இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Sunday, December 6, 2015

பால்காளான்

மாதம் ரூ.1,44,000... ‘பலே’ வருமானம் கொடுக்கும் பால்காளான்!
சைவ உணவுக்கு ஈடான சுவையுடன், சைவ உணவு தயாரிக்க சோயா, சேப்பங்கிழங்கு... எனப் பல விளைபொருட்கள் பயன்படுத்தப்பட்டாலும் அவற்றில் முதலிடம் வகிக்கிறது, காளான்.
சிப்பிக்காளான், பட்டன் காளான், பால்காளான் என காளானில் பல வகைகள் இருந்தாலும்... அறை வெப்ப நிலையிலேயே அதிக நாட்கள் கெடாமல் இருப்பதோடு... இறைச்சிக்கு இணையான சுவை கொடுக்கக்கூடியது பால்காளான். அதனால், காளான் சந்தையில் தனியான இடம் பிடித்திருக்கிறது, பால்காளான். இதனால், சமீபகாலமாக விவசாய உபதொழிலாக பால்காளான் வளர்ப்பு அதிகரித்து வருகிறது. அந்த வகையில், பால்காளான் வளர்ப்பில் நல்ல வருமானம் ஈட்டி வருகிறார், விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த ரமேஷ்.
விழுப்புரம்-திருக்கோவிலூர் சாலையில் இருபதாவது கிலோ மீட்டரில் இருக்கிறது, முகையூர் கிராமம். இங்குதான் பால்காளான் பண்ணை அமைத்திருக்கிறார், ரமேஷ். வெள்ளைக்குடை போல பாலித்தீன் பைகளில் வளர்ந்து நின்ற காளானை அறுவடை செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த ரமேஷை சந்தித்தோம்.
விவசாயத்துக்கு வழிகாட்டிய ஜீரோ பட்ஜெட் பயிற்சி!
‘‘எங்க அப்பாவுக்குச் சொந்த ஊர் விழுப்புரம் பக்கத்துல இருக்கிற வளவனூர். நான் பி.எஸ்.சி. கணிதவியல் முடிச்சிட்டு, ஒரு போட்டோ ஸ்டியோவுல ஆறு மாசம் வேலை பார்த்துட்டு சொந்தமா போட்டோ ஸ்டுடியோ வெச்சேன். அப்பறம் கல்யாணம் ஆன பிறகு, ஸ்டுடியோவை விழுப்புரத்துக்கு மாத்தினேன். அந்த சமயத்துல தனியார் தொலைக்காட்சியில மாவட்ட செய்தியாளரா வேலை கிடைச்சது. செய்தி சேகரிக்க பல ஊர்களுக்குப் போற வாய்ப்பும் கிடைச்சது. அப்போ, விவசாயம் சம்பந்தமான செய்திகளைச் சேகரிக்கும் போது, விவசாயத்து மேல ஆசை வந்துச்சு. 
ஒரு கட்டத்துல தொலைக்காட்சி வேலையை விட்டு ஸ்டுடியோவை மட்டும் நடத்திக்கிட்டு இருந்தேன். அந்த சமயத்துல ‘பசுமை விகடன்’ல ஜீரோ பட்ஜெட் பயிற்சி பத்தின அறிவிப்பு வந்தது. ஈரோடுல நடந்த பயிற்சியில கலந்துக்கிட்ட பிறகு, இயற்கை விவசாயம் பத்தின ஆர்வம் அதிகமானதால... விழுப்புரம் பக்கத்துல நிலம் வாங்கி விவசாயத்துல இறங்கினேன். ஆனா, குடும்ப சூழ்நிலை காரணமா, அந்த நிலத்தை விற்பனை செய்துட்டேன். அதுக்குப் பிறகு, அப்பாவும் தம்பியும் இந்த ஊர்ல (முகையூர்) வாங்கின பத்து ஏக்கர் நிலத்துல, விவசாயம் செய்றதோட காளானும் வளர்க்கிறேன்” என்று முன்னுரை கொடுத்த ரமேஷ், தொடர்ந்தார்.
‘‘திண்டிவனம் பக்கத்துல ஒரு நண்பர் பால்காளான் வளர்த்தார். அவர்தான் என்னையும்  காளான் வளர்ப்பில் ஈடுபடுத்தினார். நாலு வருஷத்துக்கு முன்ன காளான் வளர்ப்புல இறங்கின சமயத்துல... நோய்த்தொற்று காரணமா காளான்ல பல பிரச்னைகள் வந்தது. அப்பறம், கே.வி.கே, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்னு போய் பயிற்சி எடுத்துக்கிட்டு வந்தேன்.
சில நண்பர்களோட சேர்ந்து முறைப்படி இந்தத் தொழிலைச் செய்ய ஆரம்பிச்சதும் பிரச்னைகள் குறைய ஆரம்பிச்சதோட வருமானமும் வர ஆரம்பிச்சது. நண்பர்கள் பார்ட்னர்களா இருந்தாலும் அவங்களுக்கு வேற தொழில்கள் இருக்கிறதால, முழுக்க பண்ணையைப் பராமரிக்கிறது நான் மட்டும்தான். ரெண்டரை வருஷமா லாபகரமா காளான் வளர்ப்பு நடந்துக்கிட்டிருக்கு” என்றவர், காளான் வளர்ப்பு குறித்து சொல்ல ஆரம்பித்தார்.
‘‘ஒரு நாளைக்கு 30 படுக்கை (காளான் பெட்) தயாரிக்கிறோம். அந்தக் கணக்குல மாசத்துக்கு 900 படுக்கைகள் தயாரிக்க முடியும். ஒவ்வொரு படுக்கையிலும் மூணு தடவை அறுவடை செய்யலாம். ஒரு படுக்கையில மூணு அறுவடைக்கும் சேர்த்து 1,300 கிராம் வரை பால்காளான் கிடைக்கும். மொத்த படுக்கைகள்ல இருந்தும் சராசரியா ஒரு நாளைக்கு 30 கிலோ அளவுக்கு காளான் கிடைக்கும். மாசத்துக்கு 900 கிலோ. மொத்த விலைக்குக் கொடுக்கிறப்போ கிலோ 150 ரூபாய்னு எடுத்துக்குவாங்க. சில்லறை விற்பனையில 220 ரூபாய் வரை விற்பனை செய்ய முடியும். எப்படிப் பார்த்தாலும் சராசரியா கிலோவுக்கு 160 ரூபாய் கிடைச்சுடும். அந்தக் கணக்குல பார்த்தா ஒரு மாசத்துக்கு 900 கிலோ காளானை விற்பனை செய்றது மூலமா, 1 லட்சத்து 44 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்கும். இதில் செலவு 54 ஆயிரம் ரூபாய் போக, மீதம் 90 ஆயிரம் ரூபாய் லாபமா நிக்கும்” என்ற ரமேஷ் நிறைவாக,
‘‘வைக்கோலை வெளிய வாங்கிறப்போ அது ரசாயன உரம் போட்டு விளைய வெச்சதானெல்லாம் பார்த்து வாங்க முடியாது. அதேமாதிரி காளான் உற்பத்திக்கு, வைக்கோலை கிருமிநீக்கம் செய்றதுக்காக சில மருந்துகளைப் பயன்படுத்துவாங்க. வைக்கோல் காளான் வளர்றதுக்கு ஒரு மீடியம்தாங்கிறதால காளான்ல ரசாயன பாதிப்பு இருக்காது. ஆனாலும் நான் கிருமிநீக்கம் செய்ய மருந்துகளைப் பயன்படுத்துறதில்லை. எங்க தோட்டத்துல இயற்கை விவசாயத்துல விளையுற வைக்கோலை வேக வெச்சு கிருமிநீக்கம் செய்துதான் காளான் வளர்க்கிறேன். அதனால, எங்க பண்ணையில உற்பத்தியாகுற காளான் 100% இயற்கைக் காளான். பால்காளான் விற்பனையில எந்த பிரச்னையும் இல்லை. எங்களோட உற்பத்திக்கு அதிகமாவே ஆர்டர் இருக்கு. அடுத்து இன்னும் உற்பத்தியை அதிகரிக்கிற முயற்சியில இருக்கிறோம்” என்று சொல்லி மகிழ்ச்சியுடன் விடைகொடுத்தார். 
தொடர்புக்கு,
ரமேஷ், 
செல்போன்: 94432-26467

1 comments:

idhai parthal sippi/button kalaam mathiri illaiye. adharkum idharkum enna vidhiyasam?

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites