இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Thursday, December 10, 2015

அதிகச் சம்பள உயர்வு பெற 7 வழிகள்!


சம்பள உயர்வு என்பது வருடத்துக்கு ஒருமுறை நிறுவனங்களில் நடக்கும் நடைமுறை. இதில் சிலருக்கு அதிகச் சம்பள உயர்வும், சிலருக்குக் குறைந்த அளவில் சம்பள உயர்வும் இருக்கும். இந்தச் சம்பள உயர்வில் அதிகச் சம்பள உயர்வைப் பெற வேண்டும் என்பதுதான் பலரின் ஆசையாக இருக்கும். இந்த ஆசை நினைத்தவுடன் நடந்துவிடாது. இதற்கு அந்த வருடம் முழுவதும் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் என்னென்ன என்பது குறித்து போலாரிஸ் நிறுவனத்தின் மனித வள மேம்பாட்டாளர் பாலமுருகன் விளக்குகிறார்.
 
 
 
 1. உங்களின் சம்பளத்தை நிறுவனம் ஏன் உயர்த்த வேண்டும். ஏதாவது தனித் திறமை உள்ளதா, அதனால் அந்த நிறுவனத்துக்கு என்ன பயன் என்பதை நீங்களே ஆராய்ந்து பார்க்க வேண்டும். வருடத்துக்கு 30 சதவிகிதம் சம்பள உயர்வு வேண்டும் நினைக்கிறீர்கள் என வைத்துக் கொள்வோம். அதை எந்த நிறுவனமும்  உடனே  கொடுத்துவிடாது. நீங்கள் அதற்கு தகுதியானவரா என்பதை நீங்களே தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். 
 
2. செய்யும் வேலையில் முழுதிறமையும் வெளிப்படுத்த வேண்டும்.  இந்த வேலையை மேலோட்டமாகச் செய்தால்போதும் என நினைக்கக் கூடாது. நீங்கள் செய்யும் அனைத்து வேலைகளையும் ஒரேமாதிரியாகப் பார்க்க வேண்டும். முடிந்தவரை  முழுத் திறமையையும் வெளிப்படுத்தும் வகையிலான வேலைகளைத் தேர்வு செய்வது நல்லது. மேலும் உங்களின் வேலை எப்போதும் ஸ்மார்ட்டாக இருப்பது முக்கியம். மேலும் இது  நிறுவனம் அல்லது உயர் அதிகாரிக்கு தெரியுமாறு பார்த்துக் கொள்ள வேண்டியது உங்களின் கடமை. 
 
 
3. சில வேலைகளை எடுத்தால் சிக்கல் வரும். இந்த வேலை மிகவும் கடினமானது என மற்றவர்கள் நினைக்கும் வேலைகளை நீங்களே முன் வந்து சிறப்பாக அந்த வேலையை செய்ய வேண்டும். இதேபோல் இக்கட்டான சூழ்நிலையிலும் வேலையில் தொய்வு இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். 
 
4. ஒரு வேலையை துவங்குவதற்கு முன் அதற்கு தேவையான தகவல்கள், தொழில்நுட்பங்கள் ஆகிய உங்களுக்கு தெரியுமா என்பதை பார்க்க வேண்டும். இல்லையெனில் அதை தெரிந்துக் கொண்டு வேலையை செய்ய வேண்டும். இதற்கு செலவு செய்ய வேண்டும் எனில் தயங்காமல் அந்த செலவை செய்ய வேண்டும். இதுவும் ஒரு வகையான முதலீடாகவே நீங்கள் கருத வேண்டும். அதாவது, புத்தகம் வாங்குவது, தொழில் நுட்பங்களைப் படிப்பதற்குக் கட்டணம் செலுத்துவது போன்றவை. மேலும் எப்போது எந்த வேலைக்கும் தயார் என்ற ரீதியில் எப்போதும் அப்டேட்டாக இருக்க வேண்டும். 
 
5. ஒரு நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்து  எத்தனை வருடம் ஆனாலும்,  புதிதாக வேலைக்கு சேரும் போது எப்படி வேலைப்பார்த்தீர்களோ  அதைபோலவே வேலைகளை செய்ய வேண்டும். அப்போதுதான் உங்களின் எண்ணம் புதிதாக இருக்கும்.
 
6. குறிப்பிட்ட தேதிக்கு இந்த வேலையை முடித்து விட வேண்டும் என நீங்களே உங்களுக்கு டார்க்கெட் வைத்துக் கொண்டு வேலை பார்க்க வேண்டும். அப்போது தான் வேலையை விரைவாக வேலை முடிக்க முடியும். மேலும் கொடுத்த டார்க்கெட் தேதிக்குள் வேலையை முடித்துவிட வேண்டும். இதில் காலதாமதம் ஏற்படும் போது உங்களின் மீதான மதிப்பு குறைய வாய்ப்புள்ளது. இதனால் சம்பளமும் அதிக ஏற்றம் அடையாது. 
 
7. ஒரு நிறுவனத்தில் 100 பேர் வேலை பார்த்தாலும் அதில் 5-10 நபர்களை மட்டும்தான் தலைமையில் இருப்பவர்கள் நினைவில் வைத்துக் கொள்வார்கள். அதனால் அந்த டாப் 10-க்குள் நீங்கள் இருப்பதற்கான வழிகளைத் தேடுவது முக்கியம்.
 
இதையெல்லாம் செய்தாலே சம்பள உயர்வின்போது அதிகச் சம்பளம் கிடைக்கும்.

0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites