தண்ணீர் அவசியம். ஆனால் அந்தத் தண்ணீரை மனிதனால் உற்பத்தி செய்ய முடியாது. அது இயற்கை தரும் கொடை. அத்தகைய மழைநீரை ஒரு சொட்டுக்கூட வீணாக்காமல் நமது நிலத்தில் உள்ள பாழடைந்து பயன்பாடு இல்லாமல் இருக்கும் பாசன கிணற்றில் சேகரித்து நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தி ஆண்டு முழுவதும் பயிர் செய்யத் தேவையான தண்ணீரைப் பெறலாம். இந்த எளிமையான தொழில் நுட்பத்தை குறைந்த செலவில் விவசாயிகளே செய்து ஆண்டு முழுவதும் தண்ணீர்ப் பற்றாக்குறை இன்றி சாகுபடி செய்து பணம் ஈட்டலாம். அதேபோல் பழைய விவசாயக் கருவிகளான ஏர்க் கலப்பை, பரம்பு, மண்வெட்டி, அரிவாள் உள்ளிட்டக் கருவிகளை முன்னோர்களின் நினைவாக வீட்டில் வைத்துவிட்டு, நவீன விவசாயக் கருவிகளைப் பயன்படுத்தி இயற்கை முறையில் விவசாயம் செய்ய முன்வர வேண்டும். மேலும் விவசாய வேலைக்கு ஆள்கள் வருவதில்லை எனக் கூறுகிறார்கள். ஆனால் எனது விவசாய நிலத்தில் ஆண்டு முழுவதும் வேலைக்கு ஆள் வருகிறார்கள். இந்த ஆண்டு மட்டும் சுமார் 800 ஆள்கள் வேலை செய்துள்ளனர். வேலை முடிந்தவுடன் அவர்களுக்கான அன்றைய ஊதியத்தை உடனே வழங்குங்கள், கண்டிப்பாக வேலைக்கு ஆள்கள் கிடைப்பார்கள். இதுபோன்ற சின்ன, சின்ன மாற்றங்களை செய்து பாருங்கள், விவசாயம் எளிதான தொழிலாக, லாபகரமான தொழிலாக, அனைவரின் பசியைப் போக்கும் உன்னதமான தொழிலாக மாறிவிடும். இதை கைவிட்டுச் செல்லாதீர்கள் என்றார் ராஜா. விவசாயி ராஜா 5-ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்தவர். திருமணமாகி மனைவி, மகன், மகளுடன் வசிக்கிறார். தனது பிள்ளைகள் இருவரையும் வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தில் எம்.டெக். படிக்க வைத்து வருகிறார். வருங்காலத்தில் அவர்களையும் விவசாயத்தில் ஈடுபட வைக்க விரும்புவதாகத் தெரிவித்துள்ளார் ராஜா.
ராஜா,
பள்ளேரி,
வேலூர்.
தொடர்பு எண்: 9245150084

ஏக்கருக்கு ரூ.1 லட்சம் வருவாய் - சொட்டு நீர் பாசனத்தில் சாதிக்கும் விவசாயி

சிவகாசி அருகே வெம்பக்கோட்டை கங்கர்செவல் பகுதியில் வெண்டை, மிளகாய், புடலங்காய், தக்காளி போன்ற காய்கறி வகைகளை சொட்டு நீர் பாசன முறையில் சாகுபடி செய்து ஆண்டிற்கு ரூ.5 லட்சத்திற்கும் மேல் வருமானம் ஈட்டி வருகிறார் விவசாயி ராமசாமி.
அவர் கூறியதாவது: எங்கள் பகுதி செவல் மண் நிறைந்தது.வெம்பக்கோட்டை வேளாண் தோட்டத் துறை மூலம் கடந்த 5 ஆண்டு முன் 75 சதவீத மானியத்துடன் சொட்டு நீர் பாசன முறையை 12 ஏக்கரில் அமைத்தேன். இந்த பயன்பாட்டு முறையை கையாண்டதன் மூலம் குறைந்த விதை அளவு கொண்டு, களையின்றி விவசாயம் செய்ய ஏதுவாக அமைந்தது. பாத்திபாசனத்தில் 25 சதவீத நிலங்கள் வீணாகிறது. சொட்டு நீர் பாசன முறையில் 1 ஏக்கரில் விதைப்புக்கு ஏற்ற அளவில் மகசூல் எடுக்க முடியும். இதில் வேர் வளர்ச்சி அபரிமிதமாக இருப்பதோடு, அதிக ஆட்செலவு இல்லாமலும் போகிறது. நீர் செலவும் குறைக்கப்படுவதால் விவசாயம் செய்ய உகந்ததாக சொட்டு நீர் பாசனம் இருக்கிறது.
வெண்டை, புடலங்காய், தக்காளி, மிளகாய் வரிசை நடவு முறையில் பயிர் செய்யப்படுவதால் நோய் தொற்று குறைகிறது. அறுவடை செய்யவும் ஏதுவாகவும் அமைகிறது. சொட்டு நீர் பாசன முறையில் 3 நாட்களுக்கு ஒரு முறை பாசன நீர் விட்டால் போதும். வாரத்திற்கு ஒருமுறை பாசன நீரில், நீரில் கரையக்கூடிய ஆல் 19 உரத்தை கரைசலாக்கி கலந்து விடுகிறோம். இதன் மூலம் தலைமணி, சாம்பல் போன்ற போஷாக்கு நிறைந்த சத்துக்கள் கிடைத்து செடி வளர்ச்சிக்கு நல்வகையில் ஊக்குவிக்கிறது.
இவை சீரான முறையில் கடைபிடிப்பதால் வெண்டை 45 நாட்களில் காய் ஒடிக்க முடியும். புடலங்காய் 55 நாட்கள், தக்காளி 70 நாட்கள், மிளகாய் 105 நாட்கள் முதல் அறுவடை செய்ய உகந்ததாக மாறிவிடுகிறது. அதன் பின் தினமும் கிலோ கணக்கில் காய்கள் பெறமுடியும். ஒவ்வொரு காய்கறிகளில் இருந்து ஒரு ஏக்கருக்கு குறைந்தது ரூ. 1 லட்சம் பெற முடிகிறது. அனைத்து காய்கறிகளையும் எடுத்துக் கொண்டால் லாபம் மட்டும் ரூ. 5 லட்சம் வரை பெற முடியும்,''என்றார்.

ராமசாமி 
வெம்பக்கோட்டை,
கங்கர்செவல்,
சிவகாசி.
தொடர்புக்கு : 97869 20592

Monday, December 25, 2017

நல்ல லாபம் கொடுக்கும் நாட்டு மாட்டுல்ப்பா! தினமும் ₹ 1,700 /-

யற்கை விளைபொருள்கள் குறித்த விழிப்பு உணர்வு பெருகிவரும் சூழ்நிலையில் சுத்தமான பாலையும் நுகர்வோர் தேடி வாங்கத் துவங்கியுள்ளனர். இதனால், பெரும்பாலானோர் பாக்கெட் பாலைத் தவிர்த்து, கறந்த பாலை நேரடியாக வாங்குகிறார்கள். 

இதனால், விவசாயிகள் பலரும் நாட்டு மாடுகளை வளர்க்க ஆரம்பித்துள்ளனர். அந்த வகையில், நாட்டு மாடுகளை வளர்த்து நல்ல வருமானம் எடுத்து வருகிறார்கள் திருவள்ளூர் மாவட்டம், ஒதப்பை கிராமத்தைச் சேர்ந்த கதிரவன், சங்கர் ஆகியோர். 

திருவள்ளூர்- ஊத்துக்கோட்டைச் சாலையில் 12 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது ஒதப்பை கிராமம். இங்குதான் இவர்களின் மாட்டுப்பண்ணை இருக்கிறது. பண்ணையில் மும்முரமாக வேலை செய்துகொண்டிருந்த சங்கர் மற்றும் கதிரவன் ஆகியோரைச் சந்தித்தோம். நம்மை அறிமுகப்படுத்திக்கொண்டதும் மகிழ்ச்சியாகப் பேச ஆரம்பித்தார் சங்கர். “நாங்க ரெண்டு பேரும் கிட்டத்தட்ட இருபத்தஞ்சு வருஷமா நண்பர்கள். ஸ்கூல்ல படிக்கிறப்ப இருந்தே ஒண்ணாத்தான் இருப்போம். படிப்பு முடிச்சு நான் அம்பத்தூர்ல ஒரு கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்தேன். அது எனக்குச் சரிப்பட்டு வரல. வேலையை விட்டுட்டு ஊருக்கு வந்துட்டேன். வந்து நான், கதிரவன், இன்னொரு நண்பர் மூணு பேரும் சேர்ந்து மாட்டுப்பண்ணை ஆரம்பிச்சோம். அந்த நண்பர் இப்போ வெளிநாடு போய்ட்டதால, நானும் கதிரவனும்தான் மாடுகளைப் பார்த்துக்கிறோம். ஆரம்பத்துல பாலை எங்களால விற்பனை செய்ய முடியல.
அதில்லாம நிறைய பிரச்னைகளும் வந்துட்டே இருந்துச்சு. ஆனாலும், நாங்க இதுதான் நமக்கான வாழ்வாதாரம்னு முடிவு பண்ணி இறங்கினதால, இழுத்துப் பிடிச்சு சமாளிச்சுட்டிருந்தோம். நாங்க திருவள்ளூர்ல நேரடியா பாலை விற்பனை செய்யக் கொண்டு போனப்போ, ‘திருவள்ளூர் இந்த்செட்டி பயிற்சி நிலையம்’ பத்திக் கேள்விப்பட்டோம். அங்கே மாட்டுப்பண்ணை அமைக்கிறது பத்தி முறையாகப் பயிற்சி எடுத்துக்கிட்டோம். அந்தப்பயிற்சிதான், எங்களுக்குத் திருப்புமுனையை ஏற்படுத்திக் கொடுத்தது” என்ற சங்கரைத் தொடர்ந்து பேசினார் கதிரவன். 

“அந்தப் பயிற்சியிலதான் பாலை மதிப்புக்கூட்டி விற்பனை செய்றது பத்தியும் தெரிஞ்சுகிட்டோம். பயிற்சி மைய அதிகாரிகள், எங்களுக்குப் பேங்க் லோனுக்கும் ஏற்பாடு செஞ்சு கொடுத்தாங்க. இப்போ, பாலை மட்டும் விற்பனை செய்யாம வெண்ணெய், நெய், பால்கோவானு தயாரிச்சு விற்பனை செய்றோம். மாடு வளர்ப்பைத் தொடங்கி நாலு வருஷமாச்சு. இப்போ பண்ணையில கிடைக்குறது, மற்ற விவசாயிகள்கிட்ட வாங்குறதுன்னு தினமும் 150 லிட்டர் அளவுக்குப் பால் விற்பனை செய்றோம். பாலுக்கான ஆர்டர் அதிகமா இருக்குறதால, மத்த விவசாயிகள்கிட்ட இருந்தும் பால் வாங்குறோம். சென்னை வரைக்கும் இந்த பாலை அனுப்பிட்டிருக்கோம்.
அதிக பணவசதி இல்லாததால இப்போதைக்குச் சின்ன அளவுலதான் செஞ்சுட்டிருக்கோம். சங்கரோட அப்பாவுக்கு மாடு வளர்ப்புல நல்ல அனுபவம் இருக்குறதால, அவர்தான் பண்ணையைக் கவனிச்சிட்டிருக்கார். நாங்க வளர்க்குறது எல்லாமே இந்த மாவட்டத்துல வளர்ற நாட்டு மாடுகள்தான். நாட்டு மாடுகள் குறைவான பால் கொடுத்தாலும் அதுல சத்து அதிகம். 

அதனால, மக்கள் விரும்பி வாங்குறாங்க. சந்தையில் விற்பனையாகுற பால் விலையைவிட, அதிக விலை கொடுத்து வாங்கவும் தயாரா இருக்காங்க. அதேமாதிரி, நாட்டு மாட்டு நெய்க்கும், வெண்ணெய்க்கும் நல்ல வரவேற்பு இருக்கு. எருமை மாட்டுப்பாலுக்கும் நல்ல வரவேற்பு இருக்குது. மாடுகளை மேய்ச்சல் முறையிலதான் வளர்க்குறோம். இதனால், ஆரோக்கியமா வளருது. சத்தான பால் கிடைக்குது. மத்த விவசாயிகள்கிட்ட வாங்குற பாலையும் தரமா இருந்தாத்தான் வாங்குவோம். 

பால்ல இருக்குற கொழுப்போட அளவைப் பொறுத்து விலை கொடுப்போம். எங்ககிட்ட 10 பசுக்கள், 10 பசுக்கன்றுகள், 12 எருமைகள், 12 எருமைக் கன்றுகள்னு மொத்தம் 44 உருப்படிகள் இருக்கு. இதுபோக 15 வெள்ளாடுகளும் இருக்கு. இப்போதைக்குத் தினமும் 23 லிட்டர் பசும்பாலும் 26 லிட்டர் எருமைப்பாலும் கிடைச்சுட்டிருக்கு” என்றார்.
வருமானம் குறித்துச் சொல்ல ஆரம்பித்த சங்கர், “பசும்பாலை 42 ரூபாய்னும், எருமைப்பாலை 50 ரூபாய்னும் விற்பனை செய்றோம். இப்போதைக்குத் தினமும் 2,266 ரூபாய் வருமானமாகக் கிடைச்சுட்டிருக்கு. வெளியிலிருந்து வாங்குற பாலைத் தனியா விற்பனை செய்றோம். அது மூலமா ஒரு வருமானம் கிடைச்சிட்டிருக்கு. ஆர்டரைப் பொறுத்துத் தயிர், வெண்ணெய், நெய்னும் விற்பனை செய்றோம். தினமும் தீவனம், போக்குவரத்து, மருந்துனு 900 ரூபாய் செலவாகுது. எல்லாம் போகத் தினமும் சராசரியா 1,700 ரூபாய் வரை லாபமாக் கிடைக்குது” என்றார். 

நிறைவாகப் பேசிய நண்பர்கள், “கொஞ்சம் கொஞ்சமா எங்களுக்கு ஆர்டர் அதிகரிச்சுட்டே இருக்குறதால, பெரியளவுல பண்ணையை விரிவுபடுத்துற முயற்சிகளை எடுத்துட்டுருக்கோம். சீக்கிரத்துல ஒரு பெரிய இடத்தைப் பிடிச்சுடுவோம்னு நம்பிக்கை இருக்கு” என்று சொல்லி விடைகொடுத்தனர்.

தொடர்புக்கு:
சங்கர்,
செல்போன்: 97915 52601


மேய்ச்சல் முறை சிறந்தது! 

மாடுகளைப் பராமரிப்பது குறித்துச் சங்கர் சொன்ன தகவல்கள் இங்கே இடம் பிடிக்கின்றன.... 

ஒவ்வொரு பருவகாலம் தொடங்கும்போதும் மருத்துவர்கள்மூலம் உரிய தடுப்பூசியைப் போட வேண்டும். பண்ணையைத் தினமும் கழுவிச் சுத்தமாகப் பராமரிக்க வேண்டும். குறித்த காலத்தில் குடற்புழுநீக்கம் செய்ய வேண்டும். மேய்ச்சல் முறையில் வளர்ப்பது சிறந்தது. சினைப்பருவத்துக்கு வரும் மாடுகளைத் தனிமைப்படுத்தி இனச்சேர்க்கை செய்ய வேண்டும். 

மாடுகளுக்குக் கோமாரி நோய் வந்தால், தினம் ஒரு நாட்டுக்கோழி முட்டை என மூன்று நாள்களுக்குக் கொடுக்க வேண்டும். மேலும், எருக்கன் பாலை, விளக்கெண்ணெயில் கலந்து, மாட்டின் உடம்பில் புள்ளிகள் வைக்க வேண்டும். கோமாரி தாக்கிய மாட்டின் மூக்கணாங்கயிற்றை எடுத்துவிட வேண்டும். 50 மில்லி நல்லெண்ணெயில் நான்கு வாழைப்பழங்களை ஒரு மணிநேரம் ஊற வைத்து, நான்கு நாள்களுக்குக் கொடுத்து வந்தாலும் கோமாரி சரியாகிவிடும். கோமாரி தாக்கிய மாட்டிடம் கன்றைப் பால் குடிக்க விடக் கூடாது. 

மாடுகள் தீவனம் எடுக்காமல் இருந்தால், கல்யாண முருங்கை இலை, வெற்றிலை ஆகியவற்றோடு வெல்லம் கலந்து கொடுக்கலாம். மூங்கில் இலையை உண்ணக்கொடுத்தால் மாடுகளின் வயிறு சுத்தமாகும். 

மாடுகளுக்கு உப்புசம் ஏற்பட்டால் 100 கிராம் பழைய புளி, இரண்டு எள் செடி ஆகியவற்றைத் தண்ணீரில் ஊறவைத்துக்கொடுத்தால் சரியாகிவிடும். கழிச்சல் இருந்தால் 2 கிலோ கொய்யா இலை, மலராத தென்னம்பாளை இரண்டையும் நான்கு லிட்டர் தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைத்து, இரண்டு லிட்டராகச் சுண்ட வைத்துக் கஷாயமாகக் கொடுத்தால் சரியாகிவிடும். புண்களுக்கு வேப்பெண்ணெய் தடவினாலே சரியாகிவிடும்.

இயற்கைப் பீர்க்கன்…

நாலு ஏக்கர் இருந்தாலும் இருக்கிற தண்ணியை வெச்சு இவ்வளவுதான் வெள்ளாமை செய்ய முடியும்னு, ஒரு ஏக்கர்ல மட்டும்தான்  வெள்ளாமை பாத்தோம். ஆனா முறையான வழிகாட்டுதல் கிடைச்ச பிறகு, சொட்டுநீர்ப்பாசனம் அமைச்சு, இயற்கை விவசாயம் செய்யும் போது அதே தண்ணியை வெச்சு இப்ப நாலு ஏக்கர்லயும் வெள்ளாமை வெளுத்து வாங்குது. வெவசாயத்துல ஜெயிக்கிறதும் தோற்கிறதும் நாம கடைபிடிக்கிற வழிமுறைகள்தான். இதை எங்க அனுபவம் மூலமா உணர்ந்திருக்கோம்” என்று நெகிழ்கிறார்கள், கரூர் மாவட்டம் ஈசநத்தம் கிராமத்தைச் சேர்ந்த செல்வராஜ்-ரேணுகா தம்பதி.
பாதை காட்டிய பசுமை விகடன்!
“இது கடுமையான வறட்சிப்பகுதி. ஆறு, குளம், வாய்க்கால்னு பாசன வசதி எதுவும் இல்லாத ஊரு. முழுக்க கிணத்துப்பாசனத்தை மட்டுமே நம்பி இருக்க வேண்டிய சூழ்நிலை. இது எங்க தங்கச்சி தோட்டம். அவங்க வெளியூர்ல இருக்கிறதால நாங்கதான் பராமரிச்சுக்கிட்டு இருக்கோம். தினமும் கிடைக்கிற ரெண்டு மணி நேரப் பாசனத்தண்ணீரை வெச்சு ஒரு ஏக்கர்லதான் வெள்ளாமை வெச்சிக்கிட்டு வந்தோம். நேரடி வாய்க்கால் பாசனத்துல அந்த அளவுலதான் செய்ய முடியும். செடி முருங்கை மட்டும்தான் எங்க பகுதியில் பிரதான வெள்ளாமை. நாங்களும் போன அஞ்சு வருஷம் வரைக்கும் செடி முருங்கையை மட்டும்தான் ஒரு ஏக்கர்ல சாகுபடி செய்தோம்.
‘பசுமை விகடன்’ படிக்க ஆரம்பிச்ச பிறகுதான் மாற்றுப்பயிர் சாகுபடி மீது ஆர்வம் ஏற்பட்டுச்சு. பந்தல் விவசாயத்துல பட்டையைக் கிளப்புற ‘கேத்தனூர் அய்யா பழனிச்சாமி’ அய்யா பத்தி ஒரு கட்டுரை வந்துச்சு. அதைப்படிச்சதும், அவர்கிட்ட பேசினோம். அவரு சில ஆலோசனைகள் சொன்னார். அதுக்கப்பறம்தான் இயற்கை முறையில பந்தல் விவசாயத்துக்கு மாறினோம். அதே மாதிரி ‘பசுமை விகடன்’ மூலமாத்தான் சொட்டுநீர், தெளிப்பு நீர்ப்பாசனமுறைகளைப் பத்தி தெரிஞ்சுக்கிட்டு அமைச்சோம். இன்னிக்கு நாலு ஏக்கர்ல ஊடுபயிர் வெள்ளாமை செய்யறோம்னா அதுக்கு பசுமை விகடன்தான் காரணம்” என்ற செல்வராஜைத் தொடர்ந்தார், ரேணுகா.
“ஒரு ஏக்கர்ல பாகல், ஒரு ஏக்கர்ல பீர்க்கன், ஒரு ஏக்கர்ல புடலை இருக்கு. ஒரு ஏக்கர்ல செடி முருங்கை நிக்குது. பீர்க்கனும் செடி முருங்கையும்தான் இப்போ காய்ச்சுக்கிட்டு இருக்கு. புடலை இப்போதான் பிஞ்சு விட ஆரம்பிச்சிருக்கு. பீர்க்கனுக்கு இடையில ஊடுபயிரா கொத்தமல்லி போட்டோம். விதையில ஏதோ கோளாறால அது முளைக்கவே இல்லை. அதனால அதை அழிச்சிட்டு உளுந்து போட்டுட்டோம். அது இப்போ அறுவடைக்குத் தயாராகிட்டு இருக்கு. புடலைக்கு இடையில இருந்த கொத்தமல்லித்தழையை அறுவடை பண்ணியாச்சு. சாணம், மூத்திரம் தேவைக்காக ஒரு நாட்டு மாடும் ரெண்டு மாச வயசுல ஒரு கன்னுக்குட்டி வெச்சிருக்கோம்” என்று ரேணுகா இடைவெளி கொடுக்க, தொடர்ந்தார் செல்வராஜ்.
“பயிர்களுக்குப் பெரிசா எந்த ஊட்டமும் கொடுக்கிறதில்லை. தொழுவுரமும் பிண்ணாக்குகரைசலும் தான் கொடுக்கிறோம். இப்போதான் கொஞ்சம் கொஞ்சமா பீஜாமிர்தம் எல்லாம் தயாரிச்சு பயன்படுத்த தொடங்கியிருக்கோம்.முழுக்க இயற்கை விவசாயங்கிறதால பூச்சிகள் பெரும்பாலும் வர்ரதே இல்லை. குளவிகள்தான் வருது. அதைப்பிடிக்க பொறி வெச்சுடுறோம்” என்ற செல்வராஜ், நிறைவாக வருமானம் குறித்துச்சொன்னார்.
“ இப்போதைக்கு பீர்க்கன் தான் வருமானம் கொடுத்திட்டு இருக்கு. பீர்க்கனுக்கு 6 ரூபாயில் இருந்து 10 ரூபாய் விலை கிடைக்குது.
 ஊட்டம்கொடுக்கும்பிண்ணாக்குக்கரைசல்!    
       கடலை,ஆமணக்கு, வேம்பு ஆகிய மூன்று பிண்ணாக்குகளிலும் தலா 25 கிலோ எடுத்து ஒன்றாகச் சேர்த்து அவை மூழ்கும் அளவு தண்ணீரில் 2 நாள் முழுதும் ஊற வைக்க வேண்டும். பிறகு, அதைக்கலக்கி விட்டு அந்தக்கலவையை செடிக்கு ஒரு லிட்டர் வீதம் செடியின் வேர்ப்பகுதியைச் சுற்றிலும் ஊற்ற வேண்டும். 40 மற்றும் 80-ஆம் நாட்களில் இந்தப் பிண்ணாக்கு கரைசலை பீர்க்கனுக்குக் கொடுக்கும் போது செடிகளுக்கு நல்ல ஊட்டம் கிடைக்கிறது.
பூக்கள் பிடிக்க அரப்பு மோர்க் கரைசல்!
ஒரு லிட்டர் புளித்த மோரில், 500 கிராம் அரப்பை இடித்துப்போட்டு, இரண்டு நாட்கள் ஊற வைத்தால், அரப்பு மோர்க்கரைசல் தயார். இதைப்பிழிந்து வடிகட்டி, 10 லிட்டர் தண்ணீருக்கு 100 மில்லி என்கிற அளவில் கலந்து, பூக்கள் பிடிக்கும் பருவத்தில் தெளித்தால், அதிகளவில் பூக்கள் பூத்து மகசூல் அதிகரிக்கும்.
இப்படித்தான் சாகுபடி செய்யணும்!
பீர்க்கன் சாகுபடி குறித்து செல்வராஜ் சொன்ன விஷயங்கள் பாடமாக இங்கே…
‘பீர்க்கனின் வயது 130 நாட்கள். செம்மண் நிலத்தில் நன்கு வளரும். தேர்வு செய்த நிலத்தை நன்றாக உழுது12 அடி இடைவெளியில் ஒன்றரை அடி அகலத்தில் தெற்கு வடக்காக வாய்க்கால் களை அமைக்க வேண்டும்.
நிலத்தின் அமைப்பைப் பொறுத்து வாய்க்கால்களின் நீளத்தை அமைத்துக் கொள்ளலாம். பிறகு, சொட்டு நீர்க்குழாய்களை அமைத்துக்கொள்ள வேண்டும்.வாய்க்காலின் நடுவில் 3 அடி இடைவெளியில் ஒரு செடி வருமாறு… ஓரடி ஆழத்துக்குக் குழி எடுத்து, ஒவ்வொரு குழிக்கும் தலா அரை கிலோ தொழுவுரத்தை இட்டு, தலா ஒரு விதையை ஊன்றி, மேல் மண்ணைக்கொண்டு மூடி தண்ணீர் பாய்ச்ச வேண்டும். ஏக்கருக்கு 300 கிராம் விதை தேவைப்படும். நடவு செய்த 5-ம் நாளில் விதைகள் முளைவிடத்தொடங்கும். நிலத்தின் ஈரத்தைப் பொறுத்துப் பாசனம் செய்ய வேண்டும்.15-ம் நாளில் கொடிகள் கொம்பில் படரத்தொடங்கும்.
அந்தச் சமயத்தில் செடிகளின் வேர்ப்பகுதியில் ஒரு அடி நீளக்குச்சிகளை மண்ணுக்குள் ஊன்றி அதில் சணல் கயிற்றைகட்டி, மறுமுனையை பந்தல் கம்பியில் இழுத்துக்கட்ட வேண்டும். இப்படி ஒவ்வொரு கொடிக்கும் ஒரு சணல் கயிற்றைக்கட்டி கொடிகளை அதில் படர விட வேண்டும். இந்த சமயத்தில் தேவைப்பட்டால் களையெடுக்க வேண்டும். 30 நாட்களில் கொடிகள் பந்தலில் படர ஆரம்பிக்கும். 40 மற்றும் 80-ஆம் நாட்களில் பிண்ணாக்குக்கரைசலை வேர்ப்பகுதியில் கொடுக்க வேண்டும். 40-ம் நாளுக்கு மேல் கொடிகளில் பூ எடுக்கத்தொடங்கும். இந்தச் சமயத்தில் அரப்பு மோர்க்கரைசல் தெளிக்க வேண்டும். 45-ஆம் நாளுக்கு மேல் பிஞ்சுகள் பிடிக்கும். தொடர்ந்து, ஒரு வாரத்தில் அறுவடையை ஆரம்பிக்கலாம். ஒரு நாள் விட்டு ஒரு நாள் என சுழற்சி முறையில் பீர்க்கன் காய்களைப்பறிக்கலாம்.’
மானியமும் உண்டு!
கல்தூண் பந்தல் அமைத்து காய்கறி சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு, மானியம் வழங்குகிறது, தோட்டக்கலைத்துறை. இது தொடர்பாகப் பேசிய கரூர் மாவட்ட தோட்டக்கலைத்துறைத் துணை இயக்குநர் வளர்மதி, “பந்தல் சாகுபடி செய்யும் விவசாயிகள் தோட்டக்கலைத்துறை அலுவலகத்தில்… சாகுபடி நிலத்தின் பட்டா, சிட்டா, அடங்கல், வரைபடம், இருப்பிடச்சான்று, பாஸ்போர்ட் புகைப்படம் 3, பந்தல் அமைத்தற்கான செலவுத்தொகைக்கான பில் ஆகியவற்றுடன் விண்ணப்பிக்க வேண்டும். ஒரு ஏக்கரில் பந்தல் சாகுபடி செய்ய 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலவாகும் என வரையறுக்கப்பட்டுள்ளது. அதில் 80 ஆயிரம் ரூபாய் மானியமாக வழங்கப்படும் விவசாயிகள் தங்கள் செலவில் பந்தல் அமைத்துக்கொள்ள வேண்டும். பந்தல் அமைத்து சாகுபடியைத்தொடங்கிய பிறகு, எங்களுக்குத்தகவல் தெரிவித்தால் கள ஆய்வு செய்த பிறகு மானியம் வழங்கப்படும்.” என்றார்.
ஒரு ஏக்கர் பந்தலுக்கு 140 கல்தூண்!
ஒரு ஏக்கர் நிலத்தில் பந்தல் அமைக்க, 8 அடி உயரம் உள்ள 140 கல்தூண்கள் தேவைப்படும். இதில் 10 அடிக்கு ஒன்று வீதமாக 80 கல்தூண்களை சுற்றுக்காலில்2 அடி ஆழ குழி எடுத்து ஊன்ற வேண்டும்.பந்தலுக்குள் 20 அடி இடைவெளி இருக்குமாறு வரிசை வரிசையாக கல்தூண்களை ஊன்ற வேண்டும். ஒவ்வொரு கல்தூணுக்கும் இடையில் 10 அடிக்கு ஒரு மூங்கிலை நட வேண்டும். தொடர்ந்து 16 கேஜ் கம்பிகளை மேற்புறத்தில் இழுத்துக்கட்ட வேண்டும். சுற்றிலும் பந்தலை இழுத்துப்பிடித்து தாங்குவதற்காக 6 கேஜ் தடிமன் உள்ள கம்பிகளைப் பயன்படுத்த வேண்டும்.இதற்கு மொத்தம் 850 கிலோ கம்பி தேவைப்படும். மீத கல்தூண்களை முட்டுக்கொடுக்க பயன்படுத்த வேண்டும். ஒரு முறை அமைக்கும் கல்தூண் பந்தல் 30 ஆண்டுகள் வரை பலன் தரும்.
தெளிப்பு நீர்பாசனத்தில் செழிக்கும் வெங்காயம்!
படரும் பருவத்தில் இருக்கும் ஒரு ஏக்கர் பாகல் பந்தலில், சின்ன வெங்காயத்தை நடவு செய்து பட்டாம் பூச்சி பாசனக்கருவிகளையும் பொருத்தியுள்ளார், செல்வராஜ். அதுகுறித்துப்பேசியவர், “பாகல் காய்ப்புக்கு வர இன்னும் ஒரு மாசத்துக்கு மேலாகும். அதனால ஊடுபயிரா சின்ன வெங்காயத்தை நட்டிருக்கேன். பசுமை விகடன் மூலமா தெரிஞ்சிக்கிட்டு வெங்காயத்துக்கு பட்டாம் பூச்சி பாசன முறை அமைச்சிருக்கேன். ஒரு ஏக்கர்ல 15 அடி இடைவெளியில 170 தெளிப்பான் போட்டிருக்கேன். 5 ஹெச்.பி. பம்ப்செட் மூலமா 50 நிமிஷம், நீர் இரைக்கும் போது, ஒரு ஏக்கர் முழுக்க பாசனம் முடிஞ்சிடும். வாயக்கால் பாசனம்னா 2 மணி நேரம் மோட்டார் ஓட வேண்டியிருக்கும்” என்கிறார்.
ஒரு ஏக்கரில் பீர்க்கன் சாகுபடி செய்ய செல்வராஜ் சொல்லும் உத்தேச செலவு-வரவு கணக்கு(ரூபாய் மதிப்பில்)
விவரம்
செலவு
வரவு
நிலையான செலவுகள்:
பந்தல் அமைக்க
1,30,000
சொட்டு நீர் அமைக்க
20,000
மொத்தம்
1,52,000
நடைமுறைச் செலவுகள்:
உழவு
2,000
விதை
1,500
தொழுவுரம், இரைக்க
10,000
பிண்ணாக்குக் கரைசல்
3,000
நடவு, சணல், களை எடுக்க
4,500
கொடி எடுத்து விட
2,500
அறுவடை
6,000
பீர்க்கன் மூலம் வரவு
1,60,000
மொத்தம்
29,500
1,60,000
நிகர லாபம்
1,30,500
குறிப்பு: பந்தல், சொட்டு நீர் அமைக்கும் செலவு நிலையானது என்பதால், அதை செலவுக்கணக்கில் சேர்க்கவில்லை. தவிர, பந்தலுக்கும் சொட்டுநீருக்கும் அரசு மானியமும் உள்ளது.
சராசரியா எட்டு ரூபாய்னு வெச்சுக்கலாம். காய் எடுக்க ஆரம்பிச்சு 45 நாள் ஆச்சு. இதுவரைக்கும் இரண்டரை டன் காய் எடுத்திருக்கோம். இன்னும் 60 நாள் மகசூல் இருக்கு. இனிமேல்தான் மகசூல் அதிகரிக்கும். எப்படியும் இன்னும் 20 டன்னுக்கு மகசூல் நிச்சயம் கிடைக்கும்னு எதிர்பார்க்கிறேன். மொத்தமா 25 டன் கிடைக்கணும். மொத்த மகசூல் 20 டன்னு வெச்சுக்கிட்டு, சராசரியா கிலோ எட்டு ரூபாய்னு வெச்சுக்கிட்டா…
1 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்கும். இதுல செலவெல்லாம் போக ஒண்ணே கால் லட்ச ரூபாய்க்கு மேல லாபமா நிக்கும். 130 நாள்ல இதை விட வேறென்ன லாபம் வேணுமுங்கோ” என்று சிரித்தபடியே கேட்டார் செல்வராஜ்.

Thanks like :http://agritech.tnau.ac.in

Wednesday, November 22, 2017

பாசிப்பயறு

ன்றாடம் சமையலில் பயன்படுத்தப்படும் பருப்பு வகைகளுக்கு எப்போதும் சந்தையில் தேவை இருந்து கொண்டே இருக்கும். குறிப்பாக, பாசிப்பருப்பு, துவரம்பருப்பு ஆகியவற்றுக்கு தேவை மிக அதிகம். இதை மனதில் வைத்து, மானாவாரி மற்றும் இறவையில் தொடர்ந்து மகசூல் கிடைக்கும் வகையில், நிலத்தை இரண்டாகப் பிரித்து பாசிப்பயறு சாகுபடியில் தொடர் வருமானம் பெற்று வருகிறார், விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை தாலூகா, கத்தாளம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பாக்கியராஜ்.
‘‘நாங்க பரம்பரையாவே விவசாயக் குடும்பம்தான். இந்தப்பகுதி முழுக்கவே வானம் பாத்த பூமிதான். பத்தாவது வரைக்கும்தான் படிச்சேன். அதுக்கு மேல படிக்க வைக்க வீட்டுல வசதியில்லை. அறிவொளி இயக்கத்துல மூணு வருஷம் வீதி நாடகக்குழுப் பயிற்சியாளரா இருந்தேன். அடுத்து, மாநில வயது வந்தோர் கல்வித் திட்டத்துல ஊக்குநரா வேலை பார்த்தேன். 2001-ம் வருஷம் சமூகப்பணிகளையெல்லாம் விட்டுட்டு, முழுமையா விவசாயத்துல இறங்கினேன். அக்கம்பக்கத்து விவசாயிகளைப் பார்த்து நானும் ரசாயன விவசாயம்தான் பண்ணினேன். ஆனா, ஒண்ணும் விளைஞ்சபாடில்லை.
அப்போதான், ஒரு நண்பர், ‘நாடகத்துல ராகம் போட்டு பாட்டு பாடுற மாதிரி கிடையாது, விவசாயம். முதல்ல ரசாயன உரம் போடுறதை நிறுத்தி, இயற்கை முறையில விவசாயம் செய்’னு ஆலோசனை சொன்னார். அவரே, கோவிலான்குளம் வேளாண் ஆராய்ச்சி மையத்துல நடந்த பயிற்சிக்கும் அழைச்சிக்கிட்டுப் போனார். அங்க இயற்கை வேளாண்மை பத்தி விளக்கமா தெரிஞ்சுக்கிட்டு இயற்கை  விவசாயத்தை ஆரம்பிச்சேன். இப்போ, ஒன்பது வருஷமா முழுக்க இயற்கை முறையிலதான் விவசாயம் செய்றேன்” என்று முன்கதை சொன்ன பாக்கியராஜ் தொடர்ந்தார்.
பட்டத்துக்கேற்ற பயிர்!
“மழை கிடைக்கலைனு வருத்தப்பட்டுட்டு இருக்காம, மழை கிடைக்கிற சமயத்துல அந்தப் பட்டத்துக்குரிய பயிரை விதைச்சா நல்ல மகசூல் எடுத்திட முடியும். அதாவது ஆடி மாசம் மழை கிடைக்காம, புரட்டாசி மாசம் மழை கிடைச்சா... புரட்டாசிப் பட்டத்துக்கான பயிரைத்தான் விதைக்கணும். அந்த வகையில போன அஞ்சு வருஷமா பாசிப்பயறு எனக்கு நல்லா ஒத்தாசை செய்யுது. அதை, மானாவாரி, இறவைனு ரெண்டுலயும் சாகுபடி செய்யுறேன். இப்போ, இறவை சாகுபடியை முடிச்சுட்டு, புரட்டாசிப் பட்டத்துல மானாவாரியா பாசிப்பயறைப் போடுறதுக்கு நிலத்தைத் தயார் பண்ணிட்டு இருக்கேன்” என்ற பாக்கியராஜ் வருமானம் குறித்துச் சொன்னார்.
ஆண்டுக்கு ரூ. 2.5 லட்சம் லாபம்!
‘‘மானாவாரியா சாகுபடி செய்தா சராசரியா ஏக்கருக்கு 480 கிலோ அளவுக்கு மகசூல் கிடைக்கும். இறவையில ஏக்கருக்கு சராசரியா 600 கிலோ வரை மகசூல் கிடைக்கும். இந்தக் கணக்குல மூணு ஏக்கர்ல ஒரு முறை மானாவாரி விவசாயம், ஒரு முறை இறவை விவசாயம்னு வருஷத்துக்கு ரெண்டு போகம்னு வெச்சுக்கிட்டா... வருஷத்துக்கு சராசரியா 3 ஆயிரத்து 200 கிலோ (32 குவிண்டால்) அளவுக்கு மகசூல் கிடைக்குது. நான் விதையாத்தான் விற்பனை செய்றேன். வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்துல ஒரு கிலோ பாசிப்பயறு விதைக்கு 107 ரூபாய் கொடுக்கிறாங்க. அந்தக் கணக்குல பார்த்தா, 3 லட்சத்து 42 ஆயிரத்து 400 ரூபாய் கிடைக்கும். இதுல எல்லா செலவும் போக வருஷத்துக்கு ரெண்டே முக்கால் லட்ச ரூபாய்க்கு மேல லாபம் கிடைக்கும்.
விதைக்காக இல்லாம கடையில விற்பனை செய்தா, குவிண்டால் 7 ஆயிரம் ரூபாய்னு (கிலோ 70 ரூபாய்) எடுத்துக்குவாங்க. இதன் மூலமா 2 லட்சத்தி 24 ஆயிரம் ரூபாய்தான் கொடுப்பாங்க. ஆனா, விதைக்காக விற்பனை செய்யுறப்ப ஒரு லட்ச ரூபாய் கூடுதலாவே லாபம் கிடைக்கும்’’ என்று தெம்பாகச் சொன்னார் பாக்கியராஜ்!
தொடர்புக்கு,
பாக்கியராஜ்,
செல்போன்: 96269-74894
விளைச்சலுக்கு விதைநேர்த்தி!
சோறு வடித்த கஞ்சி ஒரு லிட்டரில் 20 கிராம் பாஸ்போ-பாக்டீரியா, 20 கிராம் ரைசோபியம் ஆகியவற்றைக் கலந்து அதில், 6 கிலோ பாசிப்பயறு விதைகளைப் போட்டு கிளறி, ஓலைப்பாய் அல்லது சணல் சாக்கில் (பிளாஸ்டிக் தாள் தவிர்க்கவும்) 2 மணி நேரம் உலர்த்தி விதைத்தால், வளர்ச்சி நன்றாக இருக்கும். பூச்சி, நோய் அதிகமாகத் தாக்காது.   
ஊடுபயிராக அவுரி !
பாசிப்பயறு விதைத்த 30-ம் நாள், இரண்டாவது முறை களை எடுப்பதற்கு முன்பாக... ஏக்கருக்கு 3 கிலோ அளவில் அவுரி விதையைத் தூவ வேண்டும். பிறகு, களை எடுத்தால் அவுரி விதைகள் நன்றாக மண்ணில் புதைந்து விடும். 82-ம் நாளில், பாசிப்பயறில் மூன்றாவது பறிப்பு முடிந்ததும் செடிகளை அறுக்காமல், அப்படியே காய விட்டுவிட வேண்டும். 10 நாட்களில் பாசிப்பயறுச் செடிகள் காய்ந்ததும், அவுரி வேகமாக வளர ஆரம்பிக்கும்.
தை-மாசி மாதத்தில் அவுரியை அறுவடை செய்யலாம். ஏக்கருக்கு 2 குவிண்டால் அவுரி நெத்து கிடைக்கும். ஒரு குவிண்டால் 4 ஆயிரம் ரூபாய் வரை விலை போகும். இந்த விஷயத்தை நம்மிடம் பகிர்ந்த பாக்கியராஜ், ‘‘இந்த வருமானம் சாகுபடிச் செலவுக்கு கைக்கொடுக்குது” என்றார், உற்சாகமாக.
புழுத்தாக்குதலைத் தடுக்க வரப்பு!
பாக்கியராஜ் சொல்லும் அனுபவ ஆலோசனைகள் பாசிப்பயறு விதைக்கும்போதே ஆமணக்கு, சூரியகாந்தி, தட்டைப்பயறு ஆகியவற்றில் ஏதாவது ஒன்றையோ அல்லது அனைத்தையும் கலந்தோ வரப்பைச் சுற்றிலும் விதைக்க வேண்டும். பயிரைத்தாக்கும் பூச்சிகள் இந்தப் பயிர்களிலேயே அமர்ந்துகொள்ளும். இதனால், பாசிப்பயறைப் பூச்சிகள் தாக்காது.
நம்மிடமே விதைவங்கி!
விதைகளைக் கடைகளில் வாங்குவதை விட நமது பயிரில் இருந்தே விதைகளை எடுத்து வைப்பது நல்லது. இரண்டாவது முறை பறிக்கும் காய்களிலிருந்து விதைகளைத் தனியாகப் பிரித்து வைத்துக் கொள்ளலாம்.

மூன்று முறை அறுவடை செய்தால், கூடுதல் மகசூல்!
பாக்கியராஜ் சொல்லிக் கொடுக்கும் பாசிப்பயறு சாகுபடிப் பாடம் இங்கே...   
மானாவாரிக்கு புரட்டாசிப் பட்டம்!
‘‘மானாவாரி சாகுபடிக்கு புரட்டாசிப் பட்டம் ஏற்றது. சித்திரை மாதம் சட்டிக் கலப்பையால் கோடை உழவு செய்து நிலத்தைக் காய விட வேண்டும். வைகாசி மாதம் செம்மறி ஆட்டுக்கிடை போடவேண்டும் (ஏக்கருக்கு 500 ஆடுகளைக் கொண்டு 3 நாட்கள் கிடை போடவேண்டும்). அடுத்த மூன்று நாட்களுக்குள் கொக்கிக் கலப்பை மூலம் ஓர் உழவு செய்து நிலத்தைக் காய விட வேண்டும். ஆனி மாதத்தில் 2 டிராக்டர் குப்பையை (தொழுவுரம்) நிலத்தில் பரப்பி, கொக்கிக் கலப்பை மூலம் உழவு செய்ய வேண்டும்.
எடுப்பு உழவு அவசியம்!
ஆடி மாதத்தில் ஒரு மழை கிடைத்ததும், கொக்கிக் கலப்பையால் ‘எடுப்பு உழவு’ செய்து நிலத்தைக் காயவிட வேண்டும். ஆடி மாத எடுப்பு உழவடிப்பது தடுப்பூசி போடுவது போன்றது. இதனால் மண்ணுக்குள் புதைந்துள்ள களை விதைகள் முளைக்கும். ஆவணி-புரட்டாசியில் மழை பெய்ததும் விதைப்பதற்கு முன் உழவடிக்கும்போது முளைத்துள்ள களைச்செடிகள் தூரோடு அகற்றப்பட்டு விடும். புரட்டாசியில் மழை பெய்ததும், அடுத்த 3 நாட்களுக்குள் மீண்டும் ஒரு முறை உழுது விட்டு, விதைநேர்த்தி செய்த விதைகளைத் தூவி, அவற்றை மண் மூடுமாறு கொக்கிக் கலப்பை மூலம் உழவு செய்ய வேண்டும். ஏக்கருக்கு 6 கிலோ விதைகள் தேவைப்படும். விதைத்த 3 முதல் 5 நாளுக்குள் முளைப்புத் தெரியும். 15 முதல் 20 நாட்களுக்குள் களை எடுக்க வேண்டும். 30 முதல் 33 நாட்களுக்குள் இரண்டாவது முறை களை எடுக்க வேண்டும். 35 மற்றும் 45-ம் நாளில் 120 லிட்டர் தண்ணீருக்கு 500 மில்லி பஞ்சகவ்யா எனக் கலந்து தெளிக்க வேண்டும். இப்படித் தெளிப்பதால் பூச்சி, நோய்கள் தாக்குவதில்லை.
50-ம் நாளில் பிஞ்சு தெரியும். 55 முதல் 60-ம்  நாட்களில் காய்கள் காய்த்து நிற்கும். 65-ம் நாளில் பறித்து விட வேண்டும். 70 நாளுக்கு மேல் போய்விடக் கூடாது. பொதுவாக, பல விவசாயிகள் 65-ம் நாளில் ஒரே அறுவடையாக, செடியைத் தூரோடு அறுத்து பிறகு நெத்தைப் பறித்து உடைத்து பயறைப் பிரித்தெடுப்பார்கள். ஆனால், செடியில் இருந்து நெத்தை மட்டும் பிடுங்கி எடுத்தால், மூன்று முறை அறுவடை செய்யலாம். 65, 72 மற்றும் 80 ஆகிய நாட்களில் அறுவடை செய்யலாம். இப்படி மூன்று முறை காய்களைப் பறிக்கும்போது கூடுதல் மகசூல் கிடைக்கும். மானாவாரியில் ஏக்கருக்கு சராசரியாக 480 கிலோ வரை மகசூல் கிடைக்கும்.
இறவையில் 600 கிலோ மகசூல்!
இறவையில் பாசிப்பயறை விதைக்க மாசிப் பட்டம் ஏற்றது. தேர்வு செய்த ஒரு ஏக்கர் நிலத்தில் தை மாதத்தில் சட்டிக்கலப்பை மூலம் ஓர் உழவு செய்து ஐந்து நாட்கள் ஆற விட்டு...  6-ம் நாள் செம்மறி ஆட்டுக்கிடை போட வேண்டும். பிறகு, 3 நாட்கள் கழித்து, ஓர் உழவு செய்ய வேண்டும். அதிலிருந்து 2 நாட்கள் கழித்து இரண்டு முறை உழவு செய்து நிலத்தைக் காய விட வேண்டும். மாசி மாதம் 8 அடி நீளம்,5 அடி அகலத்தில் பாத்திகள் அமைத்து, வாய்க்கால் எடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு, விதைநேர்த்தி செய்த விதைகளை... ஒரு பாத்திக்கு, குறைந்தது 40 முதல் 50 செடிகள் வருமாறு விதைக்க வேண்டும். ஏக்கருக்கு 4 கிலோ விதை போதுமானது.
விதைத்த 3 முதல் 5 நாட்களில் முளைப்புத் தெரியும். வாரம் ஒரு முறை தண்ணீர் பாய்ச்சினால் போதும். 20 மற்றும் 30-ம் நாட்களில் களை எடுக்க வேண்டும். 35 மற்றும் 45-ம் நாட்களில் 120 லிட்டர் தண்ணீருக்கு 500 மில்லி பஞ்சகவ்யா எனக் கலந்து தெளிக்க வேண்டும். குறுகிய கால பயிர் என்பதால், பஞ்சகவ்யாவைக் குறைந்த அளவுக்குக் கலந்து தெளித்தாலே போதுமானது. 60-ம் நாளுக்கு மேல் காய்கள் அறுவடைக்கு வரும். ஒரே பறிப்பாக பறிக்காமல் 65, 72, 80-ம் நாட்களில் பறித்தால் கூடுதல் மகசூல் கிடைக்கும். இறவையில், ஏக்கருக்கு சராசரியாக 600 கிலோ வரை மகசூல் கிடைக்கும்.

முலாம்பழம்

யற்கை விவசாயிகளாக இருந்தாலும் சரி… ரசாயன உரம் பயன்படுத்தும் விவசாயிகளாக இருந்தாலும் சரி… பெரும்பாலானவர்கள் தேடித்தேடி விதைப்பது, குறுகிய காலத்தில் வருமானம் கொடுக்கும் பயிர்களைத்தான். அந்த வகையில், முலாம்பழம் குறுகிய காலத்தில் நல்ல வருமானம் கொடுக்கும் பயிர்களில் ஒன்றாக இருக்கிறது. இதை அனுபவப்பூர்வமாக உணர்ந்து, தொடர்ந்து சாகுபடி செய்து வருகிறார்கள், திருவண்ணாமலை மாவட்டம், தானிப்பாடி சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள். இவர்களுடன் தாங்களும் தற்போது இணைந்துள்ளனர் தானிப்பாடியைச் சேர்ந்த சென்னன்-குமாரத்தி தம்பதி.
பச்சைப் போர்வையின் மேல் நெருப்புக்கோழி முட்டை இட்டதைப் போல தோற்றம் கொடுத்த முலாம் பழத்தோட்டத்தில் தம்பதியைச் சந்தித்தோம்.
“எங்க குடும்பத்துக்குச் சொந்தமா நாலரை ஏக்கர் நிலம் இருந்துச்சு. அதுல 10 வருஷம் விவசாயம் பார்த்தேன். ஆனா, போதுமான வருமானம் இல்ல. அதனால, 19 வருஷத்துக்கு முன்ன சவுதிக்கு வேலைக்குப் போனேன். அதுல கிடைச்ச வருமானத்துல இடம் வாங்கி வீடு கட்டினேன். பிள்ளைகளைப் படிக்க வைச்சேன். பாகப்பிரிவினை செய்த பிறகு, எனக்கு ரெண்டு ஏக்கர் நிலம் கிடைச்சுது. அதோட கூடுதலா ரெண்டரை ஏக்கர் நிலம் வாங்கினதுல இப்போ நாலரை ஏக்கர் நிலம் இருக்கு. முன்னாடி ரெண்டு வருஷத்துக்கு ஒரு முறை வந்திட்டுப் போவேன். இப்போ பத்து மாசமா இங்கேயே தங்கிட்டேன்” என்ற சென்னனைத் தொடர்ந்தார், குமாரத்தி.
“அவர் வெளிநாட்டுக்குப் போன பிறகு, நிலத்தை குத்தகைக்கு விட்டுட்டு, நான் களை வெட்டுற வேலைக்குப் போனேன். நாலு பிள்ளைங்களும் காலேஜ் போன பிறகு, நிலத்துல விவசாயம் பார்க்க வந்தேன். கிணத்துல இருக்குற தண்ணியைப் பொறுத்து, நெல், நிலக்கடலை, மரவள்ளினு விவசாயம் பார்த்தாலும், பெருசா சொல்லிக்கிடுற மாதிரி வருமானம் இல்லை. பொண்ணோட படிப்புக்காக வாங்கின கல்விக்கடனோட வட்டி அதிகமான சமயத்துல, அடைக்க வழி தேடிட்டு இருந்தப்போதான்… முலாம்பழத்தை சாகுபடி செய்யச் சொன்னார் எங்க சொந்தக்காரர். முதல் தடவைங்கிறதால, ஒரு ஏக்கர் 20 சென்ட் நிலத்துல சாகுபடி செய்திருக்கேன். மீதி நிலத்துல வழக்கமான நிலக்கடலை சாகுபடி செய்திருக்கேன். குறைவான தண்ணீர்ல நல்ல முறையில வெளைஞ்சு வந்திருக்கு. முதல் அறுவடை முடிச்சுட்டோம். எதிர்பார்த்ததைவிட நல்ல வருமானம் கிடைச்சிட்டிருக்கு” என்று குமாரத்தி நிறுத்த, மீண்டும் தொடர்ந்தார் சென்னன்.
“நாங்க ரசாயன உரங்களைப் பயன்படுத்தித்தான் விவசாயம் செய்றோம். சாறு உறிஞ்சும் பூச்சிகளை விரட்டறதுக்கு பூச்சிக்கொல்லிகளையும் பயன்படுத்துறோம். இன்னமும் இயற்கை விவசாயத்துக்கு மாற முயற்சி செய்யல. முலாம்பழத்துல 75 நாள்ல வருமானம் பாத்துட முடியும்.60 நாள்ல முதல் அறுவடை செய்யலாம். ஒரு ஏக்கர் 20 சென்ட் நிலத்துல இருந்து முதல் அறுவடையில 6 டன் பழங்கள் கிடைச்சது. இன்னும் ரெண்டு அறுவடை மூலமா 5 டன் அளவுக்கு பழங்கள் கிடைக்கும்னு எதிர்பார்க்கிறோம். ஒரு கிலோ பழம் 8 ரூபாயில இருந்து 12 ரூபாய் வரை விலை போகுது. ஆறு டன் பழங்களை விற்பனை செய்ததுல 55 ஆயிரத்து 800 ரூபாய் கிடைச்சிருக்கு. மீதி 5 டன் பழத்துக்கு சராசரியா 9 ரூபாய் வீதம் விலை கிடைச்சா 45 ஆயிரம் ரூபாய் கிடைக்கும். கிட்டத்தட்ட மொத்தம் ஒரு லட்ச ரூபாய் கிடைச்சுடும். மொத்த செலவு 30 ஆயிரம் ரூபாய் போக, கிட்டத்தட்ட 70 ஆயிரம் ரூபாய் வரை லாபம் கிடைக்கும். நானும் என் மனைவியும் மட்டும்தான் வேலை செஞ்சிருக்கோம். ரெண்டு மாசத்துல இது நல்ல லாபம்தான்” என்றார்.
இப்பகுதியில் பெரும்பாலானோர் ரசாயன முறையில்தான் முலாம்பழத்தை சாகுபடி செய்து வருகிறார்கள். இந்நிலையில் முலாம்பழத்தை இயற்கை முறையில் சாகுபடி செய்து வருகிறார், தானிப்பாடியில் இருந்து நான்கு கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் குறவன் ஓடை கிராமத்தைச் சேர்ந்த மணி.
இவர், 10.3.2013 தேதியிட்ட ‘பசுமை விகடன்’ இதழில் வெளியான, ‘அசத்துது அனந்தனூர் சன்னம் மிரட்டுது முத்தின சன்னம்..!’ என்ற செய்தியின் மூலம் ஏற்கெனவே நம் வாசகர்களுக்கு அறிமுகமானவர்தான்.
பாதை மாற்றிய பசுமை விகடன்!
“எனக்குச் சொந்தமா 6 ஏக்கர் நிலம் இருக்கு. அதுல சம்பா பட்டத்துல மட்டும் இயற்கை முறையில பாரம்பரிய நெல் ரகங்களை சாகுபடி செய்றேன். நெல் அறுவடைக்கு பிறகு 2 ஏக்கர்ல நிலக்கடலை, ஒரு ஏக்கர்ல கம்பு, 50 சென்ட் நிலத்துல மாட்டுத்தீவனம், 50 சென்ட் நிலத்துல கேழ்வரகு, 2 ஏக்கர்ல முலாம்பழம்னு இயற்கை விவசாய முறையில சாகுபடி செய்றேன். ஆரம்பத்துல ரசாயன உரங்களைப் பயன்படுத்தி விவசாயம் பார்த்த சமயத்துல வருமானத்துக்காக பல விவசாய முறைகளை மேற்கொண்டேன்.
நெல், கடலைல வருமானம் குறைவா இருந்ததால தர்பூசணி சாகுபடி செய்தேன். அதுல போதுமான அளவுக்கு வருமானம் கிடைச்சது. அது மூணு மாசப் பயிர். அதை அறுவடை செஞ்ச பிறகு என்ன செய்யலாம்னு யோசிச்சப்பதான்… விதை கம்பெனி சேல்ஸ் ஆபீஸர் ஒருத்தர், முலாம்பழ சாகுபடி பத்திச் சொன்னார். உடனே, ரெண்டு ஏக்கர்ல விதைச்சேன். அறுவடை செய்யுற பதம் தெரியாம போனதால நஷ்டம் ஆகிடுச்சு. வியாபாரிங்ககிட்ட கேட்டுத் தெரிஞ்சுக்கிட்டு சரியான முறையில சாகுபடி செய்ய ஆரம்பிச்ச பிறகு, நல்ல லாபம் கிடைக்க ஆரம்பித்தது.
அடுத்து மூடாக்குக்காக ‘மல்சிங் ஷீட்’ போட்டு தர்பூசணி, முலாம்பழம், சாம்பல் பூசணினு மூணையும் தொடர்ச்சியா சாகுபடி செய்தேன். அதுல வருமானத்துக்கு பஞ்சம் இல்லாம இருந்துச்சு. அந்த சமயத்துலதான் ‘பசுமை விகடன்’ நடத்தின ஜீரோ பட்ஜெட் பயிற்சில கலந்துக்கிட்டேன். அப்போ மல்சிங் ஷீட் போடக்கூடாதுங்கிறதை உணர்ந்து… அதை தவிர்த்து இயற்கை முறையில முலாம்பழத்தை சாகுபடி செய்தேன். ஆனா, சரியான விளைச்சல் இல்லை. அதனால, மூணு வருஷமா மூலாம்பழம் சாகுபடி செய்யல. போன வருஷத்துல இருந்து திரும்பவும் சாகுபடி செய்ய ஆரம்பிச்சிருக்கேன். இந்த வருஷம் அறுவடை முடிஞ்சுது.
இப்ப ரெண்டு ஏக்கர்ல சாகுபடி செய்யப் போறேன்” என்ற மணி, இயற்கை முறையில் முலாம்பழத்தை சாகுபடி செய்யும் விதத்தைச் சொல்ல ஆரம்பித்தார். அது பாடமாக இங்கே…
மாசிப்பட்டம் ஏற்றது!
‘முலாம்பழத்தின் வயது 65 முதல் 75 நாட்கள். முலாம்பழச் செடிக்கு, செடிப்பருவத்தில் பனி தேவை. விளையும்போது பனி இருக்கக்கூடாது. அதனால், இதற்கு மாசிப் பட்டம் ஏற்றது. பங்குனிப் பட்டத்திலும் சாகுபடி செய்யலாம். இப்பட்டத்தில், 55 நாட்களிலே மகசூல் கிடைத்தாலும் மகசூல் குறைவாகத்தான் இருக்கும்.
செம்மண், மணல் கலந்த செம்மண், மணல் சாரியான மண் வகைகள் ஏற்றவை. சாகுபடி நிலத்தை கொக்கிக்கலப்பை மூலம் 4 சால் உழவு செய்து மண்ணை மிருதுவாக்க வேண்டும். பிறகு, ஏக்கருக்கு 2 டிப்பர் ஆட்டு எரு அல்லது மாட்டு எருவைக் கொட்டி களைத்து விட வேண்டும். கடைசியாக, ரோட்டோவேட்டர் மூலம் உழுது சமப்படுத்திக் கொண்டு வசதிக்கேற்ப பாசன வசதிகளைச் செய்து கொள்ள வேண்டும் (இவர் சொட்டு நீர் அமைத்திருக்கிறார்).
வரிசைக்கு வரிசை இரண்டு அடி, செடிக்குச்செடி அரை அடி இடைவெளியில் கையால் பள்ளம் பறித்து விதையை நடவு செய்ய வேண்டும் (ஏக்கருக்கு 200 முதல் 250 கிராம் விதை தேவைப்படும்). தமிழகத்தில் ஆரஞ்சு நிற சதைப்பகுதி உள்ள பழங்களுக்குத்தான் நல்ல விலை கிடைக்கிறது. அதனால் தரமான விதை உற்பத்தியாளர்களிடம் இந்த ரக விதையை வாங்கி நடவு செய்தால் பங்கமில்லாமல் வருமானம் பார்க்கலாம். நடவு செய்த 6-ம் நாளில் விதைகள் முளைத்து, இரண்டு இலைகள் வெளியில் தெரிய ஆரம்பிக்கும்.
ஊட்டத்துக்கு ஜீவாமிர்தம்… பூச்சிகளுக்குப் பூச்சிவிரட்டி!
பூச்சித்தாக்குதல் 8-ம் நாளில் இருந்து தென்பட ஆரம்பிக்கும். இந்த சமயத்தில், ஒரு டேங்க் தண்ணீருக்கு (10 லிட்டர்) 100 மில்லி மீன் அமிலம், 100 மில்லி மூலிகைப் பூச்சிவிரட்டி ஆகியவற்றைக் கலந்து ஏக்கருக்கு 5 டேங்குகள் வீதம் தெளிக்க வேண்டும். 10-ம் நாள் முதல் வாரம் ஒரு முறை 200 லிட்டர் ஜீவாமிர்தக் கரைசலை பாசன நீரில் கலந்து விட வேண்டும். தலா 10 கிலோ வீதம் கடலைப் பிண்ணாக்கு, வேப்பம் பிண்ணாக்கு, பருத்திப் பிண்ணாக்கு, சூரியகாந்தி அல்லது தேங்காய்ப் பிண்ணாக்கு ஆகியவற்றை 200 லிட்டர் தண்ணீரில் நான்கு நாட்கள் ஊற வைத்துக்கொள்ள வேண்டும். 15-ம் நாளில் இந்தக் கரைசலை ஒவ்வொரு செடிக்கும் 100 மில்லி வீதம் ஊற்ற வேண்டும். 15 முதல் 20-ம் நாளுக்குள்… தலா ஒரு கிலோ இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் எடுத்து இடித்து, 10 லிட்டர் தண்ணீரில் 12 மணி நேரம் ஊற வைத்து, ஒரு டேங்க் தண்ணீருக்கு ஒரு லிட்டர் வீதம் கலந்து தெளிக்க வேண்டும். இது பூச்சித்தாக்குதலைக் கட்டுப்படுத்தும். 20-ம் நாளில்களை எடுக்க வேண்டும்.
25-ம் நாளில் கொடி படர ஆரம்பித்து, 30-ம் நாளில் பூவெடுக்க ஆரம்பிக்கும். அந்த சமயத்தில் ஒரு டேங்க் தண்ணீருக்கு ஒரு லிட்டர் வீதம் அரப்பு-மோர் கரைசல் கலந்து தெளிக்க வேண்டும். ஏக்கருக்கு ஏழு டேங்குகள் தேவைப்படும்.
தலா ஒரு கிலோ இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாயுடன், 100 கிராம் லவங்கம் பட்டையை அரைத்து கலந்து நான்கு லிட்டர் தண்ணீரில் ஊற  வைத்துக் கொள்ள வேண்டும். அரை கிலோ புகையிலையை 2 லிட்டர் தண்ணீரில் ஒருநாள் முழுவதும் ஊறவைத்துக் கொள்ள வேண்டும். இந்த இரண்டு கரைசல்களையும் ஒன்றாகக் கலந்து டேங்குக்கு ஒரு லிட்டர் வீதம் 40-ம் நாளில் தெளிக்க வேண்டும். 45 முதல் 55 நாட்களில் காய்கள் ஒரு கிலோ முதல் ரெண்டு கிலோ அளவுக்கு வந்துவிடும். 60-ம் நாளில் முதல் அறுவடை செய்யலாம். அடுத்து ஒரு வார இடைவெளியில் இரண்டு அறுவடைகள் செய்யலாம்.
ஏக்கருக்கு 9 டன்!
சாகுபடிப் பாடம் முடித்த மணி, “ஏக்கருக்கு சராசரியா 9 டன் அளவுக்கு மகசூல் கிடைக்கும். கிலோ சராசரியா 9 ரூபாய் வீதம் விற்பனை செய்தா… 81 ஆயிரம் ரூபாய் கிடைக்கும். இதில் செலவு 15 ஆயிரம் ரூபாய் போக, 66 ஆயிரம் ரூபாய் லாபம் கிடைக்கும்” என்று சந்தோஷம் பொங்கச் சொன்னார்.
தொடர்புக்கு,
சென்னன், செல்போன்: 09944773757 , மணி, செல்போன்: 09597577326
நன்றி: பசுமை விகடன்

ஒருங்கிணைந்த விவசாயம்… இரட்டிப்பு லாபம்!

உழவர்களின் லாபத்தை இரட்டிப்பாக்குவதுதான் இப்போதைய தேவை’ என்று பலரும் சொல்லி வருகிறார்கள். அதற்கு இயற்கை விவசாயம் முதற்கொண்டு பல வகை விவசாய முறைகளைப் பின்பற்றிவருகிறார்கள்.
அந்த வகையில், இப்போது பல இடங்களிலும் பரவலாகப் பின்பற்றப்பட்டுவருவது… ஒருங்கிணைந்த விவசாயம்!
உலகம் முழுக்க உள்ள பெரும்பாலான மக்களின் முக்கிய உணவு, அரிசி. ஆனால் ஆசியா, ஆப்பிரிக்கா, லத்தீன் அமெரிக்கா போன்ற சில பகுதிகளில் மட்டுமே அரிசி விளைவிக்கப்படுகிறது. அதிலும், ஆசியாவில் மட்டும் சுமார் 90 சதவீத அரிசி பயிரிடப்படுகிறது. எனினும், பல கோடிக்கணக்கான மக்கள் ஒவ்வொரு நாள் இரவும் பட்டினியுடன் படுக்கச் செல்கிறார்கள். அவர்களில் பலர் குழந்தைகள்.
இதற்கிடையில், ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண் அமைப்பும் உலக சுகாதார நிறுவனமும் தரும் தகவல்கள் மேலும் அதிர்ச்சியை அளிக்கின்றன. அதாவது, நமது மக்களுக்குத் தாவரங்களின் மூலம் கிடைக்க வேண்டிய புரதம் கிடைத்தாலும், அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய விலங்குப் புரதம் கிடைக்கவில்லை. அதனால், பலர் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் அவதிப்படுகின்றனர் என்கின்றன அந்த அமைப்புகள்!
இந்நிலையில் உழவர்களும், அவர்கள் மூலமாக இதர மக்களும் பயன்படும் வகையில், ‘நெல் – மீன் – கோழி’ எனும் ஒருங்கிணைந்த வேளாண் முறையை சிதம்பரத்தில் உள்ள அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் உழவியல் துறை, முதன்முறையாக அறிமுகப்படுத்தி இருக்கிறது. இந்த விவசாய முறையின் மூலம், இயற்கை முறையில் நெற்பயிர் விளைவிக்கப்படுவதுடன், பற்றாக்குறையாக உள்ள விலங்குப் புரதத்தை ஈடுசெய்ய மீன், கோழி வளர்ப்பும் கைகொடுக்கின்றன. மேலும், பொருளாதார ரீதியாகவும் இந்த ஒருங்கிணைந்த விவசாய முறை மிகவும் லாபகரமானது.
5 சென்ட் போதும்
இந்த விவசாய முறை குறித்து அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி, மேம்பாட்டுத் துறையின் இயக்குநர், ஆர்.எம்.கதிரேசன் பகிர்ந்துகொண்டார்:
“1994-95-ம் ஆண்டு காலகட்டத்தில், நான் உழவியல் துறையில் பேராசிரியராகப் பணியாற்றிக்கொண்டிருந்தேன். அப்போது முதுநிலை மாணவர்களுடன் இணைந்து நெல் வயல்களில் மீன்களைப் பயன்படுத்தி களைகளைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக ஓர் ஆய்வை மேற்கொண்டோம். அது வெற்றிகரமாக அமைந்தது.
பிறகு, 96-ம் ஆண்டிலிருந்து பல்கலைக்கழக நிலத்திலேயே ‘நெல் – மீன் – முயல்’, ‘நெல் – மீன் – அசோலா’, ‘நெல் – மீன் – கோழி’ எனப் பல வகை ஒருங்கிணைப்புகளின் மூலம் நெற் பயிரை விளைவிக்கும் ஆய்வுகளை மேற்கொண்டோம். அதில், ‘நெல் – மீன் – கோழி’ ஒருங்கிணைப்பு, நல்ல லாபத்தைத் தந்தது. இதர ஒருங்கிணைப்புகளில் சிற்சில குறைகள் இருந்தன.
இந்த ஒருங்கிணைந்த வேளாண்மையை மேற்கொள்ள, ஒரு ஏக்கர் நிலத்தில் 5 சென்ட் மட்டும் போதும். நிலத்தின் மொத்தப் பரப்பளவில் 10 சதவீதத்துக்கு மேல் போகாதபடி, வயல் ஓரத்தில் ஒரு மீட்டர் ஆழம், ஒரு மீட்டர் அகலத்தில் சிறிய பள்ளம் ஒன்றை ஏற்படுத்த வேண்டும்.
Courtesy: Hindu
வயல் முழுக்கத் தேங்கியிருக்கும் நீரின் வெப்பநிலையில் மாற்றம் இருந்துகொண்டே இருக்கும். ஆனால், வயலின் ஓரத்தில் உள்ள இந்தப் பள்ளத்தில் இருக்கும் நீரின் வெப்பநிலையில் எந்த மாற்றமும் இருக்காது. இந்தப் பள்ளத்தில் ரோகு, மிர்கால், கட்லா, கெண்டை, புல் கெண்டை ஆகிய மீன் இனங்களை விடவேண்டும். சுமார் 8 முதல் 10 செ.மீ. நீளமுள்ள மீன் குஞ்சுகளை விட வேண்டும். ஒவ்வொரு இனத்திலும் 20 குஞ்சுகள் வீதமாக 100 குஞ்சுகளை விடவேண்டும். இந்த மீன்கள் காலையும் மாலையும் வயலில் நீந்திக்கொண்டு, களைகளை உணவாக உட்கொள்ளும். மதிய நேரத்தில் வயலில் உள்ள நீரின் வெப்பம் அதிகரிக்கும். எனவே, அப்போது அவை வயலின் ஓரத்தில் உள்ள பள்ளத்துக்கு வந்துவிடும்.
மதிப்புக்கேற்ற விலை
கோழிகளுக்கு 20 முதல் 24 சதுர அடிக்கு ஒரு கூண்டு அமைக்க வேண்டும். 6×4 என்ற அளவில், அந்தக் கூண்டு இருக்க வேண்டும். நிலத்தில் 4 அடி ஆழத்துக்கு கான்கிரீட் தூண்களைப் புதைத்து, நிலத்திலிருந்து 4 அடி உயரத்துக்கு அந்தத் தூணை நட வேண்டும்.

இந்தக் கூண்டின் அடிப்பகுதி, கம்பி வலையால் செய்யப்பட்டிருக்க வேண்டும். பிறந்து ஒரு நாளேயான கோழிக் குஞ்சுகளை வாங்கி, அவற்றை ஒரு அறையில் வைத்து 12 நாட்களுக்கு வளர்க்க வேண்டும். பின்பு ஒரு கூண்டுக்கு 20 கோழிகள் வீதம் வளர்க்க வேண்டும். இந்தக் கோழிகளின் கழிவு, மீனுக்கு உணவாவதுடன் வயலுக்கும் நல்ல உரமாக அமைகிறது. பொதுவாக, கோழிகளின் கழிவில் அமிலத்தன்மை அதிகமாக இருப்பதால், ஒரு கூண்டுக்கு 20 கோழிகளுக்கு மேல் வளர்க்கக் கூடாது. ஒரு ஏக்கருக்கு 20 கூண்டுகள் வரை வைக்கலாம்.
Courtesy: Hindu
குறுவை சாகுபடியின்போது இரண்டு முறையும், சம்பா சாகுபடியின்போது மூன்று முறையும் என இந்த மீன்களையும் கோழிகளையும் வளர்க்க முடியும். மீன்கள் 15 முதல் 20 கிலோ வரையும், 45 நாட்களில் வளர்ந்துவிடும் கோழிகள் சுமார் 2 கிலோவரை இருக்கும். இவற்றைச் சந்தை மதிப்புக்கேற்ற விலையிலேயே விற்கலாம்” என்கிறார் கதிரேசன்.
சார்க் நாடுகளுக்கு வழிகாட்டி
அனைத்து வகையான நெல் ரகங்களுக்கும் இந்த வேளாண் முறை பொருந்தும். ஊட்டச்சத்து, பொருளாதார லாபம், வேலைவாய்ப்பின்மையைப் போக்கும் இந்த வேளாண் முறைக்கு தேசிய, சர்வதேச அளவில் விருதுகளும் அங்கீகாரங்களும் கிடைத்துள்ளன. இந்த விவசாய முறையை நேபாளம் உள்ளிட்ட சார்க் நாடுகள் பின்பற்றப்படவுள்ளன. அதன் தொடக்க விழா கடந்த 8-ம் தேதி அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. தற்போது, கடலூர் மாவட்டத்தின் ஐந்து கிராமங்களில் இந்த விவசாய முறை நடைமுறையில் உள்ளது.
நன்றி: ஹிந்து

மாடித்தோட்டம் ‘கிட்’

வீடுகள் தோறும் மாடித்தோட்டம் அமைக்க தோட்டக்கலைத்துறை 200 ரூபாய் மானியம் வழங்குகிறது. பயனாளிகள் 322 ரூபாய் மட்டும் செலுத்தி மாடித்தோட்டம் ‘கிட்’ பெறலாம்.
Courtesy: Dinamalar
மாடித்தோட்டம் அமைக்க விரும்புவோர் தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனரை அணுகி பெயர்களை முன்பதிவு செய்தல் அவசியம்.
இதற்காக ஆதார் கார்டு, ரேஷன் கார்டு நகல் கொடுக்க வேண்டும்.
மாடித்தோட்டம் ‘கிட்’ ஒன்றில் கத்தரி, வெண்டை, கீரை விதை பாக்கெட்டுகள், இயற்கை அடியுரமாக 200 கிராம் அசோஸ்பைரில்லம், 200 கிராம் பாஸ்போபாக்டீரியம், 100 கிராம் டிரிக்கோட்ரம்மா விரிடி, 100 கிராம் சூடோமோனாஸ், 100 மி.லி., அசார்டிராக்டின், ஆறு எண்ணிக்கையில் பாலிதீன் உறைகள், ஒரு கிலோ 18:18:18 யூரியா, சூப்பர்பாஸ்பேட், இரண்டு கிலோ தென்னை நார் கழிவு, தொழில்நுட்ப கையேடு உள்ளிட்டவை வழங்கப்படும். மாடித்தோட்டம் குறித்த செயல்விளக்கம், விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்படும்.
தோட்டக்கலைத்துறை வட்டார உதவி இயக்குனர் அலுவலகத்தில் முன்பதிவு செய்தல் அவசியம்.
தொடர்புக்கு: 09842007125 .

– முனைவர் பா.இளங்கோவன், உதவி இயக்குனர் தோட்டக்கலைத்துறை, உடுமலை.

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites