இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

• எங்கும் உயர்ந்தே நில்! எதிலும் தமிழே சொல்!! வறுமை கண்டு நொருங்காதே! வாய்ப்பு இருக்கு மறக்காதே!! விதையென விழு! விருட்சமென எழு!! உறுதியான உள்ளம் ! உலகை வெல்லும் !! ;

விவசாயத்தை தொழிலாக்கு! இந்தியாவை வளமாக்கு!! உயர்ந்தவனாய் இரு! பிறரை உயர்த்துபவனாய் இரு!! சிந்தனையில் சீற்றம்! வாழ்க்கையில் ஏற்றம்!! மூச்சு உள்ளவரை முன்னேறு ! முடியும் என்பவர்க்கே வரலாறு !! ;

.

• முடியும் என்றே முன்னேறு! வெற்றி என்பதே உன்பேரு!! செயலில் மேதையாகு! பலருக்கு பாதையாகு!! வல்லமையை வெளிப்படுத்து! வாழும் உலகை வசப்படுத்து!! முடியும் என்பதுதான் முன்னேற்றத்தின் முதல்படி !!

.

• பண்பில் உயர்ந்து நில் ! பணியில் உயர்ந்து செல் !! அனுபவத்தைப் பாடமாக்கு ஆனந்தத்தைப் பதவியாக்கு தடைகளைத் தகர்த்திடு சாதிப்புகளை நிகழ்த்திடு !!

.

Thursday, July 13, 2023

பேக்கரி தொழில்

 முந்தைய காலத்தில் பிறந்தநாள் கொண்டாட்டங்களில் மட்டுமே பயன்படுத்தப்பட்ட கேக், திருமணங்கள், அலுவலகக் கொண்டாட்டங்கள், முக்கிய பண்டிகை தினங்கள் எனப்

பல நிகழ்ச்சிகளிலும் அத்தியாவசிய உணவுப் பொருளாக மாறிவிட்டது. பல்வேறு பேக்கரிகளில் ரசாயன சேர்மானங்கள் சேர்த்து கேக், சாக்லேட் தயாரிக்கப்படுவதாகப் பலரும் ஆதங்கப்படும் நிலையில், அதற்கு மாற்றாக உடலுக்குக் கெடுதல் ஏற்படுத்தாத கேக் வகைகளை நாடுவோர் அதிகரித்து வருகின்றனர். நான் வசிக்கும் பகுதியிலேயே 20 பேர் வீட்டில் இருந்தபடியே கேக் தயாரிக்கின்றனர். எனக்குத் தெரிந்தே சென்னையில் நூற்றுக்கணக்கானோர் இந்தத் தொழிலில் இருக்கின்றனர். ஆனால், எல்லோருக்குமே ஆர்டர்கள் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கின்றன. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்துத் தரப்பினரும் விருப்பும் கேக், சாக்லேட் தயாரிப்பில் தரத்துக்கும் ஆரோக்கியத்துக்கும் முக்கியத்துவம் கொடுத்தால் ஆர்டர்கள் எப்போதும் தடையின்றி கிடைக்கும்.

நிலையான வெற்றிக்கு!

எத்தனை ஆண்டுகள் அனுபவம் இருந்தாலும், ஒவ்வொரு முறையும் கேக் தயாரிப்பில் மாறுபாடுகள் வரும். அதற்குப் பயன்படுத்திய பொருள்கள், தயாரிப்பு முறை, கேக்கில் வெப்பநிலை மாறுபாடு எனக் காரணங்கள் வேறுபடலாம். எனவே, ஒவ்வொரு முறையும் மிகுந்த கவனத்துடனும் பக்குவத்துடனும் கேக் தயாரிப்பை மேற்கொள்ள வேண்டும். அதேபோல, புதுப்புது ரெசிப்பிகள், ஃப்ளேவர்களைத் தயாரிக்க வேண்டும். அப்போதுதான் போட்டிச்சூழலை மீறி இந்தத் தொழிலில் பல ஆண்டுகளுக்கு நிலையான வெற்றி வாய்ப்புகளை உறுதி செய்ய முடியும். பண்டிகை, பிறந்த நாள், திருமண நாள் போன்று ஆர்டர்களுக்கு ஏற்ப புதுமையான டிசைன்களில் கேக் தயாரித்துக் கொடுப்பதும் நமக்கான தனித்துவத்தை உயர்த்தும்.

விற்பனையைவிட வாடிக்கையாளர் நலன் முக்கியம்!

மைதாவுக்கு மாற்றாக ஆட்டா மாவிலும் சிறுதானிய மாவிலும் கேக் தயாரிப்போர் அதிகரித்துவிட்டனர். அதிலும்கூட பலருக்கு உடன்பாடு இல்லாததால், கீன்வா (Quinoa) பயன்பாடு அதிகரித்து விட்டது. சிலர் க்ரீம் வேண்டாம் என்பார்கள். அவர்களுக்கு க்ரீம் இல்லாத பிரத்யேக கேக் வகைகளைத் தயாரிக்கலாம். சர்க்கரையைத் தவிர்க்க நினைப்பவர்களுக்கு மைதா மற்றும் சர்க்கரை சேர்க்காமல் பிரத்யேக ‘சுகர் ஃப்ரீ’ சர்க்கரை, பேரீச்சை, வாழைப்பழம், தேன் உள்ளிட்ட பொருள்களைச் சேர்த்து கேக் தயாரிக்கலாம்.

முதலீடு: குடும்பத்தினர், தெரிந்தவர்கள் பலருக்கும் சோதனை முயற்சியாக கேக் தயாரித்துக் கொடுத்து, சாதக, பாதக விஷயங்களைத் தெரிந்துகொள்ளலாம். பிறகு, விற்பனை ரீதியாகச் செல்லலாம். வீட்டில் இருந்தபடியே மாதம் சில ஆயிரம் ரூபாய் முதலீட்டில் நிலையான ஆர்டர்கள் எடுத்துச் சிறப்பான வருமானம் ஈட்டலாம்.



பயிற்சி: ஒருநாள் பயிற்சி வகுப்புகள், ஆன்லைன் பயிற்சி வகுப்புகளில் கலந்துகொள்ளலாம். யூடியூப் பார்த்து கேக், சாக்லேட் செய்யவும் கற்றுக்கொள்ளலாம்.

பேக்கிங் தொழிலுக்குத் தேவையானவை: மைக்ரோவேவ் அவன், சமையல் பாத்திரங்கள், ஹேண்ட் பிளெண்டர், மைதா அல்லது ஆட்டா, பால், சர்க்கரை, உலர் பழங்கள் உள்ளிட்ட கேக் தயாரிப்புக்கான அடிப்படையான உணவுப் பொருள்கள்.

விற்பனை வாய்ப்பு: நம் தயாரிப்பு கேக், சாக்லேட்டுகளை போட்டோ எடுத்துச் சமூக வலைதளங்களில் தொடர்ந்து பதிவிட வேண்டும். கேக், சாக்லேட் தயாரிப்பில் அதிக அனுபவம் இருந்தால், குழுவாகப் பல நபர்களுக்கும் அல்லது தனி நபருக்கும் பயிற்சி வகுப்புகள் எடுத்தும் வருமானம் ஈட்டலாம். உணவுக் கண்காட்சிகளில் பங்குபெற்றும் வாடிக்கையாளர்களை அதிகப்படுத்தலாம்.

நோட் பண்ணுங்க!

எந்த ஆர்டராக இருந்தாலும் நிச்சயம் அவர்களிடம் ஃபீட்பேக் கேட்க வேண்டும். டெலிவரி செய்த கேக், வாடிக்கையாளருக்குப் பிடிக்கவில்லை என்ற பதில் கிடைத்தால், தயங்காமல் கட்டணம் இன்றி மற்றொரு கேக் கொடுத்து அவர்களைத் திருப்திபடுத்த வேண்டும். மற்றவர்களைப் பின்தொடராமல் நம் தயாரிப்புக்குத் தனி அடையாளம், பிராண்டு மதிப்பு கிடைக்கும்படி அனுபவம் பெற வேண்டும். அவ்வப்போது ஆஃபர்கள் அறிவிக்கலாம். தரமான மூலப்பொருள்களைக் கொண்டு தயாரித்தால், அதிக விலைக்கும் வாங்கவும் வாடிக்கையாளர்கள் தயங்க மாட்டார்கள். ஒரு ஸ்பூன் கெட்டித்தயிர் சேர்த்தால் கேக் சாஃப்ட்டாக வரும். சிறிதளவு காபி தூள் சேர்த்தால் சாக்லேட் கேக் சுவையாக இருக்கும்.

* பேக்கிங் தொழிலுக்கான ஆலோசனை மற்றும் பயிற்சிகள் பெற, ஒவ்வொரு மாவட்டத் தலைநகரிலும் அமைந்துள்ள மாவட்ட தொழில் மையத்தை அணுகலாம்.

தையால் தொழில்லில் நல்ல லாபம்

 விழுப்புரத்தைச் சேர்ந்த மான்விழி கண்ணன், டெய்லரிங் தொழிலில் 20 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். ஃபேஷன் தொழிலில் வெற்றி பெறுவதற்கான ஆலோசனைகளை வழங்குகிறார்.

வர்லாம் வாங்க!

காலங்கள் மாற, மக்கள் தங்கள் உடைகளிலும் புதுமைகளை அதிகம் விரும்புகின்றனர். குறிப்பாக, பெண்களுக்கான ஆடைகள் தயாரிப்பில் இருக்கும் தொழில் வாய்ப்புகள் ஏராளம். அதிலும் மணமகளுக்கான ஆடை, அலங்காரப் பொருள்கள் தயாரிப்பில் பெரிய வியாபார வாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன. நிச்சயதார்த்தம், திருமணம், வரவேற்பு நிகழ்ச்சி என ஒவ்வொரு தருணத்திலும் ஏராளமான வேலைப்பாடுகளுடன்கூடிய ஆடைகள், அவற்றுக்குப் பொருத்தமான அலங்காரப் பொருள்களைத் தயாரித்து, ஒரு திருமண ஆர்டரிலேயே பல ஆயிரம் ரூபாய் வருமானம் ஈட்டலாம். இதுபோல சுபமுகூர்த்த நிகழ்ச்சிகள் உட்பட வழக்கமான பயன்பாடுகளுக்கான ஆடை களிலும் பல்வேறு டிசைன்களைப் புகுத்தி அட்டகாசமான வருமானம் ஈட்டலாம்.

ஒரு பிளவுஸ்... பல ஆயிரம் வருமானம்!

சாதாரண காட்டன் ஆடைகள் முதல் பட்டுப் புடவைகள் வரை எல்லாவற்றிலும் டிசைனிங் வேலைகளையே பெண்கள் அதிகம் விரும்புகின்றனர். இந்த கொரோனா காலத்திலும்கூட, ‘டிசைனர் மாஸ்க்தான் வேண்டும்’ என்போரும் உண்டு. மக்களின் தேவைதான் இந்தத் தொழிலுக்கான பிசினஸ் படிக்கட்டு. உதாரணத்துக்கு டிசைனர் பிளவுஸ் தயாரிப்புக்கான மூலப் பொருள்கள் வாங்க சில நூறு முதல் சில ஆயிரம் ரூபாய்வரைதான் செலவாகும். ஆனால், அதன் பிறகான உழைப்புதான் பெரியது. அதில், ஆரி, எம்ப்ராய்டரிங், ஸ்டோன் வேலைப்பாடுகள் அனைத்தையும் முடிக்கச் சில தினங்கள் வரை ஆகலாம். உழைப்புக்கேற்ப, அந்த டிசைனர் பிளவுஸில் பல ஆயிரம் லாபம் ஈட்டலாம்.

அப்டேட் எப்போதும் அவசியம்!

தற்போது பெண்களுக்கான ஆடைகளில் பெயின்டிங் வேலைப் பாடுகளுக்கு அதிக வரவேற்பு இருக்கிறது. டெய்லரிங் மட்டும்தான் தெரியும் என்பதைத் தாண்டி, எம்ப்ராய்டரிங், ஆடைகளில் பெயின்டிங் செய்வது உட்பட டிசைனிங் வேலைகளையும் தெரிந்து கொண்டால் வேகமாக முன்னேறலாம். தரம் நன்றாக இருந்தால் நாம் எதிர்பார்த்ததைவிடவும் கூடுதல் வருமானமும் கிடைக்கும்.

கூடுதல் வருமானத்துக்கு உபதொழில்கள்!

ஆடைக்குப் பொருத்தமான ஆபரணங்களைப் பயன்படுத்தவே பலரும் ஆசைப்படுவார்கள். எனவே, டிசைனிங், டெய்லரிங் தொழில்களுடன் சில்க் த்ரெட் வளையல், டிசைனர் ஜிமிக்கி, மணமகள் அலங்காரத்துக்கான அலங்காரப் பூக்கள், ஜடை அலங்காரத்தையும் செய்துகொடுப்பதுடன், மணமகள் அலங்காரம் உள்ளிட்ட வேலைகளும் தெரிந்திருந்தால், எல்லாக் காலத்திலும் நிலையான வேலைவாய்ப்புடன், நிலையான வருமானத்தையும் உறுதி செய்யலாம். தவிர, சுப நிகழ்ச்சிகளுக்கான டிசைனர் ஆரத்தித் தட்டு, சீர்வரிசைத் தட்டு வடிவமைப்பிலும் நல்ல வருமானம்

ஈட்ட முடியும். ஆர்வம், கிரியேட்டிவிட்டி திறன்தான் இந்தத் தொழிலுக்கான அடிப்படை மூலதனம். ஒரு டிசைன் கற்றுக்கொண்டால் அதை வைத்தே புதிய டிசைன்கள் பலவற்றையும் உருவாக்கும் திறன் இருந்தால் இந்தத் தொழிலில் வேகமாக வளரலாம். வெளியிடங்களுக்குப் போகும்போது பலதரப்பட்ட மக்கள் பயன்படுத்தும் ஆடைகள், பத்திரிகைகள், தொலைக்காட்சி, சமூக வலைதளங்கள் மூலம் ஃபேஷன் விஷயங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும். இதனால் நமக்கு அனுபவம் கூடுவதுடன், இந்தத் துறையில் நீண்டகாலம் நிலைத்திருக்கவும் முடியும்.



முதலீடு: டெய்லரிங் தெரிந்தவர்கள், உறவினர் மற்றும் தெரிந்தவர் களுக்கு ஆடைகள் தயாரித்து அனுபவம் பெற்று தொழிலாக மாற்றலாம். இதற்குச் சில ஆயிரம் ரூபாய் முதலீடே போதும்.

மூலப்பொருள்கள்: நூல், ஊசி, கத்தரிக்கோல், டேப், அயர்ன் பாக்ஸ், ஆரி மற்றும் எம்ப்ராய்டரிங் தேவைகளுக்கான பொருள்கள்.

பயிற்சி: தையல் பயிற்சி வகுப்புகள் மற்றும் மகளிர் குழுப் பயிற்சி வகுப்புகளில் கலந்துகொள்ளலாம். டெய்லரிங் தொழில் செய் வோரிடமும் பயிற்சி பெறலாம்.

விற்பனை வாய்ப்பு: ஒரு வாடிக்கையாளரின் எதிர்பார்ப்பை மீறி நேர்த்தியாக ஆடைகளைத் தயாரித்துக் கொடுத்தால், அவரால் பல வாடிக்கையாளர்கள் நம்மைத் தேடிவருவார்கள். தயாரிக்கும் ஆடைகளை செல்போனில் படம் பிடித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டும் புதிய வாடிக்கையாளர்களை ஈட்டலாம். ஃபேஷன், டெய்லரிங் விஷயங்களை மற்றவர்களுக்குக் கற்றுக்கொடுத்தும், பயிற்சி வகுப்புகள் நடத்தியும் வருமானம் ஈட்டலாம்.

நோட் பண்ணுங்க!

கால மாற்றத்துக்கேற்ப ஃபேஷன் துறையில் அறிமுகமாகும் புதுமைகள் குறித்து உடனுக்குடன் தெரிந்து வைத்திருப்பதும் அவசியம். இது நம் மூலமாக வாடிக்கையாளர்களுக்குத் தெரிந்தால்தான், இந்தத் துறையில் நமக்கு அதிக அனுபவமும் ஆர்வமும் இருப்பது அவர்களுக்குப் புரியும். அதனால், அவர்கள் வேறு ஒரு டிசைனரையோ, டெய்லரையோ நாடிச் செல்ல வாய்ப்பில்லை.

* ஃபேஷன் தொழில் தொடர்பான ஆலோசனைகள் மற்றும் பயிற்சிகள் பெற, சென்னையிலுள்ள ஆயத்த ஆடை பயிற்சி மற்றும் வடிவமைப்பு மையத்தைத் தொடர்புகொள்ளலாம்.

தொடர்புக்கு: 044 - 22500121

பயிற்சி நேரம்: காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை.

சிறுதானிய மிக்ஸ் தயாரிப்பில் 12 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். தனது தொழில்

 வழக்கத்தைவிடவும் கொரோனாவுக்குப் பிறகு மூலிகைப் பொருள்களுக்கான தேவையும் வரவேற்பும் அதிகரித்துவிட்டது. இன்றைய அவசர உலகில், தினமும் பொறுமையுடனும் பக்குவத்துடனும் குழம்பு வைக்கப் பலருக்கும் நேரம் இருப்பதில்லை. குழம்பு செய்வதற்குத் தேவையான அடிப்படை மசாலா மற்றும் இதர உணவுப் பொருள்களைச் சேர்ந்து பவுடராகச் செய்து விற்பனை செய்யலாம். இதனால் பத்தே நிமிடங்களில் குழம்பு தயாரித்துவிடலாம். இதுபோன்ற காரணங்களால் மூலிகை, சிறுதானிய தயாரிப்புகளுக்கு

அதிக வரவேற்பு உள்ளது. இந்தத் தொழிலில் பெரு நிறுவனங்களைவிடவும், குடிசைத் தொழிலாக நேர்த்தியுடன் தயாரிப்பவர்களையே மக்கள் அதிகம் நாடுகின்றனர்.

பாரம்பர்யத்தில் பலவித தொழில் வாய்ப்புகள்!

பிரண்டை, வல்லாரை, முடக்கத்தான் கீரை உட்பட பல்வேறு மூலிகைகளையும் பவுடர் செய்து அவற்றைச் சிறுதானிய மாவில் கலந்து தோசை மிக்ஸ் வடிவில் விற்பனை செய்யலாம். அவற்றில் தண்ணீர் சேர்த்துக் கரைத்துத் தோசையாகச் செய்து சாப்பிடலாம். இதேபோல, சூப் மிக்ஸ், அடை மிக்ஸ், புட்டு மிக்ஸ், மூலிகை சாதப்பொடி, ஊறுகாய், அப்பளம், வற்றல், தின்பண்டங்கள், இனிப்பு வகைகள் உட்பட பல்வேறு தயாரிப்புகளைச் செய்யலாம். சிறுதானியங்களை அரைத்து மாவாகத் தனியாகவும், பல தானியங்களைக் கலந்து ஊட்டச்சத்து மாவாகவும் விற்பனை செய்யலாம். இதனால், பாரம்பர்ய மூலிகைகள், சிறுதானியங்களின் பயன்பாட்டை மக்களிடம் கொண்டுசேர்ப்பதுடன், மக்களின் உடல்நலனையும் உறுதிசெய்யலாம். மக்களின் ஆரோக்கியம்தான், இந்தத் தொழிலுக்கான அடிப்படை மூலதனம்.

பக்குவமே முக்கியம்!

அடிப்படையில் பக்குவத்துடன் சமையல் செய்யத் தெரிந்திருந்தால் போதும். தவிர, உணவுப் பொருள்கள் குறித்த அடிப்படை விஷயங்களையும் தெரிந்திருக்க வேண்டும். மிக்ஸி, மாவு அரைக்கும் இயந்திரங்களில் மசாலாக்களை அரைப்பதைத் தவிர்க்க வேண்டும். திருகைக்கல் போன்ற பாரம்பர்ய கருவிகளில் அரைப்பது நல்லது. மாவில் இருக்கும் வெப்பம் தணிந்ததும் சில மணி நேரத்தில் பாக்கெட் செய்துவிட்டால் அவை விரைவில் கெட்டுப்போகாது. அரைத்து ஒருநாள் கழித்து பாக்கெட் செய்தால் விரைவில் வண்டு வந்துவிடும். தரமான தயாரிப்புகள் கொடுத்தால், மக்கள் நம்மைவிட்டு வேறு ஒரு விற்பனையாளரை நாடிச் செல்ல மாட்டார்கள்.

அதிக வாடிக்கையாளர்களை ஈர்க்க...

கிராமங்களிலும் கால்நடைகளின் மேய்ச்சல் நிலங்களிலும் பல்வேறு மூலிகைகள் இயற்கையாகவே விளையும். தவிர, விவசாயிகளிடம் நேரடியாக மூலிகைகள், சிறுதானியங்கள், உணவுப் பொருள்களைக் குறைவான விலையில் கொள்முதல் செய்யலாம். ஒரு தயாரிப்புடன் இல்லாமல், புதுப்புது உணவுப் பொருள்களையும் அறிமுகப்படுத்தலாம். மேலும், மூலிகைகளைப் பயன்படுத்தி சோப்புகள், குழந்தைகளுக்கான குளியல் பொடிகள், தலைக்குத் தேய்க்கும் எண்ணெய் வகைகளையும் தயாரித்துப் பயன்பெறலாம்.



முதலீடு: வீட்டில் இருக்கும் சமையலுக்கான உணவுப்பொருள்களைக் கொண்டே பல்வேறு உணவுகளையும் தயாரித்து அனுபவம் பெறலாம். அதையே உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் கொடுத்து நல்ல வரவேற்பு கிடைத்ததும், சில ஆயிரம் ரூபாய் முதலீட்டில் சுய தொழிலாகத் தொடங்கலாம்.

மூலப்பொருள்கள்: மூலிகைகள், சிறுதானியங்கள், சமையல் பாத்திரங்கள், அடிப்படை உணவுப் பொருள்கள்.

பயிற்சி: உணவுப்பொருள்கள் தயாரிக்கும் நபர்களிடமும், வேளாண் கல்லூரிப் பயிற்சி வகுப்புகளிலும் பயிற்சி பெறலாம்.

விற்பனை வாய்ப்பு: மக்கள் அதிகம் கூடும் சந்தை, பேருந்து நிலையம், திருவிழாக்களில் நேரடியாக விற்பனை செய்யலாம். இயற்கை அங்காடிகள், மளிகைக்கடைகளிலும் விற்பனை செய்யலாம். ஆர்டர்கள் அதிகரித்ததும் பலர் குழுவாகச் சேர்ந்தும் இந்தத் தொழிலைச் செய்து முன்னேறலாம்.

நோட் பண்ணுங்க!

நம் முன்னோர் காலத்தில் ரசாயன உரப் பயன்பாடு இல்லை. இயற்கையாக விளைந்த உணவுப் பொருள்களைக் கொண்டு அவர்கள் தயாரித்த பல்வேறு சமையல் பொருள்களும் உணவுப் பொருள்களும் நீண்டகாலத்துக்குக் கெடாமல் இருந்தன. தற்போது ரசாயன உரப் பயன்பாடு அதிகரித்திருக்கும் காலத்தில், அந்த உணவுப் பொருள்களில் தயாரிக்கும் தயாரிப்புகள் விரைவில் கெட்டுப் போய்விடுகின்றன. அதைத் தடுக்கவும் மேற்கொண்டு சில ரசாயனங்களே சேர்க்கப்படுகின்றன. அதனால், இதுபோன்ற ரெடிமேடு பவுடர், மிக்ஸ் மீது எதிர்மறையான கண்ணோட்டமும் இருப்பதை மறுக்க முடியாது. எனவே, இயற்கையாக விளைந்த உணவுப் பொருள்களில் எந்த ரசாயனமும் சேர்க்காமல் மதிப்புக்கூட்டப்பட்ட தயாரிப்புகளைச் செய்து, அதுகுறித்து மக்களிடம் விளக்குவது அவசியம். நம் மீதான நம்பிக்கை உறுதியானால், நிரந்தர வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை கூடும்.

* ஹோம்மேடு தயாரிப்புத் தொழிலுக்கான ஆலோசனைகள் பெற, ஒவ்வொரு மாவட்டத் தலைநகரிலும் அமைந்துள்ள மாவட்ட தொழில் மையத்தை அணுகலாம்.

இனிப்பான வருமானம் தரும் தேனீ வளர்ப்பு

 கிராமத்தினர் முதல் நகரத்தினர் வரை அனைவரும் வீட்டில் இருந்தே எளிய முறையில் தேனீ வளர்ப்பில் வெற்றி பெற ஆலோசனைகள் வழங்குகிறார், மதுரையைச் சேர்ந்த ‘விபிஸ் இயற்கைத் தேனீப் பண்ணை’ உரிமையாளர் ஜோஸ்பின்.


வர்லாம் வாங்க!

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் அருமருந்து தேன். உலகம் முழுக்க இதற்கான வரவேற்பு அதிகம் இருக்கும் சூழலில், தேனில் கலப்படமும் பெருகிக் கொண்டே இருப்பதைத் தொடர்ந்து கேள்விப்படுகிறோம். காடுகள் அழிப்பு, இயற்கைச் சூழல் சீர்கேடு, தொழிலாளர் பற்றாக்குறை போன்ற காரணங்களால் சிறப்பான தேன் உற்பத்தி குறைந்துகொண்டே வருகிறது. அதேநேரம், தேனீ வளர்ப்பு மூலமாகத் தேன் உற்பத்தி என்பது கொஞ்சம் கொஞ்சமாக, பெருக ஆரம்பித்துள்ளது. வீடு, தோட்டம், மாடி என்று தேனீப்பெட்டிகளை வைத்து தேனீ வளர்ப்பில் ஈடுபட்டுவருகின்றனர். சுமார் 4 கிலோமீட்டர் சுற்றளவு வரையில் பறந்து சென்று தேன் சேகரிப்பில் தேனீக்கள் ஈடுபடும். வேளாண்மைப் பயிர்கள், மரங்கள் மற்றும் இயற்கைச் சூழல் நிறைந்த பகுதிகளில் தேனீ வளர்ப்பு நன்கு கைகொடுக்கும். கிராமப்புறங்கள்தான் என்றில்லை... நகர்ப் புறங்களில்கூட தேனீ வளர்ப்பில் ஈடுபடலாம். பழச்சாறு கொடுத்து தேனீ வளர்ப்பை மேற்கொள்ளலாம். வெளிநாடு களில் வெற்றி பெற்றுள்ள இத்தகைய தேனீ வளர்ப்பு, இந்தியா வில் அதிகம் பிரபலமாகவில்லை. ஆனால், தேனுக்கான தேவை அதிகமாக இருப்பதால் அனைத்துத் தரப்பினரும் இதில் இறங்கி வெற்றிபெறலாம்.

தேனீக்கள் விரும்பும் பழச்சாறு!

தேனீகளுக்குப் பெரிய எதிரியான ரசாயன உரம் மற்றும் ரசாயன பூச்சிக்கொல்லிப் பயன்பாடு அதிகரித்து வருகிறது. இதனால், தேனீக்களுக்குப் போதிய உணவு கிடைக்காமல் போவதால், அவை இடம்பெயர்கின்றன. இதுபோன்ற சூழலில், தேனீப் பெட்டியில் சர்க்கரைப்பாகுக் கரைசல் வைத்து தேனீக்களுக்கு உணவை உருவாக்குவார்கள். இதேபோல பழச்சாறு கொடுத்தும் தேனீ வளர்ப்பை மேற்கொள்ளலாம். சுற்றுவட்டாரத்தில் பூக்கள் இல்லாத பட்சத்தில்தான், தேனீக்கள் பழச்சாற்றைப் பருகும். இதற்காக, வாழை, சப்போட்டா, மா, பப்பாளி போன்ற ஏதாவதொரு பழத்துடன் தண்ணீர் சேர்த்து ஜூஸ் போல செய்து வடிகட்டி கிண்ணத்தில் தினமும் 100 மில்லி அளவில் ஒவ்வொரு பெட்டியிலும் வைக்கலாம். கிராமப் பகுதிகளில் ஒவ்வொரு பெட்டியிலும் மாதம்தோறும் தலா ஒரு கிலோ தேனை அறுவடை செய்யலாம். நகரப் பகுதியில் ஒன்றரை மாதத்துக்கு ஒருமுறை ஒரு கிலோ தேன் கிடைக்கும். கிலோ 450 ரூபாய் வரை விற்பனை ஆகிறது. பூக்களில் இருந்து சேகரிக்கப்படும் தேனுக்கு இணையாக இந்தத் தேன் இருக்காது என்றாலும், இந்தத் தேனும் ஆரோக்கியமானதே!

வீட்டிலிருந்தே செய்யக்கூடிய எட்டு தொழில்கள்! - குறைவான முதலீடு... நிறைவான வருமானம்!

எறும்பு வருவதைத் தவிர்க்க...

தங்க அரளிப் பூவில் தேன் அதிகம் இருக்கும். இந்தப் பூச்செடி, முருங்கை உட்பட பல்வேறு செடிகளைச் சுற்றுவட்டாரத்தில் வளர்ப்பதால் தேனீக்கள் அதிகம் வரும். தேனீக்களின் பிரதான எதிரிகளில் எறும்புக்கும் இடம் உண்டு. பெட்டிகள் பொருத்தப் பட்டிருக்கும் ஸ்டாண்டைச் சுற்றி மஞ்சள்தூளை அவ்வப்போது தூவி விடுவதால் எறும்பு வருவதைத் தவிர்க்கலாம். தேனீக்களைத் தொந்தரவு செய்யாத வரைக்கும் அவற்றால் நமக்கு எந்தப் பிரச்னைகளும் வராது.

முதலீடு: தேனீக்களுடன்கூடிய ஒரு பெட்டி 4,000 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. தோட்டக்கலைத்துறை, வேளாண்துறை மூலம் தேனீப் பெட்டிகள் வாங்க 40 சதவிகிதம் மானியமும் கிடைக்கிறது.

மூலப்பொருள்கள்: 10,000 தேனீக்களுடன்கூடிய தேனீப் பெட்டிகள் விலைக்குக் கிடைக்கின்றன. தேனீ வளர்ப்பில் நம் உழைப்பு அதிகம் இருக்காது. ஆனால், முறையாக கவனித்துக்கொள்வதே மிகவும் முக்கியமானது.

பயிற்சி வகுப்பு: வேளாண் கல்லூரிகள், தோட்டக்கலைத்துறைப் பயிற்சி வகுப்புகளில் கலந்துகொள்ளலாம். நானும் இலவசமாகப் பயிற்சி அளிக்கிறேன்.

விற்பனை வாய்ப்பு: தேனீ வளர்ப்பை மேற்கொள்வது தெரிந்தால், நமக்குத் தெரிந்தவர்களே தேடி வருவார்கள். இயற்கை அங்காடிகள், மளிகைக்கடைகள், சந்தைகளிலும் விற்பனை செய்யலாம். தேனில் மதிப்புக்கூட்டல் உணவுப்பொருள்கள் தயாரித்தும் கூடுதல் வருமானம் ஈட்டலாம்.

நோட் பண்ணுங்க!

முதலில் இரண்டு பெட்டிகள் மட்டும் வாங்கி நிலத்திலோ, மொட்டைமாடியிலோ தேனீ வளர்ப்பை மேற்கொள்ளலாம். தேனீக்கள் நம் இருப்பிடச் சூழலில் சரியாக வாழ்வதை உறுதிசெய்த பிறகு, முதலில் வீட்டுக்கான தேனைச் சேகரித்து முறையான அனுபவம் பெற வேண்டும். பின்னரே சுயதொழிலாகச் செய்யலாம்.

* தேனீ வளர்ப்பு தொடர்பான ஆலோசனைகள் மற்றும் பயிற்சிகள் பெற, கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் பூச்சியியல் துறையைத் தொடர்பு கொள்ளலாம். தொடர்புக்கு: 0422 - 6611214, 6611414

மாதம்தோறும் 6-ம் தேதி ஒருநாள் பயிற்சி வகுப்பு நடக்கும். அந்த நாள் விடுமுறை தினமாக இருந்தால், அதற்கு அடுத்த வேலை நாளில் பயிற்சி வகுப்பு நடைபெறும்.

பயிற்சிக் கட்டணம்: 500 ரூபாய் (ஜி.எஸ்.டி தொகை 18 சதவிகிதம் சேர்க்காமல்)

பயிற்சி நேரம்: காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை

குறிப்பு: பயிற்சியில் கலந்துகொள்ள, முன்கூட்டியே போன் வாயிலாகப் பதிவு செய்துகொள்ள வேண்டும்.

கேட்டரிங் தொழிலில்

 எவ்வளவு பெரிய மனிதராக இருந்தாலும், எந்த வேலையில், எந்த நாட்டில் வசித்தாலும் அடிப்படையில் உணவுதான் ஒருவருக்கான முதல் தேவை. படிப்பு, பணிச்சூழலால் வெவ்வேறு ஊர்களில் வசிக்கும் பலரின் முதல் தேடல் வீட்டுப் பக்குவத்திலான தரமான உணவுதான். பிள்ளைகள் வெளிநாட்டில் வேலை செய்ய, வயதான பெற்றோர் பலரும் நல்ல உணவுக்காக ஏங்குவார்கள். இப்படி நம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருப்போரை நம்பியே சிறிய அளவில் உணவு தயாரிப்புத் தொழிலைத் தொடங்கினால், தானாகவே பலரும் நம்மைத் தேடிவந்து நிரந்தர வாடிக்கை யாளர்களாக மாறுவார்கள்.



எல்லா நாளும் வருமானம்!

மூன்று வேளைக்கான உணவுகள் தயாரிப்பது தவிர, குழம்பு, பொரியல், இனிப்பு மற்றும் ஸ்நாக்ஸ் வகை உணவுகளையும் தனித்தனியேகூட விற்பனை செய்யலாம். உணவுக்கடை தொடங்க முடியாதவர்கள், ஆர்டரின் பேரில் வீட்டில் இருந்தே உணவு தயாரிக்கலாம். முதல் ஆறு மாதங்கள் பெரிதாக லாபம் பார்க்காமல், வாடிக்கையாளர்கள் வட்டாரத்தை அதிகரிப்பதற்கான வழிமுறைகளையே அதிகம் மேற்கொள்ள வேண்டும். வார நாள்கள், வார இறுதி நாள்கள், விடுமுறை நாள்கள், பண்டிகை நாள்கள் என ஒவ்வொரு காலகட்டத்திலும் பலரின் எதிர்பார்ப்பும் தேவையும் மாறுபடும். இவற்றையெல்லாம் சரியாகக் கணித்து உணவு தயாரிப்பில் ஈடுபட்டால் வருடத்தில் எல்லாக் காலத்திலும் நிலையான வருமானம் உறுதி.

செலவுகளைக் குறைக்க...

ஒரு வேளைக்குப் பலவித உணவுகள் தயாரித்தால்தான் கூட்டம் அதிகம் வரும் என்று நினைக்கத் தேவையில்லை. இரவு உணவாக வெறும் இட்லி, சப்பாத்தி மட்டுமே தயாரித்து, அதை மிகச்சிறந்த தரத்தில் கொடுத்தால் அதற்கே வாடிக்கையாளர்கள் கூட்டம் நிறையும். சுவை பிடித்துப்போனால் வாடிக்கையாளர்கள் அவ்வளவு சீக்கிரம் நம்மை விடமாட்டார்கள். முடிந்தவரையில் மசாலாப் பொருள்களையும் நாமே தயாரித்துக்கொண்டால் கூடுதல் தரத்துடன், செலவினங்களையும் குறைக்கலாம். உணவுத் தயாரிப்பு என்பது தரத்துடன், கைப்பக்குவத்தையும் உள்ளடக்கியது. எனவே, உணவுகளை நேர்த்தியாகத் தயாரிக்கப் பழகுவது மிகவும் அவசியம்.



நம்பகத்தன்மையை இழக்கக் கூடாது!

சில உணவுக்கடைகளில் பழைய எண்ணெய், மீதமான உணவுப்பொருள்களை அடுத்த வேளைக்குப் பயன்படுத்துவது போன்ற காரணங்களால் தரமும் சுவையும் குறையும். இதனால், உணவுக் கடைகள் மீதான மக்களின் நம்பகத்தன்மை குறைந்து வருகிறது. இதுபோன்ற எண்ணங்களை நேர்மறையாக மாற்றும் வகையில் நம் அணுகுமுறையும் தயாரிப்பும் இருந்தால், வாடிக்கையாளர்கள் எப்போதும் நம்மைவிட்டு விலகமாட்டார்கள்.

முதலீடு: ஆரம்பத்தில் வீட்டில் இருக்கும் தரமான உணவுப் பொருள்களைக் கொண்டே சமையல் செய்யலாம். பலவித உணவுகளையும் செய்து பலருக்கும் சாம்பிள் கொடுத்துக் கருத்துக் கேட்கலாம். உறுதியான நம்பிக்கை வந்ததும் சில ஆயிரம் முதலீட்டில் தொழிலாகச் செய்யலாம்.

கேட்டரிங் தொழிலுக்குத் தேவையானவை: சமையல் பாத்திரங்கள், காய்கறிகள், மளிகைப் பொருள்கள்.

பயிற்சி: உணவு தயாரிப்போர், அம்மா மற்றும் பாட்டி உள்ளிட்ட குடும்பத்திலுள்ள மூத்த பெண்களிடமும் பயிற்சி பெறலாம்.

விற்பனை வாய்ப்பு: வீட்டில் இருந்து விற்பனை செய்து, வாடிக்கையாளர்கள் அதிகரித்ததும் தள்ளுவண்டிக்கடையிலும், பிறகு வாடகைக் கட்டடத்திலும் உணவுக்கடை நடத்தலாம். வாடிக்கையாளர்களின் வீட்டுக்கே உணவு டெலிவரி செய்வதாலும் கூடுதலான வாடிக்கையாளர்களை ஈட்டலாம். பேச்சிலும் செயலிலும் நாணயம் இருந்தால், வாடிக்கையாளர்கள் தானாகவே அதிகரிப்பார்கள்.

நோட் பண்ணுங்க!

ஒவ்வொரு வாடிக்கையாளரின் விருப்பமும் தேவையும் வெவ் வேறானவை. ஏதோ ஒரு காரணத்தால் நம் அணுகுமுறை பிடிக்காமல் ஒரு வாடிக்கையாளரை இழந்தாலும் பெரிய இழப்புதான். ஒருவர்தானே என யாரையும் குறைச்சலாக எடை போடக்கூடாது. உணவின் சுவையுடன், நம் பேச்சும் அணுகுமுறையும் பிடித்திருந்தால் ஒருவரே பல வாடிக்கை யாளர்களை நமக்குக் கொண்டுவருவார்.

* கேட்டரிங் தொழிலுக்கான ஆலோசனைகள் பெற ஒவ்வொரு மாவட்டத் தலைநகரிலும் அமைந்துள்ள மாவட்ட தொழில் மையத்தை அணுகலாம்.

வளமான வருமானம் தருமே பெட்ஸ் சொந்தங்கள்!

 வளர்ப்புப் பிராணிகளைக் காலங்காலமாகவே நம் முன்னோர்கள் தங்கள் வீட்டில் வளர்த்து வந்துள்ளனர். அந்த வழக்கம் தற்போதுவரை தொடர்ந்தாலும், சில வளர்ப்புப் பிராணிகளைப் பெருமிதத் துக்காகவும் பொழுதுபோக்குக்காகவும் வளர்ப்போரும் அதிகரித்துவிட்டனர்.



பச்சைக்கிளி, குருவி, குரங்குகள் உட்பட இந்திய வனப்பகுதியில் வளரும் விலங்குகள், பறவைகள், பிராணிகள் எதையும் வீட்டில் வளர்க்கக் கூடாது. ஆனால், நாய், பூனை, வெளிநாட்டுப் பறவைகள், பிராணிகள் உட்பட இந்தியாவில் வளர்க்க அனுமதியுள்ள வளர்ப்புப் பிராணிகளை வளர்த்து வரு மானமும் ஈட்டலாம். பல நிறங்களில் ஆப்பிரிக்கன் லவ் பேர்ட்ஸ் உள்ளன. அவை ஜோடி 3,000 ரூபாய்க்கு விற்கப்படுகின்றன. ஆண்டுக்கு மூன்று முறை இனப் பெருக்கம் செய்யும். பெண் பறவை ஒவ்வொரு முறையும் நான்கு முட்டைகள் வரை இடும். மூன்று மாத பருவத்திலுள்ள பறவைக்குஞ்சு ஒன்றை 1,000 ரூபாய்க்கு விற்கலாம். இப்படிப் பல்வேறு வளர்ப்புப் பிராணிகள் மூலம் வருமானம் ஈட்டலாம்.

வீட்டில் வளர்க்க சிறந்த பெட்ஸ் எவை?

கண்ணாடி பாட்டிலிலேயே வண்ண மீன்களை வளர்த்து நிலையான வருமானம் ஈட்டுவோரும் உண்டு. அதிக இடவசதி உடையவர்கள் நாட்டு நாய்கள் உட்பட டாபர்மேன், பொமரேனியன் வகை நாய்களையும் வளர்க்கலாம். தவிர, ஆப்பிரிக்கன் லவ் பேர்ட்ஸ், லவ் பேர்ட்ஸ், காக்டெய்ல், பூனை, வெள்ளெலி, சுகர் க்ளைடர் (Sugar Glider), கினி எலி (Guinea Pig), அழகுக்கான கோழி வகைகள், அலங்கார புறாக்கள்.

வீட்டிலிருந்தே செய்யக்கூடிய எட்டு தொழில்கள்! - குறைவான முதலீடு... நிறைவான வருமானம்!
JordiStock

லைசென்ஸ் அவசியம்!

பொழுதுபோக்குக்காக ஒருசில பெட்ஸ் வளர்ப்போர் லைசென்ஸ் வாங்கத் தேவையில்லை. ஆனால், விற்பனை வாய்ப்புகளுக்காக வளர்த்தால், விலங்குகள் நல வாரியத்தில் நேரடியாகவோ, ஆன்லைன் வாயிலாகவோ லைசென்ஸ் வாங்க வேண்டும். தவிர, தாங்கள் வசிக்கும் உள்ளாட்சி அமைப்பிலும் பதிவு செய்ய வேண்டும்.

குழந்தைபோல கவனிப்பு!

எந்தத் தேவைக்கு வளர்த்தாலும், வளர்ப்புப் பிராணிகளைக் குழந்தைகள்போல பராமரிக்க வேண்டும். வீட்டில் உலாவும்படியே நாய்கள், பூனைகளை வளர்க்கலாம். பறவை வகையைக் கூண்டில் வைத்து வளர்ப்பது சிறந்தது. அந்தக் கூண்டு போதிய இடவசதி, காற்றோட்ட வசதியுடன் இருக்க வேண்டும். அவை வளரும் அறை நன்றாக சூரிய வெளிச்சம் பரவக்கூடிய வகையில் இருந்தால் நல்லது.

முதலீடு: 2,000 ரூபாய்க்குள் விருப்பப்பட்ட ஒருசில வகை பெட்ஸ் வாங்கி ஓராண்டு வளர்த்து அனுபவங்கள் கற்க வேண்டும். பிறகு, 20,000 ரூபாய் முதலீட்டில் தொழிலை விரிவுபடுத்தலாம்.

வளர்ப்புக்குத் தேவையானவை: கூண்டு, சாப்பாடு வைக்கும் கிண்ணம், பிரத்யேக உணவுகள், மருந்துப் பொருள்கள்.

வீட்டிலிருந்தே செய்யக்கூடிய எட்டு தொழில்கள்! - குறைவான முதலீடு... நிறைவான வருமானம்!
101cats

பயிற்சி: பெட்ஸ் வளர்ப்போர், பெட்ஸ் வளர்ப்பு அசோஸி யேஷன்களால் நடத்தப்படும் பயிற்சி வகுப்புகளால் பயன்பெறலாம்.

விற்பனை வாய்ப்பு: நாம் பெட்ஸ் வளர்ப்பது தெரிந்தால், பலரும் நம்மைத் தேடிவருவார்கள். சமூக வலைதளங்களில் நாமும் விற்பனை விஷயங்களைப் பதிவிடலாம். அருகில் உள்ள பெட் ஷாப்புகளிலும் சிரமமின்றி விற்பனை செய்யலாம்.

நோட் பண்ணுங்க!

பெட்ஸ் வளர்க்கும் அறை மட்டுமல்லாமல், நம் வீடும் தூய்மையாக இருக்க வேண்டும். தினமும் இரண்டு முறை தண்ணீர் மாற்ற வேண்டும். உணவு, தண்ணீர் வைக்க தினமும் ஒரே பாத்திரங்களைப் பயன்படுத்தக் கூடாது. ஒவ்வொரு வளர்ப்புப் பிராணியின் குணநலன்கள் குறித்து நன்றாகத் தெரிந்து வைத்திருக்க வேண்டும். மனிதர்களைப் போலவே அவற்றுக்கும் எல்லா உடல்நல பாதிப்புகளும் வரும். அந்தச் சூழல்களில் செய்ய வேண்டிய மருத்துவத் தேவைகளை முறையாகச் செய்ய வேண்டும். தேவைப்பட்டால் கால்நடை மருத்துவரைக் கொண்டும் சிகிச்சையளிக்க வேண்டும். பருவநிலை மாறும்போது பெட்ஸ் பராமரிப்பில் கூடுதல் கவனம் அவசியம்.

* செல்லப்பிராணிகள் வளர்ப்பு தொடர்பான ஆலோசனைகள் பெற, சென்னையிலுள்ள தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தைத் தொடர்புகொள்ளலாம்.

தொடர்புக்கு: 044 - 25551586

எப்போதும் கைவிடாத கைவினைத் தொழில்கள்!

 பெண்கள் அனைவரும் வெளி வேலைக்குச் செல்வது சாத்தியமில்லாதது. அதேநேரம், குடும்ப பொருளாதாரச் சூழலால் வீட்டில் இருந்தே வேலை செய்ய நினைக்கும் பெண்களுக்குச் சிறந்த தொழில் வாய்ப்பாக ஆர்ட்ஸ் அண்டு கிராஃப்ட்ஸ் கைவினைத் தொழில்கள் அமையும். இதற்காகப் பயிற்சி எடுக்கப் பெரிதாக அலையத் தேவையில்லை. நகை மற்றும் ஆடை அலங்காரம், கோலம் போடுவது, மெகந்தி உள்ளிட்ட விஷயங்களில் பெண்களுக்கு இயல்பாகவே ஆர்வம் அதிகம் இருக்கும். அதையே கொஞ்சம் நுணுக்கத்துடன் தெரிந்துகொண்டால், வியாபார வாய்ப்புகளாக மாற்றலாம். வீட்டில் இருந்தபடியே பல்வேறு கைவினைத் தயாரிப்புகள் மூலம் நிறைவாகச் சம்பாதிக்கலாம். இதற்கு அதிக செலவுகள் இருக்காது. ஆனால், கலை ஆர்வமும் தொடர்ந்து திறமையை வளர்த்துக் கொள்ளும் தேடலும், கிரியேட்டி விட்டி திறனும்தான் இந்தத் தொழிலுக்கான பிரதான முதலீடு.



வீட்டில் இருந்தே செய்ய சிறந்த தொழில்கள் எவை?

க்ளே ஜுவல்லரி, க்ளாத் ஜுவல்லரி, த்ரெட் ஜுவல்லரி, பேப்பர் ஜுவல்லரி உள்ளிட்ட பல்வேறு வகையான ஜுவல்லரி மேக்கிங், சுவர் ஓவியங்கள், இரு பாலர் ஆடைகளிலும் பெயின்டிங் டிசைன்கள் செய்வது, கலைநயமிக்க தஞ்சாவூர் பெயின்டிங், டெய்லரிங் சார்ந்த கைவினைத் தொழில்கள், கண்ணாடிப் பொருள்களில் வண்ணமயமான பெயின்டிங் வேலைகள் செய்வது, களிமண் சிலைகள் தயாரிப்பது, மோல்டிங் க்ளே (Moulding Clay) மூலப்பொருளில் எளிதில் உடையாத பொம்மைகள் தயாரிப்பு, சிலைகள் தயாரிப்பு, சாஃப்ட் டாய்ஸ் மற்றும் பயன்படாத துணிகளைப் பயன்படுத்திச் செய்யப்படும் காஸ்டியூம் டாய்ஸ் உட்பட பலதரப்பட்ட பொம்மைகள் தயாரிப்பு, கீ செயின் தயாரிப்பு, பொக்கே தயாரிப்பு, அலங்காரப் பொருள்கள் தயாரிப்பு, சீர்வரிசைத் தட்டுகள் அலங்காரம் உட்பட ஏராளமான தொழில் வாய்ப்புகள் உள்ளன.

நமக்கு சரியான தொழில் எது?

திருமண மேடை அலங்காரம், மணப்பெண் அலங்காரத்துக்கான பிளாஸ்டிக் பூக்கள், பேப்பர் பூக்கள் தயாரிப்பிலும் ஈடுபடலாம். வாசலில் இடும் கோலங்கள் தவிர, மணமக்கள் உருவங்களையும் கோலமாக வரைவதற்குப் பெரிய தேவை இருக்கிறது. பலவிதமான கைவினைத் தொழில்களில் நமக்கு எது நன்றாகத் தெரியுமோ, நன்றாக செட் ஆகுமோ அதைத் தேர்ந்தெடுத்து அனுபவம் பெற்றாலே போதும். ஆர்வம் இருந்தால் பலதரப்பட்ட கைவினைத் தொழில்களையும் செய்து வருமானம் ஈட்டலாம். சென்னையிலுள்ள முன்னணி கல்லூரிகளில் பயிற்சி வகுப்புகள் எடுக்கிறேன். கல்லூரிகளில் ‘தொழில்முனைவோர் பயிற்சி வகுப்புகள்’ எடுக்கவும் வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன. நம்மிடம் அனுபவமும் திறமையும் இருந்தாலே போதும். செலவுகள் இன்றியும் வருமானம் ஈட்டலாம்.



முதலீடு: சில நூறு ரூபாய் செலவில் ஆர்வமுள்ள பொருள்களைத் தயாரித்து தெரிந்தவர்களுக்குக் கொடுக்கலாம். ஆர்டர்கள் வரத் தொடங்கியதும், சில ஆயிரம் ரூபாய் முதலீட்டில் சுயதொழிலாகச் செய்யலாம்.

மூலப்பொருள்கள்: பேப்பர், பிரஷ், சிலை தயாரிக்கும் மோல்டு, ஓவியத்துக்கான பெயின்ட், கத்தரிக்கோல், பசை உட்பட சில அடிப்படையான பொருள்கள்.

பயிற்சி: கிராஃப்ட் தயாரிப்பாளர்களிடம் பயிற்சி பெறலாம். தனிப்பட்ட பயிற்சி வகுப்புகளிலும் கலந்துகொள்ளலாம். யூடியூப் பார்த்தும் கற்றுக்கொள்ளலாம்.

வீட்டிலிருந்தே செய்யக்கூடிய எட்டு தொழில்கள்! - குறைவான முதலீடு... நிறைவான வருமானம்!
Soumen Tarafder

விற்பனை வாய்ப்பு: பூம்புகார், காதி விற்பனை நிலையங்களில் விற்பனை செய்யலாம். நேரடியாகவும், ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் எடுத்தும் வருமானம் ஈட்டலாம். நாம் தயாரித்த பொருள்களையே செல்போனில் வீடியோ எடுத்து யூடியூப், சமூக வலைதளங்களில் பதிவிட்டும் வியாபார வாய்ப்புகளாக மாற்றலாம்.

நோட் பண்ணுங்க!

பேப்பர், பயன்பாட்டுக்கு உதவாத துணி வகைகள், பிளாஸ்டிக் பொருள்கள் போன்றவற்றை மூலப்பொருள்களாகப் பயன்படுத்தி முடிந்தவரையில் செலவுகளைக் குறைக்கலாம். தரமான மூலப்பொருள்களைக் கொண்டு தயாரிப்புகளைச் செய்வது, உரிய நேரத்துக்கு முன்பே டெலிவரி கொடுப்பது நம் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவும்.

* கைவினைத் தொழில் சார்ந்த பயிற்சி மற்றும் ஆலோசனைகள் பெற, சென்னையிலுள்ள குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் வளர்ச்சி நிறுவனத்தைத் தொடர்புகொள்ளலாம் (எம்.எஸ்.எம்.இ). தொடர்புக்கு: 044 - 22501011

மதுரையிலுள்ள சிறுதொழில் மேம்பாட்டு நிறுவனத்தையும் (SIPPO) அணுகலாம். தொடர்புக்கு: 0452 - 2602339, 2603085.

நர்சரி தொழில்......

 சென்னை ‘ஆக்ஸி கிரீன் நர்சரி’ உரிமையாளரான உமா ஆனந், செடிகள் மீதான ஆர்வத்தில் ஐ.டி வேலையை விட்டுவிட்டு நர்சரி தொழிலுக்கு வந்தவர். இந்தத் தொழிலில் வெற்றி பெறுவதற்கான ஆலோசனைகளைச் சொல்கிறார்.

வர்லாம் வாங்க!

நாம் சமையலுக்குப் பயன்படுத்தும் பெரும்பாலான காய்கறிகளும் உணவுப்பொருள்களும் ரசாயன உரங்கள் பயன்படுத்தியே விளைவிக்கப்படுகின்றன. இந்த விழிப்புணர்வு பலதரப்பட்ட மக்களுக்கும் ஓரளவுக்குக் கிடைத்திருக்கிறது. எனவே, பலரும் வீட்டுத்தோட்டம், மாடித்தோட்டம் அமைத்து முடிந்த அளவில் காய்கறிகளை விளைவித்துக்கொள்ள விரும்புகின்றனர். இடவசதி இல்லாதோர், அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வசிப்போர் பால்கனியில் சில தொட்டிகளில் அவுட்டோர் செடிகளையும், வீட்டுக்குள் இண்டோர் செடிகளையும் வளர்க்கின்றனர். திருமணங்களில் மரக்கன்றுகள், விதைகளை ரிட்டர்ன் கிஃப்டாகக் கொடுப்பது அதிகரித்துவிட்டதால், நர்சரி தொழில் செய்வோருக்கான தேவை அதிகரித்து வருகிறது.

எந்த இடம் சரியானது?

கிராமத்தில் இருப்பவர்களுக்கு இடவசதி அதிகமிருக்கும். ஆனால், அங்கு பெரும்பாலானோர் தங்களின் வீடுகளிலேயே சில செடிகளையாவது வளர்ப்பார்கள். எனவே, அங்கு நமக்கான விற்பனை குறைவாக இருக்கும். ஆனால், சுற்றுவட்டாரத்திலுள்ள நகரப் பகுதியினரை இலக்காகக்கொண்டு வீட்டிலேயே குறைந்த இடத்திலும் செலவிலும் நர்சரி அமைக்கலாம்.

அதேபோல, நகரப் பகுதியினருக்கு இடவசதி குறைவாக இருந்தாலும் விற்பனை வாய்ப்பு அதிகம் இருக்கும். குறைந்த இடத்தில் செடிகள் வளர்க்கும் அனுபவம் பெற்றால் சிறப்பான லாபம் ஈட்டலாம். அதிகம் வெயில் படாத, அதேநேரம் வெளிச்சம் நன்றாக இருக்கும் பகுதிகளில் நர்சரி அமைக்கலாம். மொட்டைமாடி அல்லது நிழல் இல்லாத பகுதியில் நர்சரி அமைப்போர் நிழல் வலை அமைத்துச் செடிகளை வளர்க்கலாம்.

எங்கு வாங்கலாம்?

தேவையான செடிகள், நாற்றுகள், விதைகளை விவசாயிகள், அருகிலுள்ள நர்சரிகளில் வாங்கலாம். சில செடிகளைச் சோதனை முறையில் சில மாதங்கள் வளர்க்கலாம். நம் பகுதியில் நன்றாக வளரும் செடிகள் எவை என்பதைக் கணித்து அவற்றை மட்டும் அதிக அளவில் வளர்க்கலாம். செடிகள் பற்றிய அடிப்படையான விஷயங்கள் அவசியம் தெரிந்திருக்க வேண்டும். ஒவ்வொரு செடியும் ஒவ்வொரு மாதிரியான வளர்ச்சித் தன்மையைக் கொண்டது. செடியின் இலைகளைப் பார்த்தே அதன் வளர்ச்சியில் ஏற்பட்டுள்ள மாற்றங்களைக் கணிக்கும் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்

நாள்கள் கூட மதிப்பு உயரும்!

விதைகள், நாற்றுகள், சில வாரம், சில மாதம் வரை வளர்ந்த செடிகள் என வாடிக்கையாளர்களின் தேவைக்கு ஏற்ப விற்பனை செய்யலாம். செடிகளைப் பொறுத்தவரை அவை வளர வளரத்தான் மதிப்பும் கூடும். அவை விற்பனையாகவில்லையே எனக் கவலைப் பட வேண்டியதில்லை. மல்லிகை உள்ளிட்ட சில செடிகளைப் பதியம் வைத்து குறைந்த செலவில் அதிகமான செடிகளை உருவாக்கலாம்.

முதலீடு: 100 சதுர அடியில் பாலித்தீன் கவர், மண் தொட்டியில் சில செடிகளை வளர்த்து, சாதக, பாதக அம்சங்களைத் தெரிந்து கொண்டு நம்பிக்கை கிடைத்த பிறகு, அதையே விற்பனை வாய்ப்பாக மாற்றலாம். தொடக்கத்தில் 5,000 ரூபாய் முதலீட்டில் தொழில் தொடங்கலாம்.


மூலப்பொருள்கள்: மணல், தென்னை நார்க்கழிவு, தொழு உரம், பாலித்தீன் கவர், மண் தொட்டி, பக்கெட், நீர் ஊற்றும் பூவாளி.

பயிற்சி: அருகிலுள்ள நர்சரிகள், விவசாயிகள், செடி வளர்ப்பில் அனுபவம் கொண்டோர், வேளாண் பல்கலைக்கழகங்களிலும் பயிற்சி பெறலாம்.

விற்பனை வாய்ப்பு: சுற்றுவட்டாரத்தில் வசிப்போர், நண்பர்கள், உறவினர்களுக்குத் தெரியப்படுத்தலாம். வாட்ஸ்அப் குழுக்களில் செடிகளின் படங்களைப் பகிரலாம். பூ, காய்கறி, மூலிகை, வாஸ்து, அழகு செடிகள், காற்றைச் சுத்தப்படுத்தும் செடிகள் எனப் பலதரப்பட்ட செடிகளையும் விற்பனை செய்தால் அனைத்து தரப்பு வாடிக்கையாளர்களையும் ஈர்க்கலாம். செடி வளர்ப்பில் முறையான அனுபவம் கொண்டோர், அதைச் செடி வளர்ப் போருக்குக் கற்றுக்கொடுப்பதும் சிறந்த பிசினஸ்தான். பலரின் வீடுகளுக்கும் சென்று செடி வளர்ப்புக்கான ஆலோசனைகள் வழங்கி நிலையான வருமானம் ஈட்டுவோரும் உண்டு.

நோட் பண்ணுங்க!

அதிக உப்புத் தன்மை கொண்ட நீர், நர்சரி பயன்பாட்டுக்கு பலன் கொடுக்காது. கிணற்றுத் தண்ணீர் சிறந்தது. உப்புத் தன்மை அதிகம் இல்லாத நிலத்தடி நீரைப் பயன்படுத்தலாம். செடி வளர்ப்புக்கு களிமண் பயன்படுத்தக் கூடாது. சிமென்ட், மெட்டல், பிளாஸ்டிக் தொட்டிகளைத் தவிர்த்து மண் தொட்டிகளைப் பயன்படுத்துவது சிறந்தது. தொட்டியோ, பாலித்தீன் கவரோ... தண்ணீர் வெளியேறும் வகையில் அவற்றில் துளைகள் இருக்க வேண்டும். தண்ணீரில் வேப்ப எண்ணெய் கலந்த கரைசலை எல்லாச் செடிகள் மீதும் வாரம் ஒருமுறை ஸ்பிரே செய்துவிட்டால், பூச்சித் தொந்தரவுகள் ஏற்படாது. மழைக்காலம், கோடைக்காலங்களில் கூடுதல் கவனத்துடன் செடி களைப் பராமரிக்க வேண்டும்.

* அனைத்து மாவட்டங்களிலும் உள்ள வட்டார அளவிலான தோட்டக் கலை உதவி இயக்குநர், தோட்டக்கலை அலுவலர், தோட்டக்கலை உதவி அலுவலர் ஆகியோரில் ஒருவரை அணுகி, நர்சரி தொழிலுக்கான ஆலோசனைகள் பெறலாம் அல்லது அருகில் உள்ள நர்சரிக்குச் சென்றும் ஆலோசனைகள் பெறலாம்.

பெண்கள் சுயதொழில்...

வீட்டுக்காரர் தவறினதுக்குப் பிறகு, அவர் கவனிச்சுகிட்டு இருந்த பாக்குமட்டை தயாரிப்புத் தொழிலை நான் நடத்த ஆரம்பிச்சேன். ஆர்டர்கள் கிடைச்சாலும், வர்ற வருமானம் தயாரிப்புச் செலவுக்கே சரியா இருக்கு. சொல்லிக்கிற அளவுக்கு லாபம் நிக்கிறதில்ல. எந்த இடத்துல சிக்கல் ஏற்படுதுனு கணிக்கவே முடியல’ – தொழில் முனைவோராக இரண்டு ஆண்டுகள் அனுபவம் கொண்ட கமலாவின் கவலை இது!

தொழிற்சாலைகள் நிறைந்த அந்த ஊரில், ஒருவர் உணவுக்கடையும், மற்றொருவர் ஜவுளிக்கடையும் புதிதாகத் தொடங்கினர். அங்கிருக்கும் தொழிற்சாலைகளில் பணியாற்றுவோர் பலரும் ஒப்பந்தத் தொழிலாளர்கள். வெளியூர்களைச் சேர்ந்த அவர்கள் அந்த ஊரில் தங்கிப் பணியாற்றி வருகின்றனர். வீட்டு உணவை எதிர்பார்க்கும் அவர்களின் தேவையை அறிந்து, உணவுக்கடையைத் தொடங்கிய ராணிக்கு அந்தத் தொழில் விரைவாக வளர்ச்சியடைந்தது. தொழிற்சாலைகளில் வழங்கப்படும் சீருடைகளையே பயன்படுத்தும் அங்கிருந்த பணியாளர்கள், விடுமுறை தினங்களில் சொந்த ஊர் சென்றுவிடுவார்கள். இதை முன்கூட்டியே கணிக்காமல் ஜவுளிக்கடையைத் தொடங்கிய புவனாவுக்கு வெற்றி வசமாகவில்லை.



இந்த நான்கு பெண்களைப்போல, நம்மில் ஏராளமானோர் உண்டு. இல்லத் தரசிகள் தவிர, வேலைக்குச் செல்லும் பெண்களுக்கும் தொழில்முனைவோராகும் ஆசை அதிகமிருக்கும். ஏற்கெனவே சுயதொழில் செய்துவரும் சிலருக்குச் சரியான வளர்ச்சி கிடைக்காமல் தடுமாற்றம் இருக்கக்கூடும். இவற்றுக்கெல்லாம் சரியான ஆலோசனைகளையும் தீர்வுகளையும் எதிர்பார்த்துக் காத்திருக்கும் பெண்களுக்கு வழிகாட்டுகிறது இந்தத் தொகுப்பு.

எந்தத் தொழில் தொடங்கினாலும், நம்முடைய தயாரிப்பு அல்லது விற்பனைப் பொருளுக்கான தேவை உடையோர்தான் நம் எஜமானர்கள். நம்முடைய ஆர்வமும், அதை வாங்கும் மக்களின் தேவையும் ஒரே கோட்டில் சந்திக்கும் புள்ளிதான் பிசினஸ். இதற்காக, ரூம் போட்டு மூளைக்குச் சோர்வு ஏற்படும் அளவுக்கு யோசிக்க வேண்டியதில்லை.

உண்ணும் உணவு, உடுத்தும் உடை, அலங்காரப் பொருள்கள், செடி வளர்ப்பு, மன அழுத்தம் குறைக்க உதவும் செல்லப் பிராணிகள் வளர்ப்பு என நம் அன்றாடத் தேவைகளும், பயன்பாட்டுப் பொருள்களும்தாம் தொழில் வாய்ப்புகளுக்கான வரவேற்பறை.

வீட்டில் இருந்தே செய்வதற்கான சிறந்த தொழில்கள் எவை, அவற்றைச் சரியான முறையில் செய்வது எப்படி, தோல்வி ஏற்படுவதைத் தவிர்க்க செய்ய வேண்டிய விஷயங்கள், தொழிலை அடுத்தகட்டத்துக்கு எடுத்துச் செல்லும் வழிமுறைகள்... – இப்படி ஒவ்வொருவருக்குமான எதிர்பார்ப்புகள், தேவைகள் நிறைய இருக்கும். எல்லாவற்றுக்கும் எளிமையாக வழிகாட்டுகிறார்கள், பல்வேறு தொழில்களிலும் சாதித்த அனுபவ பெண் தொழில்முனைவோர்.

வெற்றிபெற வாழ்த்துகள்!

Thursday, December 8, 2022

கற்பூரம் தயாரிக்கும் முறை.....

சுயதொழிலில் சிறந்த தொழிலாக விளங்குகிறது இந்த கற்பூரம் தயாரிப்பு. குறிப்பாக இந்த கற்பூரம் இந்து மதத்தினர் தினமும் அதிகளவு பயன்படுத்தக்கூடிய ஒரு பொருளாக விளங்குகிறது. அதுமட்டும் இன்றி இந்து கோயில்களிலும், சித்த மருத்துவத்திற்கும் இதன் தேவை அதிகளவு உள்ளதால் தயங்காமல் இந்த தொழிலை துவங்கலாம். குறிப்பாக இந்த தொழில் துவங்குவதற்கு இட வசதியோ, வேலையாட்களோ தேவை இல்லை. வீட்டில் இருந்தே சிறிய அறையில் செய்யக்கூடிய தொழில். ஆண், பெண் இரு பலரும் செய்யக்கூடிய சிறந்த தொழிலாகவும் விளங்குகிறது.

கற்பூரம் தயாரிக்கும் முறை:

மூலப்பொருட்கள்:-

இந்த கற்பூரம் ஊசி இலை தாவரம் என்கின்ற இலையில் இருந்துதான் தயாரிக்கின்றனர், அதுவும் சிலவகையான கெமிக்கல் மற்றும் இதர பொருட்களை சேர்த்து தான் இந்த கற்பூரத்தை தயாரிக்கின்றனர்.

இருப்பினும் இந்த கற்பூரம் செய்வதற்கு மூலப்பொருட்கள் மிக எளிதாக நாட்டுமருந்து கடைகளில் கிடைக்கின்றது. அதாவது கற்பூர பொடி, கற்பூர கட்டி என்று அனைத்து நாட்டு மருந்து கடையிலும் விற்கப்படும். அவற்றை வாங்கி கற்பூரம் செய்வதற்கு பயன்படுத்தி கொள்ளலாம்



தயாரிக்கும் இயந்திரம்
இந்த கற்பூரம் தயாரிப்பதற்கு முக்கியமாக கேம்பர் மிசின் (Camphor Machine) தேவைப்படும்
இந்த மெஷின் இலங்கையில் எங்கு கிடைக்கும் என்ற தகவல்கள் எங்களுக்கு தெரியாது ஆனால் இந்தியமர்ட் இணையத்தலத்தின்மூலம் ஆர்டர் செய்து பெற்றுக்கொள்ள முடியும்

தயாரிக்கும் முறை :

இந்த கற்பூரம் தயாரிப்பு ஒன்றும் கஷ்டமான வேலை இல்லை. கேம்பர் இயந்திரம் வாங்கிவிட்டோம் என்றால் எளிதாக செய்துவிட முடியும்.

கேம்பர் இயந்திரத்தில் மூலப்பொருட்களான கற்பூர கட்டியையோ அல்லது பொடியையோ இந்த இயந்திரத்தில் கொட்டினால் போதும் கற்பூரங்கள் அச்சிடப்பட்டு வெளிவரும்.

இவற்றில் சிறிய கற்பூரம், பெரிய கற்பூரம் என்று இரண்டு வகை உள்ளது. சிறிய கற்பூரம் வேண்டும் என்றால் சிறிய அச்சியை மாட்ட வேண்டும் அல்லது பெரிய கற்பூரம் வேண்டும் என்றால் பெரிய அச்சியை மாட்ட வேண்டும்.

கற்பூரம் தயாரித்ததும் அவற்றை எடுத்து பேக்கிங் செய்து, லேபிள் ஓட்டினால் போதும், கற்பூரம் விற்பனைக்கு தயார்.

சந்தை வாய்ப்பு:

கற்பூரத்தின் தேவை அதிகளவு உள்ளதால், அனைத்து மல்லிகை கடைகளில் விற்பனை செய்யலாம்.

கிராமப்புறங்களில் உள்ள சிறு பெட்டி கடையிலும் விற்பனை செய்யலாம். அதுமட்டும் இன்றி நமக்கு தெரிந்தவர்களின் வீட்டிற்கு சென்றும் விற்பனை செய்து வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கலாம். எனவே கற்பூரம் தயாரிப்பு என்பது மிக அதிக வருமானம் தரும் தொழிலாக உள்ளது.

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites