இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Saturday, November 2, 2013

விவசாயிகளின் நண்பன் ஆந்தை!



கோவை அருகே சரவணம்பட்டியில் பிடிக்கப்பட்ட 2 ஆந்தை மற்றும் தனியார் கல்லூரியில் பிடிக்கப்பட்ட ஒன்று என மூன்று ஆந்தைகள் கோவை வ.உ.சி. உயிரியல் பூங்காவில் கொடுத்துச் சென்றுள்ளனர். இதில் இரண்டு ஆந்தைகளின் கால்கள் அடிபட்டுள்ளதால் அவற்றுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பூங்கா இயக்குநர் அசோகன் கூறியது: சரவணம்பட்டி பகுதியில் பிடிக்கப்பட்ட ஆந்த வெண்ணாந்தை வகையையும், தனியார் கல்லூரியில் பிடிக்கப்பட்டது மரஆந்தை வகையையும் சார்ந்தது. இந்த ஆந்தை உலகிலேயே மிகவும் சிறிய வகையைச் சேர்ந்தது என்பது சிறப்பு அம்சம்.
அபசகுணமாகவும், அச்சத்தின் அடையாளமாகவும், மரணத்தின் குறியீடாகவும் நகர்ப்புறம் சார்ந்த மக்களால் கருதப்படும் ஆந்தைகள் வேளாண் தொழிலின் உற்ற நண்பன். உலகெங்கும் 132 ஆந்தை வகைகள் உள்ளன. நாம் வசிக்கும் இடங்களில் மூன்று வகை ஆந்தைகள்  உள்ளன.புள்ளி ஆந்தை, கூகை என்ற வெண்ணாந்தை, கொம்பன் ஆந்தை.
வெண்ணாந்தை ஆஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்தது என்ற தவறான கருத்து உள்ளது.
இது நம் நாட்டுக்கே உரித்தான அழகான பறவை. அவற்றின் முகம் ஆப்பிள் அல்லது இதய வடிவில் இருக்கும். பழைய கோட்டைகள், பாழடைந்த வீடுகள், கிணறுகளில் வாழும். வட்ட வடிவமான வெள்ளை முகம் தட்டுப் போலவும், உடலின் முன்பகுதி வெண்மையாகவும், பின்பகுதி மஞ்சள் நிறத்தில் சிறுசிறு கறுப்புப் புள்ளிகளுடனும் காணப்படும். கரகரப்பான குரலில் கிறீச்சிடும். அந்தி சாய்ந்த நேரத்தில் கூட்டை விட்டு
வேட்டைக்கு புறப்படும். இரவில் இதனுடைய தோற்றம் அச்சமூட்டக் கூடிய விதத்தில் இருப்பதாகக் கருதப்பட்டதால், சாக்குருவி என்றும் அழைக்கப்படுகிறது.
இரவு முழுவதும் தங்கள் மென்மையான சிறகுகளால் துளி கூட சப்தமின்றிப் பறந்து திரியும். வயல் வெளிகளில் திரியும் எலி,சுண்டெலிகளை அலகால் பிடித்து தூக்கிச் செல்லும். ஒரே இரவில் மூன்று முதல் நான்கு எலிகளை விழுங்கி விடும்.
சிறிது நேரத்தில் கடுந்திறன் கொண்ட ஜீரண உறுப்புகளால் சத்துப் பொருட்கள் எடுத்துக் கொள்ளப்பட்டது போக, எலும்புத் துண்டுகள், முடி, நகம் போன்றவற்றை சிறு உருண்டைகளாகக் கக்கிவிடும்.
இதன் இனப்பெருக்கக் காலம் நவம்பர் முதல் மார்ச் மாதம் வரை. மரப் பொந்துகள், பாழடைந்த கட்டடங்களில் நான்கு முதல் ஏழு முட்டைகளை இடும்.
மனிதர்களுக்கு நோய் பரப்பும், அழிவு சக்தியாக இருக்கும் எலிகள், ஆந்தைகளின் உடலில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாமல் இருப்பது இயற்கையின் விந்தைகளில் ஒன்று. மூடநம்பிக்கையாலும் அச்சத்தின் காரணமாகவும் ஆந்தைகள் கொன்று அழிக்கப்படுகின்றன.
வேளாண்மைக்குத் தீங்கு செய்யும் எலி, வெட்டுக்கிளி, புழு பூச்சிகளை உணவாக்கிக் கொண்டு விவசாயிகளுக்கு உற்ற நண்பனாகத் திகழ்கிறது.
கூகைகளை பாதுகாப்பது வேளாண் தொழிலுக்கு பெரும் நன்மை புரியும்.
தற்போது கோவை சுற்றுப் புறப்பகுதிகளில் வயல் வெளிகள் அழிக்கப்பட்டு வானுயர்ந்த கட்டடங்கள் கட்டப்படுவதால் இவைகள் உணவுக்காக வெகுதூரம் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அவ்வாறு செல்லும் போது பொதுமக்களால் தாக்குவதால் இவைகள் அழிந்து வருகின்றன.
- See more at: http://vavuniyavision.com/news_detail/96/26#sthash.YoyRQQzp.dpuf

0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites