இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Sunday, April 1, 2012

மரங்கொத்தி

மரங்கொத்திப் பறவையின் காலில் இரண்டு விரல்கள் முன்புறமாகவும், இரண்டு விரல்கள் பின்புறமாகவும் நீண்டிருக்கும். கால் விரல்களின் இந்த அமைப்பு, மரத்தைப் பற்றி ஏறுவதற்கும் மரத்தை இறுகப் பற்றிப் பிடித்துக்கொண்டு நிற்பதற்கும் பெரிதும் உதவுகிறது. மரத்தில் பொந்து உருவாக்கி அதில் முட்டையிடுவதற்காக மரங்கொத்திகள் மரங்களைக் கொத்திப் பொந்துகள் அமைக்கின்றன. மர இடுக்குகளிலும், துளைகளிலும் வாழும் புழு பூச்சிகளையும் அவற்றின் முட்டைகளையும் தின்பதற்காகவும் மரங்கொத்திகள் மரத்தைக் கொத்துகின்றன.

மரங்கொத்தியின் மொத்த உடல் பருமனோடு ஒப்பிடும்போது, அதன் தலை பெரிதாக இருக்கும். அதன் கழுத்து சிறிதாக இருந்தாலும் மிகவும் வலுவாக இருக்கும். அலகால் மரத்தில் பலமாகக் கொத்துவதற்கு இந்தக் கழுத்துதான் உதவுகிறது. மரங்கொத்தியின் அலகின் முனை உளியைப்போன்று கூர்மையாக இருக்கும். இந்த அலகின் வடிவமும் உறுதியும் மரத்தில் துளையிடுவதற்கு ஏற்ற வகையில் அமைந்திருக்கின்றன. மரங்களின் தண்டுப் பகுதியில் உள்ள புழு பூச்சிகள் முழுவதையும் தங்கள் அலகால் பற்றி எடுப்பதற்கு இயலாமல்போனால் மரங்கொத்திகள் தங்கள் நாக்கைப் பயன்படுத்துகின்றன.

ஒரு மரத்தின் துளைக்குள் இருக்கும் பூச்சியைப் பிடிப்பதற்கு மரங்கொத்தி தன் அலகை உள்ளே நீட்டுகிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். அலகு எட்டாத தொலைவில் இருக்கிறது அந்தப் பூச்சி. அப்போது மரங்கொத்தி தன் வாய்க்குள் மடித்து வைத்திருக்கிற நாக்கை நீட்டி அந்தப் பூச்சியைப் பிடித்துவிடும். மடக்கி வைத்திருந்த நாக்கை நீட்டும்போது அந்த நாக்கு மெல்லியதாக, அலகைவிட ஏறத்தாழ நான்கு மடங்கு நீளமாக இருக்கும். நாக்கின் முனை கூர்மையாகவும், முட்கள்போன்ற அமைப்புக்கொண்டதாகவும் இருக்கும். பெரிய மரங்களின் பொந்துகளில் மிகவும் பாதுகாப்பாக ஒளிந்திருக்கும் பூச்சிகளையும்கூட இந்த நீளமான நாக்கால் பிடித்துவிட முடியும். நாக்கின் முனையில் உள்ள முட்களும், பசைபோன்ற திரவமும் பூச்சிகளை மிக எளிதில் பிடிப்பதற்கு வசதியாக அமைந்திருக்கின்றன.

மரங்கொத்திகளில் "ஃபின்ச் மரங்கொத்தி' எனும் ஒரு இனம் உண்டு. சில சமயம் மரத் துளைகளில் உள்ள பூச்சி புழுக்கள், மரங்கொத்தியின் அலகிற்கு எட்டாதபடி மரத்தின் மிக உள்ளே இருக்கும். அவற்றை வெளியே கொண்டுவர இந்த வகை மரங்கொத்திகள் என்ன செய்யும் தெரியுமா? இதுபோன்ற அவசியங்களுக்காகத்தான் எப்போதும் அலகில் ஒரு கம்பையோ முள் குச்சியையோ வைத்திருக்கும். அந்தக் கம்பைக்கொண்டு குத்தி புழு பூச்சிகளை வெளியே வரச் செய்துவிடும்.

வடக்கு அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியாவில் ஒரு வகைப்பட்ட மரங்கொத்திகள் வசிக்கின்றன. அவற்றிற்கு ஓக் மரத்தின் காய்கள்தான் மிகவும் விருப்பமான உணவு. ஓக் மரத்தின் காய்கள் நிறையக் கிடைக்கின்ற காலத்தில் அவை அந்தக் காய்களை சேகரித்து வைக்கும்.

உணவு கிடைக்காத காலத்தில், சேர்த்து வைத்ததைப் பயன்படுத்திக்கொள்ளும். அந்தக் காய்களை அவை எங்கே சேகரித்து வைக்கும்? தொலைவில் உள்ள ஏதாவது ஒரு பெரிய ஓக் மரத்தில் நூற்றுக்கணக்கான பொந்துகள் அமைக்கும். ஒவ்வொரு மரங்கொத்தியும் உருவாக்குகிற பொந்தில் அந்தந்த மரங்கொத்தியே மரக்கொட்டையைக்கொண்டு வந்து பாதுகாக்கும். இடையிடையே இந்த மரங்கொத்திகள் வந்து, தங்களுடைய உணவுச் சேகரம் பத்திரமாக இருக்கிறதா என்று பார்த்துவிட்டுப்போகும். மற்ற பிராணிகள் தங்கள் உணவைக் கொண்டுபோய்விடாமல் இருப்பதற்காக இவை சில சமயம், மரத்தின் இலைகளாலும், உலர்ந்த மரக் கிளைகளாலும் அந்தப் பொந்துகளை மறைத்து வைக்கும். இங்குள்ள மரங்கொத்திகளும் அத்தியாவசியமாகத் தேவைப்படும் உணவை மரப் பொந்துகளில் சேகரித்து வைப்பது உண்டு.

0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites