இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Saturday, March 17, 2012

வெற்றின் ரகசியம்

திருமணம் முடிந்த பின் தன் தனித் திறமையை வெளிப்படுத்துவதில் பெரும்பான்மையானபெண்கள் ஆர்வம் காட்டுவதில்லை.​ திறமைக்குத் திருமணம் தடையில்லை என்பதற்கு உதாரணமாக இருக்கிறார் மதுரையைச் சேர்ந்த உமா மகேஸ்வரி.​ திருமணம் முடிந்த 12 ஆண்டுகளுக்குப் பிறகு,​​ பேப்பர் கப் எனும் காகித கோப்பை தயாரிக்கும் நிறுவனத்தைத் தொடங்கி மூன்று ஆண்டுகளுக்குள்ளேயே பல்வேறு மாநிலங்களுக்குச் சப்ளை செய்யும் அளவுக்கு ஒரு வெற்றிகரமான தொழில் முனைவோராகியிருக்கிறார்.​ பரபரப்பாகப் பணியாற்றிக் கொண்டிருந்த அவரைச் சந்தித்தோம்.

“எனது சொந்த ஊர் மதுரை.​ பி.ஏ.,​​ பி.எட் வரை படித்துள்ளேன்.​ கடந்த 1996-ல் எனக்குத் திருமணம் முடிந்தது.​ படிக்கும்போதே ஏதாவது சுயதொழில் தொடங்கி சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் என் மனதில் ஓடிக்கொண்டே இருக்கும்.​ ஆனால்,​​ பெற்றோர் அதற்கு இடம் தரவில்லை.​ தனியார் வங்கியில் சில ஆண்டுகள் கிளார்க்காகப் பணியாற்றினேன்.​ அதன் பிறகு தனியார் பள்ளியிலும் 3 ஆண்டுகள் ஆசிரியையாகப் பணியாற்றினேன்.​ ​
அரசுப் பணியாற்றி வரும் எனது கணவர் கண்ணன்,​​ ஏன் ஏதாவது சுயதொழில் தொடங்கக் ​ கூடாது என்று அடிக்கடி என்னை ஊக்கப்படுத்திக் கொண்டே இருந்தார்.​ ​
இந்நிலையில்,​​ ரயில்வேயில் டீ,​​ காபி போன்றவற்றை வழங்குவதற்காக பிளாஸ்டிக் கப் பயன்படுத்துவதற்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.​ மேலும்,​​ காகிதத்தை மூலப் பொருளாகப் பயன்படுத்தித் தயாரிக்கப்படும் பேப்பர் கப்-புக்கான தேவை சந்தையில் அதிகம் இருப்பதும்,​​ வளர்ந்து வருவதும் தெரியவந்தது.​ ​
இதையடுத்து,​​ கடந்த 2007-ம் ஆண்டில் எங்களிடம் இருந்த ரூ.5 லட்சம் பணத்துடனும்,​​ வங்கிக் கடன் ரூ.7 லட்சத்துடனும் சேர்த்து ரூ.12 லட்சம் முதலீட்டில் மதுரை கப்பலூர் தொழிற்பேட்டை அருகே ஒரு சிறிய இடத்தில் பேப்பர் கப் தயாரிப்பு தொழிற்கூடத்தைத் தொடங்கினேன்.​ தொடக்கத்தில் இத்தொழில் பற்றிய தொழில்நுட்ப அறிவு இல்லாத நிலையில்,​​ பணிக்கு ஆள் அமர்த்தி அதன்மூலம் தொழிலை நடத்தினோம்.​ தொடர்ந்து அதில் சில சிரமங்கள் ஏற்பட்டதால் நானே அத்தொழில்நுட்பத்தையும் ஆர்வத்துடன் தெரிந்துகொண்டு,​​ இயந்திரத்தையும் இயக்கினேன்.​ ​
ரயில்வேயில் இருந்து பேப்பர் கப் ஆர்டர்கள் பெற்றும்,​​ தனியார் நிறுவனங்களில் இருந்து ஆர்டர்கள் பெற்றும் சப்ளை செய்தேன்.​ காகிதத்தின் தரம்,​​ அச்சுத் தரம் ஆகியற்றின் காரணமாக ஆர்டர்களின் எண்ணிக்கை அதிகமாகி வந்தன.​ மேலும்,​​ நாங்கள் வியாபாரிகள் மூலம் செல்லாமல் நேரடியாக பார்ட்டிகளிடம் தொடர்புகொண்டு ஆர்டர் பெற்று சப்ளை செய்ய ஆரம்பித்தோம்.​ இதன்காரணமாக,​​ ஐபிஎம் சாப்ட்வேர் நிறுவனம்,​​ அப்போலோ மருத்துவமனை,​​ தனியார் கல்லூரிகள் உள்பட பல்வேறு நிறுவனங்களுக்கும் பேப்பர் கப்களை சப்ளை செய்யும் வாய்ப்புக் கிடைத்தது.​ தற்போது எங்கள் நிறுனத்தின் மூலம் சப்ளை செய்யப்படும் பேப்பர் கப்,​​ கன்னியாகுமரியில் இருந்து தில்லி வரை செல்லும் ரயில்களில் டீ,​​ காப்பி விநியோகத்திற்குப் பயன்படுகிறது தொடக்கத்தில் மாதம் 50 ஆயிரம் கப்புகள் மட்டுமே தயாரித்து வந்தோம்.​ இன்றைக்கு மாதத்திற்கு 25 லட்சத்தை எட்டியுள்ளோம்.​ தற்போது கப்பலூர் தொழிற்பேட்டையில் உள்ள தயாரிப்புக்கூடத்தில் உற்பத்தி நடைபெற்று வருகிறது.​ ​
பெண்களுக்கு பேப்பர் கப் தயாரிக்கும் பயிற்சி மற்றும் பணியை நாங்களே கற்றுத் தருகிறோம்.​ ஓரளவு எழுத படிக்கத் தெரிந்த கிராமப் பெண்களுக்குக்கூட பேப்பர் கப் இயந்திரத்தை இயக்குவதற்கான பயிற்சியை நானே சொல்லிக் கொடுத்துவிடுவேன்.
எனது நிறுவனத்தில் பணியாற்றும் 10 பேரில் 6 பேர் பெண்கள்தான் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.
தற்போது,​​ தொழிலை அபிவிருத்தி செய்யும் வகையில் தொழிற்பேட்டையில் உள்ள வேறு ஒரு பகுதியில் பெண் தொழில்முனைவோருக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் புதிய கட்டடப் பணியும் நடைபெற்று வருகிறது.​ மேலும்,​​ சில இயந்திரங்களை இங்கு இறக்குமதி செய்து பேப்பர் கப் பிரிண்டிங் உள்ளிட்ட அனைத்துப் பணிகளும் ஒரே இடத்தில் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளேன்.​ ​
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இத்தொழிலை தொடங்கியபோது,​​ எனக்கு தொழில்நுட்ப பயிற்சி என்று ஏதும் இல்லை.​ நம்மால் வெற்றி பெற முடியுமா என்ற ஐயமும் இருந்தது.​ ஆனால்,​​ எப்படியும் ஜெயித்துவிடுவோம் என்ற தன்னம்பிக்கை மட்டும் என்னை விட்டு அகலவில்லை.​ நான் அரசுப் பணியில் சேர்ந்திருந்தால் கிடைக்கும் ஊதியத்தைவிட சில மடங்கு ஊதியத்தை அதிகமாகவே இத்தொழில் மூலம் பெறுகிறேன்.​ என்னைப் போன்று பல பெண்களுக்கும் வேலைவாய்ப்பு அளிக்கும் ஒரு வாய்ப்பையும் பெற்றுள்ளேன்.​ சிறந்த வகையில் தொழில் மேற்கொண்டு வருதற்காக மடீட்சியா-​ சக்தி மசாலா சிறந்த பெண் தொழில்முனைவோருக்கான விருதையும் பெற்றுள்ளேன்.​ புதிதாக பேப்பர் கப் தயாரிக்கும் தொழில் தொடங்க விரும்புவோருக்கு வெளிநாட்டில் இருந்து இயந்திரம் வரவழைத்தும் கொடுக்கிறேன்.​ மேலும்,​​ பேப்பர் கப் சுற்றுச்சூழலுக்கு உகந்த ஒன்று என்பதாலும் பேப்பரை வேறு உபயோகங்களுக்கு ரீசைக்கிள் செய்ய முடிவதாலும் இத்தொழிலை செய்வதில் மன திருப்தியும் கிடைக்கிறது.​ ​
பெண்கள் எந்தத் துறையிலும் சாதிக்கலாம்.​ அதற்கு முதன்மையான தேவை தன்னம்பிக்கைதான்.​ குறிப்பாக திருமணத்திற்குப் பிறகு கணவருடைய ஒத்துழைப்பால் பெரிய அளவில் சாதிக்க முடியும்.​ என்னைப் பொறுத்தவரை என் வெற்றிக்குப் பின்னால் என் கணவர்தான் இருக்கிறார்” என்று பெருமிதத்துடன் கூறுகிறார் உமா மகேஸ்வரி.

0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites