இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Friday, April 13, 2012

தோசை சுட்டு உயர்ந்த தமிழன்

சமீபகாலங்களில் பத்திரிக்கைகளிலும், இணையத்திலும் உழைப்பால் உயர்ந்த சிலரை பற்றி வாசிக்கும்போது தெரிய வருகிற விஷயம் - சரியான முறையில் இந்தியர்களை பசியாற்றினால், கோடி கோடியாக சம்பாதிக்கலாம் என்பது தான். இதோ அப்படி உயர்ந்த ஒரு சாதனை தமிழனின் கதை.

ப்ரேம் கணபதி.
---

தூத்துக்குடி மாவட்டத்தில் விளாத்திகுளம் பக்கமிருக்கிறது, நாகலாபுரம் என்ற கிராமம். அந்த ஊரை சேர்ந்த ப்ரேம் கணபதிக்கு பத்தாவது வரை தான் படிப்பு. அதற்கு மேல் படிக்க விருப்பம் இல்லை. சென்னைக்கு ரயில் ஏறிவிட்டார்.



மாத சம்பளம் 250க்கு ஒரு டீக்கடையில் வேலை. கூட வேலை பார்க்கும் பையன், ‘எனக்கு 200 ரூபா கொடு. பம்பாய்ல 1200 ரூபா சம்பளத்துக்கு வேலை ஏற்பாடு செய்கிறேன்’ என்று சொல்ல, வீட்டில் சொல்லாமல் கொள்ளாமல், பம்பாய்க்கு ஓடி போய் விட்டார். (ஓடி என்றால் ஓடியே இல்லை! ரயிலில்...) அப்போது அவருக்கு வயது 17.

அந்த பையனுக்கு ஓசியில் பம்பாய் வருவது தான் நோக்கமாக இருந்திருக்க வேண்டும். பம்பாய் வந்தவுடன் கணபதியை பந்த்ராவில் கைகழுவி விட்டு ஓடிவிட்டான். புது ஊரு. புது மனிதர்கள். புரியாத மொழி. கைல காசு இல்லை. என்ன செய்வது என்று தெரியவில்லை, கணபதிக்கு.

அங்கிருந்த ஒரு நல்ல டாக்ஸி டிரைவர், இவர் கதையை கேட்டு, ரயிலுக்கு காசு கொடுத்து ஊருக்கு திரும்ப சொல்ல, கணபதி அதை மறுத்து அங்கேயே இருந்துவிட்டார். ஒரு கோவிலில் படுத்துறங்கி, காலையில் ஒரு பேக்கரில் வேலைக்கு சேர்ந்தார். பாத்திரம் கழுவும் வேலை. சில மாதங்களுக்கு பிறகு, வேறொரு ஹோட்டலில் வேலைக்கு சேர்ந்தார். அதே பாத்திரம் கழுவும் வேலைதான்.

கொஞ்சம் நாள் கழித்து, அக்கம்பக்கமிருக்கும் கடைகளுக்கு டீ சப்ளை செய்யும் பொறுப்பு கொடுக்கப்பட்டது. கடமையே என்று வேலையை பார்க்காமல், வேலையில் முழு ஆர்வத்தையும் காட்டினார். டீ சப்ளை செய்வதில் என்ன ஆர்வம் என்கிறீர்களா? யார் யாருக்கு எப்படி டீ இருக்க வேண்டும் என்று புரிந்து சப்ளை செய்தார். விரைவில் வாடிக்கையாளர்களுக்கு பிடித்தவராகி போனார். இவர் வேலையை பார்த்த ஒருவர், இவரிடம் கூட்டணி அமைத்துக்கொண்டு ரோட்டோரத்தில் கடை போடும் ஐடியாவை சொல்லியிருக்கிறார். கடையையும் போட்டார்கள். ஆரம்பத்தில் லாபத்தில் பாதியை தருவதாக சொன்னவர், வெறும் 1200 ரூபாய் மட்டும் கொடுத்தார். ’இதை நாங்களே பண்ணுவோம்ல’ என்று கணபதி அங்கிருந்து கிளம்பிவிட்டார்.

ஊருக்கு வந்து நண்பர்களிடம் கொஞ்சம் பணம் புரட்டிக்கொண்டு, தனது சகோதரர்களையும் தன்னுடன் அழைத்து கொண்டு திரும்ப பம்பாய் வந்தார். ஒரு கைவண்டியை வாடகைக்கு எடுத்து, அதில் சாப்பாட்டுக்கடை போட்டார்.

சுத்தம். வகை வகையா சுவை. இதில் தான் முழு கவனத்தையும் செலுத்தினார். வீட்டில் அம்மா எப்படி சமைப்பாரோ, அதை போல் சமைத்தார். மசாலாவை ஊரில் இருந்தே கொண்டு வந்தார். பாம்பேக்கு அந்த சுவை வித்தியாசமாக இருக்க, கூட்டம் கூடியது. அப்போது கணபதி தங்கியிருந்தது, சில மாணவர்களுடன். நட்புடன் பழகிய அவர்கள், கணபதிக்கு ரூமில் கம்ப்யூட்டர் சொல்லி கொடுக்க, இணையத்தில் உலவவும் தெரிந்துக்கொண்டார். மெக் டொனால்ட்ஸ், பிஸ்ஸா ஹட் பற்றியெல்லாம் பார்த்தார். படித்தார். வருடங்கள் ஓட, அடுத்த ஸ்டெப் எடுத்து வைத்தார். அவருடைய அன்றைய நிலைக்கு பெரிய ஸ்டெப்.

ஐம்பதாயிரம் அட்வான்ஸ், ஐந்தாயிரம் வாடகை கொடுத்து, ’ப்ரேம் சாகர் தோசா ப்ளாஸா’ என்று ஒரு கடையை ஆரம்பித்தார். விதவிதமாக தோசையை சுட்டு விற்றார். விற்று தீர்ந்தது. கூடவே, சைனீஸ் ஐட்டங்களையும் போட்டார். ஆனால், அது போணியாகவில்லை. இருந்தும், விடவில்லை. அந்த ஸ்டைலில் தோசையை சுட்டார். மெகா ஹிட்.



செஸ்வான் தோசை, ஸ்ப்ரிங் ரோல் தோசை என்று மெனு களைக்கட்ட, கல்லாவும் களைக்கட்டியது. பேரும் புகழும் பரவியது. ‘தோசா ப்ளாஸா’ என்பது அந்த வட்டாரத்தில் பிரபல ப்ராண்டானது. ‘தோசா ப்ளாஸா’ என்று சும்மா இவர் பெயர் வைத்துவிடவில்லை. பிஸ்ஸா ஹட், கோக்க கோலா போன்ற பெயர்களை கவனமாக பார்த்து, ஆராய்ந்து இந்த பெயரை வைத்தார். ஒரு ஷாப்பிங் மால் கட்டியவர்கள், இவரை கடை போட அழைத்தார்கள். இவரும் கடை திறந்தார். இன்னொரு ஷாப்பிங் மாலில், ‘தோசா ப்ளாஸா’ என்ற பெயரில் இன்னொருவர் கடை திறக்க உரிமம் கொடுத்தார். வியாபார அடையாளத்தில் மிகுந்த கவனம் செலுத்தினார். ‘டாக்டர். டி அங்கீகரித்தது’ (Approved by Doctor. D) என்பது லோகோவானது. தற்போது குறைந்தபட்சம் பத்து லட்சம் இருந்தா தான், ஆட்டத்துக்கே சேர்த்துக்கொள்கிறார்.





இப்ப, இதுவரை 35 கடைகள் திறந்துவிட்டார். நியூசிலாந்திலும் ‘தோசா பிளாஸா’ இருக்கிறது. அடுத்து அமெரிக்காவிலும், துபாயிலும் கடை போட போகிறார். ஒரு யூனிவர்சிட்டியில் இவருடைய கடை பற்றிய பாடம் இருக்கிறது. மாணவர்களுடன் கலந்துரையாடி விட்டு வந்திருக்கிறார். முன்னாள் நியூசி பிரதமர், சேவாக், லதா ரஜினிகாந்த் ஆகியோர் இவர் கடை கஸ்டமர்கள். ரஜினிகாந்த் தனது மகள் திருமணத்திற்கு இவரை அழைத்திருக்கிறார். அனிதா கிருஷ்ணமூர்த்தி எழுதி, அப்துல் கலாம் வெளியிட்ட “மும்பை மாநகரத் தமிழர்களின் வரலாறு” புத்தகத்தில் இவரும் இருக்கிறார்.

---

“உங்கள பாம்பேயில தனியா விட்டுட்டு போன அந்த பையனை நினைப்பதுண்டா?” என்ற கேள்விக்கு,

”நான் இந்த நிலையில் இருக்குறேன்னா, அதுக்கு காரணம் அவன் தான். எங்கிருக்கிறானோ அவன்?” என்று தன்னை கைவிட்டவனையும் நன்றி கூர்கிறார். தமிழன் என்பதால் கேவலப்பட்டது, ரோட்டோர கடையால் போலீஸ் பிரச்சினையை சந்தித்தது போன்றவையை தாண்டி, இன்று தமிழ்நாட்டில் இருந்து வருபவர்களுக்கு உதவ தயாராக இருக்கிறார்.

எம்பிஏ போல் எதுவும் படிக்காமல், இந்த நிலைக்கு எம்பியே வந்திருக்கும் ப்ரேம் கணபதி மேலும் பல சாதனை புரிய வாழ்த்துக்கள்.
இது இவரின் முகவரி :http://www.dosaplaza.com/index.htm

0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites