இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Saturday, November 12, 2011

தேனீ வளர்ப்பில் தித்திக்குது லாபம்

சுத்தமான தேன் மருத்துவ குணம் வாய்ந்தது. டிபார்ட்மென்டல் ஸ்டோர்கள் முதல் பெட்டிக்கடை வரை தேன் கிடைத்தாலும், கலப்படம் இல்லாத தேன் என்றால் அதற்கு தனி கிராக்கி உண்டு. மலை, மரம், பாறை, கட்டிடம் என எட்டாத உயரத்தில் அடைகட்டும் தேனீக்களை, வீட்டிலேயே வளர்த்து தேன் சேகரித்து விற்கலாம். அதன் மூலம் நல்ல லாபம் பார்க்கலாம். மலை, கொம்பு, கொசு, இத்தாலி என பல வகைகள் இருந்தாலும், இந்திய தேனீ வகைதான் இந்த தொழிலுக்கு ஏற்றதாக, அதாவது பெட்டிகளில் வளர்க்க தகுந்தவையாக உள்ளன.

இந்திய தேனீ வளர்ப்பு தொழிலில் ஈடுபட்டுள்ள திருப்பூர் மாவட்டம் பல்லடம் மலைமந்திரிபாளையத்தைச் சேர்ந்த திருஞான சம்பந்தம் கூறியதாவது:
கடந்த 15 ஆண்டுக்கு மேலாக தேனீ வளர்ப்பில் ஈடுபட்டு வருகிறேன். தேனீ வளர்க்க விரும்புபவர்கள் முதலில் இரண்டு அல்லது மூன்று பெட்டிகள் மூலம் தேனீ வளர்த்து பயிற்சி பெற வேண்டும்.

தேன் மட்டுமல்ல, தேன் அடையும் விலை போகும். ஈடுபாடு, கவனம் இருந்தால் தேன் கூட்டை நன்றாக பராமரிக்க முடியும்.  எறும்பு, கரப்பான், பல்லி, குளவி, உண்ணி பேன், மெழுகு பூச்சி போன்றவை தேனீக்களுக்கு சேதத்தை விளைவிக்கும். மெழுகுப்பூச்சிகள் தேன் பெட்டியின் அடித்தளத்தில் குவியல், குவியலாக முட்டையிடும். அதிலிருந்து வெளிவரும் புழுக்கள் தேன் பெட்டியின் உள்ளே சென்று தேன் அடையைத் தின்று தீர்த்துவிடுகின்றன. இதன் தாக்குதல் அதிகமானால் தேனீக்கள் வெளியேறிவிடும்.

தாய்சாக் புரூட் எனப்படும் வைரஸ் நோய் தேனீக்களை தாக்குகின்றன. இந்த நோயால் பாதிக்கப்பட்ட புழுக்கள் பார்ப்பதற்கு சற்று விறைப்பாகவும், தலை கருத்தும் இருக்கும். இவ்வாறு ஏற்பட்டால் தீ வைத்து அழித்து விட வேண்டும். பூச்சித் தாக்குதல் ஏற்படாமல் தடுக்க பெட்டியின் கீழ் கழிவு எண்ணெய், ஆயில் போன்றவற்றைத் தடவினால் தேனீக்களுக்கு பூச்சி தொந்தரவு இருக்காது.

முதலீடு எவ்வளவு?

3 ஆயிரம் தேனீக்களுடன் கூடிய 50 பெட்டிகள் தலா  ரூ. 1500 வீதம்  ரூ. 75 ஆயிரம். பெட்டி வைக்கும் 50 ஸ்டாண்ட்கள்  ரூ. 5 ஆயிரம், 2 புகை செலுத்தும் கருவிகள் ரூ. 600, முகக்கவசம் 2 தலா  ரூ. 200, தேன் பிழிந்தெடுக்கப் பயன்படும் இயந்திரம்  ரூ. 2 ஆயிரம், கையுறை 2  ரூ. 200 என மொத்த செலவு  ரூ. 83 ஆயிரம். தேன் கூட்டை இடமாற்றம் செய்யவோ, தேன் எடுக்கவோ 2 பேர் இருந்தால் போதும். இடமாற்றம் செய்தால் வாகனச் செலவும், வாடகை இடமாக இருந்தால் அதற்கான செலவும் கூடுதலாக ஆகும்.

சந்தை வாய்ப்பு

பெரிய நிறுவனங்களுக்கு விற்கலாம். நேரடியாக பாட்டிலில் அடைத்து டிபார்ட்மென்டல் ஸ்டோர் மற்றும் மருந்துக்கடைகளுக்கு சப்ளை செய்யலாம். தேவை அதிகமாக இருப்பதால், எப்போதும் தேனுக்கு கிராக்கி உண்டு.

தேன் உருவாவது எப்படி?

தேனீக்கள் உடலில் இருந்து வெளியாகும் மெழுகு மூலம் பல்வேறு அறைகளை உருவாக்கி அடையை விரிவாக்கி கொண்டே செல்லும். தேனீக்கள் அதிகாலை பெட்டிக்குள் இருந்து வெளியேறும். அவை வெளியேற பெட்டியின் கீழ் பகுதியில் சிறிய வழி இருக்கும். வெளியே செல்லும் தேனீக்கள், பூக்களிலுள்ள மதுரத்தை(இனிப்பான திரவம்) வாயில் எடுத்து வரும். தேனீயின் பின்னங்காலில் மகரந்தம் ஒட்டியிருக்கும். இரண்டையும் அடையிலுள்ள தேன் புழுக்களுக்கு உணவாகக் கொடுக்கும்.

மதுரத்தையும், மகரந்தத்தையும் சாப்பிடும் புழுக்கள் அதை கொப்பளித்து வெளியேற்றும்போது அது தேனாக அடையில் படிகிறது. பெட்டி வைத்த 8 மாதத்துக்குள் ஏற்கனவே இருந்த 3 ஆயிரம் தேனீக்கள் பெருகி 10 ஆயிரம் முதல் 12 ஆயிரமாக மாறிவிடும். இந்த எண்ணிக்கையில் தேனீக்கள் உருவான பின்னர், மாதம்தோறும் 2 கிலோ தேன் அடையில் உருவாகும். ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்குள் தேன் எடுப்பதற்கேற்ற சூழல் இருந்தால்,  உற்பத்தி அதிகமாகும். 20 நாளுக்கொரு முறைகூட 2 கிலோ தேன் கிடைக்கும்.

தேன் எடுப்பதற்கேற்ற சூழல் குறைந்தால், அவை உள்ள இடங்களுக்கு பெட்டிகளை கொண்டு போய் வைக்க வேண்டும். அவை வெகுதூரத்திலோ, வேறு ஊர்களிலோ இருந்தால்கூட அங்கு பெட்டிகளை இடம்பெயர்க்க வேண்டும்.

மாதம்  ரூ.14 ஆயிரம்

தேன் பெட்டி வைத்த 8 மாதத்துக்கு பிறகு மாதம்தோறும் 2 கிலோவுக்கு குறையாமல் கிடைக்கும். ஒரு பெட்டியில் 2 கிலோ வீதம் 50 பெட்டியில் மாதம் 100 கிலோ தேன் கிடைக்கும். வெளி மார்க்கெட்டில் கிலோ விலை  ரூ. 140 முதல்  ரூ. 160 வரை விற்பதால் மாதந்தோறும்  ரூ. 14 ஆயிரம் வரை கிடைக்கும். தேனீக்கள் வெளியே செல்ல முடியாத மழைக்காலம் தவிர 8 மாதத்துக்கு தேன் கிடைக்கும்.

அடையில் ராணித்தேனீ இருக்கும் வரை தேன்கூட்டம் கலையாது. ஒன்றுக்கு மேற்பட்ட ராணித்தேனீ உருவானால், புதிய ராணி தேனீ வெளியேறும். அதன் பின்னால் மற்ற தேனீக்கள் சென்று விடும் வாய்ப்புள்ளது. எனவே புதிய ராணி தேனீ உருவாகும் புழுவைக் கண்டறிந்து அதை அழித்து விட வேண்டும். கூட்டிலுள்ள ராணி தேனீயின் ஆயுள்காலம் 2 ஆண்டு. அது வரை தேன் கிடைக்கும். அதன் ஆயுள்காலம் முடிவதற்கு முன்பே புதிய ராணி தேனீயை உருவாக்கிக் கொண்டால் தொடர்ந்து தேன் உற்பத்திக்கான சூழல் அமையும்.

மருத்துவ குணம்: குண்டு உடம்பு இளைக்க, செரிமானம், சளி, காய்ச்சல், மூட்டு வலி என பல நோய்களை குணப்படுத்தும் தன்மை வாய்ந்தது தேன். தேன் மெழுகில் இருந்து அழகு சாதனப் பொருட்களான லிப்ஸ்டிக், நக பாலிஸ் போன்ற பல பொருட்கள் தயாரிக்கப்படுகிறது. வேலைக்காரத் தேனீக்கள் புழுக்களுக்கு உணவாக கொடுக்கும் அரசகூழ் எனப்படும் ராயல் ஜெல்லி, மருத்துவ குணம் உடையது. தேனீயின் விஷம் முடக்குவாதம் போன்ற நோய்களுக்கு நிவாரணி.

பெட்டிகளே தேன் கூடு

பூக்கள், மரம், செடி நிறைந்த வீட்டுக்கு அருகிலுள்ள நிழலான இடத்திலோ, தென்னை, வேம்பு, கருவேலம், முருங்கை, வாழை, எள், சூரியகாந்தி, வாழை, இலவம்பஞ்சு, கொத்தமல்லி, முருங்கை, எள், ரப்பர், தைல மரம் போன்றவை சாகுபடி செய்யக்கூடிய இடங்களின் அருகிலோ தேனீ வளர்க்க பெட்டிகளை வைக்கலாம். புன்னை அல்லது தேக்கு மரப் பெட்டிகளை வைக்க வேண்டும். பெட்டிக்குள் ராணித் தேனீ, ஆண் தேனீ, வேலைக்காரத் தேனீக்கள் என 3 ஆயிரம் தேனீக்கள் கொண்ட பெட்டியை வாங்கி வந்து வைக்க வேண்டும்.

தேக்கு மரப் பெட்டிகளை, குறிப்பிட்ட அளவில், சட்டங்களை அமைத்தால் மட்டும் தேனீக்கள் தங்கும். அதற்கேற்ற பெட்டிகள் குமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் உள்ள தேனீ வளர்ப்பாளர் கூட்டுறவு சங்கத்திலும், தேனீ வளர்ப்பாளர்களிடம் கிடைக்கும். பெட்டியை ஒரு அடி முதல் 2 அடி உயரம் வரை வைக்க வேண்டும்.

தேன் எடுக்கும் முறை

தேன் எடுப்பதற்கு முன்பு முகக்கவசம், கையுறை சாதனங்கள் அணிந்து கொள்ள வேண்டும். மின்னும், கண்ணை உறுத்தும் ஆடைகள், வாசனை திரவியங்கள் தவிர்க்க வேண்டும். காலையில் தேனீக்கள் வெளியே சென்ற பின்னர், உள்ளே புகையை செலுத்தினால் அடையிலுள்ள பெரிய தேனீக்கள் வெளியேறி விடும். சிறிய தேனீக்கள் இருக்கும். அவை கொட்டாது.

பெட்டியில் வைக்கப்பட்டுள்ள 5 சட்டங்களையும் தனித்தனியாக வெளியே எடுத்து, அடையிலுள்ள தேனை, அது சேதமாகாத வகையில் பிழிந்தெடுக்க வேண்டும். தேனை பிழிய இயந்திரம் உள்ளது. அதை பயன்படுத்தலாம். எடுத்த தேனை வடிகட்டினால் விற்பனைக்கு தயார். தேனீ வகைகள்: இத்தாலியில் இருந்து இந்தியாவுக்கு அறிமுகப்படுத்தப்பட்டவை இத்தாலியத் தேனீக்கள். அதிக தேன் தருபவை. இதிலிருந்து கிடைக்கும் தேன், நோய் எதிர்ப்புத் திறன் கொண்டது. இவை வட இந்தியப்பகுதியில் வளர்க்கப்படுகின்றன. மரங்களின் கிளை, கொம்புகளில் காணப்படுபவை கொம்புத் தேனீக்கள். கொட்டும் தன்மை கொண்டவை.

மலைத் தேனீ, இயற்கையான சூழ்நிலைகள், காடு, மலை, பெரிய பெரிய கட்டிடங்கள் போன்ற பகுதிகளில் கூடு கட்டுபவை. இத்தாலி, கொம்பு, மலை தேனீக்கள் கொட்டக்கூடியவை. கொசுத் தேனீ மிகச்சிறியது. மரப்பொந்து, பாறை இடுக்குகளில் கூடு கட்டுபவை. தமிழகத்தில் வீடு மற்றும் தோட்டங்களில் வளர்க்கக்கூடிய தேனீக்கள் பெரும்பாலும் இந்திய தேனீக்களே.

0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites