இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Wednesday, August 27, 2014

உளவியல், உடலியல் டிப்ஸ்


திருமணம்  ஆயிரம் தேவதைகள் கூடி ஆசீர்வதிக்கும் தருணம். எல்லோருக்குமே திருமணம் குறித்த பரவசமும் எதிர்பார்ப்பும் இருக்கும். திருமணம் நிச்சயமானதும் வருங்கால மணமகன் மணமகள் இருவரின் கண்களும் கனவில் மிதக்கும்; கவிதை பிடிக்கும்; எல்லாவற்றிலும் அப்படி ஓர் அழகு தெரியும். வருங்கால வாழ்க்கைத்துணையிடம் பேசிப்பேசியே செல்போனில் பேட்டரி சார்ஜ் இறங்கும். ஆனால் இருவருக்கும் எக்கச்சக்கமாக சார்ஜ் ஏறும்.
திருமணம் என்பது புதிய பொறுப்புகளை நம் தோள்களில் ஏற்றும். இதுநாள்வரை பார்த்துப் பார்த்து வளர்த்த பெற்றோர்கள், பார்த்துப்பழகிய நண்பர்களையும் தாண்டி புத்தம் புதியதாக ஓர் உறவை ஏற்று, வாழ்க்கையை அர்த்தப்படுத்திக்கொள்ளும் சடங்கு. எல்லோர் வாழ்விலும் இது இரண்டாம் அத்தியாயம். 'இன்று புதிதாகப் பிறந்தேன்’ என்று சொல்லும் மங்களகரமான மறுஜென்மம்.
திருமணம் என்கிற ஆயிரம் காலத்துப் பயிர் வளமாக, வளர உரமாக எதை இடவேண்டும்? திருமணத்துக்கு, உடலாலும் மனதாலும் எப்படித் தயாராக வேண்டும் என்பதை நிபுணர்கள் எடுத்துரைக்கிறார்கள். இனிமையான வசந்தகாலம் உங்களைக் கைகூப்பி வரவேற்கட்டும்... வாழ்த்துகள்!
உடலால் தயாராவது எப்படி?
டாக்டர் தீபா தியாகராஜமூர்த்தி,மகளிர் மற்றும் மகப்பேறு சிறப்பு நிபுணர்.
"திருமணத்துக்குத் தயாராகும் ஆணும் பெண்ணும் உடல்ரீதியாக ஆரோக்கியமாக இருந்தால்தான், மகிழ்ச்சியான, நிலையான குடும்ப வாழ்க்கையை நடத்த முடியும்.
முன்பு புதிய இளம் தம்பதியினருக்கு, ஆலோசனைகள், அறிவுரைகள் சொல்ல பெரியவர்கள் வீட்டிலேயே இருந்தனர். இன்று தனிக்குடித்தனம், வீட்டுக்கு ஒரு குழந்தை என்றாகிவிட்ட நிலையில், எந்த ஒரு விஷயத்துக்குமே ஆலோசனை சொல்ல ஆள் இல்லாத நிலைதான்.அதிலும், திருமணத்துக்கு முன்னர், சரியான ஆலோசனையை யாரிடம் கேட்பது?
கட்டுப்பாடு இல்லாத உணவு முறை, கலப்படம் சேர்ந்த உணவுப் பொருட்கள், குளிர்பானங்கள், மன அழுத்தம்... போன்றவற்றால் இளம் வயதிலேயே எல்லா நோய்களும் எளிதில் ஆக்கிரமித்துவிடுகின்றன.
இதனால், திருமண வாழ்வு பாதிக்கப்படுகிறது. அதனால், திருமணத்துக்கு முன்பு 'ப்ரீ மேரிட்டல் ஸ்கிரீனிங்' எனப்படும் முழுமையான உடல் நலப் பரிசோதனை செய்து கொள்வது நல்லது. பிரச்னை எதுவும் இருந்தால், அதற்கான சிகிச்சை எடுத்துச் சரி
செய்து கொள்வதற்கும், திருமணத்துக்குப் பின் மகிழ்ச்சியாக வாழ்வதற்கும் இந்தப் பரிசோதனை உதவும்.
பரிசோதனைகள்:
திருமணத்துக்குத் தயாராகும் ஜோடி, செய்து கொள்ள வேண்டிய முக்கியமான மூன்று
பரிசோதனைகள்:
1. மருத்துவப் பரிசோதனை
2. நோய்த்தொற்றுக்கான பரிசோதனை
3.  மரபியல்ரீதியான பரிசோதனை
மாறிவரும் வாழ்க்கை முறையினாலும், பல மணி நேரம் உட்கார்ந்தே பணி செய்வதாலும், மன அழுத்தத்தாலும் இளம் வயதிலேயே பலருக்கு சர்க்கரை நோய், ரத்த அழுத்த நோய் போன்றவை வந்துவிடுகின்றன. இதுபோன்ற வேறு மருத்துவப் பிரச்னைகள் இருக்கின்றனவா என்று தெரிந்துகொள்ள, அதற்கான பரிசோதனைகள் செய்ய வேண்டும்.  பிறரிடம் இருந்து, ரத்தம் மூலமாகத் தொற்றும் நோய்களுக்கான பரிசோதனைகள், பரம்பரை நோய்கள் வருவதற்கான அறிகுறிகள் இருக்கின்றனவா என்பதை அறியும் பரி சோதனைகள்   ஆகியவை தான்  முக்கியமானவை.மேற்சொன்ன பரிசோதனைகளில், பெண்ணுக்கும் ஆணுக்கும் எவையெல்லாம் தேவை?
பெண்ணுக்கான பரிசோதனைகள்:
1. மருத்துவப் பரிசோதனை:
  ரத்த அழுத்தம், சர்க்கரை, கொலஸ்ட்ரால், ருபெல்லா, சிபிலிஸ் (பால்வினை நோய்கள்) போன்ற பரிசோதனைகள்.
  அநேகமாக எல்லாப் பெண்களுக்கும் சிறு வயதிலேயே ருபெல்லா காய்ச்சல் ஏற்பட்டிருக்கும் கருவுற்றிருக்குபோது முதல் மூன்று மாதங்களில் ருபெல்லா வந்துவிட்டால், பிறக்கும் குழந்தை ஏதேனும் குறையோடு பிறக்க வாய்ப்பு உண்டு. எனவே, ருபெல்லா தடுப்பு ஊசி போட்டுக்கொள்ளலாம்.
  ருபெல்லா எதிர்ப்பு அணுக்கள் உடலில் இருக்கின்றனவா என்று பரிசோதித்து விட்டு, அவை இல்லையென்றால், தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்.  
   எச்சரிக்கை: திருமணத்துக்கு மிகச் சில நாட்களுக்கு முன் தடுப்பூசி போடுவது என்றால், ஊசி போட்ட மூன்று மாதங்கள் கருத்தரிக்கக் கூடாது. கவனமாக இருக்க வேண்டும்.
  கர்ப்பப்பை, சினைப்பை நார்மலாக இருக்கிறதா என்று பார்க்கவும். தேவைப்பட்டால் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேனிங் செய்து கொள்ளலாம்.
  கர்ப்பப்பைப் புற்றுநோய்க்கான தடுப்பூசியும் போட்டுக்கொள்வது நல்லது. 0  2  6 என்ற மாதக் கணக்கில், 3 டோஸ் போடவேண்டும். ஒருவேளை தடுப்பூசி போட்ட பிறகு, கருவுற்றால், குழந்தை பிறந்த பிறகுதான் அடுத்த டோஸ் போடவேண்டும்.
2. நோய்த்தொற்றுப் பரிசோதனை:
ஹெபடைட்டிஸ் பி, சி வைரஸ் மற்றும் ஹெச்.ஐ.வி வைரஸுக்கான ரத்தப் பரிசோதனை.
ஹெபடைட்டிஸ் பி வைரஸுக்கான எதிர்ப்பு அணுக்கள் இருக்கின்றனவா எனப் பரிசோதித்துவிட்டு, தடுப்பூசி மூன்று டோஸ் (0  1  6) போடவேண்டும்.
3. மரபியல்ரீதியான பரிசோதனை:
தலசீமியா, சிக்கிள் செல் அனீமியா (ரத்த அணுக்கள் தொடர்பான குறைபாடு) போன்ற மரபியல் நோய்களின் பாதிப்பு இல்லாவிட்டாலும், குறைபாடுடைய அந்த ஜீன்களை எடுத்துச் செல்பவராக (carrier)' இருந்தாலும்கூட, பிறக்கும் குழந்தைக்கு அந்தக் குறைபாடு வருவதற்கு 25 சதவிகிதம் வாய்ப்பு உள்ளது. எனவே மரபியல் நோய்களைப் பற்றி கூடுதலாகத் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.
குறிப்பு: பெண்களுக்கான தடுப்பூசிகளை, எந்த வயதில் வேண்டுமானாலும் போட்டுக் கொள்ளலாம் என்றாலும்,  9 வயதில் இருந்து 26 வயதுக்குள் போட்டுக் கொள்வது நல்லது. குறிப்பாக, பாலியல் உறவில் ஈடுபட ஆரம்பிப்பதற்கு முன்பே போட்டுக்கொள்வது நல்லது.
ஆணுக்கான பரிசோதனைகள்:
 ரத்த அழுத்தம், சர்க்கரை, கொலஸ்ட்ரால் ஆகியவற்றுக்
கான ரத்தப் பரிசோதனை.
  இ.சி.ஜி. பரிசோதனை.
  தேவைப்பட்டால், ஹார்
மோன்ஸ் (டெஸ்டோஸ்டிரான்) பரிசோதனை மற்றும் உயிரணுக்கள் பரிசோதனை.
  நோய்த் தொற்றுக்கான பரிசோதனைகள், பெண்
ணுக்குச் செய்வது போன்ற பரிசோதனைகளை, ஆண்களும் செய்து கொள்ளலாம். ஏதாவது நோய்த்தொற்று அல்லது நோய் அறிகுறிகள் இருப்பின் சிகிச்சை எடுத்துக் கொள்ளலாம். சில முக்கியமான குறிப்புகள்:
ஒழுங்கற்ற மாதவிலக்கு:
பெண்களுக்கு ஒழுங்கற்ற மாதவிலக்கு பிரச்னை இருந்தால், திருமணத்துக்கு முன்பே, மகளிர் நல நிபுணரிடம் ஆலோசித்து, சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். ஏனெனில், முட்டை ஒழுங்காக வரவில்லை என்றால்தான், மாதவிலக்கு சீராக வராது. அதனால் கருத்தரிப்பதில் பிரச்னை வரலாம்.
பாலியல் உறவு:
தாம்பத்ய உறவு குறித்த சந்தேகங்களை நிபுணர்களிடம் கேட்டுத் தெளிவதே சிறந்தது. என்னதான் இன்டர்நெட்டில் தகவல்கள் கொட்டிக் கிடந்தாலும், அவை முழுமையான உண்மைகள் என்று சொல்ல முடியாது. பெற்றோரிடமோ, நண்பர்களிடமோ தெரிந்துகொள்ள முடியாத விஷயங்களை, மருத்துவர்களிடம் முறையாகத் தெரிந்துகொள்ளலாம். பலர் திருமணமாகி மூன்று வருடங்கள் கழித்தும்கூட, முறையான பாலியல் பற்றிய புரிதல் இல்லாமல் இருப்பார்கள். இதனால் குழந்தைப்பேறும் தள்ளிப்போகும்.
கருத்தடை சாதனங்கள்:
திருமணமான உடனேயே குழந்தை வேண்டாம் என்று தள்ளிப்போட விரும்புபவர்களுக்குச் சிறந்த வழி, கருத்தடை மாத்திரைகள்தான். டாக்டரிடம் பரிசோதனை செய்த பிறகே, கருத்தடை மாத்திரைகள் எடுக்க வேண்டும். அவரவர் உடலுக்கு ஏற்ற சரியான மாத்திரைகளை டாக்டர் பரிந்துரைப்பார்.
கவனத்தில்கொள்ளவேண்டிய விஷயங்கள் :
  சில பெண்களுக்கு, திருமண நாளையொட்டி மாதவிலக்கு கெடு வரும். உடனே, தாங்களாகவே,  அம்மா சொன்னாங்க... பாட்டி சொன்னாங்க' என்று ஏதாவது மாத்திரைகளை வாங்கிப் போட்டுக்கொள்வார்கள். இது மிகவும் ஆபத்தான செயல்.
  பொதுவாகவே, திருமண தினத்தில் மாதவிலக்கு வரும் என்றால், அதைக் கடைசி நிமிஷத்தில் தள்ளிப்போட முயற்சிப்பது மிகவும் தவறு. உடல் உறுப்புகளும் ஹார்மோன்கள் செயல்பாடும், சுருதி பிசகாத ஒரு லயமான சுழற்சியில், ஒழுங்காக வேலை செய்துகொண்டிருக்கின்றன. கடைசி நிமிஷத்தில், அந்த ஒழுங்கைக் குழப்பினால் அடுத்த  ஆறு மாதங்களுக்கு நம் உடலின் ஹார்மோன் செயல்பாடு குழம்பிவிடும். மாதவிலக்கு நாளைப் பொறுத்தே திருமணத் தேதி தீர்மானிக்கப்பட வேண்டும்.
  மாதவிலக்கைத் தள்ளிப் போடவேண்டும் என்றால், இரண்டு மாதங்கள் முன்பே மருத்துவரிடம் சென்று, இரண்டு சுழற்சிகளுக்கு முன்பே முறைப்படி அந்த வேலையைத் தொடங்கிவிட வேண்டும். மாதவிலக்கு சுழற்சி குழம்பாத வண்ணம் மருத்துவர் பார்த்துக்கொள்வார்.  
ஃபோலிக் ஆசிட்:
ஒரு பெண் கருவுற்றவுடன், அவள் வயிற்றில் வளரும் கரு மிக வேகமாக வளரும்.  கருவில், மூளை, நரம்பு மண்டலம், தண்டுவடம் போன்றவை வேகமாக வளரக்கூடியவை.  இத்தகைய வளர்ச்சிக்கு, ஃபோலிக் ஆசிட் அவசியம் தேவை. ஃபோலிக் ஆசிட் மாத்திரைகளை, மருத்துவர் வழிகாட்டுதலுடன், குழந்தைப் பேற்றுக்குத் தயாராகும் முன்பே எடுத்துக்கொள்ள ஆரம்பிக்கவேண்டும். குழந்தையின் மூளை, தண்டுவடம் போன்றவை, கரு உருவாகிய எட்டு வாரங்களுக்குள் முழுமையாக வளர்ந்துவிடும். எனவே, கருவுற்ற பிறகு, ஃபோலிக் ஆசிட் எடுப்பதால் எந்தப் பயனும் இல்லை.
  திருமணத்துக்கு ஓரிரு மாதங்களுக்கு முன்பே, வெளி இடங்களில் வாங்கிச் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். வீட்டுச் சாப்பாடு சாப்பிடுவதுடன், காய்கறிகள், பழங்களை அதிகமாகச் சேர்த்துக்கொள்ள வேண்டும். நன்கு உடற்பயிற்சி செய்து, உடலைச் சீராகப் பராமரிக்க வேண்டும். எந்தவித மன அழுத்தமும் இல்லாமல் இருக்க வேண்டும்.
  மிக முக்கியமாக, குழந்தைக்கு முயற்சிக்கும் முன்பு, ஆணுக்கு புகை பிடித்தல், மது அருந்துதல் போன்ற பழக்கங்கள் இருந்தால், கண்டிப்பாக அவற்றை நிறுத்த வேண்டும்.
ஆரோக்கியமான வாரிசுகளைப் பெற்றெடுக்க, பெற்றோர் நலமாக இருக்கவேண்டியது, மிகவும் அவசியம்.
ரத்த வகை:
நம்முடைய ரத்த வகைகள், Rh positive, Rh negative என்ற இரு பிரிவுகளுக்குள் அடங்கும். திருமணத்துக்கு முன், இருவரும் ரத்த வகையைப் பரிசோதித்துக்கொள்வது நல்லது. கணவன், மனைவி இருவரின் ரத்தமுமே Rh positive ஆகவோ அல்லது Rh negative ஆகவோ இருந்துவிட்டால் பிரச்னை இல்லை. அதேபோல், மனைவிக்கு Rh positive, கணவனுக்கு Rh negative என்று இருந்தாலும் பிரச்னை இல்லை.
 
ஆனால், கணவன் Rh positive, மனைவி Rh negative ஆக இருந்தால், மனைவி கருவுற்றதும் 7-வது மாதத்தில் Anti D ஊசி போட்டுக்கொள்ள வேண்டும். பிறகு, குழந்தை பிறந்ததும், மீண்டும் ஒரு முறை அந்த ஊசியைப் போட்டுக்கொள்ள வேண்டும். கருவுற்றதுமே, மகப்பேறு மருத்துவர் இதற்கான ஆலோசனையை வழங்கிவிடுவார். இந்த ஊசி போட்டுக்கொள்ளவில்லை என்றால், முதல் குழந்தைக்குப் பிரச்னை இருக்காது. ஆனால் இரண்டாவது குழந்தைக்குப் பிரச்னை ஏற்பட வாய்ப்பு உள்ளது.
உறவுமுறையில் திருமணம்:
உறவுமுறையில் திருமணம் செய்துகொள்பவர்களுக்கு, மரபியல்ரீதியான குறைபாடுகள் வருவதற்கு வாய்ப்புகள் அதிகம். ஏற்கெனவே சொன்னது போல் இவர்கள் மரபியல் பரிசோதனைகள் செய்துகொள்வது நல்லது. சிலருக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு மிகச் சிறிய அளவில் உடல்குறைகள் இருக்கலாம். சிலருக்கு தீவிரமான பிரச்னைகள் வரலாம். சில குழந்தைகள் பிரச்னைகளே இல்லாமல், ஆரோக்கியமாகப் பிறக்கலாம். ஆனால், நெருங்கிய உறவினர்
களுக்குள் திருமணம் நடக்கும்போது நோய்க்கூறு மரபணுக்கள் கடத்தப்படும் வாய்ப்புகள் அதிகம் என்பதால், மனநலக் குறைபாடுகள் மற்றும் பல உடல்நலக் குறைபாடுகள் வருவதற்கு வாய்ப்பு உண்டு. எனவே, நெருங்கிய உறவுக்குள் திருமணம் செய்வதைத் தவிர்த்தலே நல்லது.
நாள்பட்ட நோய்களுக்கு சிகிச்சை:
திருமணம் செய்துகொள்ளப்போகும் ஆண் அல்லது பெண்ணுக்கு உயர் ரத்த அழுத்தம், காசநோய், ஆஸ்துமா போன்ற நாள்பட்ட நோய்கள் ஏதேனும் இருந்து, அதற்கான மருந்து, மாத்திரைகள் எடுத்துக் கொண்டிருந்தால், அவசியம் மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டும். ஏனெனில், சில மாத்திரைகளை, கருவுற்றிருக்கும்போது எடுத்துக்கொள்ளக் கூடாது. மருத்துவர்கள், அதற்கு ஏற்றவாறு மாத்திரைகளை மாற்றிக்
கொடுப்பார்கள். முக்கியமாக, பெண்ணுக்கு தீவிரமான இதய நோய்கள் ஏதாவது இருந்தால், மருத்துவரிடம் ஆலோசனை பெறாமல், கருத்தரிக்கவே கூடாது.  
குழந்தைப்பேறு:
திருமணத்துக்குப் பிறகு, குழந்தை எப்போது பெற்றுக்கொள்வது என்பதையும் முன்கூட்டியே மனம்விட்டுத் தெளிவாகப் பேசி, முடிவு எடுப்பது நல்லது. பல தம்பதிகள்,திருமணத்துக்கு முன்னர் முடிவு எடுக்காமல், கருத்தரித்த பின்னர், 50 நாட்களில் வந்து, குடும்பத்தில் பல கமிட்மென்ட்ஸ் இருக்கு... இப்போ குழந்தை வேண்டாம்னு நினைக்கிறோம்' என்று கருவைக் கலைக்க ஆலோசனை கேட்பார்கள். அது மிகப் பெரிய தவறு. திருமணத்துக்கு முன்பே, எல்லாவற்றையும் பேசிக்கொள்ளும் இந்தக் காலத்தில், குழந்தைப்பேற்றையும் திட்டமிடுதல் வேண்டும்.
மனதால் தயாராவது எப்படி?
பிருந்தா ஜெயராமன், உளவியல் ஆலோசகர்.
ஆண் மணமுடிக்கும்போது, ஒரே நேரத்தில் கணவன், மருமகன் என்று இரண்டு பொறுப்புகளை ஏற்கிறார். அதே போல, ஒரு பெண்ணும், திருமணத்தின் மூலம் மனைவி, மருமகள் என்று இரண்டு பொறுப்புகளை ஏற்கிறார். எனவே, ஆண், பெண் இரண்டு பேருமே, இந்த இரண்டு பாத்திரங்களுக்குமே தங்களைத் தயார்செய்துகொள்ள வேண்டியது  அவசியம்.
திருமணம் ஆகப்போகும் ஆண், பெண் இருவருமே, தங்கள் பெற்றோரின் குடும்ப வட்டம், தங்கள் குடும்ப வட்டம் எனத் தனித் தனியே அமைத்துக்கொண்டால் நல்லது.
திருமணம் ஆன பிறகு, எந்த விஷயங்களில் எல்லாம் பிரச்னைகள் வரலாம் என்பதை முன்கூட்டியே தெரிந்துகொண்டால், அவற்றைத் தவிர்ப்பது சுலபம். இதற்காகவே, இப்போது திருமணத்துக்கு முந்தைய ஆலோசனை'யை (ப்ரீ மேரிட்டல் கவுன்சிலிங்) பலர் பெற்றுக்கொள்கிறார்கள்.
கணவன் மனைவி உறவில்,இருவருமே கவனம் செலுத்த வேண்டிய முக்கியமான நான்கு பகுதிகள் (areas):
1. உணர்வுபூர்வமான பந்தம் (emotional relationship).
2. தாம்பத்ய உறவு (sexual relationship).
3. குடும்பம் சார்ந்த உறவு (family relationship).
4. வேலை, பொருளாதாரம் தொடர்பானவை (financial affairs).
இந்த நான்கு வகையான உறவுகளிலும் ஆண், பெண் இருவருமே கவனம் செலுத்தியாக வேண்டும்.  
உணர்வுபூர்வமான பந்தம்:
உணர்வுபூர்வமான பந்தம் இறுக, இரண்டே இரண்டு தேவைகள்தான். ஒன்று, 'நான் உன்னை நேசிக்கிறேன்'. மற்றது, 'நீ எனக்கு முக்கியமானவள்/ன்'.
மணம் செய்துகொள்ளப்போகும் ஆண், பெண் இருவருமே, 'நான் உன்னை நேசிக்கிறேன்' என்பதை ஒருவருக்கு ஒருவர் உணர்த்திக்கொண்டே இருக்கவேண்டும். வெறும் வார்த்தைகளால் மட்டும் அல்லாமல் ஒருவர் மீது மற்றவர் காட்டும் கரிசனம், உடல்மொழி மற்றும் சில செயல்பாடுகள் மூலமாக அன்பைக் காட்டவேண்டும். சோர்வாக இருந்தால், 'என்னடா தலை வலிக்குதா?' என்று கேட்பது, 'இந்த டிரெஸ் நல்லாயிருக்கு' என்று பாராட்டுவது...  இப்படி அவரவர் மொழியில் நேசம் பகிர்வது முக்கியம்.
இன்னொரு முக்கியமான விஷயம், தன் வாழ்க்கைத்துணை எதிர்பார்க்கும் விதத்தில் அன்பை வெளிப்படுத்த வேண்டும். இது, அவரவர் வளர்ந்த சூழலைப் பொறுத்து வேறுபடும். சிலர் வீடுகளில் ஆண், பெண் சகஜமாகப் பேசக்கூட முடியாத சூழல் இருக்கும். சில வீடுகளில் சகஜமாகக் கட்டியணைத்து ’ஹாய்’ சொல்லும் சூழல் இருக்கலாம்.  
திருமணத்துக்கு முன்பு இருந்து போலவே, திருமணத்துக்குப் பின்பும் இந்த நெருக்கம் தொடரவேண்டும். அப்போதுதான் திருமண பந்தம் உணர்வுபூர்வமானதாக அமையும்.
படுக்கையறை பந்தம்:
திருமணத்துக்கு முன்பே, ஒருவரைப் பற்றி மற்றவர் நன்கு அறிந்துகொள்ளும் காலம் இது. எனவே, தாம்பத்ய உறவு குறித்தும் ஒரு புரிதல் இருக்கவேண்டும்.
திருமணம் ஆன பிறகு, மனைவியுடனான தாம்பத்ய உறவு இனிமையாக இருக்க வேண்டும் என்றால், ஆண் செய்ய வேண்டிய விஷயங்கள் சில உள்ளன. பெண்ணுக்கும் சில விருப்பங்கள் இருக்கும். ஆண், தன் தேவைக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறாரோ, அதே முக்கியத்துவத்தைப் பெண்ணின் தேவைகளுக்கும் கொடுக்கும் அளவுக்கு, மனதளவில் தயாராக வேண்டும். ஏனெனில், இது முதலிரவிலேயே தொடங்க வேண்டும். 'உனக்கும் இதில் பரிபூரண மகிழ்ச்சியும் திருப்தியும் இருக்கவேண்டும் என்பது எனக்கு முக்கியம்' என்பதைப் பெண்ணுக்குப் புரியவைத்துவிட்டால், தாம்பத்ய வாழ்க்கை இனிய இல்லறம்தான்.
படுக்கையறை பந்தம் மட்டும் அவர்களுக்குள் நன்கு அமைந்துவிட்டால், பிறகு அவர்களுக்குள் எந்தப் பிரச்னையும் வராது. வந்தாலும் தீர்வு காண்பது மிக எளிது.
பாலியல் உறவு பற்றி முன்கூட்டியே இருவரும் நன்கு விவரங்கள் தெரிந்துகொள்வது அவசியம். பாலியல் உறவு குறித்த சந்தேகங்களை இணையத்தில் தேடித் தெளிவுபெறுவதைவிட, தகுந்த ஆலோசகர்களிடம் கேட்டு, தெளிவது நல்லது.
இல்லையெனில் அனாவசியமான பதற்றம் ஏற்பட்டு, அதுவே அவர்களின் தாம்பத்ய உறவுக்குத் தடையாகி, வாழ்க்கையில் நிம்மதியைத் தொலைக்க நேரிடும்.
குழந்தைப்பேற்றைத் தள்ளிப்போட வேண்டும் என்றால், கருத்தடை குறித்தும் நிபுணர்களிடம் ஆலோசனை கேட்டுச் செயல்பட வேண்டும். இருவருமே தங்கள் அந்தரங்க சுகாதாரத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும். உதாரணத்துக்கு, வியர்வை வாடை, வாய் துர்நாற்றம் போன்ற பிரச்னைகள் இருந்தால், அதற்கான சிகிச்சை எடுத்துக்கொள்வது நல்லது. ஏனெனில், இந்த விஷயங்கள் மனரீதியான அழுத்தத்தைக் கொடுப்பதுடன், இனிமையான இல்லற வாழ்க்கைக்கே உலைவைக்கக்கூடிய அளவுக்கு, பெரிய பிரச்னைகளாக விஸ்வரூபம் எடுத்துவிடும்.  
குடும்ப உறவுகள்
திருமணம் செய்துகொள்ளப்போகும் ஆண்கள், ஒரு விஷயத்தை நன்கு புரிந்துகொள்ள வேண்டும். அவருடைய மனைவியாக வரப்போகும் பெண், இன்னொரு வீட்டில் குறைந்தபட்சம் ஆண்டுகள் 20 வளர்ந்து வாழ்ந்தவள். கல்யாணம் என்னும் பந்தம் மூலம், அவள் புத்தம் புதிய ஒரு சூழலுக்கு வரப்போகிறாள். ஓர் இடத்தில் பல ஆண்டுகளாக நன்கு வளர்ந்து வேரோடிய மரத்தை, அப்படியே வேருடன் பிடுங்கி இன்னொரு புதிய இடத்தில் நடுவது போன்றது இது. அந்த மரம், புதிய இடத்தில் வேர்பிடித்து வளர, சிறிது காலம் பிடிக்கும். அதைப்போலவேதான், பெண்ணுக்கும் புகுந்த இடத்தில் அனைவரையும் புரிந்துகொண்டு, சகஜமாக சில காலம் பிடிக்கும். அதுவரை அவளுக்கு அவகாசம் கொடுக்க வேண்டும். வேர்பிடிக்கும் அந்தக் காலகட்டத்தில், கணவனின் அன்பும் ஆதரவும் அவளுக்கு முழுமையாகத் தேவை. இதைத் திருமணத்துக்கு முன்னரே புரிந்துகொண்டால், திருமணம் முடிந்த கையோடு முதல்  இரண்டு, மூன்று மாதங்களில் வரும் பிரச்னைகளைத் தவிர்க்கலாம்.
மணமாகப்போகும் பெண்ணும், திருமணத்துக்கு முன்பே, 'இனிமேல் இது என் குடும்பம்' என்ற ரீதியிலேயே சிந்திக்கவேண்டும். அப்போது, மாமனார், மாமியார் சொல்வதோ, மற்ற விஷயங்களோ பெரிய பிரச்னையாகத் தெரியாது.  
திருமணத்துக்கு முன்பு இருவருமே தங்களது குடும்ப உறுப்பினர்கள் பற்றியும் அவர்கள் குணநலன்கள் பற்றியும் பகிர்ந்துகொள்ளலாம். ஆனால், ஒரேயடியாக எதிர்மறையாகச் சொல்லி, துணையைப் பயமுறுத்திவிடக் கூடாது. பிறகு, திருமணமாகி வரும்போதே, ஒருவித அலர்ஜியுடன் வருவதுபோல ஆகிவிடும்.
எங்க அம்மா கொஞ்சம் அதிகமாக எதிர்பார்ப்பாங்க... பார்த்து நிதானமா நடந்துக்க...' என்றோ, அப்பா ரொம்பப் பேசலையேனு வருத்தப்
படாதீங்க... அவர் எப்பவுமே அப்படித்தான்... அவர் உண்டு, நியூஸ்பேப்பர் உண்டுனு இருப்பார்' என்றோ மிதமாக, இதமாகச் சொல்லிவைப்பதில் தவறு இல்லை.
திருமணத்துக்குப் பிறகு, முக்கியமான விஷயங்களில் முடிவெடுக்கும் பொறுப்பை யார் எடுத்துக்கொள்வது என்ற விஷயத்தையும் பேசிக்கொள்வது நல்லது..
எல்லாப் பிரச்னைகளையும் பற்றி இருவருமே பேசி, விவாதித்தாலும், இறுதியில் முடிவை இருவரும் சேர்ந்து எடுக்கலாம். அல்லது, 'அந்தப் பிரச்னை சார்ந்த 'ஏரியா'வில் யார் திறமைசாலியோ அவர் முடிவெடுக்க வேண்டும்' என்று தீர்மானித்துக் கொள்ளலாம்.
உதாரணத்துக்கு, பணம், வாங்கல், கொடுக்கல் சார்ந்த விஷயங்களில், ஆண் பெண் இருவரில் யார் திறமைசாலியோ  அவர் முடிவு எடுக்கலாம்.  அதேபோல உறவுகள், குழந்தைகள் சார்ந்த விஷயங்
களையும் யார் அதில் திறமையானவரோ, அவரே கையாளும்படி சொல்லலாம். ஆனால், யார் எந்த விஷயத்தைக் கையாளுவதில் புலி என்பது, திருமணத்துக்குப் பிறகுதான் பலருக்கும் தெரியவரும்.
ஒருவர் முடிவெடுக்கும் போது, மற்றவர் அந்த உரிமையிலோ, முடிவிலோ குறுக்கிட்டுக் குழப்பாமல் இருப்பதற்கு, திருமணத்துக்கு முந்தைய தீர்மானம் உதவும்.
பொருளாதார பந்தம்:
   இந்தக் காலத்தில் ஆண், பெண் இருவருமே நன்கு படித்து, வேலைக்குப் போகிறார்கள். எனவே,  திருமணத்துக்கு முன்பே, பெண் தொடர்ந்து வேலைக்குப் போகவேண்டுமா, இல்லையா என்பதைப் பேசி, குடும்பத்துடன் ஆலோசித்து, தீர்க்கமாக முடிவு செய்துகொள்ள வேண்டும்.
அதேபோல, சம்பாதிக்கும் ஆண் அவருடைய பெற்றோருக்குப் பணம் தர வேண்டுமா என்பதையும், சம்பாதிக்கும் பெண் எனில், திருமணத்துக்குப் பிறகும் தொடர்ந்து அவருடைய பெற்றோருக்குப் பணம் அனுப்ப வேண்டுமா என்பதையும் மிகத் தெளிவாகப் பேசிக்கொள்ளவேண்டும். பணம் அனுப்ப வேண்டும் என்றால், எவ்வளவு என்பதையும் முடிவுசெய்துவிடலாம். இருவருமே மனபூர்வமாகச் சம்மதித்து அதற்கான முடிவுகளை எடுத்துவிட வேண்டும். பண விஷயத்தில் இருவருக்குள்ளும் ஒளிவுமறைவு இருக்கக் கூடாது. மாத வருமானம், முதலீடுகள், கடன்கள், இ.எம்.ஐ., குடும்பத்துக்குத் தரவேண்டிய தொகை... எல்லாவற்றையுமே வெளிப்படையாகப் பரஸ்பரம் பேசிக்கொள்வது (transparency), அவர்கள் தொடங்கப்போகும் வாழ்க்கைக்கு நல்ல அடித்தளத்தை அமைக்கும்.
காதல் திருமணம் செய்துகொள்கிறீர்களா? ஒரு நிமிஷம் ப்ளீஸ்...!
காதல் திருமணத்துக்கான எதிர்ப்பு, முந்தைய காலத்தைவிட  விட இப்போது ரொம்பவே குறைந்திருந்தாலும், இன்றும் பல ஜோடிகள் பெற்றோர்களின் எதிர்ப்புக்குப் பயந்து, காவல் நிலையத்தைத் தஞ்சமடைகிறார்கள். இதுபோல, அம்மா, அப்பா ஏற்றுக்கொள்ளாத காதலர்கள் மணம்புரிவதற்கு முன்னர், தங்கள் அன்பின் வலிமையை அதிகப்படுத்திக்கொள்ள வேண்டும். என்ன இடர்ப்பாடு வந்தாலும், அதை எதிர்நோக்கும் மனோதிடமும் இருவருக்கும் ஒரே மாதிரியான உணர்வும் இருக்க வேண்டும். அப்போதுதான், குடும்பத்தாரின் ஆதரவு இன்றித் தொடங்கப்போகும் வாழ்க்கையில் வேறு பிரச்னைகள் இல்லாமல் கொண்டுசெல்ல முடியும். ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு, சந்தோஷமாக வைத்துக்கொள்ள முயற்சிக்க வேண்டும். அதுதான் அவர்களுக்குப் பெரிய சப்போர்ட்!
காதல் திருமணம் செய்பவர்கள் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயம் காதல் வேறு, திருமண வாழ்க்கை வேறு என்பதைத்தான்.
காதலிக்கும் காலத்தில், வெறும் 2 மணி நேரம் பார்த்துப் பேசும் ஜோடி, திருமணத்துக்குப் பின் தினமும் பல மணி நேரம் சேர்ந்து வாழ வேண்டும். அப்போது ஒருவரின் 'மைனஸ்'கள் மற்றவருக்குத் தெரியவரும். அடிக்கடி கோபம் வருதலும், மூட் அவுட் ஆகுதலும் அருகில் இருந்து பார்க்கும்போதுதான் தெரியும். அதனால் ஏமாற்றம் அடையக் கூடாது. அந்த மைனஸ்'களை ஏற்றுக்
கொள்ளத் தயாராக இருக்கவேண்டும். அய்யோ... லவ் பண்றப்போ அப்படி இருந்தாரே... இப்படிக் கோபமே வரலியே!' என்று எண்ணக் கூடாது. இந்த ஏமாற்றத்தைத் தவிர்க்க, முன்கூட்டியே இருவரின் மைனஸ், ப்ளஸ்களைப் பற்றி சொல்லிவைத்து விடலாம். இதனால் அனாவசிய ஏமாற்றங்களைத் தவிர்க்க முடியும்!
திருமணத்துக்கு முந்தைய காதல் உறவுகளை, காதல் தோல்விகளை வரப் போகும் துணையிடம் பகிர்ந்து கொள்ளலாமா? - என்பதே திருமணம் செய்துகொள்ளப்போகும் அனை வருக்கும் எழும் மில்லியன் டாலர் கேள்வி. 'உங்கள் காதல் அல்லது பள்ளிப் பருவ ஈர்ப்பு (infatuation), மிக ஆழமா னதாக இல்லாமல் இருந்து, உங்கள் துணை நன்கு புரிதல் உள்ளவராக இருந்தால் சொல்லலாம். அதனால், பெரிய பிரச்னைகள் வந்துவிடாது. ஆனால், உங்கள் காதல் மிகவும் ஆழமானதாக, உறவு நெருக்கமானதாக, உணர்வுபூர்வமாக இருந்தது என்றால், சொல்லாமல் இருப்பதே பல பிரச்னை களைத் தவிர்க்கும். அப்படிச் சொல் பவர்கள் அதன் பிறகு ஏற்படும் பின் விளைவுகளுக்குத் தயாராக இருக்க வேண்டும்.
கடைசியில்... ஆனால்,
முக்கியமாகக் கவனிக்க வேண்டிய விஷயம்...
மேலே சொன்ன நான்கு பகுதிகளிலும் வரும் சோதனைகளைக் கடந்து, திருமணமாகி முதல் வருடத்துக்குள், இந்த உறவு அழுத்தமான பந்தமாகி விட்டால், அதன் பிறகு அவர்கள் மணவாழ்க்கையில் என்ன புயல் அடித்தாலும் அவர்களால் தாக்குப்பிடிக்க முடியும்; எளிதாகக் கரை சேர்ந்துவிட முடியும். மணமாலை சூடக் காத்திருப்பவர்களுக்கு அத்தியாவசியமான அடிப்படைத் தேவைகள் நான்குதான்.
ஆழமான அன்பு, பரஸ்பர மரியாதை, பரஸ்பர நம்பிக்கை, வெளிப்படையான தகவல் தொடர்பு (open communication). இந்த நான்கு துடுப்புகளும் உங்களிடம் இருந்தால் போதும்... உங்கள் வாழ்க்கைப் படகில், ஜம்மெனப் பயணத்தைத் தொடங்கலாம்!
பிரேமா நாராயணன்,  படங்கள்: ஜெ.வேங்கடராஜ்

0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites