இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Wednesday, December 3, 2014

விதவிதமான ரகங்கள், கூடுதல் மகசூல் கொடுக்கும் உதயம் வாழை!


வ்வொரு பயிரைப் பற்றியுமான அத்தனை கேள்விகளுக்கும் விடைகளை அள்ளித்தரும் இந்தப் பகுதியில், வாழை சாகுபடிக்கான பட்டம், மண் வகைகளைப் பற்றிய கேள்விகளுக்கான பதில்களையும், சில வாழை ரகங்களைப் பற்றியும் பார்த்தோம். தொடர்ந்து, வாழை ரகங்களைப் பற்றிய தகவல்களைப் பகிர்ந்து கொள்கின்றனர், திருச்சியில் உள்ள தேசிய வாழை ஆராய்ச்சி நிலையத்தின் இயக்குநர் எம்.எம். முஸ்தபா மற்றும் முதன்மை விஞ்ஞானி எஸ். உமா.
 களர், உவர் நிலத்துக்கு ஏற்ற கற்பூரவல்லி!
களர், உவர் மண் வகைகளிலும், வறட்சியிலும் தாங்கி வளரக்கூடியது, கற்பூரவல்லி ரகம். மரங்கள் தடித்து வளர்வதுடன், உயரமாகவும், பெரிய இலைகளுடனும் காணப்படும். பழங்கள் நடுத்தர அளவுடன், பழுத்தாலும் காம்பு உதிராமல் நிலையாக இருக்கும். தோல், மிதமான கெட்டித்தன்மையுடன், சாம்பல் பூச்சுடன் காணப்படும். சதைப்பகுதி, சுவையுடன் சாறு மிகுந்து திடமாக, நறுமணத்துடன் காணப்படும். தார்கள் உருளை வடிவில் இருப்பதால், நெடுந்தூரப் பயணங்களுக்கு ஏற்றவை. ஜூஸ், உலர்பழங்கள், வாழைப்பூ சட்னி என தயாரிக்கலாம். இலை பயன்பாட்டுக்கும் இந்த ரகம் பயிரிடப் படுகிறது. இதன் வயது, 14 முதல் 16 மாதங்கள். ஒவ்வொரு தாரிலும் 10 முதல் 12 சீப்புகளுடன், 180 முதல் 200 பழங்கள் வரை இருக்கும். ஒவ்வொரு தாரும் 25 முதல் 28 கிலோ வரை எடை இருக்கும். இந்த ரகத்தில் 'பனாமா வாடல்நோய்’ தாக்குவதற்கான வாய்ப்புகள் உள்ளது. ஆகையால், இந்த நோய் தாக்குதல் இல்லாத மரங்களில் இருந்து, கன்றுகளைத் தேர்வு செய்து நடவு செய்ய வேண்டும்.
காற்றில் சாயாத உதயம்!
திருச்சி, தேசிய வாழை ஆராய்ச்சி நிலையத்தின் மூலம் 2005ம் ஆண்டு, 'உதயம் வாழை’ ரகம் வெளியிடப்பட்டது. கற்பூர வல்லியைப் போன்ற குணாதிசயம் கொண்ட ரகம் இது. ஆனால், கற்பூரவல்லியைவிட 40 சதவிகிதம் கூடுதல் மகசூல் கொடுக்கக்கூடியது. தார், உருளையாக இருப்பதால், நெடுந்தூரப் பயணங்களுக்கு ஏற்றது. இதன் பழங்களில் இருந்து, ஜூஸ், ஜாம், உலர்பழங்கள் போன்றவற்றைத் தயாரிக்கலாம். மரங்கள் உறுதியான தண்டுடன், உயரமாக இருக்கும். ஒவ்வொரு தாரிலும் 18 முதல் 20 சீப்புகளுடன், 250 முதல் 300 பழங்கள் வரை இருக்கும். இந்த ரகத்தில் ஒவ்வொரு தாரும் 35 முதல் 40 கிலோ எடை வரை இருக்கும். நன்றாக பராமரிப்பு செய்யும்பட்சத்தில், 50 கிலோ வரை எடை  இருக்கும். பழுக்க ஆரம்பித்ததில் இருந்து, அதிகபட்சம் 7 நாட்கள் வரை மஞ்சள் நிறத்திலேயே இருக்கும். காற்று அதிகம் வீசும் பகுதிகளில், பயிரிட ஏற்ற ரகமிது. வாழை முடிக்கொத்து நோயை, எதிர்த்து வளரும் சக்தி கொண்டது. இந்த ரக வாழையும் களர் மற்றும் உவர் தன்மையைத் தாங்கி வளரும் தன்மை கொண்டவை.
 ஊடுபயிருக்கு ஏற்ற பச்சநாடன்!
தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில் பச்சநாடன் வாழை ரகம் பயிரிடப்படுகிறது. தென்னை, பாக்கு மரங்களுக்கு ஊடுபயிராக பயிரிட ஏற்றது. மலைப்பிரதேசங்களில் இதை 'லாடன்’ என்றும், சமவெளிப் பகுதிகளில் 'நாடன்’ என்றும் அழைக்கின்றனர். கற்பூரவல்லி, ரஸ்தாளி, நேந்திரன் மாதிரியான நீண்டகால வாழை ரகங்கள் சாகுபடி செய்யப்பட்ட தோட்டங்களில் கன்றுகள் அழுகிப்போனாலோ அல்லது காய்ந்து போனாலோ இடைவெளிப் பகுதியில் இவற்றை நடவு செய்தால், அந்த வாழை ரகங்களுடன் இந்த வாழை ரகமும் அறுவடைக்கு வந்துவிடும். இதனாலேயே இந்த வாழை ரகத்தை 'காலி வாழை’ என்றும் விவசாயிகள் அழைக்கிறார்கள். இருமண் பாங்கான நிலம், களிமண் மற்றும் கரிசல் மண் ஆகியவற்றில் சிறப்பாக வளரும் தன்மை கொண்டது, இது. இந்த ரகத்தின் வயது 11 முதல் 12 மாதங்களாக இருந்தாலும், 8ம் மாதத்திலே குலை தள்ளிவிடும். ஒவ்வொரு தாரிலும், 7 முதல் 8 சீப்புகளுடன், 100 முதல் 120 பழங்கள் வரை இருக்கும். தாரின் எடை 10 முதல் 15 கிலோ. இந்த ரகத்தில், மூளை வளர்ச்சிக்குத் தேவையான மாங்கனீசு, ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு அதிகப்படுத்தும் இரும்புச்சத்து ஆகியவை உள்ளன. இந்த ரகத்தை, வாடல் நோய் தாக்கும் வாய்ப்பு உண்டு.
 வறட்சியைத் தாங்கும் நெய் பூவன்!
கிராண்ட்9 (ஜி9) வாழை ரகத்துக்கு அடுத்தப்படியான ஏற்றுமதிக்கு ஏற்ற ரகம், நெய் பூவன். 'ஏழரசி, ஞானிபூவன், ஏலக்கி பாலே, புட்டபாலே’ என்ற பல பெயர்கள் இருந்தாலும், பெரும்பாலும் 'நெய் பூவன்’ என்றே அழைக்கிறார்கள். இந்த ரகம் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில் அதிகமான அளவில் பயிரிடப்படுகிறது. எல்லா வகை மண்ணிலும் நன்றாக வளர்வதுடன், வறட்சியைத் தாங்கியும் வளரும். கர்நாடகா மற்றும் கேரளாவில் பாக்கு மரங்களுக்கு ஊடுபயிராக இ்்தை பயிரிடுகிறார்கள். இதன் வயது 13 முதல் 14 மாதங்கள். ஒவ்வொரு தாரிலும் 10 முதல் 12 சீப்புகளுடன், 120 முதல் 150 பழங்கள் வரை இருக்கும். ஒவ்வொரு தாரும் 15 முதல் 18 கிலோ எடை வரை இருக்கும். பழங்கள் அதிக சுவையுடன் இருந்தாலும், காய்கள் கனிவதற்கு 5 முதல் 6 நாட்கள் ஆகும் என்பதால், நன்கு பழுத்த பழங்கள் கூட எளிதில் உதிர்வதில்லை. இந்த ரக வாழையில் வாடல் நோய், நூற்புழு போன்றவை தாக்குவதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஆகையால், கன்று தேர்வு செய்யும்போது நோய் தாக்காத கன்றுகளைத் தேர்வு செய்ய வேண்டும்.
 காய்க்கும், பழத்துக்கும் மவுசு உள்ள நேந்திரன்!
காய்க்காகவும், பழத்துக்காகவும் இந்த வாழை ரகம் கேரளா மற்றும் தமிழ்நாட்டில் பயிரிடப்படுகிறது. இதற்கு ஏத்தன், மலையேத்தன், சிப்ஸ்காய், வறுவல்காய், நெடுநேந்திரன், ஆட்டுநேந்திரன் என வேறு பெயர்களும் உண்டு.  இந்த ரகம்  பெருமளவு சிப்ஸ் தயாரிப்பதற்கு பயன்படுத்தப்பட்டாலும், கேரளாவில் பழமாகவும் சாப்பிடுகிறார்கள். ஓணம் போன்ற பண்டிகைக் காலங்களில் அதிகமாக விற்பனை செய்யப்படுகிறது. பழங்களின் தோல் சற்று தடிமனாக இருப்பதுடன், இனிப்புச் சுவை அதிகமாக இருக்கும். பழங்களில் வைட்டமின்ஏ வும் (ஒரு கிராமில் 750 முதல் 800 மைக்ரோ கிராம்), எலும்பு மற்றும் பற்களின் வளர்ச்சிக்கு உதவும் சுண்ணாம்புச் சத்துக்களும் (ஒரு கிராம் பழத்தில் 14 மில்லி கிராம்) நிறைந்துள்ளன.
இந்த ரகத்தின் வயது 11 முதல் 12  மாதங்கள். தமிழ்நாட்டில் மாசிப்பட்டத்தில் நடவு செய்யலாம். இந்த ரகத்தில் மறுதாம்பு விடுவதில்லை. அதிகமான காரத்தன்மை கொண்ட நிலங்களில், இந்த ரகம் சரியாக வளராது. ஒவ்வொரு பழமும் 20 முதல் 25 சென்டி மீட்டர் நீளத்தில் இருக்கும். ஒவ்வொரு தாரும் 5 முதல் 6 சீப்புகளுடன், 40 முதல் 50 பழங்களுடன் இருக்கும். ஒவ்வொரு தாரும் 10 முதல் 12 கிலோ எடை இருக்கும். இந்த ரகத்தில்  நூற்புழு, கிழங்கு கூன்வண்டு  மற்றும் தண்டுத் துளைப்பான் தாக்குதல் அதிகமாக இருக்கும். இவற்றின் தாக்குதலைக் குறைக்க... பூச்சித் தாக்குதல் இல்லாத கிழங்குகளைத் தேர்வு செய்து, நடவு செய்ய வேண்டும்.  
ரொபஸ்ட்டா, விருப்பாட்சி, செவ்வாழை, மொந்தன் போன்ற ரகங்களைப் பற்றி தொடர்ந்து பார்ப்போம்.

0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites