இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Saturday, November 2, 2013

இத்தாலிய தேனீ வளர்த்து லட்சம் வருமானம் ஈட்டும் இல்லத்தரசி.

தேனீக்கள் மட்டும்தானா?...சுறுசுறுப்பு, அதை வளர்க்கும் இந்த.... இல்லத்தரசியும் படு சுறுசுறுப்புத்தான். இயற்கை எழிலுடன் தென்னை மரங்கள் சூழ்ந்த கோவையை அடுத்த சுல்தான் பேட்டை ஒன்றியத்தில் உள்ள மலை மந்திரிபாளையம் கிராமத்து பண்ணை வீட்டில், தேன்பண்ணை தொழிலில் வருமானம் நல்ல தேடும் இல்லத்தரசியாக திகழ்பவர் ரேவதி (வயது26). கணவர் திருஞான சம்பந்தம் (33) துணையோடு, வீட்டில் மட்டுமின்றி, கோவை, திருப்பூர் மாவட்டங்களை தாண்டி பிற மாவட்டங்களிலும் சீசனுக்கு தகுந்தாற்போன்று தேனீ பெட்டிகளை வைத்து, வருமானம் ஈட்டி வருகிறார். இவர்களுக்கு ஒரே மகன் திருநாவுக்கரசு (6). தேனீ...தேன்...பற்றி அவரிடம் கேட்ட போது தேனாக பேசத்தொடங்கினார். அது பற்றி பார்க்கலாம்:–
தேனீ வகைகள்
இந்தியாவில் தேனீ வளர்ப்பில் கொசுத்தேனீ, கொம்புத்தேனீ, அடுக்குத்தேனீ, மற்றும் வெளிநாட்டு வகையான இத்தாலி தேனீ என 5 வகை தேனீக்கள் உள்ளன. இதில் தற்போது இத்தாலி ரக தேனீதான் தேனீ வளர்ப்பில் லாபகரமாக உள்ளது.இந்த இத்தாலி ரக தேனீக்கள் அந்த நாட்டில் இருந்து முதன் முறையாக கடந்த 1060–ம் ஆண்டில் பஞ்சாப் மாநிலத்தில் கொண்டு வரப்பட்டு வளர்க்கப்பட்டது. இதன் பின்னர் 2006–ம் ஆண்டு தமிழ்நாட்டுக்கு கொண்டுவரப்பட்டு வளர்க்கப்பட்டது. தற்போது இந்த தேனீ வளர்ப்பு ராஜ பாளையம், அரவக்குறிச்சி, கோவை பகுதிகளில் விறுவிறுப்பாக காணப்படுகிறது. சுமார் 130 பெட்டிகளில் இத்தாலிய தேனீக்களை வைத்து வளர்த்து வருகிறோம். ஆனால் ஆரம்ப காலத்தில் நாட்டு தேனீக்களை வைத்து வளர்த்தோம்.
ஆனால் அவற்றில் தாய்–சேய் புரூடு வைரஸ்நோய் தாக்குதல் அதிகமாக இருந்தது. இதனால் அந்த தேனீக்களில் இறப்பு விகிதம் அதிகமாக இருந்து. இதனால் தேன் உற்பத்தியின் அளவு மிகவும் குறைந்து காணப்பட்டது. மேலும் இந்த நாட்டு தேனீக்கள், கூட்டில் நன்றாக தேன் இருக்கும் போது திடீரென அந்த தேனீக்கள் பெட்டியை விட்டு விட்டு ஓடிப்போய்விடும். இதற்கு காரணம் வைரஸ் நோய் தாக்குதல் தான். ஒரு கூட்டில் வைரஸ் நோய்தாக்கி இறக்கும் தேனீக்களை பார்த்ததும், மற்ற தேனீக்கள் அங்கிருக்காமல் பறந்து விடும். இதபோன்ற நெருக்கடி நிலை நாட்டு தேனீ வளர்ப்பில் இருந்தது. இதனால் எங்களுக்கு ஆரம்ப கால தேன் உற்பத்தி லாபகரமாக இல்லை.
நோய் எதிர்ப்பு சக்தி படைத்தது
இந்த நிலையில் இத்தாலி தேனீயில் நோய் பற்றிய பிரச்சினை எதுவும் கிடையாது. இந்த வகைகள் நோய் எதிர்ப்பு சக்தி மிக்கது. இதை கோவை வேளாண் பல்கலைக்கழகம் பரிந்துரை செய்ததால் அதைவாங்கி வளர்க்க தொடங்கினோம். இதனால் எங்களின் தேன் பண்ணை தொழில் விறுவிறுப்பானது. இந்த தேனீக்களை பொறுத்தவரை நோய் பிரச்சினை இருந்தது இல்லை. ஆனால் தீவனம் அதிகம் தேவைப்படுகிறது. இதற்காக தேன் அதிகமாக இருக்கும் இடங்களில் அவற்றை வைத்து வளர்க்க வேண்டும். குறிப்பாக பூக்கள் அதிகம் உள்ள இடங்களில் வைத்து வளர்த்தால் தேன் அதிகமாக கிடைக்கும். எங்கள் தோட்டம் தவிர மற்ற விவசாயிகளின் தோட்டங்களில் குறிப்பாக முருங்கை, சூரிய காந்தி, கடுகு போன்ற பயிர்கள் வளரும் தோட்டங்களில் இத்தாலி தேனீ பெட்டிகளை வைத்து நாங்கள் தேன் எடுத்து வருகிறோம். இதன் மூலம் சம்பந்தப்பட்ட விவசாயிகளுக்கும் அயல்மகரந்த சேர்க்கை நடைபெறுவதால் பயிர்விளைச்சல் அமோகமாக உள்ளது.
மேலும் இத்தாலி தேனீக்கள் எந்த சூழ்நிலையிலும் பெட்டியை விட்டு ஓடிவிடாது. ஆனால் எறும்பு, குழவி பிரச்சினை இருந்தால் நம் நாட்டுரக தேனீக்கள் பெட்டியை விட்டு ஓடிப்போகும். அதற்கு தீவனம் இல்லாத கால கட்டத்தில் கரும்பு ஜூஸ் வைத்து கொடுப்போம். இந்த ஜூசை தேனீக்கள் வளரும் பெட்டியின் ஒரு பகுதியில் வைத்து விடுவோம். அதை தேனீக்கள் வந்து குடிக்கும். சர்க்கரை தண்ணீர் கொடுக்கும் போது பாக்டீரியா நோய்கள் வந்துவிடும். ஆகவே அதை தவிர்த்து விடுவோம். இது தவிர குளுக்கோ விட்டா கொடுக்கலாம். ஆனால் அது அதிக விலை என்பதால் தொடர்ந்து கொடுக்க முடியாது. முருங்கை, கொத்துமல்லி தேன் மருத்துவ குணம் நிறைந்ததாக உள்ளது. ஆனால் இவைகளின் சீசன் காலங்களில் ஆண்டுக்கு 3 மாதங்கள் தான் தேன் எடுக்க முடியும். கொத்த மல்லி ஒரு மாதத்தில் தான் எடுக்க முடியும்.
ரூ.1 லட்சம் வருமானம்
3 ஆயிரம் தேனீக்களை உள்ளடக்கிய இத்தாலிய தேனீப்பெட்டி ஒன்றின் விலை ரூ.6,500. இதனை பூக்கள் அதிகம் உள்ள தோட்டங்களில், நிழலான இடங்களில் 1½ அடி உயரத்தில் வைக்க வேண்டும். இதற்காக பிரத்யேக ஸ்டாண்டுகள் உண்டு. ஒரு பெட்டிக்கும், அடுத்த பெட்டிக்கும் 10 அடி இடைவெளி இருக்க வேண்டும். பெட்டியில் எறும்பு, பல்லி, போன்றவை ஏறாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். பெட்டியை வைத்ததில் இருந்து 130 நட்களில் 3 ஆயிரம் தேனீக்கள் 12 ஆயிரம் தேனீக்களாக மாறும். இந்த காலகட்டத்துக்கு பிறகு தேனை அறுவடை செய்யலாம். முதல் அறுவடையில் இருந்து 15 நாட்கள் இடைவெளியில் தொடர்ந்து அறுவடை செய்யலாம். ஒவ்வொரு முறை சேகரிக்கும் போதும், 2 கிலோ அளவுக்கு குறையாமல் தேன் கிடைக்கும். பெட்டியில் தேனீக்கள் பெருகிய பிறகு, அதில் இருந்து அடுத்த பெட்டியை உருவாக்கி கொள்ள முடியும். தேனீக்கள் இல்லாத காலி பெட்டி 2,500 ரூபாய்க்கு கிடைக்கிறது.
ஒரு பெட்டியில் இருந்து மாதம் சராசரியாக 4 கிலோ அளவுக்கு தேன்கிடைக்கும். பெட்டியை ஒரே இடத்தில் வைத்தால் பெரிய அளவில் லாபம் பார்க்க முடியாது. ஒவ்வொரு பருவத்திலும் எந்தெந்த பகுதியில் பூக்கள் அதிகமாக உள்ளதோ? அதை தெரிந்து கொண்டு போய் பெட்டிகளை வைக்க வேண்டும். அப்போது தான் ஆண்டு முழுவதும் வருமானம் பெற முடியும். முருங்கை கொத்தமல்லி, கடுகு, சூரிய காந்தி,பந்தல் பயிர்கள், தென்னை ஆகியவற்றில் அதிகளவில் தேன் கிடைக்கும். பொங்கலூர், சுல்தான் பேட்டை பகுதிகளில் வெங்காய சாகுபடி அதிகம். இந்த பகுதிகளில் பூக்கிற பருவத்தில் பெட்டிகளை வைச்சு தேன் எடுப்போம். ஒரு பெட்டியில் இருந்து மாதம் சராசரியாக 5 கிலோ தேன் கிடைக்கும். நாங்கள் சுமார் 130 பெட்டிகள் வரை வைத்துள்ளோம். இதன் மூலம் சராசரியாக மாதம் 5 ஆயிரம் கிலோ வரை தேன் உற்பத்தி செய்கிறோம். இந்த தொழிலில் நான், மற்றும் எனது கணவர், மற்றும் மாமனார் வேலுச்சாமி, மாமியார் அன்னப்பூரணி என 4 பேர் ஈடுபடுகிறோம். இதனால் எங்களின் மாதம் ரூ.1 லட்சம் வரை வருமானம் கிடைக்கிறது. இதற்காக நாங்கள் எங்களிடம் வருகிற அனைவருக்கும் பயிற்சிகள் அளித்து வருகிறோம்.
இத்தாலிய தேனீக்களை வீடுகளில் கூட வளர்த்து லாபம் சம்பாதிக்க முடியும். வீட்டு கொல்லை புறத்தில் ஒரு பெட்டி வைத்தால் மாதம் 4 கிலோ தேன் கிடைக்கும். ஒரு கிலோ தேன் குறைந்த பட்சம் ரூ.250 ஆகும். ஒரு பெட்டியில் இருந்து வாரா வாரம் தேன் எடுக்கலாம். இதன் மூலம் மாதம் ரூ.1000 வரை வருமானம் கிடைக்கும். பெட்டி வைக்கும் இடம் கிராமப்புறமாக, விவசாய நடைபெறும் பகுதியாக இருந்தால் நல்லது. நகரத்தில் வசிப்பவராக இருந்தால் பெட்டிகளை வைக்க மரங்கள் அதிமாக உள்ள பகுதியாக இருக்க வேண்டும். இதற்கு முதலீடு என்பது பெட்டி வாங்கும் செலவுதான். ஒரு பெட்டிக்கு ரூ.6,500 ஆகும்.
மகரந்தம் கிலோ ரூ.2000
தேனீக்கள் கொட்டுவது அக்கு பஞ்சர் வைத்தியத்தில் நல்லது என்கிறார்கள். மூட்டு வலி, நரம்பு வலிகள் வராது. ஒரு சில ஆஸ்பத்திரிகளில் இந்த சிகிச்சைக்காக செயற்கையாக தேனீக்களை கொட்ட வைக்கின்றனர். இது தவிர தேன் பெட்டிகளில் தேனீக்கள் தங்கள் கால்களில் எடுத்து வரும் மகரந்தத்தை சேரிக்கும் முறையை கையாள்கிறோம். இதன் மூலம் கிடைக்கும் மகரந்தம் கிலோவுக்கு ரூ.2000 என நல்ல விலைக்கு விற்பனை ஆகிறது. இந்த மகரந்தம் பெண்களுடைய நோய்களுக்கு சிறப்பான மருந்தாக உள்ளது. இதை தினசரி சாப்பிட்டு வந்தால் தலைவலி, மூட்டு வலி, உடல் வலிகள் இருக்காது. உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது. அதை நாங்ள் சாப்பிட்டு வருகிறோம். தேனை பொறுத்தவரை உள்நாட்டு தேவைக்கே பற்றாக்குறையக உள்ளது. இருந்தாலும் எங்களிடம் தேனை வாங்கி நண்பர் ஒருவர் ஏற்றுமதி செய்கிறார். நல்ல தேன் கிடைப்பது தற்போது அரிதாக உள்ளது. நல்ல தேனாக இருக்கிறதா? இல்லையா என்பதை அறிய ஒரு டம்ளரில் தேனை சிறிது ஊற்றினால் அது கீழே போய் கரையாமல் இருக்க வேண்டும். சர்க்கரை நோயாளிகளுக்கு சிறிது அளவு தேனை கொடுத்தால் ஒன்றும் பாதிப்பு இருக்காது. தேனில் வைட்டமின், மினரல்ஸ், தாதுப்பொருட்கள் உள்ளன. சத்துக்கள்இருப்பதுபற்றி தொடர்ந்து ஆய்வு நடந்து வருகிறது.

0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites