இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Sunday, February 26, 2012

நேந்திரன் சிப்ஸ்.. விவசாயிகளே தயாரித்தால் லாபம்

ரசாயன உரம் தவிர்த்து இயற்கை முறையில் சாகுபடி செய்து, தங்கள் விளைபொருட்களை விவசாயிகள் மதிப்பு கூட்டப்பட்ட பொருளாக விற்பது லாபகரமானது. இயற்கை முறையில் நேந்திரன் வாழை பயிரிட்டுள்ள விவசாயிகள் இணைந்து  சிப்ஸ் தயாரித்து விற்று  நல்ல லாபம் அடைந்து வருகிறோம் என்று கூறுகிறார் கோவை மாவட்டம் அன்னூரை சேர்ந்த சுந்தரம். அவர் கூறியதாவது:
45
ஆண்டாக விவசாயம் செய்து வருகிறேன். கடந்த 8 ஆண்டாக ரசாயன உரம் தவிர்த்து முழுமையான இயற்கை உரம் மூலம் நேந்திரன் வாழை சாகுபடி செய்து வருகிறேன். இந்த முறையால் இடுபொருள் செலவு குறைவு.  மகசூல் அதிகம். உற்பத்தியாகும் பொருளும் ஆரோக்கியமானது. பகலில் உழைத்து, இரவில் காவல் காத்து அறுவடை செய்தால், அதற்குண்டான விலை கிடைப்பதில்லை. ரசாயன உரத்தால் தயாராகும் விளைபொருளுக்கு என்ன விலையோ அந்த விலைதான் கிடைக்கிறது. வாங்குபவர் நிர்ணயிப்பதுதான் விலையாக உள்ளது. போட்டி நிறைந்த வாழைத்தார் நேரடி விற்ப னையை தவிர்த்து, வாழைக் காயை மதிப்பு கூட்டப்பட்ட பொருளாக மாற்றி விற்றால் பலன் உண்டு. இதனால் நேந்திரன் வாழைக்காயை சிப்ஸாக தயாரிக்க முடிவெடுத்தேன்.

3
ஏக்கர் நிலத்தில் விளையும் நேந்திரன் வாழைத்தார் மட்டும் சிப்ஸ் தயாரிப்புக்கு போதாது என்பதால், இயற்கை விவசாயம் மூலம் நேந்திரன் தயாரிக்கும் மற்ற விவசாயிகளையும் சேர்த்து கூட்டாக சிப்ஸ் தயாரிக்கிறேன். மாருதி ஆர்கானிக் பார்ம்ஸ் நிறுவனத்தை துவக்கி, தமிழ்நாடு இயற்கை விவசாய வளர்ச்சி மையத்தில் பதிவு செய்துள்ளோம். நிறுவனத்தில் மேலும் இப்பகுதியில் உள்ள இயற்கை நேந்திரன் வாழை விவசாயிகளையும் இணைத்து கூடுதலாக தயாரிக்க உள்ளோம். சிப்ஸ் தயாரிப்புக்கு இயற்கை விவசாயத்தில் விளைவிக்கப்பட்ட தேங்காயில் இருந்து பிழியப்பட்ட எண்ணெயை பயன்படுத்துகிறோம். நேந்திரன் வாழைத்தாரை மதிப்பு கூட்டப்பட்ட சிப்ஸாக விற்பதால் நல்ல லாபம் கிடைக்கிறது. வாழைத்தாராக விற்றபோது ஏற்பட்ட நஷ்டத்தில் இருந்து விடுதலை கிடைத்துள்ளது. விவசாயிகள் தங்கள் பகுதியில் விளைவிக்கப்படும் விளைபொருளை மதிப்பு கூட்டப்பட்ட பொருளாக மாற்றி விற்றால் நல்ல லாபம் பெறலாம்.
கட்டமைப்பு, முதலீடு: நான்கு  தூண்கள் நட்டு ஷெட் அமைக்க வேண்டும் (செலவு-ரூ.10,000). அதில் மரத்தூள் போட்டு எரிக்கப்படும் அடுப்பு கட்ட வேண்டும். (ரூ. 3000) இரும்பிலான எண்ணெய்  சட்டி 1 ( ரூ.1,750), கரண்டி, எண்ணெய் வடிகட்டி சட்டி 2, வாழைக்காய் சீவும் கருவி 2, உரித்த வாழைக்காய் அலச வாளி 2, பொரித்த சிப்ஸ் வைக்க பிளாஸ்டிக் கூடை 2 ஆகியவை வேண்டும் (ரூ.2,250.)  எடை மெஷின் ரூ.3,500, சீலிங் மெஷின் ரூ.3000 என மொத்த முதலீடு ரூ.23,500.
கிடைக்கும் இடங்கள்: அடுப்பை கட்டிட தொழிலாளர்களே கட்டி கொடுப்பார்கள். அடுப்பு எரிக்க மரத்தூள், கடலை தோல், முந்திரி தோல் ஆகியவற்றை பயன்படுத்தலாம். அவை எளிதில் கிடைக்கிறது. நேந்திரன் வாழைக்காய்களை விவசாயம் செய்யாதவர்கள், அவற்றை சந்தை மற்றும் கூட்டுறவு சங்கங்களில் நடக்கும் ஏலங்களில் கொள்முதல் செய்யலாம். இதர பொருள்கள் ஹார்டுவேர்ஸ் கடைகளில் கிடைக்கிறது.
உற்பத்தி செலவு (ஒரு நாளைக்கு): ஒரு நாளைக்கு 50 கிலோ சிப்ஸ் தயாரிக்கலாம். அதற்கு 150 கிலோ நேந்திரன் வாழைக்காய் வேண்டும். கிலோ சராசரி விலை ரூ.16 வீதம் ரூ.2,400, தேங்காய் எண்ணெய் 1 டின் 17 கிலோ  ரூ.2,380, எரிபொருள் கிலோவுக்கு ரூ.7 வீதம் ரூ.350, நேந்திரன் சிப்ஸ் பொரிக்கும் தொழிலாளர் கூலி 2 பேருக்கு மொத்தம் ரூ.600, பேக்கிங் செலவு ரூ.150 என மொத்தம் ரூ.5,880. (ஒரு கிலோ சிப்ஸ் சராசரி உற்பத்தி செலவு ரூ.118).
வருவாய் (ஒரு நாளைக்கு)நேந்திரன் சிப்ஸ் ஒரு கிலோ குறைந்தபட்சம் கிலோ ரூ.160, அதிகபட்சம் ரூ.180 வரை விற்கப்படுகிறது. இதன் மூலம் ஒரு நாள் குறைந்தபட்ச வருவாய் ரூ.8,000. குறைந்தபட்ச லாபம் ரூ.2,120, அதிகபட்ச வருவாய் ரூ.9,000. அதிகபட்ச லாபம் 3,120.
சந்தை வாய்ப்பு: டிபார்ட்மென்ட் ஸ்டோர்கள் மற்றும் பேக்கரிகளில் இயற்கை விவசாயத்தால் விளைந்த பொருட்களை விற்பனை செய்யும் பிரிவுகள் தனியாக உள்ளன. அங்கு விற்பனை செய்யலாம். அதோடு வழக்கமான சிப்ஸ்கள் விற்பனை செய்யும் கடைகளுக்கும் விற்கலாம். தரமான நேந்திரன் சிப்ஸ், கடைகளில் சில்லரை விலையாக கிலோ ரூ.250 முதல் ரூ.260 வரை விற்கின்றனர். உற்பத்தி செய்பவர்களிடம் ரூ.160 முதல் ரூ.180க்கு கொள்முதல் செய்வதால் அவர்களுக்கு நல்ல லாபம் உள்ளது. தரமான சிப்ஸ்களுக்கு வரவேற்பு உள்ளது. சிப்ஸ்கள் 2 மாதம் வரை கெடாது. ருசியும் பலருக்கு பிடிப்பதால் சந்தை வாய்ப்பு தொடர்ந்து இருக்கும்.
தயாரிப்பது எப்படி?
நேந்திரன் வாழைக்காய்கள் பச்சையாக இருக்க வேண்டும். சிறு கத்தியால் வாழைக்காயின் மேல் இருந்து கீழாக தோலில் கீற வேண்டும். கீறிய தோலுக்குள் உள்ளே கத்தியை நுழைத்து காய்க்கும், தோலுக்கும் இடையே நெம்ப வேண்டும். பின்னர் கை விரல்களால் நெம்பினால் தோலை முழுதாக உரித்து விடலாம். பின்னர் அதை நல்ல தண்ணீரில் அலசிய பின், காய்ந்த எண்ணெயில் நேரடியாக வட்டமாக சீவி போட வேண்டும். எண்ணெயில் விழும் நேந்திரன் துண்டுகள் பொரியும் போது சத்தம் வரும், அது லேசாக அடங்கும் போது ஒரு குழிக்கரண்டியில் உப்புத் தண்ணீரை அள்ளி எண்ணெயில் ஊற்ற வேண்டும். சட்டியில் சிப்ஸ் மீண்டும் சத்தத்துடன் பொரியும். சத்தம் அடங்கிய பின், சிப்ஸ்களை கரண்டியில் அள்ளி, தூக்கிப்போட்டு பிடித்தால் சலசலவென சத்தம் கேட் கும். அப்படி கேட்டால் நன் றாக வெந்து விட்டது என்பதை தெரிந்து கொள்ளலாம். அதை வடிகட்டி சட்டியில் போட்டு சில நிமிடங்களுக்கு பிறகு அதை, 200, 250 கிராம் வீதம் எடை போட்டு பேக்கிங் செய்யலாம்.

0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites